சீமான்: 11 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ் மக்கள் ஏன் தனி நாடு கேட்கக்கூடாது..!?

ஒன்று, இரண்டு கோடி மக்களுக்கு தனி நாடு இருக்கும்போது, 11 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ் மக்கள் ஏன் தனி நாடு கேட்கக்கூடாது என சீமான் தெரிவித்தார். கோயம்புத்தூரில் நாம் தமிழர் கட்சி சார்பில், மே 18 மாபெரும் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசுகையில், “நாம் வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட மக்கள். சொந்த மண்ணிலேயே தாய் நிலத்திலேயே நாம் தமிழர்கள் என்ற உணர்வின்றிப் பிளவுண்டு இருந்தோம். போராடித்தான் ஆக வேண்டும் என்று தள்ளப்பட்ட மக்கள் நாம். இந்த மண்ணிலிருந்து தமிழினம் விலகிச் செல்ல முடியாது என பிரபாகரன் சொல்லி இருக்கிறார்.

போராடத்தான் வேண்டும் என்று 15 ஆண்டுகளாக இந்த மண்ணில் இருந்து வருகிறோம். வாழ்க, ஒழிக என்று கோஷம் இல்லாத ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி. தலைவன் வாழ்க என்று கூறுபவர்கள் அல்ல நாம், தமிழ்த்தாய் வாழ்க என்று கூறுபவர்கள். உலகத்தின் பல்வேறு நிலப்பரப்பை வென்றவர்கள் நம் முன்னோர்கள். எந்த மக்களையும் அடிமைப்படுத்தி நம் முன்னோர்கள் வாழவில்லை. தமிழன் மக்களை அடிமைப்படுத்தி ஆண்டான் என்ற செய்தி எங்கேயாவது உண்டா?

சிங்களவர்கள் நம்மை அடிமைப்படுத்தி ஆள நினைத்தால் அமைதியாக இருக்க நாம் எலிகள் அல்ல புலிகள். மூவேந்தர்கள் வழியில் வந்தவர்கள். ஈ-க்கு இரக்கம் காட்டியவர்களின் வாரிசுகள், காக்கை, குஞ்சுகள் எங்கள் சாதி என்ற சொன்னவர்கள். ஈவு இரக்கம் இன்றி கொல்லப்பட்டது இன்றுதான். வரலாற்றில் பெருந்துயரம் ஈழத் தமிழினப் படுகொலை. மாட்டுக்கு நீதி சொன்ன வாரிசுகளுக்கு உலகத்தில் நீதி சொல்ல ஆளில்லை.

ஒன்று, இரண்டு கோடி மக்களுக்கு தனி நாடு இருக்கும்போது, 11 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ் மக்கள் ஏன் தனி நாடு கேட்கக்கூடாது? மூத்த மொழி தமிழ் மொழி அழிகிறது. மொழி அழிந்தால் இனம் அழியும். நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம், பலத்தை இழந்தால் இனத்தை இழப்போம் என நிலத்தைக் காக்கப் பிறந்தவன் பிரபாகரன். நாம் இல்லையென்றால் இந்தச் சாவைப் பற்றிப் பேச நாவு இருக்குமா? இதைப் பற்றிப் பேச ஒருவன் கூட கிடையாது. கடைசியாகத் தலைவனைச் சந்தித்த மகன் நான் தான். எனக்கும் என் தலைவனுக்குக் கடைசியில் என்ன நடந்தது என இருவருக்கும் தான் தெரியும். விடுதலைப் புலிகளைக் கொல்ல வேண்டும் என்று முயற்சித்தது இங்குள்ள ஆட்சியாளர்கள் தான்.

ஆனால் அவர்கள் தான் இன்றும் ஆட்சியாளர்களாக உள்ளனர். இறுதிக்கட்டப் போரில் அமெரிக்கா தலையிட்டு, பிரபாகரன், பொட்டு அம்மான் உள்ளிட்ட தலைவர்களைப் பாதுகாத்து ஒரு அரசியல் தீர்வைக் கொண்டுவர முயற்சி செய்தது. ஆனால், அன்று இந்திய ஆட்சியாளர்களும், குறிப்பாகத் தமிழ்நாட்டு ஆட்சியாளர்களும், தலைவர்களும் அதனை விரும்பவில்லை. பிரபாகரன் அங்கிருந்தால், இவர்களின் எதிர்கால அரசியலுக்கு ஆபத்தாகவும், இடையூறாகவும் இருக்கும் என்று கருதினார்கள். அதனால், அந்தப் போரை விரைந்து முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என விரும்பினார்கள் என எழுத்தாளர் சிவசங்கர் மேனன் தனது வாழ்க்கை வரலாற்று நூலில் எழுதியுள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கும், திமுகவுக்கும் என்ன சம்பந்தம்? காங்கிரசை வீழ்த்திப் பதவிக்கு வந்தது திமுக. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆந்திர மாநில முதல்வர் ராஜசேகர் ரெட்டி மறைவுக்குத் தமிழ்நாட்டில் பொது விடுமுறை அறிவித்தார் கருணாநிதி. அந்த நேரத்தில் ஈழத்திலும் போர் நடந்துகொண்டிருக்கிறது. முத்துராமலிங்கத் தேவர், காமராஜர், அண்ணா உள்ளிட்டோர் மறைவுக்கு ஆந்திராவில் விடுமுறை உண்டா? ஆனால், இங்கு ஏன் ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் மறைவுக்கு விடுமுறை என்றால் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி மகிழ்வார் என்பதற்காக விடுக்கப்பட்டது.

மே 18 அன்று பிரபாகரன் இறந்த நாள், தமிழினம் அழிந்த நாள். அன்று தமிழினத் துக்க நாள் என அறிவித்து விடுமுறை விட முடியாதா? திமுக கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிட முடியாதா? மாவீரர் நாளை அனுசரிக்கவில்லை, சரி. ஆனால், தமிழர்கள் கொன்று அழிக்கப்பட்ட நாளான இன்று தமிழ்நாடு முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் வருத்தச் செய்தியை வெளியிட்டனரா? காரணம் இதில் அவர்களுக்கு அரசியல் லாபமும் வாக்கும் இல்லை எனக் கருதுகிறார்கள்” என சீமான் ஆவேசமாகப் பேசினார்.

சீமான்: அதிமுக ஆட்சியில் பாதிக்கப்பட்டப் பெண்களை அச்சுறுத்தினர்… குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றனர்..!

அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் நடந்தேறிய இப்பாலியல் வன்கொடுமையில் அதிகாரவர்க்கமும், காவல்துறையும் குற்றவாளிகளைக் காப்பாற்றவும், பாதிக்கப்பட்டப் பெண்களை அச்சுறுத்தவுமே முனைந்தன என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை எனும் கோவை மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் ஆறுதல்! தமிழ்நாடே எதிர்நோக்கியிருந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிகள் 9 பேருக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கியிருக்கும் கோவை மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

இத்தீர்ப்பு பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், தமிழக மக்களுக்கும் கிடைத்திருக்கும் பெரும் ஆறுதலாகும். பல்வேறு அரசியல் நெருக்கடிகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும், மிரட்டல்களுக்கும் மத்தியிலும், பிறழ்சாட்சியாக மாறாது நெஞ்சுரத்தோடும், துணிவோடும் நீதிமன்றத்தில் சாட்சியமளித்து நீதியின் பக்கம் நின்ற பெண்களின் செயல்பாடு போற்றத்தக்கது. நினைத்துப் பார்க்கவே முடியாத பாலியல் கொடூரங்களை நிகழ்த்திய அக்கொடுங்கோலர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது மிகச் சரியான முடிவாகும்.

“அண்ணா.. அடிக்காதீங்கண்ணா..” எனப் பாலியல் குற்றவாளிகளிடம் சிக்குண்டுக் கதறிய தங்கையின் அழுகுரலும், விம்மலும் இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அவளின் அண்ணனாக இத்தீர்ப்பை முழுமனதோடு ஏற்கிறேன். சக உயிரான பெண்ணை காக்காமல் மண்ணைக் காக்க போராடி என்ன பயன்?

அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் நடந்தேறிய இப்பாலியல் வன்கொடுமையில் அதிகாரவர்க்கமும், காவல்துறையும் குற்றவாளிகளைக் காப்பாற்றவும், பாதிக்கப்பட்டப் பெண்களை அச்சுறுத்தவுமே முனைந்தன. பலதரப்பட்டத் தரப்பிலுமிருந்தும் போராட்டங்கள் வெடித்து, அரசியல் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டப் பிறகே, வழக்கை ஒன்றியப் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றியது அன்றைய அதிமுக அரசு. அன்றைக்குக் குற்றவாளிகளைக் காப்பாற்ற துணைநின்ற அதிமுக, இன்றைக்கு தங்களால்தான் நீதிகிடைத்தது எனச் சொந்தம் கொண்டாடி, இதிலும் அரசியல் செய்ய முனைவது மிக இழிவானதாகும்.

அதனைப் போலவே, அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மாணவி விவகாரத்தில், ‘யார் அந்த சார்?’ எனும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் கேள்வியைப் புறந்தள்ளி, பின்புலத்திலிருக்கும் அதிகாரப்புள்ளிகளைக் காப்பாற்றிய திமுக அரசுக்கும் இதனைப் பேச எந்தத் தார்மீகமும் இல்லை. இவ்விவகாரத்திலும் திமுகவும், அதிமுகவும் அறிக்கைப்போர் தொடுத்து, ஒருவரையொருவர் மாறி மாறிக் குற்றஞ்சாட்டிக் கொண்டு அரசியல் இலாபமீட்ட முற்படுவது வெட்கக் கேடானதாகும்.

இவ்வழக்கில் கிடைக்கப் பெற்றிருக்கும் நீதியானது, நியாயத்திற்காகப் போராடியப் பொதுமக்களுக்கும், பாதிக்கப்பட்டு அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டபோதும் துணிந்து நீதிமன்றத்தின் படியேறிய பெண்களுக்கும் கிடைத்திருக்கும் வெற்றியாகும். இத்தீர்ப்பின் மூலம் பாலியல் குற்றவாளிகள் அனுபவிக்கப்போகும் சிறைத்தண்டனை, பெண்களைப் போகப் பொருளாக எண்ணி, அத்துமீற நினைக்கும் அத்தனைப் பேருக்குமான பாடமாகவும், எச்சரிக்கையாகவும் அமைய வேண்டும்.

ஆகவே, மரணம்வரை வாழ்நாள் தண்டனை எனக் கிடைத்திருக்கும் இத்தீர்ப்பு மேல்முறையீடுகளில் நீர்த்துப் போகாமலிருக்க வலுவான சட்டப்போராட்டங்களை நடத்த வேண்டுமெனவும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்கவும், அவர்களுக்கானப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் கடும் நடவடிக்கைகளை மற்கொள்ள வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என சீமான் தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சிக்கு கலப்பை ஏந்திய விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்த இந்திய தேர்தல் ஆணையம்

நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாதக 2016 சட்டமன்றத் தேர்தலில் மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டி போட்டது. அதன்பிறகு வந்த 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டது.

இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி, தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது. எனினும் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது இதையடுத்து, தேர்தல் ஆணையம் வைத்துள்ள சின்னங்கள் பட்டியலில் இருந்து மைக் சின்னத்தை தேர்வு செய்து நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது.

இந்நிலையில் சீமான் தனது எக்ஸ் பக்கத்தில், சின்னத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள சீமான், “மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து 10-05-2025 அன்று அறிவித்துள்ளது” என சீமான் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சீமான் ஆவேசம்: மூக்குத்திக்குள்ள பிட் எடுத்துட்டு போக முடியுமா..!?

என் மாநிலத்தில் மட்டும் ஏன் இந்த கொடுமை மூக்குத்திக்குள்ள பிட் எடுத்துட்டு போக முடியுமா? – நீட் தேர்வு கட்டுப்பாடுகளுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். நாடு முழுவதும் மொத்தம் 22 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் 1.5 லட்சம் மாணவர்கள் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான (MBBS, BDS) நீட் NEET (UG) நுழைவுத் தேர்வு நேற்று நடைபெற்றது.

தமிழ்நாட்டின் சென்னை, திருச்சி, மதுரை உட்பட மொத்தம் 31 நகரங்களில், நீட் நுழைவுத் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் நீட் தேர்வு 720 மதிப்பெண்களுக்கான 180 வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் இருந்தது. ஒரு வினாவுக்கு 4 மதிப்பெண்கள், தவறான வினாவிற்கு ஒரு நெகட்டிவ் மதிப்பெண் வழங்கப்படும். என்பது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வுகளுக்கு வழக்கம் போல இந்த ஆண்டும் கடும் உடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மாணவர்கள், வெளிர்நிற அரை கை சட்டைகளைத்தான் அணிய வேண்டும். முழு கை சட்டைகளை அணியக் கூடாது. ஷீக்களை அணியவும் கூடாது. கை கடிகாரங்கள், கூலிங் கிளாஸ் போன்றவை அணியவும் தடை தடைவிதிக்கப்பட்டது.

மாணவிகள் முழுக்கை ஆடைகள், எம்பிராய்டரி ஆடைகளை மாணவிகள் அணியக் கூடாது; ஹேர்பின்கள், கிளிப்புகள், ஆடம்பர ஆபரணங்கள் அணியவும் கூடாது; காதணிகள், மூக்குத்திகள், வளையல்கள், மோதிரங்கள், கொலுசுகளும் அணியக் கூடாது. ஹை ஹீல்ஸ் காலணிகள், ஷூக்கள் போடவும் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. தேர்வு மையத்துக்குள் கால்குலேட்டர், செல்போன்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டு செல்லக் கூடாது.

சாப்பிடக் கூடிய பொருட்களையும் கொண்டு செல்லக் கூடாது. நீட் நுழைவுத் தேர்வு எழுதும் மாண்வர்கள் முற்பகல் 11.30 மணி முதல் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் அனைவரும் மிக கடுமையான சோதனைகளுக்குப் பின்னரே நீட் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் சென்னை தாம்பரம் சானடோரியத்தில் சீமான் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, இந்தியா முழுமைக்கும் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகிறார்கள். என் மாநிலத்தில் மட்டும் ஏன் இந்த கொடுமை நடக்கிறது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாமல் என் மாநிலத்தில் மட்டும் என் பிள்ளையின் துப்பட்டாவை எடுக்கிறார்கள். பூணூல், அரைஞாண் கயிறு அறுக்கப்படுகிறது. முழுக்கை சட்டை கத்தரிக்கப்படுகிறது.

மாணவிகளின் உள்ளாடையை கூட கழற்ற சொல்கிறார்கள். நீட் தேர்வு மையங்களில் காவல் துறைக்கு என்ன வேலை? இத்தூண்டு மூக்குத்திக்குள்ள பிட்டை கொண்டு போய் பார்த்து எழுதிட முடியும் என நம்புகிறதா இந்த சமூகம்? வோட்டு போடும் இயந்திரத்திலும் எந்த கோல்மாலும் செய்ய முடியாது என்றும் நம்ப சொல்கிறார்கள் என சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

சீமான்: திராவிட மாடல் ஆட்சியில் வீட்டில் கூட பாதுகாப்பாக வாழ முடியவில்லை..!

திராவிட மாடல் ஆட்சியில் வீட்டில் கூட பாதுகாப்பாக வாழ முடியாத கொடுஞ்சூழல் நிலவி வருகின்றது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளங்காட்டு வலசு பகுதியில் மேக்கரயான் தோட்டத்தில் ராமசாமி என்ற விவசாயியும் அவரது மனைவி பாக்கியம்மாளும் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இவரது மகன் வெளியூரில் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.

தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது மகன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் செல்போன் அழைப்பை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையத்து ராமசாமியின் மகன் அருகில் இருந்தவரை அழைத்து தனது பெற்றோரை பார்க்கும்படி கூறியுள்ளார்.

அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது ராமசாமி வீட்டிற்கு உள்ளேயும் பாக்கியம்மாள் வீட்டிற்கு வெளியேயும் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இது குறித்து சீமான் தனது எக்ஸ் பக்கத்தில், ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகேயுள்ள விளக்கேத்தி, வெளாங்காட்டு வலசு பகுதியைச்சேர்ந்த மேகரையான் தோட்டத்தில் தனியாக வசித்து வந்த வயது முதிர்ந்த இணையர்களான ராமசாமி – பாக்கியம்மாள் இருவரும் நகைக் கொள்ளையர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனவேதனையையும் அளிக்கிறது. நான்காண்டு கால திமுக ஆட்சியில் வெளியில் மட்டுமல்ல வீட்டிற்குள்ளும் பாதுகாப்பாக வாழ முடியாத கொடுஞ்சூழல் நிலவுவது வன்மையான கண்டனத்திற்குரியது.

பள்ளிக்கூடம் முதல் பல்கலைக்கழகம் வரை பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்திலேயே படுகொலை செய்யப்படுகின்றனர். மருத்துவர்கள் மீது மருத்துவமனை வளாகத்திலேயே கொலைவெறித் தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. வளக் கொள்ளைகளுக்கு எதிராகப் போராடும். சமூக ஆர்வலர்கள் நட்டநடு சாலையில் வைத்து வெட்டி சாய்க்கப்படுகின்றனர். உயிருக்கு ஆபத்து உள்ளது என்று காவல்துறையில் புகாரளித்தாலும் கொல்லப்படும்வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்பதுதான் வழக்கமாக உள்ளது.

தனிப்பட்ட கொலை, முன்விரோத கொலை, குடும்பக் கொலை, குடிபோதை கொலை, எங்கோ ஓரிடத்தில் கொலை என்று படுகொலைகளை வகை பிரித்து பாகுபடுத்தி, சட்டம்-ஒழுங்கு சீரழிவை நியாயப்படுத்தும் மாண்புமிகு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களே, நீங்கள் கூறிய எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி இதுதானா? குடும்பங்களாகக் குறிவைத்து கொலைகள் நடைபெறுகிறது.

ஒரே பகுதியில் அடுத்தடுத்து பலமுறை கொலைகள் நடைபெறுகிறது. ஆனாலும் கொலைகளைத் தடுக்க முடியவில்லை, கொலையாளிகளைப் பிடிக்க முடியவில்லை என்றால் தமிழ்நாட்டில் காவல்துறை என்று ஒன்று உண்மையில் செயல்படுகிறதா? தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறதா? இவையும் திராவிட மாடலின் சாதனைகளில் வருகிறதா? என்ற அடுக்கடுக்கான கேள்வி எழுகிறது.

ஆகவே, திமுக அரசு மீதமுள்ள ஓராண்டிற்காவது சட்டம்-ஒழுங்கைச் சீர்படுத்தி மக்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இனியும் இதுபோன்ற கொடூர படுகொலைகள் தொடரா வண்ணம் தடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன். உயிரிழந்த முதியவர்களின் குடும்பத்திற்கும் உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன். ஐயா ராமசாமி – அம்மா பாக்கியம்மாள் இருவருக்கும் என் கண்ணீர் வணக்கம்! என சீமான் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சீமான் வேண்டுகோள்: கல் குவாரிகளின் கால அளவை உயர்த்தும் முடிவை அரசு கைவிட வேண்டும்..!

கல் குவாரிகள் இயங்குவதற்கான கால அளவை உயர்த்தும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என – நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சீமான் தனது எக்ஸ் பக்கத்தில், தமிழ்நாட்டில் கல் குவாரிகள் இயங்குவதற்கான கால அளவை 25 ஆண்டுகள் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

தமிழ்நாடு அரசின் புவியியல் மற்றும் சுரங்கத்துறை கூடுதல் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி கல் குவாரிகள் இயங்குவதற்கான கால அளவை 25 ஆண்டுகள் உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கனிம வளங்களை வெட்டி எடுக்கும் ஒப்பந்தம் கோருவோருக்கு 10 முதல் 25 ஆண்டுகள் வரையிலும், 10 ஏக்கர் உள்ள குவாரிகளுக்கு 20 ஆண்டுகள் வரையிலும், 10 ஏக்கருக்கு மேல் உள்ள குவாரிகளுக்கு 30 ஆண்டுகள் வரையிலும் கால நீட்டிப்பு வழங்கி அனுமதி வழங்கியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே உரிமம் பெற்று இயங்கிவரும் கல்குவாரிகளில், பல ஆண்டுகளாக அனுமதிக்கப்பட்ட அளவைவிடப் பல மடங்கு அதிகமான பரப்பளவில், அதிகமான ஆழத்தில் முறைகேடாக கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு வருகின்றது. அவற்றை முறையாகக் கண்காணித்து, அவ்வப்போது ஆய்வு செய்து, முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது எந்த நடவடிக்கையையும் தமிழ்நாடு அரசு எடுப்பதில்லை. மாறாகக் கனிம வளக்கொள்ளையைத் தடுக்க முயலும் அரசு அதிகாரிகள், புகார் தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள், கனிமவளக் கொள்ளையர்களால் பட்டப்பகலில் படுகொலை செய்யப்படுவதை திமுக அரசு வேடிக்கை மட்டுமே பார்க்கிறது. மாறாகக் கனிமவளக்கொள்ளை குறித்துப் புகார் தெரிவிக்கும் நாம் தமிழர் கட்சியினர் மீது பொய் வழக்கு புனைந்து கைது செய்வதை திமுக அரசு வாடிக்கையாக வைத்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு கல் குவாரிகள் இயங்குவதற்கான கால அளவை, 25 ஆண்டுகள் நீட்டிப்புச் செய்து அறிவித்துள்ளது கனிம வளக்கொள்ளை மேலும் பன்மடங்கு அளவிற்கு அதிகரிக்கவே வழிவகுக்கும். நாம் வாழும் பூமி நமக்கானது மட்டுமல்ல; நமக்குப் பின்வரும் வருங்காலத் தலைமுறைக்கானது. அதனைப் பாதுகாப்பாக அவர்களிடம் கையளிக்க வேண்டியது நம்முடைய முழுமுதற் கடமையாகும். மீண்டும் நம்மால் உருவாக்கவே முடியாத இயற்கையின் அருட்கொடையாம் மலை, மணல் உள்ளிட்ட இயற்கை வளங்களைக் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி வெட்டி எடுக்க அனுமதித்து அழித்தொழிக்கப்படுவதை நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் வருங்காலத் தலைமுறைக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.

“முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்” என்று நிலம் தன் இயல்பான தன்மையை இழந்தால் வறண்ட பாலை நிலமாகும் என்பதை எச்சரிக்கும் விதமாக ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட சிலப்பதிகார காப்பியம் வலிதோய்ந்து பாடுகிறது.

மலை, மணல், ஆறு, அருவி, கடல், காடு, காற்று, நிலம், நீர் என்று நாம் வாழும் பூமியின் எல்லா வளங்களையும் கொள்ளைப்போக அனுமதித்து, முற்று முழுதாக அழித்து முடித்துவிட்டு நமக்குப் பின்வரும் தலைமுறைக்கு எதை வைத்துவிட்டுப் போகப்போகிறோம்? சுற்றுச்சூழலை நாசமாக்கி வாழத் தகுதியற்ற நிலமாக பூமியை மாற்றிவிட்டு எங்கே நம் சந்ததிகளை வாழவைக்கப்போகிறோம்? என்ற கேள்விகளுக்கு எவரிடத்தில் பதில் உண்டு? ஆகவே, தமிழ்நாடு முழுவதும் இயங்கும் கல் குவாரிகளுக்கான கால அளவை 25 ஆண்டுகள் நீட்டிப்பு செய்யும் அறிவிப்பை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்துகிறேன் என சீமான் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சீமான் கருத்து: சிந்து நதியைத் தடுத்து நிறுத்தும் முடிவை மறுபரிசீலனை செய்..!

30 கோடி மக்களின் வாழ்வாதாராமாக விளங்கும் சிந்து நதியைத் தடுத்து நிறுத்தும் முடிவை இந்திய ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முக்கிய கோடை கால சுற்றுலாத்தலமான ஜம்மு – காஷ்மீர் பஹல்காமில் கடந்த 22-ஆம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக ஆண்களை மட்டுமே குறிவைத்து சுட்டுள்ளனர். இதில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழ்நாடு, மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 13 பேர் காயமடைந்து உள்ளனர்.

இதனிடையே பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சவூதியில் இருந்து நாடு திரும்பிய பிரதமர் மோடி உடனடியாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இதேபோல ஜம்மு காஷ்மீர் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாதுகாப்புப் படையினருடனும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மேலும் டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லத்தில் தற்போது பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், சிந்து நதி இனி பாகிஸ்தானிற்குள் பாயாது… இந்தியா- பாகிஸ்தான் இடையேயான சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும்,  வாகா-அட்டாரி எல்லைகளை மூடல் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள்,  இந்தியாவை விட்டு ஒரு வாரத்தில் வெளியேற வேண்டும். – பாகிஸ்தானியர்களுக்கு இனி சார்க் விசா வழங்கப்படமாட்டாது. – இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணிநேரத்தில் வெளியேற கெடு பாகிஸ்தானின் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எண்ணிக்கை 55-ல் இருந்து 30 ஆக குறைப்பு போன்ற அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டது.

இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் பக்கத்தில், காஷ்மீர் மாநிலம், பகல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடுந்தாக்குதலுக்கான பதிலடியாக, இந்திய ஒன்றியத்தை ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு சிந்து நதியைத் தடுத்து நிறுத்தி அப்பாவி பாகிஸ்தான் மக்களைத் தண்டிப்பது சிறிதும் நியாயமற்றச் செயலாகும்.

பகல்காமில் அப்பாவி மக்களைத் தாக்கிய பயங்கரவாதிகள் எப்படி இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தார்களோ, அதுபோலத் தங்கள் உயிரைப் பணயம் வைத்து சுற்றுலாப்பயணிகளைப் பயங்கரவாதிகளிடமிருந்து காப்பாற்றிய உள்ளூர் காஷ்மீர் மக்களும் இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர்கள்தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. சுற்றுலா சென்ற இந்திய மக்களைக் கொன்றது பயரங்கவாதிகள்தானே தவிர, பாகிஸ்தானைச் சேர்ந்த ஏழை எளிய மக்கள் இல்லை. பயங்கரவாதிகளின் கோழைத்தனமான கொடுந்தாக்குதலுக்குக் குறிப்பிட்ட ஒரு மதத்தின் மீது பழிபோடுவதோ, குறிப்பிட்ட மக்களை பலிகொடுப்பதோ ஒருபோதும் அறமாகாது!

பகல்காம் பயங்கரவாத தாக்குதல் என்பது இந்திய அரசின் பாதுகாப்புத்துறை மற்றும் உளவுத்துறையின் படுதோல்வியால் நிகழ்ந்த கொடுநிகழ்வாகும். பாஜக அரசு தன்னுடைய தோல்வியை மறைக்க, மறக்கடிக்க, சிந்து நதியைத் தடுப்பதென்பது, மக்களின் உணர்வுகளைத் தூண்டி திசைதிருப்பும் செயலன்றி வேறில்லை. பாஜக அரசிற்கு உண்மையிலேயே பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க வேண்டுமென்ற எண்ணமிருந்தால், தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளையும், அதற்கு உதவியர்களையுமே தண்டிக்க வேண்டும். பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி அழிக்க வேண்டும். பயங்கரவாதச்செயலுக்குப் பின்னால் பாகிஸ்தான் அரசோ, ராணுவமோ இருக்குமேயானால் அவர்களுடன் நேரடியாக மோத வேண்டும்.

அவற்றை விடுத்து 30 கோடி மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் குடிநீரை, அவர்களின் உணவுத்தேவையை நிறைவு செய்யும் விவசாய பாசன நீரைத் தடுப்பது எவ்வகையில் நியாயமாகும்? பாகிஸ்தான் நாட்டின் மீது விதிக்கப்படும் பொருளாதாரத் தடையோ, வர்த்தகத் தடையோ அந்நாட்டு அரசையும், பெருமுதலாளிகளையுமே அதிகம் பாதிக்குமே தவிர, ஏழை மக்களை நேரடியாகப் பாதிப்பதில்லை. ஆனால், உயிர் ஆதாராமாக விளங்கும் நதிநீரை தடுப்பதென்பது, பயங்கரவாத தாக்குதலுக்கு எந்தத் தொடர்புமற்ற அப்பாவி ஏழை மக்களை நேரடியாகப் பாதிக்கின்ற கொடுஞ்செயலாகும்.

சிந்து நதியால் அதிகம் பயன்பெறுவது பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் வாழும் சீக்கிய மக்களும்தான். அவர்கள் அனைவரும் எல்லை பிரிப்புவரை இந்த நாட்டின் குடிகளாக இருந்தவர்கள்தான் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, நதிநீர் என்பது வெறும் மனிததேவை மட்டுமன்று. அது மரங்கள், கால்நடைகள், ஊர்வன, பறப்பன உள்ளிட்ட அனைத்து உயிர்களின் இன்றியமையாத உயிர் ஆதாரத்தேவையாகும்.

உயர்ந்த நோக்கங்களோ, உன்னத லட்சியங்களோ இல்லாது கண்மூடித்தனமாகச் அப்பாவி மக்களைக் கொல்லும் பயங்கரவாதிகளுக்கும், சிந்து நதியை முடக்கி கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை முடக்க முயலும் இந்திய ஒன்றிய பாஜக அரசின் செயலுக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சனநாயக அரசு இத்தகைய இரக்கமற்றச்செயலில் ஈடுபடுவது எவ்வகையிலும் ஏற்புடையதன்று.

பாகிஸ்தானுடன் வர்த்தக நிறுத்தம், எல்லை மூடல், தூதர்கள் வெளியேற்றம், போர்ப்பதற்றம், பாகிஸ்தான் மக்கள் வெளியேற்றம், நதிநீர் தடுத்து நிறுத்தம் என இத்தனை அதிரடி நடவடிக்கைகளை எடுக்கும் இந்திய ஒன்றிய அரசு, இதுவரை 800க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோதும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? பாகிஸ்தான் இசுலாமியர் நாடு என்பதால் பகை நாடென பதறி துடிக்கும் இந்திய அரசுக்கு, இத்தனை படுகொலைகள் செய்த பிறகும் இலங்கை நட்பு நாடாக இருப்பதற்கு காரணம் கொன்றது சிங்களவர், கொல்லப்பட்டது தமிழர்கள் என்பதால்தானே?

எல்லையற்ற கருணையையும், எதிர்ப்பார்ப்பற்ற அன்பையும் தந்து பெற்ற பிள்ளைகளை வாழ்விக்கும் தாய்மையின் அடையாளமாக, சிந்து, கங்கை, யமுனை, கோதாவரி, காவேரி என்று எல்லா நதிகளுக்கும் பெண்களின் பெயரைச்சூட்டி நதிகளை தெய்வமாக வணங்கும் நாடு, மனிதனின் தீராத பாவங்கள் எல்லாம் கங்கை நதியில் மூழ்கினால் தீரும் என்று நம்புகின்ற நாடு, நதிநீரை தடுத்து கோடிக்கணக்கான மக்களை கடுமையாக தண்டிப்பது முறைதானா? என்பதை இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும். ஆகவே, 30 கோடி மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் சிந்து நதியைத் தடுத்து நிறுத்தும் முடிவை இந்திய ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன் என சீமான் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சீமான் வலியுறுத்தல்: தமிழர்கள் குடியிருப்புகளை இடித்து மக்களை வெளியேற்றும் முடிவை பாஜக கைவிட வேண்டும்..!

டெல்லி ஜங்புரா மதராஸி கேம் பகுதியில் வாழும் தமிழர்கள் குடியிருப்புகளை அழித்து வாழ்வாதார உரிமையைப் பறிக்க முயலும் டெல்லி அரசின் முயற்சியைத் தடுத்து நிறுத்து என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து சீமான் தனது எக்ஸ் பக்கத்தில், டெல்லி ஜங்புரா மதராஸி கேம் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளை இடித்து, மூன்று தலைமுறைகளாக அங்கு வாழ்ந்து வரும் தமிழர்களை வெளியேற்ற டெல்லி மாநில பாஜக அரசு முயற்சிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. தங்கள் வாழ்விடங்களைக் காக்கப் போராடும் தமிழ் மக்களை டெல்லி மாநில பாஜக அரசு காவல்துறை மூலம் அடக்கி ஒடுக்குவது சிறிதும் மனச்சான்றற்ற கொடுங்கோன்மையாகும்.

ஜங்புராவில் அரசால் இடிக்கப்படும் வீடுகளுக்கு மாற்றாக 50 கி.மீ. தொலைவிலுள்ள நரேலாவில் வெறும் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் மாற்று வீடுகள் ஒதுக்கப்படும் என டெல்லி மாநில அரசு தெரிவித்துள்ளது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. டெல்லி மதராஸி கேம்ப் பகுதி அரசால் அங்கீகரிக்கப்பட்ட குடியிருப்புப் பகுதி எனும்போது மக்களின் விருப்பத்திற்கு மாறாக வீடுகளை இடித்து வாழ்விடங்களை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது என்பது எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும். பாஜக ஆளும் வட மாநிலங்களில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி மக்களின் குடியிருப்புகள் தொடர்ச்சியாக இடிக்கப்படும் கொடுங்கோன்மையை உச்சநீதிமன்றமே கடுமையாகக் கண்டித்து, எச்சரித்துள்ளதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆகவே, டெல்லி ஜங்புரா மதராஸி கேம் பகுதியில் வாழ்ந்து வரும் தமிழர்கள் அனைவருக்கும் அவர்களின் வசிப்பிடங்களிலேயே மாற்றுக் குடியிருப்புகள் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டுமென டெல்லி மாநில பாஜக அரசை வலியுறுத்துகிறேன். தமிழர் குடியிருப்புகளை அழித்து வாழ்வாதார உரிமையைப் பறிக்க முயலும் டெல்லி அரசின் முயற்சியைத் தடுத்து நிறுத்தி, தமிழர்களின் வாழ்விடத்தைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என சீமான் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

காமராசர் பேருந்து நிலையம் பெயர் மாற்றத்திற்கு சீமான் கடும் எதிர்ப்பு

மன்னார்குடி பெருந்தலைவர் காமராசர் பேருந்து நிலையம், ஆடுதுறை காயிதே மில்லத் பேருந்து நிலைய அங்காடி ஆகியவற்றின் பெயரை மாற்றும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து சீமான் தனது எக்ஸ் பக்கத்தில், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பெயரில் அமைந்திருந்த பேருந்து நிலையம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையில் கண்ணியமிக்க ஐயா காயிதே மில்லத் அவர்களின் பெயரில் அமைந்திருந்த பேருந்து நிலைய அங்காடி ஆகியவைச் சீரமைப்புச் செய்து, புதிதாகத் திறக்கப்படவிருக்கும் நிலையில், அவற்றிற்கு ஐயா கருணாநிதியின் பெயரைச் சூட்ட திமுக அரசு முடிவெடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் கடந்த 4 ஆண்டுகளாகப் புதிதாகத் திறக்கும் மதுக்கடைகளைத் தவிர, மற்ற அனைத்து முதன்மை அரசு கட்டிடங்களுக்கும் முன்னாள் முதல்வர் ஐயா கருணாநிதி அவர்களின் பெயரைச் சூட்டுவதே வாடிக்கையாக வைத்துள்ளது. அது மட்டும் போதாதென்று, தமிழ்நாட்டில் தமிழ்ப்பெரும் தலைவர்களுக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ள அடையாளங்களையும் அழித்தொழிக்கும் வகையில், பராமரிப்பு என்ற பெயரில் கட்டிடங்களில் ஏற்கனவே இருக்கும் தலைவர்களின் பெயரை மாற்றி, ஐயா கருணாநிதி பெயரில் திறப்பதற்குப் பெயர்தான் திராவிட மாடலா?

அண்மையில், பெரம்பலூர் பேருந்து நிலையம் அருகில், உழவர் உரிமைப்போராளி நாராயணசாமி நாயுடு அவர்களுக்கு அமைத்திருந்த சிலையை அகற்றி, அங்கு ஐயா கருணாநிதி சிலையை நிறுவ முயன்ற செயலைக் கண்டித்து நான் அறிக்கை வெளியிட்ட பிறகு, பின் வாங்கிய திமுக அரசு, அப்படி எந்தத் திட்டமும் இல்லை என்று அறிவித்தது. அதேபோன்று திருவள்ளூர் நகரில் பெருந்தலைவர் காமராசர் பெயரில் அமைந்திருந்த காய்கறி சந்தையின் பெயரை மாற்றி ஐயா கருணாநிதியின் பெயரைச் சூட்டும் முடிவையும் கண்டித்து நான் அறிக்கை வெளியிட்ட பிறகு மீண்டும் பெருந்தலைவர் பெயரே சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 50 ஆண்டுகளாகத் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழத்தலைவர்களின் புகழை மூடி மறைத்து இருட்டடிப்புச் செய்து வருகின்றன என்பது வேதனைக்குரியதாகும். இந்நிலையில், தமிழ்த் தலைவர்களின் பெயரில் ஏற்கனவே உள்ள சிறுசிறு அடையாளங்களையும் அழித்தொழிக்க திமுக அரசு முயல்வது ஏற்க முடியாத கொடுமையாகும். ஆகவே, மன்னார்குடி பெருந்தலைவர் காமராசர் பேருந்து நிலையம் மற்றும் ஆடுதுறை காயிதே மில்லத் பேருந்து நிலைய அங்காடி ஆகியவற்றின் பெயரை மாற்றும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன் என சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சீமான்: சாட்டை யூடியூப் சேனலில் வெளிவரும் கருத்து உண்மையிலேயே எனக்கு தெரியாது..!

சாட்டை துரைமுருகன் யூடியூப் சேனலில் ஒரு கருத்தை பேசுகிறார். அது கட்சியின் கருத்தாக பார்க்கப்படுகிறது.. உண்மையிலேயே அது எனக்கு தெரியாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். நாம் தமிழர் கட்சியில் சீமானுக்கு அடுத்தபடியாக தமிழகம் முழுக்க அறியப்பட்ட நபராக இருந்து வரும் சாட்டை துரைமுருகன். நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக சாட்டை துரைமுருகன் இருந்து வருகிறார்.

மேலும் சாட்டை துரைமுருகன் தனியாக யூடியூப் சேனல் சாட்டை என்ற பெயரில் நடத்தி வருகிறார். இந்த யூடியூப் சேனலில் அரசியல் கட்சிகளை விமர்சித்து அவ்வப்போது சாட்டை துரைமுருகன் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பாக சீமானிடம் இருந்து அறிக்கை ஒன்று வெளியானது. அதில், நாதக கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் நடத்தும் யூ டியூப் சேனலுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் தொடர்பு இல்லை. அந்த யூடியூப் சேனலின் கருத்துகள், நாம் தமிழர் கட்சியின் கருத்துகள் இல்லை என கூறியிருந்தார்.

இந்த அறிக்கையை தமது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த சாட்டை துரைமுருகன், தனது எக்ஸ் பயோவில், திடீரென நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் என்பதையும் நீக்கி இருந்தார். அத்துடன் முகப்புப் படமாக கட்சி சாராத ஒரு படத்தை பதிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், சாட்டை துரைமுருகன் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறாரா? வேறு கட்சியில் இணைய திட்டமிட்டுள்ளாரா? என இணையத்தில் நெட்டிசன்கள் இடையே விவாதம் அதிகரித்தது. எனினும், சீமானின் அறிக்கை தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்ட சாட்டை துரைமுருகன், நாம் தமிழர் கட்சியில் இருந்து 2 முறை ஏற்கனவே நீக்கப்பட்டேன்.

சீமானின் தம்பியாகவே இருப்பேன் அப்போது நான் பாடம் கற்றுக் கொண்டேன். இதேபோல 5 ஆண்டுகளுக்கு முன்னரும் என்னுடைய யூடியூப் சேனலுக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை என சீமான் அறிவித்திருந்தார். இப்போதும் அப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நான் வேறு கட்சியில் இணைய போவதாக பரவும் தகவலில் உண்மையில்லை. நாம் தமிழர் கட்சியில் நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சீமானின் தம்பியாகவே இருப்பேன்.

மேலும் சீமானுக்கு ஒருபோதும் நான் துரோகம் செய்யவே மாட்டேன். துரோகம் என்பது என் மரபணுவிலேயே கிடையாது. தமிழ்த் தேசியத்துக்காக தொடர்ந்து நான் பணியாற்றுவேன்” என்று கூறியிருந்தார். எனினும், சீமான் இது தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார்.

இந்நிலையில் செய்தியாளர்கள் கேள்விக்கு சீமான் பதிலளித்தார். அப்போது, உண்மையிலேயே அது சாட்டை துரைமுருகனின் தனிப்பட்ட யூடியூப் சேனல். எல்லோரும் என்ன நினைக்கிறார்கள் என்றால் அவர் பேசுறார்.. உஙக்ளுக்கு தெரியாமல் எப்படி பேசுவார்.. இப்படி பக்கத்தில் நிற்கிறார்.. அவர் ஒரு கருத்தை பேசுகிறார். அது கட்சியின் கருத்தாக பார்க்கப்படுகிறது. அதை தெளிவுபடுத்தவே அப்படி ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. உங்களுக்கு தெரியாமலா பேசுகிறார்.. நீங்கள் சொல்லாமலா பேசுகிறார் என்று கேட்டால்.. உண்மையிலேயே அது எனக்கு தெரியாது. அது ஒரு கருத்தை வைத்து இருக்கிறார். அந்த கருத்தை வலையொளியில் பதிவிடுகிறார். இதை தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காகவே அறிக்கை கொடுக்க வேண்டியது ஆகியுள்ளது என சீமான் தெரிவித்தார்.