மு.க.ஸ்டாலின்: “திமுக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ‘ஹீரோ…!’ பாஜக தேர்தல் அறிக்கை நாட்டிற்கே வில்லன்…!

திருவள்ளூர் மாவட்டம், மஞ்சம்பாக்கத்தில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் வேட்பாளர் திரு.சசிகாந்த் செந்தில் அவர்களையும், வட சென்னை வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி அவர்களையும் அறிமுகப்படுத்தி I.N.D.I.A.கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.

அப்போது, தமிழ்நாட்டின் நுழைவு வாயிலான தொண்டை மண்டலத்தின் திருவள்ளூர் மாவட்டத்திற்கு வந்திருக்கிறேன். இந்தியாவிலேயே 75 ஆண்டுகளைக் கடந்துள்ள ஒரே மாநிலக் கட்சி என்ற வரலாற்றுக்குச் சொந்தமான – இனமான எழுச்சி இயக்கமாம், திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிய, வடசென்னை தொகுதிப் பரப்புரைக்கும் சேர்த்தே வந்திருக்கிறேன்.

பல்லவர்கள் தொடங்கி ஆங்கிலேயர்கள் வரை போர் செய்த மண், திருவள்ளூர்! அந்த மண்ணில், இரண்டாம் விடுதலைப் போராக நடைபெறவுள்ள இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிக்காக உங்களை நாடி வந்திருக்கிறேன். வெற்றி என்றால், சாதாரண வெற்றியல்ல! கடந்த 2021-இல் திருவள்ளூர் மாவட்டத்தில் நூறு சதவீத வெற்றியைத் தந்தீர்கள். அது போன்று இருக்கவேண்டும். வரிசை எண்ணில் தமிழ்நாட்டில் முதல் தொகுதி திருவள்ளூர் அதேபோல், வெற்றிக்கான வாக்கு வித்தியாசத்திலும் முதல் தொகுதியாக இருக்கவேண்டும்.

கழகக் கோட்டையான திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில், காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில், வேட்பாளராகப் போட்டியிடுகிறார் சசிகாந்த் செந்தில் அவர்கள். அவர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தவர். ஐ.ஏ.எஸ். பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்கள் பணியாற்ற வந்தவர். தனது அறிவாற்றலால் காங்கிரஸ் பேரியக்கத்தின் வெற்றிக்காக உழைப்பவர். சமூகநீதி – சமூக நல்லிணக்கத்திலும் அக்கறை கொண்ட இவரை திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி மக்கள் கை சின்னத்தில் வாக்களித்து, தங்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வடசென்னை தொகுதியைப் பொறுத்தவரை, தி.மு.க. தொடங்க ஆலோசனை நடைபெற்ற மண்ணடி, பவளக்காரத்தெரு, கொட்டும் மழையில் தி.மு.க. தொடங்கப்பட்ட ராபின்சன் பூங்கா, இன்று கழகத்தின் இதயமாக இயங்கும் அறிவாலயத்திற்கு முன்பு, கழகத்தின் உயிர்த்துடிப்பாக இயங்கும் அறிவகம், அன்னைத் தமிழுக்காக இன்னுயிர் ஈந்த தியாக மறவர்களான நடராசன் தாளமுத்துவைப் போற்றும் நினைவிடம் அமைந்துள்ள மூலக்கொத்தளம் எனத் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் வடசென்னைக்குமான உறவு தாய்க்கும் சேய்க்குமான உறவு!

இன்னும் கூடுதலாக சொல்லவேண்டும் என்றால், பெருமையோடு பூரிப்போடு சொல்லவேண்டும் என்றால், நான் முதலமைச்சர் ஆக, என்னை தேர்ந்தெடுத்த கொளத்தூரை உள்ளடக்கிய நாடாளுமன்றத் தொகுதி! அப்படிப்பட்ட வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிடும் கலாநிதி வீராசாமி அவர்கள், தலைவர் கலைஞரின் நிழலாக இருந்த அண்ணன் ஆர்க்காட்டாரின், அருமை மகன்! மக்கள் பிணியை போக்கும் புகழ்பெற்ற மருத்துவரான இவர், சமூகப்பிணியை போக்க நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வருகிறார்.

அவரின் குரல் தொடர்ந்து உங்கள் ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் ஒலிக்கவேண்டும்! அதற்கு வடசென்னை மக்கள், உதயசூரியன் சின்னத்தில் கலாநிதி வீராசாமி அவர்களுக்கு, வாக்களித்து வெற்றிபெற வைக்கவேண்டும். இந்த இரண்டு வேட்பாளர்களையும் நாடாளுமன்றம் அனுப்பத் தயாராகிவிட்டீர்களா? நீங்கள் மட்டும் இல்லை. இந்த ஸ்டாலினின் தூதுவர்களாக, உங்கள் பகுதியில் இருக்கும் மக்களிடமும் இந்தியா கூட்டணிக்கு வாக்கு கேட்க வேண்டும். கேட்பீர்களா? அதற்குப் பிறகு என்ன? வெற்றி உறுதி! வேட்பாளர்கள் உட்காரலாம்!

இதுவரை நீங்கள் எத்தனையோ தேர்தல்களைப் பார்த்திருக்கலாம்! பல இளைஞர்களுக்கு இது முதல் தேர்தலாக இருக்கலாம்! ஆனால், இது சற்றே மாறுபட்ட தேர்தல்! மிக மிக முக்கியமான தேர்தல்! ஏன் என்றால், இந்த தேர்தலில் நீங்கள் போடும் வாக்குதான் இந்தியாவில் இனி ஜனநாயகம் இருக்கவேண்டுமா அல்லது சர்வாதிகாரம் இருக்கவேண்டுமா? அதுபோன்று, இந்தியாவில் புரட்சியாளர் அம்பேத்கர் எழுதிய சட்டம் இருக்கவேண்டுமா அல்லது R.S.S. எழுதும் சட்டம் இருக்கவேண்டுமா? இடஒதுக்கீடுமுறை இருக்கவேண்டுமா அல்லது வேண்டாமா? எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் ஒற்றுமையாக சேர்ந்து வாழவேண்டுமா – வாழக்கூடாதா? இதையெல்லாம் முடிவு செய்யப்போகும் தேர்தல். உங்கள் வாக்குதான் அந்த முடிவை தீர்மானிக்கப் போகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, நாம் ஏன் “வேண்டாம் மோடி”என்று சொல்கிறோம் என்றால், அவர் இரவுகளில் கொண்டுவரும் சட்டங்களால்! தீடீர் என்று ஒரு இரவில்தான், ஊழலை ஒழிக்க வந்த அவதாரப் புருஷராக டி.வி. முன்பு தோன்றி, பணமதிப்பு இழப்பை அறிவித்தார்! இரவில் பல மக்களை ஏ.டி.எம் வாசலில் நிற்க வைத்தார்! அதேபோன்று ஒரு இரவில்தான், பெரிய பொருளாதாரப் புலி போன்று, G.S.T. சட்டத்தை அமல்படுத்தி, தொழில் முனைவோரையும் நடுத்தர வர்க்க மக்களையும் கொடுமைப் படுத்தினார். எவ்வளவு பேர் தற்கொலை செய்துகொண்டனர்!

கொரோனா வந்தப்போது என்ன செய்தார்? “இரவெல்லாம் எல்லாரும் மணி அடியுங்கள், விளக்கு ஏற்றுங்கள், கொரோனா ஒழிந்துவிடும்”என்று பெரிய ‘சயிண்டிஸ்ட்’ போன்று பேசினார். இன்னும் நிறைய இருக்கிறது! அதனால்தான், நாங்கள் தொடர்ந்து சொல்கிறோம். பா.ஜ.க.வும், பிரதமர் மோடியும் வீட்டுக்கும் கேடு! நாட்டுக்கும் கேடு!

பிரதமர் மோடி இரவுகளில் அறிவித்த அறிவிப்புகளை எல்லாம் மாற்றி, இந்தியாவில் விடியலை ஏற்படுத்தத்தான், இந்தியா கூட்டணியை அமைத்திருக்கிறோம்! அதனால்தான், எனது அன்புச் சகோதரர் ராகுல்காந்தி கோவை வந்தபோது, “ராகுல் அவர்களே… வருக! புதிய இந்தியாவிற்கு விடியல் தருக!”என்று கூறினேன். மக்களைச் சந்தித்து, மக்களோடு மக்களாக இருந்து, அவர்கள் பிரச்சினைகளை முழுமையாகத் தெரிந்துகொண்டு தி.மு.க.வும் – காங்கிரஸ் கட்சியும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறோம்!

தெற்கிலிருந்த நம்முடைய குரல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக எதிரொலித்திருக்கிறது! முக்கியமான சிலவற்றை மட்டும் சொல்கிறேன்.

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒருலட்சம் ரூபாய்!

நீட் தேர்வு ரத்து!

ஒன்றிய அரசுப் பணிகளில் பெண்களுக்கு, 50 சதவீதம் இடஒதுக்கீடு!

நாடு முழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பு!

ஒன்றியத்தில் இடஒதுக்கீடு உச்சவரம்பை 50 சதவீதத்தில் இருந்து உயர்த்தச் சட்டத்திருத்தம்!

SC, ST, OBC பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்ப நடவடிக்கை!

SC, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரண்டு மடங்காக உயர்வு!

பா.ஜ.க-வின் ஜி.எஸ்.டி. சட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய சட்டம்!

விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை!

இத்துடன், நம்முடைய தேர்தல் அறிக்கையில் சில முக்கிய அறிவிப்புகளையும் தலைப்புச் செய்தியாக சொல்கிறேன்.

சென்னையில் மூன்றாவது ரயில் முனையம்!

கோயம்பேடு முதல் அம்பத்தூர் தொழிற்பேட்டை வரை விரைவில் மெட்ரோ ரயில்!

விம்கோ நகரில் இருந்து எண்ணூர் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பு!

வடக்கில் இருந்து வரும் ரயில்கள் விம்கோ நகரில் நின்று செல்ல நடவடிக்கை!

வில்லிவாக்கம் ரயில்நிலையத்தில் இருந்து, தெற்குப் பக்கமாகச் செல்ல சுரங்க நடைபாதை!

மணலியில் இ.எஸ்.ஐ மருத்துவமனை!

செங்குன்றத்தை ஒட்டி தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க, உயர்மட்ட மேம்பாலம்!

பழவேற்காடு முதல் கடப்பாக்கம் இடையே மேம்பாலம் அமைத்துப் புதிய சாலை!

இதுமட்டுமல்ல, பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைக்கப்படும்!

மாணவர்களின் கல்விக் கடன் முழுமையாகத் தள்ளுபடி!

சிறுபான்மையினர் விரோத சட்டங்கள் ரத்து!

விவசாயக் கடன்கள் தள்ளுபடி!

தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்!

நூறுநாள் வேலைத் திட்டத்தின் வேலை நாட்கள் 150 நாட்களாக உயர்வு! நாளொன்றுக்கு 400 ரூபாய் ஊதியம்!

வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் இல்லாதபோது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்!

முதியோர், மாற்றுத்திறனாளிகள், மாணவர்களுக்கு இரயிலில் மீண்டும் கட்டணச்சலுகை!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கீடு!

மீனவ மக்கள் நிறைந்த பகுதி இது! அவர்களுக்காக அறிவிக்கப்பட்டவை, உலர்மீன் முற்றங்கள் கட்டுதல் போன்ற மீனவர்களுக்குத் தேவையான தொழில் கட்டமைப்புப் பணிகள் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும்!

பாரம்பரிய மீனவ சமுதாய மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை!

தேசிய மீனவர் நல ஆணையம் அமைக்கப்படும்!

மீன்பிடி தடைக்காலங்களில் மாற்றுப் பொருளாதார வேலைவாய்ப்புகளை உருவாக்க மீன்கள் பதப்படுத்துதல், மீன்வளர்ப்பு, சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பயிற்சிகள்!

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்., இப்படி, தி.மு.க. – காங்கிரஸ் வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கைகள் இந்தத் தேர்தலின் “ஹீரோ”என்றால், பா.ஜ.க. வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கை இந்த நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் ‘வில்லன்! பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை வில்லன் என்று ஏன் சொல்கிறோம் என்றால், மத அடிப்படையில் இந்த நாட்டுமக்களை பிளவுபடுத்தும் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்று அறிவிக்கிறார்கள்! என முக ஸ்டாலின் உரையாற்றினார்.

பழனிசாமி: மக்கள் உங்கள் பக்கம்தான்…! வாக்கு எங்களுக்கு தான் போடுவார்கள்..!!

சிதம்பரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 கொடுத்தோம் என்கிறார் ஸ்டாலின். 27 மாதம் அதிமுக போராடியதால் தான் வேறு வழியில்லாமல் கொடுத்தார்கள். நமது சட்டமன்ற உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்தார்கள். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றச் சொல்லி அழுத்தம் கொடுத்ததால்தான் உரிமைத் தொகை கொடுத்துள்ளீர்கள். அதிமுக இல்லாவிட்டால் மக்களுக்கு உரிமைத் தொகை கிடைத்திருக்காது.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கவர்ச்சியாக பேசும் ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த பின்பு தகுதியானவர்களுக்குத்தான் உரிமைத் தொகை என மாற்றிப் பேசுவார். அனைத்து நகர பேருந்துகளிலும் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம் என்றார் ஸ்டாலின். இப்போது பேருந்துக்கு பெயின்ட் அடித்து அந்தப் பேருந்தில் ஏறினால்தான் இலவசமாக பயணம் செய்ய முடியும். மற்ற பேருந்துகளில் கட்டணம் செலுத்த வேண்டும் என்கிறார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைபாடு, வந்த பின்பு வேறொரு நிலைபாடு.

எப்போது பார்த்தாலும் மக்கள் என் பக்கம் என்கிறார் ஸ்டாலின். மக்கள் உங்கள் பக்கம்தான், ஆனால், வாக்கு எங்களுக்கு தான் போடுவார்கள். மக்களை நீங்கள் எப்போது நேரடியாக சென்று பார்த்தீர்கள். இப்போதுதான் கடைக்குச் சென்று டீ குடிக்கிறார். முன்பு சைக்கிளில் செல்வார், பளு தூக்குவார், வாக்கிங் போவார். இதுதான் திமுகவின் 3 ஆண்டுகளாக சாதனை. இதைத் தவிர்த்து வேறு எதையும் செய்யவில்லை. வாக்கிங் போகும்போது கூட தனது மகனின் திரைப்படம் என்ன வசூலானது என்பது குறித்துதான் பேசுவார்.

திமுக ஆட்சியில் கஞ்சா கிடைக்காத இடமே இல்லை. இன்றைக்கு தமிழகம் போதைப்பொருள் நிறைந்த இடமாக காட்சி அளிக்கிறது. அண்மையில் திமுக நிர்வாகி சிக்கினார். எதிர்கட்சி அந்தஸ்தில் இருந்தது காங்கிரஸ். ஸ்டாலின் என்றைக்கு ராகுல் காந்தியை பிரதமராக அறிவித்தாரோ அன்றைக்கே காங்கிரஸ் எதிர்கட்சி அந்தஸ்தை இழந்துவிட்டது.

பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும்போது விசுவாசமாக இருந்தோம். இன்று பாஜக மக்களுக்கு எதிரான திட்டங்களை நிறைவேற்றினால் அதனை எதிர்க்கும் திராணி அதிமுகவுக்கு உள்ளது. எதிர்க்கும் நேரத்தில் எதிர்ப்போம். மக்களுக்கு நல்லது செய்தால் பாராட்டுவோம். இது அதிமுகவின் ஸ்டைல். அரியலூருக்கு அதிமுக ஆட்சியில் நிறைய திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. திமுக ஆட்சியில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்த திட்டத்தையும் காணவில்லை” எனபழனிசாமி தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின்: “ஒரே ஒரு மீட்டிங்! டோட்டல் பி.ஜே.பி.யும் க்ளோஸ்..!”

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் நீலகிரி தொகுதி வேட்பாளர் ஆ.இராசா மற்றும் திருப்பூர் தொகுதி வேட்பாளர் திரு. சுப்பராயன் அவர்களையும் அறிமுகப்படுத்தி I.N.D.I.A.கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.

அப்போது, திராவிட இயக்கம் கருவான ஊர், பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு அடித்தளம் இட்ட ஊர் இந்தத் திருப்பூர்! வந்தாரை வாழ வைக்கும், திருப்பூருக்கு வந்திருக்கிறேன். மலைகளின் அரசியாகவும், நீர்வீழ்ச்சியின் எழுச்சியாகவும், மக்கள் மனங்களில் மகிழ்ச்சியாகவும் இருக்கும் நீலகிரி தொகுதியை உள்ளடக்கிய கூட்டத்திற்கு வந்திருக்கிறேன். இரண்டாம் விடுதலைப் போராட்டத்திற்குத் தயாராக இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கும் அனைவருக்கும் என் மாலை வணக்கம்!

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளராகப் போட்டியிடும், ஆ.இராசா அவர்கள், கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர்! திராவிட இயக்கத்தின் ஆற்றல்மிகு எழுத்தாளர் – பேச்சாளர் – சிந்தனையாளர்! தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களால் “தகத்தகாய சூரியன்” என்றுப் பாராட்டப்பட்டவர்தான், ஆ.இராசா அவர்கள்! பாசிச பா.ஜ.க. ஆட்சியின் அனைத்து மக்கள் விரோத நடவடிக்கைகளையும் துணிச்சலாக நாடாளுமன்றத்தில் எதிர்த்துக் குரல் கொடுத்துவரும் சிறந்த நாடாளுமன்றவாதி! வாதத்திறமையில் யாராலும் வீழ்த்த முடியாத தலைசிறந்த கொள்கையாளர்! எனது பாசமிகு சகோதரர் ஆ.இராசா அவர்களுக்கு, நீலகிரி நாடாளுமன்ற மக்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

திருப்பூர் நாடாளுமன்றத்திற்கு சுப்பராயன் அவர்கள் போட்டியிடுகிறார். அவர் சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக எந்தப் பொறுப்பு வகித்தாலும், பாட்டாளிகளின் தோழராக இருக்கக்கூடியவர். சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களும் நிறைந்திருக்கும், இந்தப் பகுதி மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிக்க, சுப்பராயன் அவர்கள்தான் சரியான போராளி! அண்ணன் முத்தரசன் அவர்களின் ஆதரவைப் பெற்ற, தொழிலாளர் தோழர் சுப்பராயன் அவர்களுக்கு, திருப்பூர் மக்கள் கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்த இருவரும் அவர்கள் போட்டியிட்ட தேர்தல்களிலேயே, அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வென்ற தேர்தலாக இந்தத் தேர்தல் இருக்கவேண்டும். தயாராகிவிட்டீர்களா? நீங்கள் வாக்களிப்பது மட்டுமல்ல, இந்த ஸ்டாலினின் தூதுவனாக உங்கள் பகுதி மக்களிடமும் வாக்கு கேட்க வேண்டும். கேட்பீர்களா? அதற்குப் பிறகு என்ன? மாபெரும் வெற்றி உறுதி, வேட்பாளர்கள் உட்காருங்கள்!

சுப்பராயன் அவர்கள் தெரிவித்ததைப் போல, இது மிக மிக முக்கியமான தேர்தல்! இந்தியாவில் ஜனநாயகத்தை மீட்கவும், சர்வாதிகாரத்தை வீழ்த்தவும் நடக்கும் தேர்தல்! சமத்துவம் நிலைக்க – சகோதரத்துவம் தழைக்க – மதநல்லிணக்கம் செழிக்க – சமூகநீதி கிடைக்க – இந்தியா கூட்டணியின் ஆட்சி இந்திய ஒன்றியத்தில் அமையவேண்டும்!

நேற்று சகோதரர் ராகுல் காந்தி அவர்கள் கோவைக்கு வந்திருந்தார்! டி.வி.யில் பார்த்திருப்பீர்கள்? பார்த்தீர்களா? எப்படி இருந்தது? பாகுபலி படம் போன்று, பிரமாண்டமாக இருந்ததே? “ஒரே ஒரு மீட்டிங்! டோட்டல் பி.ஜே.பி.யும் க்ளோஸ்!” சகோதரர் ராகுல் காந்தி அவர்களின் ஒருநாள் வருகையே, பிரதமர் மோடியின் மொத்தப் பிரச்சாரப் பயணத்தையும் காலி செய்துவிட்டது. தமிழ்நாட்டு மக்களை உண்மையான அன்பால் மட்டும்தான் ஆள முடியும் என்று ராகுல் காந்தி நிரூபித்துவிட்டார். சகோதரர் ராகுலின் பேச்சை எல்லோரும் கேட்டிருப்பீர்கள். அவர் தமிழ்நாட்டை எந்த அளவுக்கு மதிக்கிறார் என்று அதிலேயே தெரிந்திருக்கும்!.

அது மட்டுமா! இந்தியாவைப் புரிந்துகொள்ளத் தனக்கு வழிகாட்டியாக இருப்பதே தமிழ்நாடும் – தமிழ்நாட்டு வரலாறும் – தமிழ்நாட்டு அரசியலும்தான் என்று சொல்லி – தந்தை பெரியார் – பெருந்தலைவர் காமராசர் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் என்று நம்முடைய தலைவர்களை மனதாரப் போற்றினார். “நடக்கின்ற தேர்தல் என்பது, சாதாரணத் தேர்தல் அல்ல; இரண்டு தத்துவங்களுக்கு இடையிலான போர்” என்று நாட்டு மக்களுக்கு உணர்த்தியிருக்கிறார்.

சமூகநீதியை நிலைநாட்டும் நமக்கும் – சமூகப் பாகுபாட்டை விதைக்கும் பா.ஜ.க.வுக்கும் நடக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் இது என்று நான் தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கிறேன். இதே கருத்துதான் இப்போது சகோதரர் ராகுல் காந்தி அவர்களின் பேச்சிலும் எதிரொலித்திருக்கிறது! திராவிட இயக்கம் தோன்றிய பிறகுதான், ஈராயிரம் ஆண்டு அடிமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து கடந்த 100 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த நாம், பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, முன்னேறிக்கொண்டு இருக்கிறோம்! என மு.க.ஸ்டாலின் பேசினார்.

அரசியல் பிரமுகர் வீட்டில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ஒரு கோடி சிக்கியது..!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் ஆவணமின்றி 50 ஆயிரத்திற்கும் மேல் பணம் மற்றும் அதிக எண்ணிக்கையில் பரிசு பொருட்கள் எடுத்து செல்ல கூடாது என தேசிய நெடுஞ்சாலை, மாநகரின் முக்கிய பகுதிகள், மாவட்ட எல்லையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இரவு பகலாக சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி எட்டரை பகுதி ஊராட்சி மன்ற தலைவர் திவ்யா அன்பரசன். இவரது அன்பரசன், அதிமுக முன்னாள் அமைச்சரும், திருச்சி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதியின் தம்பி ஆவார். இந்நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைப்பு வந்தது. அதன் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி எட்டரை பகுதிக்கு விரைந்தனர். அங்கே அரசியல் பிரமுகர் வீட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்பொழுது அங்கு ஒரு கோடி ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது.

இதனை‌ அடுத்து மாவட்ட தேர்தல் அதிகாரி பிரதீப் குமார் தகவல் கொடுத்து வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு சென்றனர். தற்பொழுது வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் எதற்காக ஒரு கோடி ரூபாய் இவர் வீட்டில் வைத்துள்ளார்? தேர்தல் பணம் பட்டுவாடா செய்ய இருந்த பணமா? என்பது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பழனிசாமி: பொள்ளாச்சியில் வந்து பாருங்கள் முதல்வரே, அதிமுகவின் கூட்டம் எப்படி இருக்கிறது..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில்,மக்களவைத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கார்த்திகேயனை ஆதரித்து பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, “இது தேர்தல் பிரச்சாரக் கூட்டமாக இல்லாமல், வெற்றி விழா கூட்டம் போல் மக்கள் வெள்ளம் காட்சியளிக்கிறது. இங்கு கூடியிருக்கும் மக்களின் எழுச்சியில் இருந்து அதிமுக வேட்பாளரின் வெற்றியைப் பார்க்க முடிகிறது. அதிமுக ஒரு வலிமையான இயக்கம்.

முதல்வர் ஸ்டாலின், அதிமுக இரண்டு, மூன்றாக போய்விட்டது என்று பேசுகிறார். பொள்ளாச்சியில் வந்து பாருங்கள் முதல்வரே, அதிமுகவின் கூட்டம் எப்படி இருக்கிறது என்று. அதிமுக ஒன்றாக இருக்கிறது என்பதற்கு இங்கு குழுமியிருக்கும் மக்கள் வெள்ளமே சாட்சி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவை உடைக்க முதல்வர் ஸ்டாலின் முயற்சி செய்தார். அவரது முயற்சிகள் தவிடுபொடியானது. அதிமுகவை உடைக்க முதல்வர் எடுத்த அத்தனை அவதாரங்களும் தூள் தூளாக்கப்பட்டது.

அதிமுகவை உருவாக்கியவர் தெய்வசக்தி படைத்த எம்ஜிஆர். அதைக் கட்டிக் காத்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. இந்தப் இருபெரும் தலைவர்களும், தமிழக மக்களுக்கு கொடுத்த மிகப் பெரும் கொடை. நம்முடைய தலைவர்கள் மக்களுக்காக வாழ்ந்தார்கள். சில தலைவர்கள் அவர்களுடைய குடும்பத்தினருக்காக வாழ்ந்தார்கள். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் அதிமுகவை உருவாக்கி, காட்டிக் காத்து நம்மிடம் ஒப்படைத்துச் சென்றுள்ளனர். நாம் அனைவரும் கூட்டுப் பொறுப்புடன் தேர்தல் என்ற பெயரில் எதிரிகளை ஓடஓட விரட்டி வெற்றிக்கொடி நாட்டுவோம்.

அதிமுக தமிழகத்தில் 30 ஆண்டு காலம் ஆட்சி செய்த கட்சி. இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக வருவதற்கு அதிமுக அரசு பாடுபட்டது. அதிமுகவின் 30 ஆண்டு கால உழைப்பால், தமிழகம் அகில இந்திய அளவில் உயர்ந்து நிற்கிறது.

நாங்கள் 30 ஆண்டு காலம் ஆட்சி செய்து, சிறப்பான ஆட்சி நடத்தி பல்வேறு திட்டங்களைக் கொண்டு நிறைவேற்றி, மக்கள் எண்ணற்ற நன்மைகளைப் பெற்றுள்ளனர். இந்தச் சூழலில், யார் யாரோ வந்து, ஏதேதோ பேசி, மக்களை குழப்பி அந்த குழப்பத்தில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். அதெல்லாம் ஒருபோதும் தமிழகத்தில் நடக்காது” என பழனிசாமி பேசினார்.

பாஜகவுக்கு அதிமுக கூட்டணி கதவுகளை சாத்திவிட்டோம்..! அமித் ஷாவுக்கு ஜெயக்குமார் நச்சுனு பதிலடி..!

2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுடன் திமுக முதல் சுற்று பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துவிட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பியுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு விவரம் அறிவிக்கப்பட உள்ளது. அதேசமயம் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் இன்னும் கூட்டணியை இறுதி செய்யாமல் தவித்து வருகின்றன.

கடந்த முறை பாஜக, அதிமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்ட நிலையில், இந்த முறை, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் எந்த அணியில் சேரும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேட்டியளிக்கையில், தமிழ்நாட்டில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம். அதிமுக கூட்டணிக்காக பாஜக கதவுகள் திறந்தே உள்ளன எனத் தெரிவித்தார். பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று அதிமுக தலைவர்கள் கூறி வரும் நிலையில் அமித் ஷா பேட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் தனியார் மண்டபத்தில் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் பல்வேறு அமைப்புகளின் சார்பில் அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பது தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அதிமுக தலைவர்களான அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை சிறுமைப்படுத்துகின்ற செயலை, எந்தக் கட்சி செய்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

பாஜகவுடன் அதிமுகவுக்கு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. பாஜக என்பது கழட்டிவிடப்பட்ட பெட்டி அதனை மீண்டும் இணைத்துக் கொள்ள மாட்டோம். பாஜக கடந்த 10 ஆண்டுகளில் எந்தெந்த மாநிலங்களுக்கு துரோகம் செய்தது என்பதை தேர்தலின் போது அம்பலப்படுத்துவோம் என ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். இதற்கிடையே ஏற்கனவே, பாஜக – அதிமுக இடையே மறைமுகமாக கூட்டணி பேச்சுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், டெல்லி பாஜக தலைமை சார்பாக, எடப்பாடி பழனிசாமியுடன் பேசி வருவதாக கூறப்பட்டது.

ஆனால், உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பாஜக வேண்டுமானால் கூட்டணி கதவுகளை திறந்து வைத்திருக்கலாம். பாஜகவுக்கு அதிமுக கூட்டணி கதவுகள் சாத்தப்பட்டுவிட்டன. பாஜக கூட்டணிக்கு வரக்கூடாது என்பதற்காக கதவை சாத்திவிட்டோம். பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்பதுதான் அதிமுக தொண்டர்கள் மற்றும் மக்களின் நிலைப்பாடு. அண்ணாமலையை நாங்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அதிமுக முன்வைத்த காலை பின் வைக்காது” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அண்ணாவின் 55 -வது நினைவு நாளையொட்டி திமுகவினர் அண்ணாவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை..!

பெரியாரின் சீடராக இருந்து பெரியாரின் தளபதியாக மாறிய அண்ணா “திராவிட முனேற்ற கழகம்” என்ற தனி கட்சி தொடங்கி பெரியாரை என் வாழ்க்கையில் நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் என்று மகுடம் சூட்டி தலைவர் நாற்காலியை அவருக்காக ஒதுக்கி வைத்தார். அண்ணா ஆட்சிக்கு வந்த உடன், சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ‘தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்’ என்ற பெயர்ப்பலகை வைக்கப்பட்டது.

தமிழக அரசின் இலச்சினையான கோபுரச் சின்னத்தில் இருந்த ‘கவர்ன்மென்ட் ஆஃப் மெட்ராஸ்’ என்ற வாக்கியம் நீக்கப்பட்டு, ‘தமிழக அரசு’ என்று மாற்றப்பட்டது. அந்தச் சின்னத்தில் இடம்பெற்றிருந்த ‘சத்யமேவ ஜயதே’ என்ற வடமொழி வாக்கியம், ‘வாய்மையே வெல்லும்’ என்று தமிழில் மாறியது.

சி.என்.அண்ணாதுரை என்ற பெயர் பின்னாளில் சி.என்.எ என்ற மூன்று எழுத்தால் அறிமுகமான அண்ணா. 1967-ல் முதலமைச்சராக பொறுப்பேற்ற அவர், அப்பதவிக்காலம் முடிவதற்கு முன்னரே இவ்வுலகை விட்டு பிரிந்தார். இவரது தியாகத்தையும், பணிகளையும் நினைவுகூரும் விதமாக அவரது நினைவு தினத்தன்று ஆண்டு தோறும் சென்னையில் திமுக அமைதி பேரணியை நடத்தி வருகிறது. இன்று காலை 8 மணிக்கு தமிழ்நாடு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் திமுக உறுப்பினர்கள் அண்ணாசாலையில் உள்ள அறிஞர் அண்ணா சிலையிலிருந்து மெரினா கடற்கரை அருகே அண்ணா நினைவிடத்திற்கு மவுன ஊர்வலம் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அக்ஷா பவன் முதியோர் இல்லத்தில் கனிமொழி அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம்

ஜனவரி 5 -ம் தேதி திமுக துணை பொது செயலாளருமான, கழக நாடாளுமன்ற குழு துணை தலைவருமான கனிமொழி MP அவர்களின் 56 வது பிறந்த நாளை திமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நீலகிரி மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் ஆலோசனைப்படி, நீலகிரி மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் நீலகிரி கூடலூர் ஆஷா பவன் முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி, மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கூடலூர் ஒன்றிய செயலாளர் அ.லியாகத் அலி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கோமதி தலைமையில் இன் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது இதில் மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் ஜெயந்தி முன்னிலை வகித்தார், மாவட்ட மகளிர் துணை அமைப்பாளர்கள் ச.பரிமளா (கூடலூர் நகர மன்ற தலைவர்) சிவகாமி (நெல்லியாளம் நகராட்சி தலைவர்) செல்வி. வள்ளி (தேவர் சோலை பேரூராட்சி தலைவர்), கௌரி (சோலூர் பேரூராட்சி தலைவர்) வெண்ணிலா (நகர மன்ற உறுப்பினர்), மாவட்ட மகளிர் தொண்டர் அணி தலைவர் சித்ராதேவி (ஓவேலி பேரூராட்சி தலைவர்) மாவட்ட மகளிர் தொண்டரணி துணைத் தலைவர் அன்ன புவனேஸ்வரி, மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர்கள் கீர்த்தனா (ஊராட்சி ஒன்றிய தலைவர்), தனபாக்கியம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு எம்பி கனிமொழி பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி இனிப்புகள் பரிமாறி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

சொன்னதை செய்த கனிமொழி..! 7ஆம் வகுப்பு மாணவியின் பெற்றோர் நெகிழ்ச்சி..!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே தாமிரபரணி ஆற்றையொட்டி அமைந்திருக்கும் மேலாத்தூர் – சொக்கப்பழங்கரை ஊராட்சியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, கடந்த 27-ம் தேதி அன்று ஆய்வு செய்தார்.

அப்போது , கண் பார்வை குறைபாடுள்ள சிறுமியைக் கண்ட கனிமொழி எம்.பி, அந்த சிறுமியின் அருகே சென்று கண் பார்வை கோளாறு குறித்து அக்கறையோடு விசாரித்தார். அதற்கு அந்த சிறுமி, தனது பெயர் ரேவதி என்றும் ஏழாம் வகுப்பு படித்து வருவதாகவும் கூறியவர், தனக்கு கண் பார்வை பிரச்சனை இருப்பதாகவும்ம் அதற்கு மருத்துவச் சிகிச்சை வேண்டும் என்று கனிமொழி எம்.பியிடம் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து சற்றும் யோசிக்காத கனிமொழி, அவ்வளவு தானே சரி செய்துவிடலாம் என நம்பிக்கை பொங்க அந்தச் சிறுமியிடம் பேசி ஊக்கமும் உற்சாகமும் அளித்தார். அதைத் தொடர்ந்து திருநெல்வேலியில் உள்ள தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனையில் சிறுமி ரேவதி அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு நேற்று அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சிறுமி ரேவதி இன்று வீடு திரும்பிய நிலையில், ஏரல் வட்டாட்சியர் கோபாலகிருஷணன் சொக்கப்பழங்கரை கிராமத்திற்கு சென்று ரேவதியிடம் நலம் விசாரித்தார்.

மேலும், கனிமொழி எம்.பியும் சிறுமி ரேவதியிடம் தொலைப்பேசியில் நலம் விசாரித்தார். இதற்குப் பதில் அளித்த அந்த சிறுமி கண் அறுவை சிகிச்சைக்கு உதவியதற்கு நன்றி கூறியதுடன், தான் வளர்ந்த பிறகு மருத்துவராக பணியாற்றுவேன் எனக் கூறினார். இதனிடையே தங்கள் மகளின் எதிர்காலம் குறித்த கவலையில் இருந்த ரேவதியின் பெற்றோர், சொன்னதை செய்த கனிமொழியால் நெகிழ்ந்துவிட்டனர்.

மத்திய மற்றும் கர்நாடகா அரசை கண்டித்து முழு அடைப்பு போராட்டம்

தமிழகத்துக்கு காவிரியில் உரிய தண்ணீரை விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், இதில் உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் காவிரி டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டமும், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டமும் நடைபெற்றன.

காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு திமுக, விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,  மதிமுக,  மனிதநேய மக்கள் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள், வணிகர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து, முழு அளவில் பங்கேற்றன. இதனால் டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு, ஆட்கள் நடமாட்டமின்றி கடைவீதிகள், முக்கிய சாலைகள் வெறிச்சோடி இருந்தன.