இரு மொழிக் கொள்கையில் படித்த தமிழிசை சௌந்தரராஜன் மருத்துவராகவில்லையா? இரு மாநிலங்களின் ஆளுநர் ஆகவில்லையா என தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் ராஜமோகன் கேள்வி எழுப்பி உள்ளார். புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை தமிழக அரசு ஏற்க மறுத்ததன் தமிழ்நாட்டுக்கு நிதி தர முடியாது என மத்திய அமைச்சரான தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். அவரது பேச்சுக்கு தமிழகம் முழுவது பலத்த கண்டனங்களை பெற்றுள்ளது.
இதையடுத்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மும்மொழிக் கொள்கை தொடர்பாக கருத்து தெரிவித்த விஜய்க்கு பதிலடி கொடுத்திருந்தார் தமிழக பாஜக முன்னாள் தலைவரான தமிழிசை சௌந்தரராஜன். இது தொடர்பாக பேசிய அவர்,” மும்மொழிக் கொள்கை குறித்து நடிகர் விஜய் பேசி இருக்கிறார்.
ஆனால் அவர் கருத்து சொல்லக் கூடாது. தனது படங்களை தமிழில் மட்டும் தான் வெளியிடுவேன் என சொல்ல வேண்டும். விஜயின் படங்கள் தெலுங்கு, ஹிந்தியில் கூட வெளியாகிறது. வியாபாரத்திற்கு மட்டும் முன்மொழிக் கொள்கை தேவை, ஆனால் மாணவர்கள் மூன்று மொழிக் கொள்கை மூன்று மொழிகளை கற்றுக் கொள்ளக் கூடாதா? என பேசி இருந்தார்.
இந்த தமிழிசை சௌந்தரராஜனின் கருத்திற்கு தவெக கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக ராஜ்மோகன் தனது எக்ஸ் பக்கத்தில்,” நீங்கள் வேண்டுமானால் ஒரு மனிதனை இந்துவாய், இஸ்லாமியனாய், கிருத்தவனாய்ப் பார்க்கலாம். அவர்கள் மூவரையும் மனிதனாக மட்டுமே பார்க்கும் உயர்ந்த இடம் தமிழ்நாட்டின் பள்ளிக்கூடங்கள். பயிற்று மொழியாக தமிழ் மொழி. இணைப்பு மொழியாக ஆங்கிலம். இந்த இருமொழிக் கொள்கையே தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை. மாநிலப் பட்டியலில் இருக்க வேண்டிய கல்வி, பொதுப் பட்டியலில் இருப்பதால் ஒன்றிய அரசும் மாநில அரசும் ஒத்திசைவில் முடிவுகள் எடுக்க வேண்டிய சூழல் உள்ளது.
ஆனால் ஒன்றிய அரசு எந்த ஒத்திசைவும் வழங்காமல் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் நிதி தருவோம் எனச் சொல்வது எப்படி நியாயம்? இப்படி ‘மும்மொழிக் கொள்கை’ என்ற பெயரில் நடக்கும் நவீன இந்தித் திணிப்பை தட்டிக்கேட்ட எங்கள் தலைவரை, பல மொழிகளில் அவரது படங்கள் வெளியாவதை, திரைப்படப் பாடலை, குடும்பத்தினர் படிக்கும் கல்விச் சாலையை எல்லாம் இழுத்து, திரித்து எழுதியுள்ளார் பாஜகவைச் சார்ந்த மதிப்பிற்குரிய திரு H.ராஜா அவர்கள்.
திரைப்படம் தொழில், கல்வி என்பது தொண்டு, தொழிலுக்கும் தொண்டுக்கும் வித்தியாசம் தெரியாதா? தனிமனிதர் வேறு; அரசின் கொள்கை வேறு. மாநில தன்னாட்சி உரிமை, கல்விக் கொள்கை, மொழிக் கொள்கை அனைத்தும் தனித்துவமானது. யார் எங்கு படிக்கிறார் என்பது தனிநபர் விருப்பம். ஆனால் ஓர் அரசு எந்த மொழியில் கற்றுக் கொடுக்கிறது என்பது கொள்கை.
இத்தனை சீரியசான பிரச்சனைக்கு ஆதாரமாய் சினிமா பாடலையா கொண்டு வருவீர்கள்? ஆலமரப் பள்ளிக்கூடம் ஆக்ஸ்போர்டாய் மாறுவதற்கு மும்மொழி வேண்டுமாம். அந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலேயே ஆங்கிலம்தான் பேசுகிறார்கள். நிலாவைக் காட்டி சோறு ஊட்டியவர்கள் மத்தியில் அந்த நிலவுக்கே சந்திராயனை ஊட்டிய அறிவியல் தமிழர்கள் அனைவரும் இந்தி படிக்காதவர்கள்தான். இது உங்களுக்கும் உங்கள் அட்மினுக்கும் தெரியாதா? மதிப்பிற்குரிய அக்கா மருத்துவர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள், எங்கள் தலைவர் இது குறித்துப் பேசக்கூடாது என்கிறார்.
இவர்களை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தச் சொன்னால் யார் வீட்டுக் குழந்தை எங்கு படிக்கிறார்கள் என்று கணக்கெடுப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். திருமதி தமிழிசை அவர்களே.. நீங்கள் எங்கு படித்தீர்கள்? இருமொழிக் கொள்கையில் படித்த நீங்கள் மருத்துவராகவில்லையா? இரு மாநிலங்களின் ஆளுநராகவில்லையா? உங்கள் பேரில் இருக்கும் தமிழ் நம் ஊரிலும் இருக்கட்டும். தமிழ் எங்கள் பேச்சு. தமிழ் எங்கள் மூச்சு.” என ராஜ்மோகன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.