மு.க. ஸ்டாலின்: தமிழ்நாட்டின் வேர்கள் நட்சத்திரங்களை எட்டுவதைக் காண்பதில் பெருமை..!

தமிழ்நாட்டின் வேர்கள் நட்சத்திரங்களை எட்டுவதைக் காண்பதில் பெருமை என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் உள்ளிட்ட மூத்த விஞ்ஞானிகளைச் சந்தித்தார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணனுடன் ஒரு முக்கிய சந்திப்பை மேற்கொண்டேன்.

தமிழ்நாடு அரசுப் பள்ளியிலிருந்து சென்று இந்திய விண்வெளி நிறுவனத்தின் உயர் பொறுப்புக்கு வந்துள்ள வி.நாராயணனின் பயணமானது நிறையவே பேசக்கூடியது பொதுக் கல்வியால் எட்டக்கூடிய உயரங்களை அவர் உள்ளடக்கி உள்ளார். தமிழ்நாட்டின் வேர்கள் நட்சத்திரங்களை எட்டுவதைக் காண்பதில் பெருமை என மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சிறைத் துறை சார்பில் ரூ.668.71 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள்..! மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல்

சிறைத் துறை சார்பில் ரூ.668.71 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள புதிய கட்டிடங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், மாநிலத்தின் அமைதியைப் பேணிப்காத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் காவல் துறையின் பணிகள் சிறக்க, புதிய காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள் கட்டுதல், “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் காவலர்களுக்கு குடியிருப்புகள், பாதுகாப்புப் பணிகளுக்காக ரோந்து வாகனங்களை கொள்முதல் செய்தல், காவல் துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

திமுக அரசு பொறுப்பேற்றது முதல் காவல் துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் ரூ.509.49 கோடியில் 3,051 காவலர் குடியிருப்புகள், ரூ.59.75 கோடியில் 51 காவல் நிலையக் கட்டிடங்கள், ரூ.122.40 கோடியில் 18 காவல் துறை இதரக் கட்டிடங்கள் மற்றும் “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் ரூ.55.19 கோடியில் 253 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

காவல் துறை சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ரூ.380.98 கோடியில் 896 காவலர், தலைமைக் காவலர் குடியிருப்புகள் மற்றும் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ரூ.76.15 கோடியில் 222 காவலர் குடியிருப்புகள் என மொத்தம் ரூ.457.14 கோடியில் கட்டப்பட உள்ள 1,118 காவலர் குடியிருப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

மேலும் கோவை மத்திய சிறைச் சாலையில் நிலவும் இடநெருக்கடியை கருத்தில் கொண்டு, சிறைத் துறை சார்பில் கோவை பிளிச்சி பகுதியில் முதல்கட்டமாக ரூ.211.57 கோடியில்ஆண்கள் சிறை, 111 சிறைக்காவலர் குடியிருப்புகள், கான்கிரீட் சாலை மற்றும் மதில் சுவர் ஆகியவற்றுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், உள் துறைச் செயலர் தீரஜ்குமார், டிஜிபி சங்கர் ஜிவால், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சைலேஷ்குமார் யாதவ், சிறைத் துறை தலைமை இயக்குநர் மகேஷ்வர் தயாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

CTR. நிர்மல் குமார்: கொள்கை எதிரி பாஜகவுடன் கூட்டணி இல்லை..! விஜய் சொன்னதை நாங்கள் சொல்றோம்..!

கொள்கை எதிரி பாஜகவுடன் கூட்டணி இல்லை, மற்ற கட்சிகளை போல் இல்லாமல் எங்கள் கட்சியில் நிர்வாகிகள் அனைவரும் தலைவரின் அறிவுறுத்தலின் பேரிலேயே பேசுகிறோம் என CTR. நிர்மல் குமார் தெரிவித்தார். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில், 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அமைத்த தேர்தலை சந்தித்ததோ அதே கூட்டணி தொடர்கிறது. மறுப்பக்கம் அதிமுக – பாஜக கூட்டணி அமைந்த திமுக கூட்டணியை வீழ்த்த வியூகம் அமைத்து செயல்படுகின்றது.

இதையடுத்து, திமுக கூட்டணியை வீழ்த்த விஜய் அக்கூட்டணியில் இணைவார் என தொடர்ந்து பேச்சுக்கள் எழுந்த வண்ணமே உள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களின் கேள்விக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு துணை பொதுச்செயலாளர் CTR. நிர்மல் குமார் பதிலளித்தார். அப்போது, வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைப்பீர்களா எனக் கேள்வி செய்தியாளர்கள் எழுப்பினர்.

அதற்கு, கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுகவுடன் தவெக கூட்டணி அமைக்காது என திட்டவட்டமாக தெரிவித்தார். திமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார் எனவும் CTR. நிர்மல் குமார் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் சென்னையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது, பாஜக உடன் கூட்டணி இல்லை என்று தவெக தலைவர் விஜய் கூறவில்லை. யாரோ ஒருவர் சொல்வதை அதிகாரப்பூர்வ அறிவிப்பாக பார்க்க முடியாது என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்து இருந்தார். மேலும் பாஜக கூட்டணி குறித்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் அவர் சொல்லட்டும் அதன் பின்பு பேசுகிறோம் என தமிழிசை தமிழிசை சவுந்தரராஜன் பேசி இருந்தார்.

இந்நிலையில், தவெக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு துணை பொதுச்செயலாளர் CTR. நிர்மல் குமார் தமிழிசை சௌந்தரராஜன் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “மற்ற கட்சிகளை போல் இல்லாமல் எங்கள் கட்சியில் நிர்வாகிகள் அனைவரும் தலைவரின் அறிவுறுத்தலின் பேரிலேயே பேசுகிறோம்.

முன்னர் சொன்னதுபோல் கொள்கை எதிரி பாஜக உடனும், மாநிலத்தில் அரசியல் எதிரி திமுகவுடனும் கூட்டணி இல்லை என்பது உறுதி. பாஜகவுடனும், திமுகவுடனும் தவெக கூட்டணி கிடையாது என்று தவெக முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் தலைவர் விஜய் ஏற்கனவே தெளிவாக அறிவித்துவிட்டார். கூட்டணி குறித்து விஜய் தெரிவித்த நிலைப்பாட்டையே நாங்களும் தெரிவிக்கிறோம். இதில் எந்த மாற்றமும் இல்லை. இதனை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டாம்” எனத் தெரிவித்தார்.

ஒப்பந்ததாரரை அரிவாளை காண்பித்து மிரட்டிய திமுக முன்னாள் MLA

புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில், அரசு ஒப்பந்தததாரரை திமுக முன்னாள் MLA அரிவாளைக் காண்பித்து மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அறந்தாங்கி தொகுதியின் தற்போதைய MLA -வாக திருநாவுக்கரசர் மகன் S.T. ராமச்சந்திரன் இருக்கும் நிலையில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அறந்தாங்கி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஒதுக்கக்கூடாது என்று அண்மையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் உதயம் சண்முகம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகேயுள்ள பூங்குடியில் தீயணைப்பு நிலையத்துக்கு ரூ.2.5 கோடியில் புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்தியகீர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் MLA S.T. ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்று அடிக்கல் நாட்டினர்.

அப்போது, அங்கு வந்த திமுக முன்னாள் MLA உதயம் சண்முகம், அடிக்கல் நாட்டு விழாவுக்கு தன்னை ஏன் அழைக்கவில்லை என்று கேட்டு, அங்கிருந்த அரசு அலுவலர்கள், கட்சியினரை கடிந்துகொண்டார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்தி, அரிவாளை கொடுத்து தேங்காயை உடைக்குமாறு கேட்டுக் கொண்டனர். பிறகும் சமாதானம் அடையாத அவர், விழா குறித்து தனக்கு ஏன் தகவல் தெரிவிக்கவில்லை என்று அரிவாளை காட்டி அங்கிருந்த ஒப்பந்ததாரரை மிரட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சீமான்: அதிமுக ஆட்சியில் பாதிக்கப்பட்டப் பெண்களை அச்சுறுத்தினர்… குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றனர்..!

அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் நடந்தேறிய இப்பாலியல் வன்கொடுமையில் அதிகாரவர்க்கமும், காவல்துறையும் குற்றவாளிகளைக் காப்பாற்றவும், பாதிக்கப்பட்டப் பெண்களை அச்சுறுத்தவுமே முனைந்தன என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை எனும் கோவை மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் ஆறுதல்! தமிழ்நாடே எதிர்நோக்கியிருந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிகள் 9 பேருக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கியிருக்கும் கோவை மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

இத்தீர்ப்பு பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், தமிழக மக்களுக்கும் கிடைத்திருக்கும் பெரும் ஆறுதலாகும். பல்வேறு அரசியல் நெருக்கடிகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும், மிரட்டல்களுக்கும் மத்தியிலும், பிறழ்சாட்சியாக மாறாது நெஞ்சுரத்தோடும், துணிவோடும் நீதிமன்றத்தில் சாட்சியமளித்து நீதியின் பக்கம் நின்ற பெண்களின் செயல்பாடு போற்றத்தக்கது. நினைத்துப் பார்க்கவே முடியாத பாலியல் கொடூரங்களை நிகழ்த்திய அக்கொடுங்கோலர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது மிகச் சரியான முடிவாகும்.

“அண்ணா.. அடிக்காதீங்கண்ணா..” எனப் பாலியல் குற்றவாளிகளிடம் சிக்குண்டுக் கதறிய தங்கையின் அழுகுரலும், விம்மலும் இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அவளின் அண்ணனாக இத்தீர்ப்பை முழுமனதோடு ஏற்கிறேன். சக உயிரான பெண்ணை காக்காமல் மண்ணைக் காக்க போராடி என்ன பயன்?

அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் நடந்தேறிய இப்பாலியல் வன்கொடுமையில் அதிகாரவர்க்கமும், காவல்துறையும் குற்றவாளிகளைக் காப்பாற்றவும், பாதிக்கப்பட்டப் பெண்களை அச்சுறுத்தவுமே முனைந்தன. பலதரப்பட்டத் தரப்பிலுமிருந்தும் போராட்டங்கள் வெடித்து, அரசியல் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டப் பிறகே, வழக்கை ஒன்றியப் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றியது அன்றைய அதிமுக அரசு. அன்றைக்குக் குற்றவாளிகளைக் காப்பாற்ற துணைநின்ற அதிமுக, இன்றைக்கு தங்களால்தான் நீதிகிடைத்தது எனச் சொந்தம் கொண்டாடி, இதிலும் அரசியல் செய்ய முனைவது மிக இழிவானதாகும்.

அதனைப் போலவே, அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மாணவி விவகாரத்தில், ‘யார் அந்த சார்?’ எனும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் கேள்வியைப் புறந்தள்ளி, பின்புலத்திலிருக்கும் அதிகாரப்புள்ளிகளைக் காப்பாற்றிய திமுக அரசுக்கும் இதனைப் பேச எந்தத் தார்மீகமும் இல்லை. இவ்விவகாரத்திலும் திமுகவும், அதிமுகவும் அறிக்கைப்போர் தொடுத்து, ஒருவரையொருவர் மாறி மாறிக் குற்றஞ்சாட்டிக் கொண்டு அரசியல் இலாபமீட்ட முற்படுவது வெட்கக் கேடானதாகும்.

இவ்வழக்கில் கிடைக்கப் பெற்றிருக்கும் நீதியானது, நியாயத்திற்காகப் போராடியப் பொதுமக்களுக்கும், பாதிக்கப்பட்டு அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டபோதும் துணிந்து நீதிமன்றத்தின் படியேறிய பெண்களுக்கும் கிடைத்திருக்கும் வெற்றியாகும். இத்தீர்ப்பின் மூலம் பாலியல் குற்றவாளிகள் அனுபவிக்கப்போகும் சிறைத்தண்டனை, பெண்களைப் போகப் பொருளாக எண்ணி, அத்துமீற நினைக்கும் அத்தனைப் பேருக்குமான பாடமாகவும், எச்சரிக்கையாகவும் அமைய வேண்டும்.

ஆகவே, மரணம்வரை வாழ்நாள் தண்டனை எனக் கிடைத்திருக்கும் இத்தீர்ப்பு மேல்முறையீடுகளில் நீர்த்துப் போகாமலிருக்க வலுவான சட்டப்போராட்டங்களை நடத்த வேண்டுமெனவும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்கவும், அவர்களுக்கானப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் கடும் நடவடிக்கைகளை மற்கொள்ள வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என சீமான் தெரிவித்தார்.

மு.க . ஸ்டாலின்: கொடநாடு வழக்கிற்கும் பொள்ளாச்சி வழக்கு போல குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும்..!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் பொள்ளாச்சி வழக்கு போல குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என மு.க . ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாட்கள் அரசு முறைபயணமாக நீலகிரி மாவட்டத்திற்கு சென்றுள்ளார். நேற்று தெப்பக்காடு யானைகள் முகாமில் 5 கோடியே 6 இலட்சம் ரூபாய் செலவில் 44 அரசு குடியிருப்புகளுடன் கட்டப்பட்டுள்ள யானை பாகன்களுக்கான மாவூத் கிராமத்தை திறந்து வைத்தார்.

மேலும், முதுமலை புலிகள் காப்பகத்தில் தமிழகத்திலேயே முன்னோடியாக 15 கி.மீ. நீளத்திற்கு தொரப்பள்ளி முதல் தெப்பக்காடு வரை 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள வான்வழி தொகுப்பு கம்பிகளின் (Aerial Bunched Cable) சேவைகளை தொடங்கி வைத்து, வன சரகர்களின் பயன்பாட்டிற்காக 2 கோடியே 93 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 32 வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட பெரும்பகுதி அரங்கில் மனைவி துர்காவுடன் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பதலளித்தார். அப்போது, உண்மை குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் என 2019 தேர்தலின்போது வாக்குறுதியாகவே சொன்னேன். யாருடைய பிள்ளையாக இருந்தாலும் எத்தனை செல்வாக்கு மிகுந்தவராக இருந்தாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என கூறி இருந்தேன்.

சொன்னது போல் பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்துள்ளோம். அதேபோல், சட்டமன்ற கூட்டத்தில் கூட அதிமுக ஆட்சிக்கு பொள்ளாச்சி சம்பவமே சாட்சி என்று கூறினேன். இது தீர்ப்பின் மூலம் நிரூபணமாகியுள்ளது. செல்லூர் ராஜூ ஒரு கோமாளி. அவர் சொல்வதை பெரிதுபடுத்த விரும்பவில்லை. ஆபரேஷன் சிந்தூர் சிறப்பாக இருந்தது. அதற்கு தான் ஆதரவு தெரிவித்தோம்.

எடப்பாடி பழனிசாமி எதற்காக அமித் ஷாவை சந்தித்தார் என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும், ஆனால் நான் சொல்லிதான் மெட்ரோ ரயில் திட்டத்திற்கும், 10 நாள் வேலை ஆகிய திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டதாக கூறுகிறார். தொடர்ந்து இதுபோன்ற பொய், பித்தலாட்டத்தை செல்வதே அவரின் வேலையாக இருக்கிறது. இதுவும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும். கொடநாடு வழக்கிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படும்போது அதற்கும் தானே காரணம் என எடப்பாடி பழனிசாமி கூறுவாரா? என பார்ப்போம் என   மு.க .  ஸ்டாலின் தெரிவித்தார்.

செல்லூர் ராஜு சர்ச்சை பேச்சு: எல்லையில் ராணுவ வீரர்கள் சண்டையா போட்டாங்க..!

ராணுவ வீரர்கள் என்ன எல்லையில போய் சண்டையா போட்டாங்க? என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு -காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள தீவிரவாதிகளின் முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் தாக்குதல் போர் நடவடிக்கை தான் என்றும் அதற்கு தக்க பதிலடி வழங்கப்படும் என பாகிஸ்தான் கொக்கரித்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் நேற்று அதிகாலையில் சீனா வழங்கிய ஏவுகணைகளை கொண்டு பாகிஸ்தான் இந்தியா எல்லை பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. இதற்கு ரஷ்யா வழங்கிய பாதுகாப்பு அமைப்புகளை கொண்டு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இதற்கிடையே பாகிஸ்தான் திடீரென இந்திய எல்லைப் பகுதிகளில் தாக்குதலை நடத்த தொடங்கியது. இதனையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. மேலும் மே 12 ஆம் தேதி இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.இதனிடையே இந்திய ராணுவத்திற்கு மரியாதையை செலுத்தும் விதமாக சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

இந்நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பதிலளித்தார். அப்போது, “2 நாட்கள் தூங்காமல் கண்விழித்து ராணுவ நடவடிக்கைகளை பிரதமர் மோடி கண்காணித்து வருகிறார். இப்படி ஒரு பிரதமரை பெற்றதற்கு இந்திய மக்கள் பெருமைப்பட வேண்டும். அதற்கு பதிலாக ராணுவ வீரர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக திமுக கூறுகிறது. .

ராணுவ வீரர்கள் என்ன எல்லையில போய் சண்டையா போட்டாங்க? போருக்கு தேவையான தொழில்நுட்பங்களையும், கருவிகளையும் வாங்கிக் கொடுத்தது மத்திய அரசுதான். பாதுகாப்புத்துறை அமைச்சர் , உள்துறை அமைச்சர் ஆகியோர் கேட்ட ஆயுதங்களை பிரதமர் மோடி வாங்கிக் கொடுத்தார். எனவே திமுகவினர் பிரதமர் மோடியைதான் பாராட்ட வேண்டும். இவர்களின் நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்” செல்லூர் ராஜு தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் K. ஈஸ்வரசாமி சமுதாய நலக்கூடம் கட்டும் பணி பூமி பூஜை

நாடாளுமன்ற உறுப்பினர் K. ஈஸ்வரசாமி அவர்கள் சமுதாய நலக்கூடம் கட்டும் பணி பூமி பூஜை செய்து வைத்தார். கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சி தெற்கு சிஞ்சுவாடி பஞ்சாயத்து.M.G.R. நகரில் 77. லட்சத்து 89 ஆயிரம் மதிப்பில் சமுதாய நலக்கூடம் கட்டும் பணி பூமி பூஜை இன்று நடைபெற்றது.

இந்த பூமி பூஜை நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் இல. பத்மநாபன் அவர்கள் தலைமையில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் K. ஈஸ்வரசாமி அவர்கள் மற்றும் பொள்ளாச்சி தெற்கு, மத்திய ஒன்றில் கழக செயலாளர் கமலக்கண்ணன் அவர்கள் ஆகியோர் பூமி பூஜை செய்து வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர்கள், பொள்ளாச்சி வட்டாட்சியர், சிஞ்சிவாடி செயலாளர் ராமகிருஷ்ணன், கூளநாயக்கன்பட்டி ராமராஜ், பனமரத்துப்பாளையம் சந்திரசேகர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வைகோ: பயமா..! திமுகவின் அகராதியிலேயே கிடையாது…!

பயம் என்பது திமுகவின் அகராதியில் இல்லை… அமலாக்கத் துறை, வருமான வரித் துறை போன்ற அமைப்புகள் மத்திய அரசால் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் 26 அப்பாவிப் பொதுமக்கள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வேதனை அளிக்கிறது. அதே நேரத்தில், முஸ்லிம் இளைஞர்கள் சிலர் துணிச்சலுடன் செயல்பட்டு, மீதமுள்ள மக்களைப் பாதுகாப்பாக மீட்டெடுத்த செய்தி மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது. இந்தச் செய்தி ஊடகங்களில் விரிவாக வெளியிடப்படவில்லை.

நீட் தேர்வு விலக்கு குறித்து திமுகவின் வாக்குறுதி குறித்த கேள்விக்கு, நீட் வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. திமுகவின் நான்கு ஆண்டுகால ஆட்சியில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. சொல்லாத வாக்குறுதிகளையும் அரசு நிறைவேற்றி உள்ளது. திராவிட மாடல் ஆட்சி திருப்திகரமாக உள்ளது என வைகோ தெரிவித்தார்.

மேலும், வருமான வரித்துறை சோதனைகளுக்கு திமுக அஞ்சுவதாகக் கூறுவது குறித்த கேள்விக்கு, பயம் என்பது திமுகவின் அகராதியில் இல்லை. வருமான வரித்துறை, அமலாக்கத் துறை போன்ற அமைப்புகள் மத்திய அரசால் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், அந்த அமைப்புகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது. திமுகவினர் இதைப் பற்றி கவலைப்படவில்லை என வைகோ தெரிவித்தார்.

மு.க. ஸ்டாலின்: பாஜகவின் அடக்குமுறைக்கு எடப்பாடி பழனிசாமி பணிந்து விட்டார்..!

பாஜக தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்ற நினைத்து அனைத்து விதமான அச்சுறுத்தலையும் செய்து அதிமுகவை அடக்க வேறு வழியில்லை எடப்பாடி பழனிசாமி பணிந்து விட்டார் என மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்ட த்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். கூட்டத்தில் திமுக பொதுச் செய லாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், ஆ.ராசா, கனிமொழி, திருச்சி சிவா. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் உள்பட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் திமுக மாவட்ட செயலாளர்கள் 76 பேரும் கூட்டத்த்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசுகையில், நம்முடைய பலமே, நம்முடைய கழகக் கட்டுமானம்தான்! இத்தகைய நிர்வாகக் கட்டமைப்பு எந்தக் கட்சிக்கும் கிடையாது. அந்த கட்டமைப்பை காலம் தோறும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறோம்; இருக்க வேண்டும்.தடங்கல் என்பது எப்போதும் இருக்கும், அதை உங்களிடம் இருக்கும் உழைப்பால் வெல்லுங்கள் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்!

பாஜக தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்ற நினைக்கிறது. அதற்கு அனைத்து விதமான அச்சுறுத்தலையும் செய்து அதிமுகவை அடக்கி விட்டது. பழனிசாமிக்கும் வேறு வழியில்லை. பாஜக கூட்டணியை ஏற்றுக் கொள்ளாவிட்டால் சொந்தக் கட்சியில் அவர் தலைமைக்கே சிக்கல் வரும் என்று பயப்படுகிறார். அதனால் பாஜக கூட்டணியை ஏற்றுக்கொண்டு விட்டார்.

நாம் எல்லாக் காலக்கட்டத்திலும் இதுபோன்ற சோதனைகளை எதிர்கொண்ட இயக்கம்தான். அரசியல் ரீதியாக நம்மை வெல்ல முடியாதவர்கள், இதுபோன்ற மிரட்டல்கள் மூலமாக அசிங்கப்படுத்த நினைப்பார்கள். அவர்களது அரட்டல் – மிரட்டல் – உருட்டல் அனைத்துக்கும் உண்மையான காரணம் என்ன என்பது மக்களுக்குத் தெரியும். எனவே, பாஜகவின் அச்சுறுத்தலை, அரசியல் ரீதியாக நாம் எதிர்கொள்வோம்.

அமைச்சர்கள் அந்தந்த மாவட்டத்தில் இருந்து பகுதிகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர்கள் இனி சென்னையில் இருப்பதைவிடவும் மாவட்டங்களில் அதிக நாட்களைச் செலவிடுங்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு ஊராட்சி, வார்டு வாரியாகச் செல்ல வேண்டும்.

வேட்பாளர் யார் என்பதை தலைமைக் கழகம் முடிவு செய்யும். வெற்றி பெறுபவரே வேட்பாளராக நிறுத்தப்படுவார். திறமை வாய்ந்தவர் நிறுத்தப்படுவார். அவரை சட்டமன்றத்துக்கு தகுதியுள்ளவராக தேர்வு செய்ய உழைக்க வேண்டியது உங்களது கடமை! பவள விழாவைக் கொண்டாடிய கழகம், ஆறாவது முறையாக ஆட்சியில் அமர்ந்திருக்கக் காரணம், கோடிக்கணக்கான திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள்தான் என்பதை நான் அனைத்து இடங்களிலும் சொல்லி வருகிறேன்.

கடந்த ஏழு ஆண்டுகளாக நாம் எதிர்கொண்ட அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றியை பெற்று வருகிறோம். இந்த வெற்றிக்குக் காரணம், கழக நிர்வாகிகளும், தொண்டர்களும்தான். இத்தகைய நன்றி உணர்வோடுதான் நாம் செயல்பட்டு வருகிறோம்.” என மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.