தமிழிசையை விளாசிய ராஜ்மோகன்: பேரில் இருக்கும் தமிழ் ஊரிலும் இருக்கட்டும்..!

இரு மொழிக் கொள்கையில் படித்த தமிழிசை சௌந்தரராஜன் மருத்துவராகவில்லையா? இரு மாநிலங்களின் ஆளுநர் ஆகவில்லையா என தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் ராஜமோகன் கேள்வி எழுப்பி உள்ளார். புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை தமிழக அரசு ஏற்க மறுத்ததன் தமிழ்நாட்டுக்கு நிதி தர முடியாது என மத்திய அமைச்சரான தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். அவரது பேச்சுக்கு தமிழகம் முழுவது பலத்த கண்டனங்களை பெற்றுள்ளது.

இதையடுத்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மும்மொழிக் கொள்கை தொடர்பாக கருத்து தெரிவித்த விஜய்க்கு பதிலடி கொடுத்திருந்தார் தமிழக பாஜக முன்னாள் தலைவரான தமிழிசை சௌந்தரராஜன். இது தொடர்பாக பேசிய அவர்,” மும்மொழிக் கொள்கை குறித்து நடிகர் விஜய் பேசி இருக்கிறார்.

ஆனால் அவர் கருத்து சொல்லக் கூடாது. தனது படங்களை தமிழில் மட்டும் தான் வெளியிடுவேன் என சொல்ல வேண்டும். விஜயின் படங்கள் தெலுங்கு, ஹிந்தியில் கூட வெளியாகிறது. வியாபாரத்திற்கு மட்டும் முன்மொழிக் கொள்கை தேவை, ஆனால் மாணவர்கள் மூன்று மொழிக் கொள்கை மூன்று மொழிகளை கற்றுக் கொள்ளக் கூடாதா? என பேசி இருந்தார்.

இந்த தமிழிசை சௌந்தரராஜனின் கருத்திற்கு தவெக கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக ராஜ்மோகன் தனது எக்ஸ் பக்கத்தில்,” நீங்கள் வேண்டுமானால் ஒரு மனிதனை இந்துவாய், இஸ்லாமியனாய், கிருத்தவனாய்ப் பார்க்கலாம். அவர்கள் மூவரையும் மனிதனாக மட்டுமே பார்க்கும் உயர்ந்த இடம் தமிழ்நாட்டின் பள்ளிக்கூடங்கள். பயிற்று மொழியாக தமிழ் மொழி. இணைப்பு மொழியாக ஆங்கிலம். இந்த இருமொழிக் கொள்கையே தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை. மாநிலப் பட்டியலில் இருக்க வேண்டிய கல்வி, பொதுப் பட்டியலில் இருப்பதால் ஒன்றிய அரசும் மாநில அரசும் ஒத்திசைவில் முடிவுகள் எடுக்க வேண்டிய சூழல் உள்ளது.

ஆனால் ஒன்றிய அரசு எந்த ஒத்திசைவும் வழங்காமல் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் நிதி தருவோம் எனச் சொல்வது எப்படி நியாயம்? இப்படி ‘மும்மொழிக் கொள்கை’ என்ற பெயரில் நடக்கும் நவீன இந்தித் திணிப்பை தட்டிக்கேட்ட எங்கள் தலைவரை, பல மொழிகளில் அவரது படங்கள் வெளியாவதை, திரைப்படப் பாடலை, குடும்பத்தினர் படிக்கும் கல்விச் சாலையை எல்லாம் இழுத்து, திரித்து எழுதியுள்ளார் பாஜகவைச் சார்ந்த மதிப்பிற்குரிய திரு H.ராஜா அவர்கள்.

திரைப்படம் தொழில், கல்வி என்பது தொண்டு, தொழிலுக்கும் தொண்டுக்கும் வித்தியாசம் தெரியாதா? தனிமனிதர் வேறு; அரசின் கொள்கை வேறு. மாநில தன்னாட்சி உரிமை, கல்விக் கொள்கை, மொழிக் கொள்கை அனைத்தும் தனித்துவமானது. யார் எங்கு படிக்கிறார் என்பது தனிநபர் விருப்பம். ஆனால் ஓர் அரசு எந்த மொழியில் கற்றுக் கொடுக்கிறது என்பது கொள்கை.

இத்தனை சீரியசான பிரச்சனைக்கு ஆதாரமாய் சினிமா பாடலையா கொண்டு வருவீர்கள்? ஆலமரப் பள்ளிக்கூடம் ஆக்ஸ்போர்டாய் மாறுவதற்கு மும்மொழி வேண்டுமாம். அந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலேயே ஆங்கிலம்தான் பேசுகிறார்கள். நிலாவைக் காட்டி சோறு ஊட்டியவர்கள் மத்தியில் அந்த நிலவுக்கே சந்திராயனை ஊட்டிய அறிவியல் தமிழர்கள் அனைவரும் இந்தி படிக்காதவர்கள்தான். இது உங்களுக்கும் உங்கள் அட்மினுக்கும் தெரியாதா? மதிப்பிற்குரிய அக்கா மருத்துவர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள், எங்கள் தலைவர் இது குறித்துப் பேசக்கூடாது என்கிறார்.

இவர்களை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தச் சொன்னால் யார் வீட்டுக் குழந்தை எங்கு படிக்கிறார்கள் என்று கணக்கெடுப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். திருமதி தமிழிசை அவர்களே.. நீங்கள் எங்கு படித்தீர்கள்? இருமொழிக் கொள்கையில் படித்த நீங்கள் மருத்துவராகவில்லையா? இரு மாநிலங்களின் ஆளுநராகவில்லையா? உங்கள் பேரில் இருக்கும் தமிழ் நம் ஊரிலும் இருக்கட்டும். தமிழ் எங்கள் பேச்சு. தமிழ் எங்கள் மூச்சு.” என ராஜ்மோகன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி: படங்களை மட்டும் 3 மொழிகளில் வெளியிடும் விஜய், மும்மொழிக் கொள்கையை எதிர்க்கலாமா..?

மூன்று மொழிகளில் படங்களை வெளியிடும் நடிகர் விஜய், மும்மொழிக் கொள்கையை எதிர்க்கக்கூடாது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “நாங்கள் இந்தியை திணிக்கவில்லை. மூன்றாவதாக வேறு எந்த ஒரு மொழியாவது கற்றுக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறோம். ஆனால், திமுகவினர்தான் இந்தி திணிப்பை மக்கள் மீது திணிக்கின்றனர்.

நடிகர் விஜய்யின் திரைப்படம் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கூட வெளியாகிறது. உங்கள் வியாபாரத்திற்கு மட்டும் மும்மொழிக் கொள்கை தேவை. ஆனால் மாணவர்கள் மூன்று மொழிகளை கற்றுக் கொள்ளக் கூடாதா? குழந்தைகளின் வருங்காலத்துக்கு பலமொழிக்கொள்கை தேவைப்படும். மும்மொழிக் கொள்கை குறித்து எல்லாம் நடிகர் விஜய் கருத்து சொல்லக்கூடாது.

அப்படி சொல்வதென்றால் தனது படங்களை தமிழில் மட்டும்தான் வெளியிடுவேன் என விஜய் முதலில் சொல்ல வேண்டும். ஒரு சாதாரண அரசாங்க பள்ளி மாணவ மாணவியர் இந்தி மட்டுமில்லாமல் தெலுங்கு அல்லது மலையாளமும் கற்றுக் கொண்டால் ஆந்திராவிலோ அல்லது கேரளாவிலோ ஒரு வேலையை பெற முடியும். மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிதியை தடுப்பது மத்திய அரசு அல்ல தமிழ்நாடு அரசுதான்.

மாறி வரும் சவால் நிறைந்த உலகில் கூடுதல் மொழியை குழந்தைகள் படிக்கிறோம் என கூறுகின்றனர். உங்களுக்கு என்ன பிரச்சினை? திமுகவுக்கும் திராவிடத்தை சார்ந்தவர்களுக்கு படிப்பு என்றாலே பிரச்சினைதான். சாமானிய மக்களை படியுங்கள் என்று கூறுவது ஆணவமா?” என தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

H. ராஜா சாடல்: 24 மணிநேரம்.. குழந்தையை அரசு பள்ளியில் சேர்க்கட்டும் பார்க்கலாம்..!

தமிழக அரசியல் தலைவர்கள் தங்களின் குழந்தைகள் தற்போது படிக்கும் கல்வி நிறுவனத்தில் இருந்து டிசி வாங்கி அடுத்த 24 மணிநேரத்தில் அரசு பள்ளியில் சேர்க்கட்டும் பார்க்கலாம்” என எச் ராஜா சவால் விட்டுள்ளார். சமக்ர சிக்சா அபியான் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் ரூ.2152 கோடி கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. தேசியக் கல்வி கொள்கையினை ஏற்றுக்கொண்டால் தான் நிதி வழங்கப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

ஆனால் தமிழக அரசு தேசிய கல்வி கொள்கையை ஏற்க மறுத்து வருகிறது. தேசிய கல்வி கொள்கை மூலம் ஹிந்தியை மத்திய அரசு திணிக்கிறது என்று குற்றம்சாட்டி தமிழக அரசு அதனை ஏற்காமல் உள்ளது. இதனால் சமக்ர சிக்சா அபியான் திட்ட நிதியை மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. இந்த விவகாரம் தற்போது தமிழகத்தில் பூதாகரமாகி உள்ளது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அதிமுக, பாமக உள்பட அனைத்து கட்சிகளும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதாகும் என்றும், மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, நிதி ஒதுக்கமாட்டோம் என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தான் கோயம்புத்தூரில் நேற்று இரவு பாஜக மூத்த தலைவர் H. ராஜா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டில் மத்திய அரசுக்கு எதிராக பேசினால் தான் மக்கள் ஓட்டுப்போடுவார்கள் என்ற மூடநம்பிக்கை உள்ளது. அதனால் எல்லோரும் மத்திய அரசை எதிர்த்து பேசுகிறார்கள். விஜயின் குழந்தை எங்கு படிக்கிறது? இருமொழி கொள்கையிலேயே? சமச்சீர் கல்வியிலா? சொல்லுங்கள். இந்த அமைச்சர்கள், வார்டு கவுன்சிலர்கள் யாராவது தங்களின் குழந்தைகளை சமச்சீர் கல்வியில் சேர்த்து உள்ளார்களா?

திமுக தலைவர்களின் குழந்தைகள் எல்லாம் மும்மொழி, நான்கு மொழி கொள்கை படிக்கும். வெளிநாட்டில் படிக்கும். ஓரளவு மிடில் கிளாஸை விட வளர்ந்த குடும்பத்துக்கு குழந்தைகள் தனியார் பள்ளிகளில் ஹிந்தி, சமஸ்கிருதம் படிப்பதை தடுக்க முடியவில்லை. ஆனால் கார்ப்பரேஷன் பள்ளிக்கூடத்தில் படிக்கும் ஏழை, விவசாயி, தொழிலாளியின் குழந்தைகளை மும்மொழி கொள்கையை படிக்காதே என்று குரல்வளையை நெறிக்கிறார்கள். இது என்ன புத்திசாலி தனம்? இது விஜய்க்கு மட்டுமில்லை.

தமிழகத்தில் இருமொழி கொள்கையை தொடருவோம் என்று கூறும் அனைவரும் நாளை காலை உங்களின் குழந்தைகளை தற்போது படிக்கும் பள்ளியில் இருந்து அழைத்து வந்து கார்ப்பரேஷன் பள்ளியில் சேருங்கள். அனைத்து அரசியல் தலைவர்கள் தங்களின் குழந்தைகள் தற்போது படிக்கும் கல்வி நிறுவனத்தில் இருந்து டிசி வாங்கி அடுத்த 24 மணிநேரத்தில் அரசு பள்ளியில் சேர்க்கட்டும். அப்போது அவர்கள் யோக்கியமானவர்கள், நல்லவர்கள் என்று நானே ஏற்றுக்கொண்டு பகிரங்கமாக அறிவிக்கிறேன்” என H. ராஜா கடுமையாக சாடி உள்ளார்.

வானதி சீனிவாசன்: பொங்கல் வைக்காத இஸ்லாமியர், கிறிஸ்தவர்களை வைத்து ஏமாற்றும் முதல்வர்

பொங்கல் வைக்காத இஸ்லாமியர், கிறிஸ்தவர்களை வைத்து ஏமாற்றும் முதல்வர் என கோயம்புத்தூர் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்த 58 பேருக்கு 27 ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி ஆர்எஸ் புரம் தபால் நிலையம் அருகே நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் பங்கேற்று பேசினார்.

அப்போது, 27 -வது ஆண்டு அஞ்சலி கூட்டத்திற்காக இங்கு சேர்ந்துள்ளோம். 27 ஆண்டுகளாக எதற்கு திரும்ப திரும்ப மக்களுக்கு இதை கூற வேண்டியது ஏன் என கேட்கின்றனர். நமது சமூகத்தை பிளக்க நினைக்கும் வரலாறை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. இந்த கொடுஞ்செயல் மக்களுக்கு இன்னமும் ஆழமாக இருக்கின்றது. கோயம்புத்தூரின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.

இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் பாஜகவினர், இந்துத்துவா அமைப்பினர் அல்ல. மத பயங்கரவாதத்திற்கு அதிக இழப்புகளை அடைந்த கட்சி பாஜக இந்து கலாச்சாரத்திற்கு தர்மத்திற்கு பாதிப்பு வந்தால் அதை காக்க நாங்கள் இருக்கின்றோம். இதை ஒவ்வொரு தலைமுறைக்கும் எடுத்துக் செல்லாமல் இருக்க மாட்டோம்.

பொங்கல் வைக்காத இஸ்லாமியர், கிறிஸ்தவர்களை வைத்து ஏமாற்றும் முதல்வர் இங்கு இருக்கின்றார். தமிழகத்தில் பெரும்பான்மை மக்கள் கொண்டாடும் விழாக்களுக்கு வாழ்த்து சொல்லாதவர் முதல்வர். இந்து கோவில்களுக்கும் வழிபாட்டிற்கும் ஏதாவது பிரச்சினை வந்தால் எந்த அரசியல் கட்சியும் வாயை திறப்பதில்லை. பாஜக பிரிவினை வாதத்தினை தூண்டுகின்றது என்கின்றனர். இதை வெளிநாடுகளில் யாரும் நம்ப மாட்டார்கள். நாட்டை பிரிப்பார்கள், மத கலவரம் செய்ய போகின்றனர் என பேசுகின்றனர். அரசியலில் வெற்றி பெற மத வாதத்திற்காக கையில் எடுப்பதாக சொல்கின்றனர்.

பாஜக பிரிவினைவாதம் செய்கின்றது என பேசும் கட்சிகள் எனது தொகுதிக்கு வாருங்கள். ஒரு சட்டமன்ற உறுப்பினரால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை காட்டுகின்றோம். சிறுபான்மை மக்களுக்கு எந்த வேறுபாடு, மாறுபாடு காட்டுவதில்லை. பாஜக மத கலவரத்திற்காக அல்ல. தமிழகமும் ஒரு நாள் நமது கைக்கு வரும். அதுவரை தொடர்ந்து உழைப்போம் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

அண்ணாமலை 27 ஆண்டுகளுக்கு பின் டெல்லியில் பாஜக ஆட்சி..! 2026 -ல் தமிழ்நாட்டில் ஆட்சியமைப்போம்..!

அண்ணாமலை: 27 ஆண்டுகளுக்கு பின் டெல்லியில் பாஜக ஆட்சி..! 2026 -ல் தமிழ்நாட்டில் ஆட்சியமைப்போம்..!

27 ஆண்டுகளுக்கு பின் தலைநகர் டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்ததை போல் தமிழ்நாட்டில் ஆட்சியமைப்போம் என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்த 58 பேருக்கும் 27-ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி ஆர்எஸ் புரம் தபால் நிலையம் அருகே நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேஜஸ்வி சூர்யா , வானதி சீனிவாசன் மற்றும் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை பேசுகையில், எல்லோருக்குமான கல்வி திட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஐசிடி பாடத்திட்டம் தனியாக நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் ஐசிடி அறிவியல் பாடத்தில் ஒரேயொரு சேப்டராக கற்பிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதியுள்ளோம். மிகப்பெரிய திட்டத்தில் குளறுபடி செய்துவிட்டு, நாங்கள் செய்வது சரி என்று தமிழக அரசு பேசிக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அண்ணாமலை, அதேபோல் பாஜகவை பொறுத்தவரை தலைவர்கள் மாறிக் கொண்டே இருப்பார்கள். அறிவாலயத்தில் ஒவ்வொரு செங்கல்லையும் எடுக்கும் வரை இங்குதான் இருப்பேன் என்று கூறினேன். அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பதில் அளித்திருக்கிறார்.

இதனை நான் தேர்தல் களத்தில் எதிர்கொள்வேன். 2026-ல் திமுகவின் அரசியல் பாரம்பரியத்தில் கடைசியாக ஆட்சியில் இருந்த நாளாக இருக்கும். நாங்கள் எல்லோரும் தாமரை வேஷத்தில் மட்டுமே இருக்கிறோம்.  தமிழக பாஜகவின் நிலைப்பாடு ஒன்றுதான். எங்களின் இலக்கு பாஜகவின் வளர்ச்சி மட்டும்தான். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், காலம் இருக்கிறது.

2026-ல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் இருக்கும். பிரதமர் மோடி தலைமையில் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வரும். பாஜக ஒரு விஷயத்தை கையில் எடுத்தால், அரை நூற்றாண்டு ஆனாலும் செய்து முடிக்கும். 27 ஆண்டுகளுக்கு பின் டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்ததை போல், 2026ல் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஜெயக்குமார்: “வருமான வரி என்ற பெயரில் ரத்தத்தை உறிஞ்சும் அட்டைப்பூச்சி..”

கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டால் ஏழைகளுக்கு எதுவுமே இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ரத்தத்தை உறிஞ்சும் அட்டைப்பூச்சி போல மக்களின் ரத்தத்தை மத்திய அரசு உறிஞ்சுவதாகச் சாடினார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சனிக்கிழமை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டிற்கு ஆளும் தரப்பு பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறது.

அதேநேரம் எதிர்க்கட்சிகள் இந்த பட்ஜெட்டை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறது. இதற்கிடையே அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் பட்ஜெட்டை விமர்சித்துப் பேசினார். இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, “மத்திய பட்ஜெட் குறித்து ஏற்கனவே நாங்கள் விமர்சனங்களை முன்வைத்துள்ளோம். நிர்மலா சீதாராமன் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால் திருக்குறளை பட்ஜெட் உரையில் வாசித்தார். குரள் வாசித்தீர்கள் ஓகே.. ஆனால், பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லையே. பணம் கொடுக்கவில்லையே. திருக்குறள் இருக்கிறது.. ஆனால் நிதி இல்லை.

அதேபோல பட்ஜெட்டில் விமானத்துறை குறித்துப் பேசினார்கள். ஆனால், ரயில்வே என்ற வார்த்தை கூட இல்லை. தமிழகத்திற்கு எந்தவொரு சிறப்பு ரயில் திட்டமும் அறிவிக்கவில்லை. 120 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவில் விமானத்தில் பயணிப்போர் வெறும் 2 கோடி பேர் தான். அவர்களுக்காக 10 ஆண்டுகளில் 100 விமானங்களை அமைப்பதாகச் சொல்வீர்கள்.

ஆனால், அதை விடப் பல மடங்கு அதிகமான மக்கள் ரயிலில் பயணிக்கிறார்கள்.. அவர்களுக்கு எந்தவொரு திட்டமும் இல்லை. நெசவாளர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள் என யாருக்கும் எந்தவொரு சிறப்புத் திட்டமும் இல்லை. ஒருங்கிணைந்த திட்டமும் இல்லை. அரைச்ச மாவையே அரைப்பது போல இவர்கள் திட்டங்கள் உள்ளன. இது ஏமாற்றத்தை அளிப்பதாகவே உள்ளது.

வருமான வரி விலக்கை 12 லட்ச ரூபாயாக உயர்த்திவிட்டதாகப் பெருமை பேசுகிறீர்கள். ஒருவேளை ஒருவர் 13 லட்ச ரூபாய் சம்பாதிக்கிறார் என்றால்.. அந்த கூடுதல் ஒரு லட்சத்திற்கு மட்டும் தானே வரி விதிக்க வேண்டும். ஆனால், 12 லட்சத்திற்கும் வரி விதிப்பேன் என்றால் எப்படி ஏற்பது. ரத்தத்தை உறிஞ்சும் அட்டைப்பூச்சி போல மக்களின் ரத்தத்தை வருமான வரி என்ற பெயரில் உறிஞ்சுகிறது.

ஒருவர் ரூ.12 லட்சத்திற்கும் மேல் சம்பாதிக்கிறார் என்றால் அந்த கூடுதல் தொகைக்கு மட்டுமே வரி போட வேண்டும். 12 லட்சத்திற்குப் பதிலாகக் கூடுதலாக ஒரு லட்சம் சம்பாதித்துவிட்டார் என்பதற்காக மொத்தமாக வரி விதிப்பது சரியான போக்கு இல்லை. இது சம நீதியா.. இது சம நீதியும் இல்லை. சமூக நீதியும் இல்லை.. பெட்ரோல், டீசலுக்கான வரி எல்லாம் அவர்கள் கீழ் தான் வருகிறது.

அதை ஏன் அவர்கள் குறைக்கவில்லை. அதையெல்லாம் குறைக்க மாட்டார்களாம்.. வருமான வரியை மட்டுமே குறைப்பார்களாம். 120 கோடி பேரில் வெறும் 4, 5 கோடி பேர் மட்டுமே வருமான வரியைச் செலுத்துவார்கள். அவர்களுக்குச் சலுகை தருகிறார்களாம். அப்போ மற்றவர்களுக்கு என்ன சலுகை தருவார்கள்? இது ஏழைகளுக்கான பட்ஜெட் இல்லை. பீகாரை மையப்படுத்திப் போடப்பட்ட பட்ஜெட் போலவே இருக்கிறது. எங்களின் வரி பணத்தைப் பீகாருக்கு மட்டும் தான் தருவார்களாம்.. தமிழர்களுக்கு அப்போ என்ன இருக்கிறது” என்று அவர் மிகக் கடுமையாக ஜெயக்குமார் விமர்சித்துப் பேசினார்.

1 லட்சம் டெபாசிட்..! மாதம் ரூ.10 ஆயிரம்..! ரூ.500 கோடி வசூல் பாஜக பெண் கைது..!

சேலத்தில் பணம் இரட்டிப்பாக தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து ரூ.500 கோடி அளவில் வசூலித்த பாஜக பெண் பிரமுகர் உள்பட 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். சேலம் அம்மாபேட்டை ஆத்தூர் மெயின்ரோட்டில் சிவகாமி திருமண மண்டபம் அமைத்துள்ளது. கடந்த ஓராண்டிற்கு முன்பு வேலூரைச் சேர்ந்த விஜயாபானு என்பவர் இந்த திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து புனித அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளை என்ற பெயரில் அலுவலகத்தை திறந்து செயல்படுத்தி வந்தார்.

இங்கு ஒருவர் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால், மாதம் தோறும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். அதுவும் 7 மாதம் வழங்கிய பிறகு டெபாசிட் செய்த ரூ.1 லட்சம் திரும்ப வழங்கப்படும் என்று விஜயாபானு கூறினார். ரூ.10 ஆயிரம் டெபாசிட் செய்தால் கூட மாதம் தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படுவதுடன், 8 -வது மாதத்தில் டெபாசிட் தொகை வழங்கப்படும் என்றார். விஜயாபானுவின் பேச்சை நம்பிய சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரகணக்கானனோர் பணம் ரசீது இல்லாமல் டோக்கன்கள் மூலம் டெபாசிட் செய்தனர். மேலும் ரூ.10 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை தனி நபர்கள் டெபாசிட் செய்தனர்.

இப்படி நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய் இவ்வாறு டெபாசிட் செய்யப்பட்டது. ஆனால் விஜயாபானு கூறியதுபோல டெபாசிட் செய்தவர்களுக்கு பணம் குறிப்பிட்ட நாளில் வழங்கப்பட்டு வந்தது. 3 ஆண்டுகளில் ரூ.500 கோடி வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. பணத்தை வாங்குவது, மக்களுக்கு திருப்பி கொடுப்பதற்காக 50 பேர் அங்கு வேலையில் அமர்த்தப்பட்டனர். இதுதொடர்பாக உளவுப்பிரிவு காவல்துறைக்கு புகார்கள் வந்ததையடுத்து ரகசிய விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறைக்கு, எந்தவித முகாந்திரமும் இல்லாமல் பொதுமக்களிடம் பெருமளவில் பணம் வசூலிக்கப்படுகிறது என்று தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாலை 4 மணிக்கு காவல் துணைக் கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையிலான 10 காவலர்கள், அந்த திருமண மண்பத்திற்கு சென்றனர். அப்போது அங்கு 200-க்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் இருந்தனர், பண பரிவர்த்தனை நடந்து கொண்டு இருந்தது. அவர்களை சுற்றிவளைத்த காவல்துறை, அக்காட்சிகளை படம் பிடித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அங்கிருந்தவர்கள் திடீரென காவல் துணைக் கண்காணிப்பாளர்., பெண் காவலர் உள்ளிட்டோர் மீது தாக்குல் நடத்தினர். இதுகுறித்து உடனடியாக மாநகர காவல் ஆணையருக்கு தெரிவிக்கப்பட்டது.

துணை காவல் ஆணையர்கள் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட காவலர் மண்டபத்திற்கு விரைந்து அதிரடியாக உள்ளே நுழைந்து காவலரை தாக்கியவர்களை தனிமைப்படுத்தி விசாரணை நடத்தினர். பின்னர், அறக்கட்டளை தலைவரான அம்மாபேட்டை புதுத்தெருவை சேர்ந்த விஜயாபானு, அதே பகுதியை சேர்ந்த ஜெயப்பிரதா, தியாகி நடேசன் தெருவை சேர்ந்த பாஸ்கர் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அறக்கட்டளை ஊழியர்களான அம்மாபேட்டை அமுதா, பொன்னம்மாபேட்டை மதலைமேரி, சென்னை குன்றத்தூர் பிடிசி லைனை சேர்ந்த மைக்கேல் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் திருமண மண்டபத்தில் கட்டுக்கட்டாக இருந்த பணத்தை வருவாய்துறை அதிகாரிகள் முன்னிலையில் எண்ணப்பட்டது.

இதில் ஒரே நாளில் மட்டும் சுமார் ரூ.2 கோடி வசூலானது தெரியவந்தது. அதனை மாஜிஸ்திரேட்டிடம் அனுமதி பெற்றுவந்து, வங்கி அதிகாரிகளை வர வைத்து எண்ணும் பணி நடந்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில் அறக்கட்டளையை நடத்தி வந்த விஜயாபானு, பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது வேலூர் மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் கிடைத்தும், பணம் கட்டியவர்கள் மண்டபத்தை முற்றுகையிட்டு கண்ணீர் வடித்தனர்.

அண்ணாமலை: தமிழகத்தில் காவல்துறையை பாதுகாப்பதற்காக ஒரு துறையை உருவாக்கும் நிலை..!

தமிழகத்தில் காவல் துறைக்கு பாதுகாப்புக்கு கொடுக்க வேண்டியுள்ளது, காவல் துறை நடத்திய பொங்கல் விழாவில் வழிப்பறி சம்பவம் நடந்துள்ளது. எனவே திமுக ஆட்சியில் காவல் துறையை பாதுகாப்பதற்காக தனியாக ஒரு துறையை உருவாக்கும் நிலை தமிழகத்தில் உள்ளது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மதுரையில் சனிக்கிழமை தெரிவித்தார்.

மதுரையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, தவெக தலைவர் விஜய்யை சமீபத்தில் திராவிட கட்சித்தலைவர் ஒருவர் கூட்டணிக்கு அழைத்தார், தற்போது செல்வப்பெருந்தகை காங்கிரஸ் கூட்டணியில் சேருங்கள் என அழைத்துள்ளார். அவர் விஜய் மீது வைக்கும் நம்பிக்கையை தயவுசெய்து ராகுல் காந்தி மீது வையுங்கள் என அறிவுரை கூறுவது எனது கடமை. பாஜக யாரையும் கூப்பிட வேண்டிய அவசியமில்லை.

பாஜக கட்சி தமிழகத்தில் வளர்ந்து கொண்டு இருக்கிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் தமிழர்களின் அடையாளம் பெருமை. அதில் துணை முதல்வரும், அவரது மகனும் பங்கேற்பது தவறல்ல. ஆட்சியரை எழுப்பிவிட்டு அவரது இருக்கையில் மகனின் நண்பர்களை அமரவைத்தது தவறு. அமைச்சர் மூர்த்தி நடந்துகொண்ட விதம் அநாகரிகம். அதிலும் ஆட்சியர் யாரும் என்னை வற்புறுத்தவில்லை என பதிலளித்தது முட்டாள் தனமானது. அரசியல் லாபம் கருதிக்கூட இருக்கையை விட்டுக் கொடுத்து இருக்கலாம். அமைச்சர் மூர்த்தி பவர் இருக்கும் வரை ஆடுவார். அதிகாரிகள் ஒருபோதும் தன்மானத்தை விட்டுக்கொடுக்கக்கூடாது.

திமுக பிறக்கும் முன்பே திருவள்ளுவர் திருக்குறளில் ஆன்மிக கருத்துகள் சொல்லி வந்திருக்கிறார். அதனை வள்ளுவர் ஆரிய கைக்கூலியாக இருந்துகொண்டு திருவள்ளுவர் கருத்துகளை திணித்துள்ளார் என பெரியார் கடுமையாக சாடினார். அவரது வழியில் வந்த திமுகவினர் வள்ளுவரை பற்றி பேச அருகதை இல்லை. குறிப்பாக முரசொலிக்கு அருகதை இல்லை.

ஈரோடு இடைத்தேர்தல், இடைத்தேர்தலுக்கான இடைத்தேர்தல். கடந்த தேர்தலில் ஈரோட்டில் மக்களை பட்டியில் அடைத்து வைத்து திமுகவினர் சித்திரவதை செய்து துன்புறுத்தினர். மீண்டும் மக்கள் துன்புறுத்தலுக்கு ஆளாககக்கடாது என்பதற்காக பாஜக போட்டியிடவில்லை. திருப்பரங்குன்றம் மலை மீது நடக்கும் பிரச்சினைக்கு திமுக அரசு பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் செயலை செய்கிறது. அதற்கு கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன். 2026 சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதியில் ஜெயிப்போம் என யாரும் சொல்ல முடியாது.

இரவில் நன்றாக தூங்கச் செல்பவர்கள் காலையில் எழுந்திருப்பதில்லை. எனவே 2026-ல் தமிழகத்தில் நிச்சயம் மாற்றம் வரும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அமரும். தமிழகத்தில் காவல் துறைக்கு பாதுகாப்புக்கு கொடுக்க வேண்டியுள்ளது. காவல் துறை நடத்திய பொங்கல் விழாவில் வழிப்பறி சம்பவம் நடந்துள்ளது. எனவே திமுக ஆட்சியில் காவல் துறையை பாதுகாப்பதற்காக தனியாக ஒரு துறையை உருவாக்கும் நிலை தமிழகத்தில் உள்ளது என அண்ணாமலை தெரிவித்தார்.

மு.க. ஸ்டாலின்: “ஆளுநர் பேசப் பேசத்தான் பாஜக அம்பலப்படுகிறது..!”

நான் ஆளுநரை விமர்சிக்கிறேன் என்று அவரை மாற்றிவிடாதீர்கள். அவர் பேசப் பேசத்தான் பாஜக அம்பலப்படுகிறது. திராவிடக் கொள்கைகள் மேலும் மேலும் மக்களிடம் சென்று சேருகிறது. மக்களுக்கும் மாநில சுயாட்சி முழக்கத்தின் நியாயங்கள் புரிகிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இன்று முழுவதும் இந்த மாநாட்டில், நம்முடைய கட்சியினர் திராவிடவியல் குறித்து அழுத்தமாக உணர்வோடு பேசுவதற்கான தூண்டுகோலாக இருப்பவரும் நம்முடைய ஆளுநர்தான்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னையில் திமுக சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “இந்த மாநாட்டின் முக்கியமான நிகழ்ச்சியாக, மாநிலங்களவை உறுப்பினரும், மத்திய முன்னாள் அமைச்சருமான கபில் சிபல், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி – மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் ஆகியோரைக் கொண்ட, “ஒரே நாடு ஒரு தேர்தல்” என்ற கலந்துரையாடல் ஏற்பாடு செய்து, அவர்களும் தங்களுடைய வாதங்களை அழுத்தமாக வைத்திருக்கிறார்கள். இன்றைய காலக்கட்டத்தில் மிகத் தேவையான உரையாடல் இது.

இந்த மாநாடு வாயிலாக, நான் அனைவருக்கும் சொல்லிக்கொள்ள விரும்புவது, மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பாஜகவை பொறுத்த வரைக்கும், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே உடை, ஒரே உணவு என்று ஒற்றைப் பண்பாட்டை நோக்கி நாட்டை நகர்த்த பார்க்கிறது. அதற்காகத்தான் ஒரே தேர்தல் என்று கிளம்பி இருக்கிறார்கள். ஒரே அரசு என்ற நிலையை உருவாக்க மாநிலங்களை அழிக்கப் பார்க்கிறார்கள்.

பாஜகவைப் பொறுத்தவரைக்கும் பெரும்பாலும் குறுகிய கால செயல் திட்டமாக இருக்காது. நீண்டகால செயல்திட்டமாகத்தான் இருக்கும். இப்போது நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்று சொல்பவர்கள், காலப்போக்கில் நாட்டுக்கே ஒரே தேர்தல்தான் என்று சொல்லும் நிலைமையை உருவாக்க நினைக்கிறார்கள். இது ஒற்றையாட்சிக்குதான் வழிவகுக்கும். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இது, தனிமனிதர் ஒருவரிடம்தான் அதிகாரத்தைக் கொண்டு சென்று சேர்க்கும்.

இது, பாஜக என்ற கட்சிக்கே கூட நல்லதல்ல. இன்றைக்கு பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியைச் சர்வாதிகாரியாக ஆக்கத்தான் இந்தச் சட்டம் பயன்படும். பாஜகவும், பாஜகவுக்கு மூளையாக இருந்து செயல்படும் அமைப்புகளும் விரிக்கும் வலையில், இன்று அரசியல் காரணங்களுக்காக பாஜகவை ஆதரிக்கும் கூட்டணிக் கட்சிகள் விழுந்துவிடக் கூடாது. இந்தச் சட்டத்தை ஆதரிக்கக் கூடாது என்று இந்தக் கூட்டத்தின் வாயிலாகக் கோரிக்கை வைக்கிறேன். பாஜக ஆட்சியை ஆதரிப்பது, உங்கள் தனிப்பட்ட விருப்பம். ஆனால், இந்தியாவின் கூட்டாட்சிக் கருத்தியலுக்கே முரணான சட்டங்களை, மக்களாட்சி மேல் நம்பிக்கை வைத்திருக்கும் எந்த அரசியல் அமைப்புகளும் ஆதரிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஒரு திட்டத்தை அறிவித்தபோது, நம்மைப் போன்ற அரசியல் இயக்கங்களைக் கடந்து, வெளியில் இருந்து எதிர்த்தவர், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் மரியாதைக்குரிய எஸ்.ஒய்.குரேஷி. “பல முறை தேர்தல்கள் நடத்துவதால், தேர்தல் செலவு அதிகமாகிறது” என்று பாஜக தரப்பு சொன்னபோது, “ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால்தான் அதிகமான செலவாகும். தேர்தலுக்கான கருவிகளும், ஆட்களும், பாதுகாப்பும் ஒரே நேரத்தில் தேவைப்படுவதால் செலவு அதிகமாகத்தான் ஆகும்” என்று குரேஷி சரியாகச் சொன்னார்.

இந்தச் சூழலில், இந்திய அரசியலமைப்பை கூட்டாட்சிக் கருத்தியலைக் காக்க ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை நாம் இறுதி வரை எதிர்த்தாக வேண்டும். ஏன் என்றால், நான் முன்பே சொன்னது போன்று, பாஜகவின் செயல் திட்டங்கள் நீண்ட காலத்துக்கானது. தங்களின் செயல் திட்டங்களுக்கு இடையூறாக இருப்பவர்களுக்கு எதிரான கருத்துருவாக்கங்களை மெதுவாகச் சமூகத்தில் விதைப்பார்கள்.

அதற்கு துணையாகப் பல எடுபுடிகளை பேச வைப்பார்கள். தங்களின் கையில் இருக்கும் ஊடகங்களை வைத்தே பொய்ச் செய்திகளை பரப்புவார்கள். விவாதங்களைக் கட்டமைப்பார்கள். அளவில்லாத அவதூறுகளை அள்ளி இறைப்பார்கள். பச்சையான பொய்களால் கொச்சைப்படுத்துவார்கள். பாஜகவின் வாட்ஸ்அப் யூனிவர்சிட்டி தீயாக வேலை செய்யும். இதையெல்லாம் கடந்துதான் நாம் போராட வேண்டும்,வெற்றி பெற வேண்டும்.

இப்போது கூட, இந்திய நாட்டையும், அரசியலமைப்புச் சட்டத்தையும், மக்களாட்சியையும் காக்கத்தான் நாம் போராடிக் கொண்டு இருக்கிறோம். ஆனால், நம்மை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானவர்களாகச் சித்தரிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி . எந்த ஆளுநர்? மரபுப்படி, நிறைவாக பாடப்படும் நாட்டுப்பண் பாடலுக்குக்கூட நிற்காமல் வெளியேறிய ஆளுநர். இருந்தாலும், மத்திய அரசுக்கு நான் வைக்கும் கோரிக்கை என்பது, நான் ஆளுநரை விமர்சிக்கிறேன் என்று அவரை மாற்றிவிடாதீர்கள். அவர் பேசப் பேசத்தான் பாஜக அம்பலப்படுகிறது. திராவிடக் கொள்கைகள் மேலும் மேலும் மக்களிடம் சென்று சேருகிறது.

மக்களுக்கும் மாநில சுயாட்சி முழக்கத்தின் நியாயங்கள் புரிகிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இன்று முழுவதும் இந்த மாநாட்டில், நம்முடைய கட்சியினர் திராவிடவியல் குறித்து அழுத்தமாக உணர்வோடு பேசுவதற்கான தூண்டுகோலாக இருப்பவரும் நம்முடைய ஆளுநர்தான். தந்தை பெரியார் அடிக்கடி ஒன்றைச் சொல்வார், “என்னை செயல்பட வைப்பது, என்னுடைய தோழர்கள் அல்ல; என்னுடைய எதிரிகள்” என்று சொல்வார். அப்படிப்பட்ட கொள்கை எதிரிகளை பண்பாட்டு எதிரிகளைத்தான் நாம் இன்றைக்குப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

இன்றைய எதிரிகள் கருத்தியல் மோதலுக்கு தயாராக இல்லை. ஏன் என்றால், கருத்தியல் ரீதியாக பேசினால் அவர்களால் ஒருபோதும் வெற்றிபெற முடியாது. அதனால்தான், அவதூறுகளை ஆயுதங்களாக எடுக்கிறார்கள். அந்த துரோகக் கூட்டத்தைத் துடைத்தெறிய வேண்டிய கடமை – சட்டப் போராளிகளான உங்களுக்கு இருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை காக்கும் கடமை நமக்கு இருக்கிறது. இந்தியா முழுமைக்கும் சமூகநீதியை உருவாக்கித் தந்து பாதுகாக்கும் கடமையும் நமக்கு இருக்கிறது.

எனவே, இங்கிருக்கும் சட்டப் போராளிகளுக்கு நான் சொல்லிக் கொள்வது, நீங்கள் கொள்கைப் போராட்டத்திலும் உதவ வேண்டும்; தேர்தல் களத்திலும் உதவ வேண்டும். தேர்தல் நேரத்தில் உங்களுடைய ‘வார் ரூம்’ பணிகள் மகத்தானது, பாராட்டுக்குரியது. இந்த நேரத்திலும் அதை நினைத்து நான் மகிழ்கிறேன்.2019 முதல் நடந்த அனைத்து தேர்தல்களிலும் நாம் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கு உங்களுடைய பணிகளும் முக்கியக் காரணம். இந்த வெற்றிப் பயணம் 2026-லும் தொடர வேண்டும்.

2026 தேர்தல் வெற்றி என்பது, நம்முடைய திராவிட மாடல் ஆட்சிக்கு, மக்கள் அளிக்கப் போகும் மகத்தான அங்கீகாரமாக அமையப் போகிறது. திமுக ஆட்சி மீண்டும் அமைய இந்தியா முழுமைக்கும் திராவிடக் கோட்பாடுகளை வென்றெடுக்க திமுக சட்டத்துறை சளைக்காமல் சமரசம் இல்லாமல் உழைக்க வேண்டும். சட்டத்துறை சார்பில், வழக்கறிஞர்கள் நலனுக்காக இன்றைக்கு ஐந்து கோடி ரூபாய் கொடுத்திருக்கிறீர்கள். அதை ஆக்கபூர்வமான திட்டங்களில் பயன்படுத்திக் கொள்ள என்.ஆர்.இளங்கோவை ஒரு செயல் திட்டம் வகுக்கச் சொல்லி இருக்கிறேன். அதனடிப்படையில், அதற்கான அறிவிப்புகள் வரும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அண்ணாமலை: திமுக அரசு காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும்…!

திமுக அரசு, இனியும் காவல்துறையினரை, அரசியல் பழிவாங்குதலுக்குப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு, சமூக விரோதிகளுக்கு எதிராக பயன்படுத்த வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

இந்நிலையில், சென்னையில் நேற்று ஒரே நாளில் சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் ஆகிய எட்டு இடங்களில் செயின்பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்திரா என்ற காவலர் பணி முடிந்து தனது வீட்டுக்குச் சென்ற போது இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்த இளைஞர்கள் அவரது செயினை பறித்து சென்றனர்.

ஒரே நாளில் சென்னையில் எட்டு இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனால் குற்றவாளிகளை கைது செய்ய கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில்,” சென்னை தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட எட்டு இடங்களில், ஒரே நாளில் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியையும், பொது மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் காவலர், சீருடையில் இருக்கும்போதே அவரது கழுத்தில் இருந்த தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு சென்றிருக்கின்றனர். திமுக அரசு, சமூக வலைத்தளத்தில் இயங்கும் பாஜக தொண்டர்களைப் பின்தொடர்வதையே காவல்துறையின் முழுநேரப் பணியாக மாற்றியதன் விளைவு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, பெண் காவலரிடமே செயின் பறிப்புச் சம்பவம் நடக்கும் அளவுக்கு, தமிழக மக்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

திமுக அரசு, இனியும் காவல்துறையினரை, அரசியல் பழிவாங்குதலுக்குப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு, சமூக விரோதிகளுக்கு எதிராக, காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும். காவல்துறையினரும், திமுகவின் அதிகார துஷ்பிரயோகங்களைப் புறக்கணித்துவிட்டு, தங்கள் முதற்கடமையான சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.