தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் நீண்ட நாட்களாகச் சட்டவிரோத கருக்கலைப்பு செய்து வந்த நர்சிங் படித்த பெண் உட்பட இருவர் கைதான பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து அல்ட்ராசவுண்ட் (Ultrasound) ஸ்கேன் மூலம் பாலினம் தெரியவரும். ஆனால், இந்தியாவில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிவது (PCPNDT) சட்டப்படி குற்றமாகும். ஆனாலும் நாட்டில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிவது சட்டப்படி குற்றம் என்பதை அறிந்தும் அடிக்கடி கைதாகி வருவது தொடர் கதையாகி வருவது வேதனையை அளிக்கிறது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் நீண்ட நாட்களாகச் சட்டவிரோத கருக்கலைப்பு நடைபெற்று வருவதாக புகார் எழுந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில், பென்னாகரம் அடுத்த ரங்காபுரம் பகுதியில், கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து சட்டவிரோத கருக்கலைப்பு நடப்பதாக மாவட்ட சுகாதார அலுவலர் ராஜேந்திரனுக்குத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில், மருத்துவ அலுவலர் ராமதாஸ் தலைமையிலான தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவக் குழுவினர், ரங்காபுரத்தில் உள்ள செந்தில் என்பவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
அந்தச் சோதனையில், பாலினத்தைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் அதிநவீன உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத கருக்கலைப்பிற்குப் பயன்படுத்தப்படும் மாத்திரைகள் அதிக அளவில் இருப்பதைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். விசாரணையில், செந்திலின் மகள் பரிமளா என்பவர் டிப்ளமோ நர்சிங் படித்துவிட்டு, இந்தச் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இவருக்கு உதவியாக ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த சாந்தி என்பவர் செயல்பட்டு வந்துள்ளார்.
மாவட்ட சுகாதார அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில், பென்னாகரம் காவல்துறையினர் பரிமளா மற்றும் சாந்தி ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் மருத்துவ அலுவலர்கள் அளித்த தகவலின்படி, இவர்கள் இருவரும் ஏற்கனவே கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு பாலக்கோடு பகுதியில் இதேபோன்ற சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்டபோது அதிகாரிகளிடம் சிக்காமல் தலைமறைவாகி, பின்னர் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர் என்று தற்போது மீண்டும் அதே குற்றத்தைச் செய்தபோது கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.