மு.க . ஸ்டாலின்: கொடநாடு வழக்கிற்கும் பொள்ளாச்சி வழக்கு போல குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும்..!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் பொள்ளாச்சி வழக்கு போல குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என மு.க . ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாட்கள் அரசு முறைபயணமாக நீலகிரி மாவட்டத்திற்கு சென்றுள்ளார். நேற்று தெப்பக்காடு யானைகள் முகாமில் 5 கோடியே 6 இலட்சம் ரூபாய் செலவில் 44 அரசு குடியிருப்புகளுடன் கட்டப்பட்டுள்ள யானை பாகன்களுக்கான மாவூத் கிராமத்தை திறந்து வைத்தார்.

மேலும், முதுமலை புலிகள் காப்பகத்தில் தமிழகத்திலேயே முன்னோடியாக 15 கி.மீ. நீளத்திற்கு தொரப்பள்ளி முதல் தெப்பக்காடு வரை 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள வான்வழி தொகுப்பு கம்பிகளின் (Aerial Bunched Cable) சேவைகளை தொடங்கி வைத்து, வன சரகர்களின் பயன்பாட்டிற்காக 2 கோடியே 93 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 32 வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட பெரும்பகுதி அரங்கில் மனைவி துர்காவுடன் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பதலளித்தார். அப்போது, உண்மை குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் என 2019 தேர்தலின்போது வாக்குறுதியாகவே சொன்னேன். யாருடைய பிள்ளையாக இருந்தாலும் எத்தனை செல்வாக்கு மிகுந்தவராக இருந்தாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என கூறி இருந்தேன்.

சொன்னது போல் பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்துள்ளோம். அதேபோல், சட்டமன்ற கூட்டத்தில் கூட அதிமுக ஆட்சிக்கு பொள்ளாச்சி சம்பவமே சாட்சி என்று கூறினேன். இது தீர்ப்பின் மூலம் நிரூபணமாகியுள்ளது. செல்லூர் ராஜூ ஒரு கோமாளி. அவர் சொல்வதை பெரிதுபடுத்த விரும்பவில்லை. ஆபரேஷன் சிந்தூர் சிறப்பாக இருந்தது. அதற்கு தான் ஆதரவு தெரிவித்தோம்.

எடப்பாடி பழனிசாமி எதற்காக அமித் ஷாவை சந்தித்தார் என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும், ஆனால் நான் சொல்லிதான் மெட்ரோ ரயில் திட்டத்திற்கும், 10 நாள் வேலை ஆகிய திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டதாக கூறுகிறார். தொடர்ந்து இதுபோன்ற பொய், பித்தலாட்டத்தை செல்வதே அவரின் வேலையாக இருக்கிறது. இதுவும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும். கொடநாடு வழக்கிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படும்போது அதற்கும் தானே காரணம் என எடப்பாடி பழனிசாமி கூறுவாரா? என பார்ப்போம் என   மு.க .  ஸ்டாலின் தெரிவித்தார்.

அனுஷ்கா சர்மா உருக்கம்: கிரிக்கெட் மீது கொண்ட நேசம்.. வெளியே காட்டிக்கொள்ளாத விராட் கோலி கண்ணீர்..!

விராட் கோலி கிரிக்கெட் மீது கொண்ட நேசம்.. வெளிக்காட்டாத உங்களது கண்ணீர், கிரிக்கெட் மீது நீங்கள் கொண்டுள்ள நேசத்தையும் நான் அறிவேன் என அனுஷ்கா சர்மா பதிவிட்டுள்ளார். 2011 முதல் 2025 வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 123 போட்டிகளில் 210 இன்னிங்ஸில் விளையாடி 30 சதங்கள் மற்றும் 31 அரை சதங்களை உட்பட மொத்தம் 9230 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்று சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவருக்கு முன்னாள் வீரர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராம் தனது பக்கத்தில், “எல்லோரும் உங்களின் சாதனைகள் மற்றும் மைல்கல்கள் குறித்துதான் பேசுவார்கள். ஆனால், யாரும் காணாத உங்களது போராட்டங்கள், வெளிக்காட்டாத உங்களது கண்ணீர், கிரிக்கெட் மீது நீங்கள் கொண்டுள்ள நேசத்தையும் நான் அறிவேன். அது என் நினைவில் உள்ளது.

ஒவ்வொரு டெஸ்ட் தொடருக்கு பிறகும் நீங்கள் பக்குவமடைந்தீர்கள். சர்வதேச கிரிக்கெட்டில் நீங்கள் வெள்ளை சீருடையில்தான் ஓய்வு பெறுவீர்கள் என நான் கற்பனை செய்தது உண்டு. ஆனால், நீங்கள் எப்போதும் உங்கள் மனம் சொல்வதை செய்வீர்கள்” என அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: செப்டம்பர் 6-ந் தேதி காவலர் நாளாக கொண்டாடப்படும்

தமிழ்நாட்டின் அமைதிக்கு காவல்துறைதான் காரணம். அவர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். ஆகையால் அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் செப்டம்பர் 6-ந் தேதி காவலர் நாள் கொண்டாடப்படும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் பட்ஜெட்டும், அதற்கு மறுநாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு இரு பட்ஜெட் மீதான விவாதம் 5 நாட்கள் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக மார்ச் 24-ந் தேதி முதல் சட்டசபைக் கூட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப் பட்டு அதன் மீது விவாதமும் அமைச்சர்களின் பதிலுரையும் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று காவல் துறை, தீயணைப்பு மீட்பு பணிகள் துறைக்கான மானியக் கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து இருந்தார். தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, பல்வேறு தடைகளையும் தாண்டிதான் திராவிட மாடல் ஆட்சி சாதித்து வருகிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைய இது மணிப்பூரும் அல்ல, காஷ்மீரும் அல்ல.

தமிழ்நாட்டின் அமைதிக்கு காவல்துறைதான் காரணம். அவர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். குற்றச்சம்பவங்களுக்கு உடனடியாக தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதால் அமைதி நிலவுகிறது. குடியிருப்புகளை சுற்றி சந்தேக நடமாட்டம் இருந்தால் காவல்துறையினருக்கு தகவல் கூறுங்கள். ஆண்டுதோறும் செப்டம்பர் 6-ந் தேதி காவலர் நாள் கொண்டாடப்படும்.

காவலர் நாள் கொண்டாடப்படும் தினத்தில் சிறந்த காவலர்களுக்கு பதக்கம் வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் காவலர்களுக்கு மருத்து பரிசோதனை செய்துகொள்ள வழிவகை செய்யப்படும். காவல்துறை சிறப்பாக செயல்பட்டால் மட்டும் போதாது, ஒட்டுமொத்த சமூகமும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். குற்றம் நடந்த உடன் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கும் நபர்களை பாராட்டுகிறேன் என மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

Siddaramaiah: இந்தியர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதில் தோல்வி அடைந்து விட்டார்கள்..!

காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்தில் ஒரு ராணுவ வீரர் இல்லை, ஒரு காவல்துறையினர் இல்லை. இந்தியர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதில் தோல்வி அடைந்துள்ள மத்திய அரசு குறித்து கேள்வி எழுப்பக்கூடாதா? என சித்தராமையா: கேள்வி எழுப்பினார்.

கர்நாடக காங்கிரஸ் சார்பில் மத்திய அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் பெலகாவியில் நேற்று நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் சித்தராமையா கலந்து கொண்டு பொதுக்கூட்டத்தை தொடங்கி வைத்து பேசுகையில், நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக விலைவாசி உயர்ந்து வருகிறது. சமுதாயத்தை உடைக்கும் வேலையை இந்த பாஜக செய்கிறது. மக்களுக்கு துரோகம் இழைக்கும் பணியை தவிர மத்திய பாஜக அரசு வேறு என்ன செய்கிறது?.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது சங்பரிவார் அமைப்பினர் என்ன செய்தனர்?. காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதில் கர்நாடகத்தை சேர்ந்த 3 பேர் பலியாயினர். இது மத்திய அரசின் பாதுகாப்பு குறைபாடு இல்லையா? சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஒரு ராணுவ வீரர் இல்லை, ஒரு காவல்துறையினர் இல்லை. இந்தியர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதில் தோல்வி அடைந்துள்ள மத்திய அரசு குறித்து கேள்வி எழுப்பக்கூடாதா?.நாடு சுதந்திரம் அடைந்து 51 ஆண்டுகள் வரை RSS அலுவலகம் மீது தேசிய கொடி ஏற்றப்படவில்லை.

இதனால் பாஜக-வினருக்கு வெட்கம் ஏற்படவில்லையா?. சுதந்திர போராட்டம் முதல் நவீன இந்தியா வரை இதன் வளர்ச்சியில் பாஜக-வின் பங்கு என்ன?. வெட்கம் இல்லாமல் தேசபக்தி குறித்து அவர்கள் பேசுகிறார்கள். இந்தியர்களிடையே பிரிவினை ஏற்படுத்தியதை தவிர பாஜக வேறு என்ன செய்தது?. மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது பணக்காரர்களுக்கு 32 சதவீத வரி விதிக்கப்பட்டது. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அந்த வரி 25 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.

ஏழை, நடுத்தர மக்களுக்கு எதிரான மத்திய ஆட்சி நிர்வாகத்தை நாங்கள் எதிர்க்கக்கூடாதா?. இந்தியர்களை நிரந்தர பொய்களில் இன்னும் எத்தனை ஆண்டுகள் மூழ்கடிப்பீர்கள். மக்களுக்கு உண்மையை சொல்ல பாஜக-வினர் முன்வர வேண்டும். நாட்டிற்காக காங்கிரஸ் தலைவர்கள் உயிா்த்தியாகம் செய்தனர். அதனால் போராட்டம் என்பது காங்கிரசுக்கு புதிது அல்ல.

ஆங்கிலேயர்களை விரட்டியடித்த எங்களுக்கு உங்களை எதிர்க்கும் சக்தி உள்ளது. நாங்கள் பால் விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தி அதை அப்படியே விவசாயிகளுக்கு வழங்குகிறோம். பஸ் கட்டணம், குடிநீர் கட்டணம், மின்சார கட்டணம் உள்ளிட்டவை மற்ற மாநிலங்களை விட கர்நாடகத்தில் குறைவாகத்தான் உள்ளது. பாஜகவின் பொய் பிரசாரத்தை கண்டு நான் பயப்பட மாட்டேன்.

மத்திய அரசு அரிசி, சமையல் எண்ணெய், தங்கம், வெள்ளி, உரம், பருப்புகள், டீசல், பெட்ரோல் விலையை உயர்த்தி மக்களுக்கு கஷ்டத்தை கொடுத்துள்ளது. இந்த மத்திய அரசு எதை விட்டுவைத்து இருக்கிறது?. கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தாலும், பெட்ரோலிய பொருட்களின் விலையை தொடர்ந்து உயர்த்துவது என்பது நாட்டு மக்களுக்கு மத்திய அரசு செய்யும் துரோகம் ஆகும் என சித்தராமையா பேசினார்.

சீமான் வேண்டுகோள்: கல் குவாரிகளின் கால அளவை உயர்த்தும் முடிவை அரசு கைவிட வேண்டும்..!

கல் குவாரிகள் இயங்குவதற்கான கால அளவை உயர்த்தும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என – நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சீமான் தனது எக்ஸ் பக்கத்தில், தமிழ்நாட்டில் கல் குவாரிகள் இயங்குவதற்கான கால அளவை 25 ஆண்டுகள் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

தமிழ்நாடு அரசின் புவியியல் மற்றும் சுரங்கத்துறை கூடுதல் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி கல் குவாரிகள் இயங்குவதற்கான கால அளவை 25 ஆண்டுகள் உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கனிம வளங்களை வெட்டி எடுக்கும் ஒப்பந்தம் கோருவோருக்கு 10 முதல் 25 ஆண்டுகள் வரையிலும், 10 ஏக்கர் உள்ள குவாரிகளுக்கு 20 ஆண்டுகள் வரையிலும், 10 ஏக்கருக்கு மேல் உள்ள குவாரிகளுக்கு 30 ஆண்டுகள் வரையிலும் கால நீட்டிப்பு வழங்கி அனுமதி வழங்கியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே உரிமம் பெற்று இயங்கிவரும் கல்குவாரிகளில், பல ஆண்டுகளாக அனுமதிக்கப்பட்ட அளவைவிடப் பல மடங்கு அதிகமான பரப்பளவில், அதிகமான ஆழத்தில் முறைகேடாக கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு வருகின்றது. அவற்றை முறையாகக் கண்காணித்து, அவ்வப்போது ஆய்வு செய்து, முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது எந்த நடவடிக்கையையும் தமிழ்நாடு அரசு எடுப்பதில்லை. மாறாகக் கனிம வளக்கொள்ளையைத் தடுக்க முயலும் அரசு அதிகாரிகள், புகார் தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள், கனிமவளக் கொள்ளையர்களால் பட்டப்பகலில் படுகொலை செய்யப்படுவதை திமுக அரசு வேடிக்கை மட்டுமே பார்க்கிறது. மாறாகக் கனிமவளக்கொள்ளை குறித்துப் புகார் தெரிவிக்கும் நாம் தமிழர் கட்சியினர் மீது பொய் வழக்கு புனைந்து கைது செய்வதை திமுக அரசு வாடிக்கையாக வைத்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு கல் குவாரிகள் இயங்குவதற்கான கால அளவை, 25 ஆண்டுகள் நீட்டிப்புச் செய்து அறிவித்துள்ளது கனிம வளக்கொள்ளை மேலும் பன்மடங்கு அளவிற்கு அதிகரிக்கவே வழிவகுக்கும். நாம் வாழும் பூமி நமக்கானது மட்டுமல்ல; நமக்குப் பின்வரும் வருங்காலத் தலைமுறைக்கானது. அதனைப் பாதுகாப்பாக அவர்களிடம் கையளிக்க வேண்டியது நம்முடைய முழுமுதற் கடமையாகும். மீண்டும் நம்மால் உருவாக்கவே முடியாத இயற்கையின் அருட்கொடையாம் மலை, மணல் உள்ளிட்ட இயற்கை வளங்களைக் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி வெட்டி எடுக்க அனுமதித்து அழித்தொழிக்கப்படுவதை நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் வருங்காலத் தலைமுறைக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.

“முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்” என்று நிலம் தன் இயல்பான தன்மையை இழந்தால் வறண்ட பாலை நிலமாகும் என்பதை எச்சரிக்கும் விதமாக ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட சிலப்பதிகார காப்பியம் வலிதோய்ந்து பாடுகிறது.

மலை, மணல், ஆறு, அருவி, கடல், காடு, காற்று, நிலம், நீர் என்று நாம் வாழும் பூமியின் எல்லா வளங்களையும் கொள்ளைப்போக அனுமதித்து, முற்று முழுதாக அழித்து முடித்துவிட்டு நமக்குப் பின்வரும் தலைமுறைக்கு எதை வைத்துவிட்டுப் போகப்போகிறோம்? சுற்றுச்சூழலை நாசமாக்கி வாழத் தகுதியற்ற நிலமாக பூமியை மாற்றிவிட்டு எங்கே நம் சந்ததிகளை வாழவைக்கப்போகிறோம்? என்ற கேள்விகளுக்கு எவரிடத்தில் பதில் உண்டு? ஆகவே, தமிழ்நாடு முழுவதும் இயங்கும் கல் குவாரிகளுக்கான கால அளவை 25 ஆண்டுகள் நீட்டிப்பு செய்யும் அறிவிப்பை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்துகிறேன் என சீமான் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Prakash Raj: மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் விலைவாசி என்னனு பாஜகவுக்கு தெரியாதா..!?

மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தைவிட அதிகமாக நிதி தருகிறேன்; இங்கே அழுகிறார்கள் என பிரதமர் மோடி பேசுகிறார். மன்மோகன் சிங் காலத்து விலைவாசியா இப்போது இருக்கிறது? என பிரகாஷ் ராஜ் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார். சன் நியூஸ் டிவி சேனலில் அதன் தலைமை செய்தியாளர் மு.குணசேகரன் அவர்கள் பிரகாஷ் ராஜூடன் நடத்திய உரையாடலில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதால் அமைதி திரும்பிவிட்டது என்றனர். இப்போது வலியைத் தரக் கூடிய ஒரு பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது.

பாதுகாப்பில் எப்படி குறைபாடுகள் ஏற்பட்டன என யாரும் கேள்வி கேட்பது இல்லை? இப்பதான் ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி சுற்றுலா பயணிகள் செல்லலாம் என்கிற நிலைமை இருக்கும் போது.. 2,000 பேர் கூடுகிற ஒரு சுற்றுலா தலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளே இல்லை என்கிற போது கேள்வி எழுகிறது.. இவ்வளவு ராணுவம் இருக்கிறது.. உளவுத்துறை தோல்வி அடைந்துவிட்டதா? இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீருக்கு உரிமை கொண்டாடுகின்றன.. ஆனால் காஷ்மீர் மக்களுக்கு என்னதான் வேண்டும் என யாரும் கேட்கவில்லையே.. பயங்கரவாதத்தையே ஒழித்துவிட்டோம் என்கிறீர்கள்.. பொதுமக்களையே பாதுகாக்க முடியவில்லையா? ஆகையால் மத்திய அரசுதான் பதில் சொல்ல வேண்டும்.

காஷ்மீரில் அமைதி திரும்பிவிடக் கூடாது என்பதில் அரசியல்வாதிகளும் ஜிஹாதிகளும் உறுதியாக இருக்கின்றனர். இதுதான் வரலாறு. சரி.. அப்படியான சூழ்நிலையில் இந்திய ராணுவம் என்ன நடவடிக்கை எடுத்தது? நாம் அரசியலைப் பேச வேண்டாம்.. அரசாங்கம் என்ன செய்கிறது என்பது பற்றி பேச வேண்டும். உள்துறை அமைச்சரின் பாதுகாப்புக்கு 80 பேர் போகத் தெரிகிறது இல்லையா.. அந்த பாதுகாப்பு ஏன் மக்களுக்கு இல்லை? பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.. சரி.. அதை தடுக்க நீங்கள் என்ன செய்தீர்கள்? புல்வாமா தாக்குதலுக்குப் பிறகும் கூட நாம் யோசிக்காமல் இருக்கிறோமே..

ஆகையால்,  அரசாங்கத்தில் இருப்பவர்களை நோக்கி நாம் கேள்வி எழுப்புகிறோம். லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெறவில்லை. சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் போன்றோரை சேர்த்துதான் பிரதமர் மோடி மெஜாரிட்டியை நிரூபிக்க முடிகிறது.பிரதமர் மோடி வீழ்ந்து கொண்டு இருக்கிறார் என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் தெரிவித்தன. பாஜக வென்றதாக சொல்லப்படும் 240 தொகுதிகளிலும் கூட சில தொகுதிகளில் ஊழல் செய்துதான் வென்றுள்ளது. பாஜகவால் 200 தொகுதிகளில் வெற்றி பெற முடிந்திருந்தாலே பெரிய விஷயம்தான். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற கதையாகத்தான் இருக்கிறது. அயோத்தி, ராமர்கோவில் கட்டிய இடத்திலேயே கூட பாஜகவால் ஜெயிக்க முடியலையே..

தொகுதி மறுசீரமைப்பு தேவை இல்லை என யாரும் சொல்லவில்லை. தமிழ்நாடும் சொல்லவில்லை. தொகுதி மறுசீரமைப்பால் எங்களது பிரதிநிதித்துவம் பாதிக்கப்படுகிறது என்பதுதான் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் குரலாக இருக்கிறது. ஆனால் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக விவாதம் தொடங்குவதற்கு முன்னரே புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை தொகுதி மறுசீரமைப்புக்கு ஏற்ப கட்டி வைத்தால் எப்படி சொல்வது.. தொகுதி மறுசீரமைப்பால் பெரும்பான்மைக்கு வட இந்தியாவில் பெறும் தொகுதிகள் எண்ணிக்கையே போதும் என்கிற நிலைமை உருவாகும்.

மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தைவிட அதிகமாக நிதி தருகிறேன்; இங்கே அழுகிறார்கள் என பிரதமர் மோடி பேசுகிறார். மன்மோகன் சிங் காலத்து விலைவாசியா இப்போது இருக்கிறது? நீங்கள் யார் கொடுப்பதற்கு? அது மக்களின் பணம்.. மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து கொடுப்பதற்குதான் பிரதமர் பதவி. அதைவிட்டுவிட்டு நான் கொடுத்தேன்.. நான் கொடுத்தேன் என பேசுவது எப்படி சரியாகும்?

பாஜக, எந்த முஸ்லிம்களை மிக கடுமையாக எதிர்க்கிறதோ அதே முஸ்லிம்களுக்காகவே வஃபு சட்டம் கொண்டு வந்ததாக பாஜக சொல்வதை எப்படி நம்புவது? 300 ஆண்டுகளுக்கு முந்தைய சொத்துகளுக்கு எங்கே போய் ஆவணங்களைத் தேடுவது? அதற்கான பத்திரங்கள் இருக்கின்றனவா? திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தில் முஸ்லிம்கள் அனுமதிக்கப்படுவார்களா? மடங்களின் சொத்துகளில் அரசாங்கம் தலையிடுமா? இன்றைக்கு முஸ்லிம்களின் சொத்துகள்; நாளைக்கு கிறிஸ்தவர்களின் சொத்துகள் என்றுதான் வருவார்கள்.

அதிமுக ஒரு மாநிலக் கட்சிதானே.. பாஜக என்ன செய்கிறது என தெரியும்தானே..நாட்டை, வரலாற்றை, மொழியை என்ன செய்கிறது பாஜக என தெரியும்தானே.. இதை எல்லாம் மிதிக்கனும் என நினைக்கிற பாஜகவுடன் எப்படி கூட்டணி சேர முடியும்? தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கான பிரதிநிதித்துவம் குறையப் போகுதே.. இப்பவும் பாஜகவுடனா சேரப் போகிறது அதிமுக?

பாஜக, உன் தோளில் கை போடுகிறது எனில் உன்னை அமுக்கப் போகிறது என்றுதான் அர்த்தம். காசு, பணம், அதிகாரம் தேவை எனில் பாஜகவுடன் கூட்டணிக்கு போகலாம்.. ஆனால் என் நாட்டை விற்றுப் போக நான் அனுமதிக்கமாட்டேன். என் நாட்டை கொள்ளையடிக்கிறது பாஜக தமிழ்நாட்டு நலனுக்கான திமுக கூட்டணி கட்சிகளை இணைத்துக் கொள்வதில் எந்த தவறுமே இல்லை.

ஆனால் அதிமுக யாருடன் கூட்டணி வைத்துள்ளது? தமிழ்நாட்டு கட்சியுடனா வைத்துள்ளது? உங்களை கொள்ளையடிக்கிறவர்களிடம் கூட்டணி வைத்துக் கொள்வதை எப்படி ஏற்க முடியும்? கூட்டணி வைப்பது பிரச்சனை அல்ல.. யாருடன் கூட்டணி என்பதுதான் பிரச்சனையே. நீ யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி சேர்ந்து கொள்.. ஆனால் நான் என் நாட்டை விற்கவிடமாட்டேன்.. நீ என் வேலையை செய்ய விட வேண்டும். என் தமிழ்நாட்டை, என் தென்னிந்தியாவை அசிங்கப்படுத்த விடமாட்டேன்.

அதிமுக- பாஜக கூட்டணியை எதிர்க்கிறோம் என்பதைவிட எதிர்த்துதான் ஆக வேண்டும். என் வீட்டிலேயே கொள்ளையடிக்கிற பாஜகவை எதிர்க்காமல் நான் வேறு யாரை எதிர்க்க வேண்டும்? பாஜக என்பது ஒரு அரசியல் கட்சியாக மட்டும் பார்க்கவில்லை.. பாஜகவுக்கு பின்னால் இருக்கிற இந்துத்துவா- மனுவாதி ஒரே நாடு ஒரே தேர்தல்- சித்தாந்தத்தைப் பார்க்க வேண்டும். காந்தியை கும்பிடுகிற பாஜகவுக்குள் கோட்சேக்குள் இருக்கின்றனர் என்பதை மறக்க கூடாது.

நோட்டாவுக்கு கிடைக்கக் கூடிய ஓட்டுகள் கூட இல்லாத பாஜகவுடன் ஏன் கூட்டணி? அதிமுகவுக்கு தன்மானம், கொள்கை என்பது எல்லாம் எதுவுமே கிடையாதா? மாநிலக் கட்சிதானே அதிமுக.. பாஜகவுடன் ஏன் கூட்டணி வைக்கனும்? என்ன காரணத்துக்காக பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்க வேண்டும்? 2026 தேர்தலின் மைய பிரச்சனையே இதுதான் 2026 தமிழக சட்டசபை தேர்தலானது என் நாட்டுக்கு துரோகம் செய்கிறவங்களுக்கு ஓட்டா? என் மாநிலத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கிறவங்களுக்கு ஓட்டா? என்பதாகத்தான் இருக்கப் போகிறது. தமிழ்நாட்டுக்கு விரோதிகள் யார்? தமிழ்நாட்டுக்கு நன்மை செய்தவர்கள் யார்? என்பதுதான் 2026 தேர்தலின் முக்கியமான மையமான பிரச்சனையாக இருக்கும். என பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.

நரேந்திர மோடி கேள்வி: பயங்கரவாதிகள் வருகிறார்கள்..?, தாக்குகிறார்கள்..? , தப்பிக்கிறார்கள்..? ராணுவம் உங்கள் கையில் இல்லையா..?

பயங்கரவாதிகள் வருகிறார்கள்..?, தாக்குகிறார்கள்..? , தப்பிக்கிறார்கள்..? ராணுவம் உங்கள் கையில் இல்லையா..? என பிரதமர் நரேந்திர மோடி கேள்வி கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்தியாவின் முக்கிய கோடை கால சுற்றுலாத்தலமான ஜம்மு – காஷ்மீர் பஹல்காமில் கடந்த 22-ஆம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக ஆண்களை மட்டுமே குறிவைத்து சுட்டுள்ளனர்.

இதில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழ்நாடு, மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 13 பேர் காயமடைந்து உள்ளனர். இதனிடையே பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். மேலும், மத்திய அரசின் பாதுகாப்பு குறைபாடு தான் பஹல்காம் தாக்குதலுக்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில், 2012 -ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, அப்போதைய மத்திய அரசு மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் மீது நரேந்திர மோடி தெரிவித்த விமர்சனங்கள், மோடிக்கே எதிராகத் திரும்பியுள்ளன. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, மோடியின் பழைய பேச்சு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

பாஜக தேசிய செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு 2012 -ஆம் ஆண்டு மும்பையில் நடந்த ஒரு பேரணியில் நரேந்திர மோடியின் உரை, “பயங்கரவாதிகளின் கைகளுக்கு ஆயுதங்கள் சென்று கொண்டு இருக்கின்றன.பணம் சென்று சேர்கிறது. முழு பணவியல் அமைப்பும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது மற்றும் ரிசர்வ் வங்கியின் கைகளில் உள்ளது. இந்த அமைப்பு முழுவதும் உங்கள் கையில். இடையில் யாரும் இல்லை.

ஆனாலும் ஏன் உங்களால் இதைத் தடுக்கவோ அல்லது பயங்கரவாதிகளைப் பிடிக்கவோ முடியவில்லை? நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள்? பயங்கரவாதிகள் வருகிறார்கள், தாக்குகிறார்கள், தப்பிக்கிறார்கள். பிரதமரே, சொல்லுங்கள், எல்லைப் பாதுகாப்புப் படை, கடலோரப் பாதுகாப்பு, கடற்படை எல்லாம் உங்கள் கையில் இல்லையா? ஆனாலும் யங்கரவாதிகள் வெளிநாட்டில் இருந்து எப்படி நாட்டிற்குள் நுழைகிறார்கள்? எல்லைகளைப் பாதுகாப்பது உங்கள் பொறுப்பு இல்லையா?” என நரேந்திர மோடி பேசி இருந்தார். இந்நிலையில் “மோடி தன்னைத்தானே கேள்வி கேட்கிறார்” என்ற வாசகத்துடன் சநரேந்திர மோடி கேள்வி கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

வாகா அட்டாரி எல்லை மூடல்- பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற 48 மணிநேர கெடு

சிந்து நதி இனி பாகிஸ்தானிற்குள் பாயாது… வாகா- அட்டாரி எல்லைகளை மூடல் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள், இந்தியாவை விட்டு ஒரு வாரத்தில் வெளியேற வேண்டும் போன்ற அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டது.

இந்தியாவின் முக்கிய கோடை கால சுற்றுலாத்தலமாக ஜம்மு – காஷ்மீர் கடந்த சில ஆண்டுகளாக மாறி வருகிறது. உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் காஷ்மீருக்கு சுற்றுலா வந்த வண்ணம் இருக்கிறார்கள். மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பரந்த புல்வெளிகளை கொண்ட அழகிய ஊர்.

இந்த பஹல்காம் பகுதிகளுக்கு வாகனங்களில் செல்ல முடியாது. இங்குள்ள பைசரன் குன்றில் ஒரு ஏரியும், மலையேற்ற வீரர்களுக்கான இடமும் இருக்கிறது. இந்த பகுதிகளுக்கு வாகனங்களில் செல்ல முடியாது. இதனால் சுற்றுலாப் பயணிகள் கால்நடையாகவும், குதிரைகளில் சவாரி செய்தும் மட்டுமே சென்று வருகிறார்கள்.

இங்கு நேற்று பிற்பகல் 3 மணி அளவில் பைசரன் மலைப்பகுதியில் பைன் மரக்காட்டு பகுதியில் இருந்து பல பயங்கரவாதிகள் துப்பாக்கிகளுடன் அதிவேகமாக களம் இறங்கினார்கள். அப்போது திடீரென அங்கு கூட்டமாக நின்ற சுற்றுலாப் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக ஆண்களை மட்டுமே குறிவைத்து சுட்டுள்ளனர். இதில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழ்நாடு, மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 13 பேர் காயமடைந்து உள்ளனர்.

இதனிடையே சம்பவம் குறித்து கேள்விப்பட்டு ராணுவம், மத்திய ஆயுதப்படை மற்றும் காவல்துறை விரைந்து சென்று பயங்கரவாதிகளுக்கு எதிராக என்கவுண்ட்டர் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். காயமடைந்த சுற்றுலாப் பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தல்களால் பாதிக்கப்பட்ட காஷ்மீருக்கு, அண்மைக்காலமாகவே சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தந்தார்கள். மெல்ல மெல்ல நிலைமை மாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த எண்ணத்தை பயங்கரவாதிகள் அழிக்க வேண்டும் என்று நினைத்து தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சவூதியில் இருந்து நாடு திரும்பிய பிரதமர் மோடி உடனடியாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இதேபோல ஜம்மு காஷ்மீர் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாதுகாப்புப் படையினருடனும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மேலும் டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லத்தில் தற்போது பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தளபதிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.

சிந்து நதி இனி பாகிஸ்தானிற்குள் பாயாது… இந்தியா- பாகிஸ்தான் இடையேயான சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும்,  வாகா-அட்டாரி எல்லைகளை மூடல் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள்,  இந்தியாவை விட்டு ஒரு வாரத்தில் வெளியேற வேண்டும். – பாகிஸ்தானியர்களுக்கு இனி சார்க் விசா வழங்கப்படமாட்டாது. – இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணிநேரத்தில் வெளியேற கெடு பாகிஸ்தானின் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எண்ணிக்கை 55-ல் இருந்து 30 ஆக குறைப்பு போன்ற அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டது.

விவசாய கடன் மானிய தொகையை ரூ.8 லட்சத்தை தனக்கு தெரிந்தவர்கள் கணக்கில் வரவு வைத்த அதிகாரி கைது..!

விவசாய கடன் மானிய தொகையை தனக்கு தெரிந்தவர்களின் வங்கி கணக்கில் வரவு வைத்து அந்த பணத்தை கையாடல் செய்த வைத்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அயம்பாக்கத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் நீலகிரி மாவட்டம் ஊட்டியிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜூனியர் அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். சமீபத்தில் இவருக்கு பணி மாறுதல் உத்தரவு வந்ததால், இவர் வேறு இடத்திற்கு செல்ல தயாராக இருந்துள்ளார்.

இந்நிலையில், ஊட்டி பாரத ஸ்டேட் வங்கி கிளையில் சமீபத்தில் தணிக்கை பணிகள் நடைபெற்றது. இதில், மானியத்துடன் கூடிய விவசாய கடன் வழங்கும் பிரிவில் மானியத் தொகையை பயனாளிகளுக்கு வழங்கியதில் செந்தில்குமார் முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரிய வருகிறது. அதாவது பயனாளிகளுக்கு சேர வேண்டிய மானிய தொகையை அவர்களிடம் வங்கி கணக்கில் வரவு வைக்காமல், தனக்கு தெரிந்தவர்களின் வங்கி கணக்கில் வரவு வைத்து அந்த பணத்தை கையாடல் செய்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து செந்தில்குமாரின் முழு பணியையும் அதிகாரிகள் தணிக்கை செய்தனர்.

இந்த தணிக்கை செந்தில்குமார் ரூ.7,99,146 மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வங்கி தலைமை மேலாளர் ரமேஷ்பாபு ஊட்டி மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் நவீன்குமார், ஆய்வாளர் முரளிதரன் தலைமையிலான காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, செந்தில்குமாரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் ஊட்டி பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.