தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், சென்னையின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கைத் தீர்மானிக்கும் மிக முக்கியப் பொறுப்புக்கு அபின் தினேஷ் மோதக் நியமிக்கப்பட்டு இருக்கிறார். தமிழக அரசின் உச்சபட்ச அதிகார மையத்தில் அதிரடியான மாற்றத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக ஒரு மாநிலத்தை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் டாப் அதிகாரிகளை டெல்லி மாற்றி உள்ளது. ஏற்கனவே தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக எம். சாய் குமார் IAS நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆயுதப்படை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக மூத்த IPS அதிகாரி சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு பொறுப்பு காவல்துறை தலைமை இயக்குநராக இருந்த வெங்கடராமனுக்கு பதிலாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், சென்னை காவல் ஆணையராக இருந்த அருண் மாற்றப்பட்டு புதிய காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுமார் 27 ஆண்டுகாலப் பணி அனுபவம் கொண்ட அபின் தினேஷ் மோதக் அவர்கள் தமிழகத்தின் நாடித் துடிப்பு அத்தனையுமே அப்பட்டமாகத் தெரிந்த இவர் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட , 1997-ஆம் ஆண்டு IPS அதிகாரியாகத் தனது பயணத்தைத் தொடங்கியவர். இந்த நியமனத்திற்கு முன்பாக, சென்னை அமலாக்கப் பிரிவின் கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநராக (ADGP, Enforcement) பணியாற்றி வந்தார்.
கள்ளச்சாராயம், போதைப்பொருள் கடத்தல் எனச் சமூக விரோதச் செயல்களைத் தடுப்பதில் கறார் காட்டியவர். அதற்கு முன்னதாக, பொருளாதாரக் குற்றப்பிரிவு (EOW) தலைவராக இருந்தபோது, அப்பாவி மக்களை ஏமாற்றிய முக்கிய நிதி நிறுவன மோசடி வழக்குகளைக் கையாண்டு, பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையைப் பெற்றவர்.

சென்னை மக்களுக்கு இவர் புதியவர் அல்ல. தாம்பரம் மாநகரக் காவல் ஆணையராகப் பணியாற்றியபோது, மக்கள் குறைதீர்ப்பு முகாம்கள் மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் வேகம் காட்டியவர். தேர்தல் நேரங்களில் பொதுவாகவே ஆணையம் மிகக் கடுமையான ஆய்வுகளுக்குப் பிறகே உயர் அதிகாரிகளை நியமிக்கும். எந்தவித அரசியல் சார்பும் இல்லாமல், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டக் கூடியவர் என்ற அடிப்படையிலேயே அபின் தினேஷ் மோதக் இந்த பதவியில் அமரவைக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.