பவர் ஸ்டார்: விஜய் கிட்ட எந்த தொகுதினு கேட்டு சொல்லுங்க.. அவரை எதிர்த்து போட்ட ரெடி!

அருமை தம்பி விஜய் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து நிற்க தயாராக இருக்கிறேன். அவர் தயாரா என்று கேட்டு சொல்லுங்க என பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பவர் ஸ்டார் சீனிவாசன் பதிலளித்தார். அப்போது,தவெக தலைவர் விஜய் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து நிற்பேன். எந்த கட்சி அழைத்தாலும் விஜய்யை எதிர்த்து நிற்பேன்.

ஜோசப் விஜய் அவர்களே.. நான் உங்களை ரொம்ப மதிக்கிறேன். உங்களை கூடப்பிறந்த தம்பி மாதிரிதான் ஆடியோ வெளியீடு நிகழ்ச்சியில் சந்தித்தேன். நாம இரண்டு பேரும் அரை மணி நேரம் தனியாக பேசினோம். அப்போ நீங்க சொன்னீங்க..எனக்கு உலமம் முழுவதும் ஃபேன்ஸ் இருக்காங்க.. ஆனால் எங்க வீட்டில் என் பையன் உங்களோட ஃபேன் என்று சந்தோஷப்பட்டீங்க.. நானும் ஹேப்பியா இருந்தேன்.

ரொம்ப அமைதியாக இருந்தவர் திடீர்னு பார்த்தால் மேடையில் பயங்கரமான டயலாக்.. வசனம் எல்லாம் பேசுகிறார். களத்திற்கு வாங்க.. அப்போதுதான் வெற்றி தோல்வியை தீர்மானிக்க முடியும். வீரபாண்டிய கட்ட பொம்மன் மாதிரி டயலாக் பேசுகிறார். கூட்டம் எனக்கு கூடத்தான் கூடுது.. கூட்டத்தை வச்சி எதையுமே கணிக்க முடியாது. எனக்கும் ரசிகர்கள் ஏகப்பட்ட பேர் இருந்தாங்க..

கட்சி ஆரம்பிக்கனும் என்று தீவிரமாக முயற்சி எடுத்தேன். கடைசியில் என்ன சூழ்நிலையோ தள்ளி போய்விட்டது. அதனால என்னுடைய அருமை தம்பி விஜய் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து நிற்க தயாராக இருக்கிறேன். அவர் தயாரா என்று கேட்டு சொல்லுங்க.. கட்சி ஆரம்பிக்க மாட்டேன். பெரிய கட்சி கூப்பிட்டால் போவேன். இல்ல என்றால் சுயேட்சையாகவும் நிற்க தயார். திமுகவில் சேர வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக சேருவேன்.

திமுகவை எதிரி என்று சொல்வது எல்லாம் டயலாக் சொல்வதுதான். இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை. அவர் மக்களுக்கு என்ன செய்ய போகிறார்.கொள்கை என்ன அதை சொல்லாமல், நான் அவருக்கு எதிரி என்று சொல்லக் கூடாது. முதல்வரை பற்றி பேசுவதை பார்த்து வேதனைப்பட்டேன் இதெல்லாம் தப்பு.. அவர்கள் எல்லாம் 50 வருட அனுபவம் உள்ளவர்கள். அவர்களுடைய அனுபவம் இவருடைய வயது. அதனால் எடுத்தோம் கவிழ்த்தோம் என மேடையில் கூட்டம் இருக்கிறது என்பதற்காக பேசக் கூடாது.

என்னடா..ஒருநடிகராக இருந்து இப்படி எல்லாம் பேசலமா.. முதலில் அவர் நடிகர் டெக்னிஷியனுக்கு உதவி பண்ணட்டும். அதை விட்டுட்டு மக்களுக்கு அதை செய்கிறேன் என்று சொல்கிறார். களத்தில் இறங்கி அவர் வேலை பார்க்க வேண்டும். விஜய் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு கொடுப்பார்கள். எனது ரசிகர்கள் எனக்கு ஆதரவு கொடுப்பார்கள். கூட்டத்தை பார்த்து எதையுமே கணிக்க முடியாது. அரசியல் வேறு, வாக்காளர்கள் வேறு.. எனக்கு விஜய்க்கு மேல கூட்டம் இருந்தது. விஜய் களத்தில் நின்று ஜெயிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை என பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்தார்.

சரத்குமார் அறிவுரை: விஜய் நாகரிகமான அரசியலில் ஈடுபட வேண்டும்..!

உலகம் போற்றுகின்ற ஒரு பாரத தலைவரை, சாதாரண மனிதராக எண்ணிக்கொண்டு கேலியாக பேசிய விஜய்யின் பேச்சை கடுமையாக கண்டிக்கத்தக்கது. ஆகவே, நான் சொன்னது போல இனிவருங்காலங்களில் இவை அனைத்தும் தவிர்த்து நாகரிகமான அரசியலில் ஈடுபட வேண்டும் என சரத்குமார் தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் விஜய் கட்சியின் முதலாவது பொதுக்குழுக் கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில் பேசிய விஜய் மத்தியில் ஆளும் பாஜக மற்றும் தமிழகத்தை ஆளும் திமுகவை விஜய் நேரடியாக விமர்சித்துப் பேசினார். நடிகர் விஜய் குறிப்பாக முதல்முறையாகப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெயரைக் குறிப்பிட்டு விமர்சித்தார்.

மேலும், 2026-ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் என்பது மக்கள் இதுவரை பார்க்காத ஒன்றாக இருக்கும் எனக் குறிப்பிட்ட அவர், அந்தத் தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே தான் போட்டி நிலவும் என்றும் அவர் குறிப்பிட்டார். விஜய்யின் இந்த அரசியல் பேச்சு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. தவெக தலைவர் விஜய் பேச்சுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் பல்வேறு கருத்துகளைக் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில், சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”புதிதாக திரு.விஜய் துவங்கியிருக்கின்ற தவெகவின் முதல் பொதுக்குழுக் கூட்டத்தில் உண்மைக்கு புறம்பாக மத்திய அரசை விமர்சித்து பேசியது விநோதமாகவும், வேடிக்கையாகவும் இருந்தன. பாரத பிரதமருக்கு தமிழகம் என்றால் அலர்ஜி, தமிழக GST வருவாயை வாங்கிக்கொண்டு பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதியே ஒதுக்குவதில்லை,

இருமொழிக்கொள்கையில் உறுதி, வக்பு சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும், தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை என்று மாநில அரசு சொல்லும் அதே கருத்துக்களை விஜய் பிரதிபலித்திருப்பது தான் மேலும் வேடிக்கை. உலக அளவில் இந்திய பொருளாதாரம் முன்னேறிவரும் நிலையில், விரைவில் 3-வது இடத்தை எட்டிப்பிடிக்கும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவிக்கும் சூழலில், நமது தேசத்தை, தேசத்தின் பொருளாதாரத்தை வளர்ச்சிகரமான முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை, சர்வதேச தலைவர்களும் வியந்து பாராட்டி வருவதை நாம் அனைவரும் அறிவோம்.

இத்தகைய பெருமைக்குரிய பாரத பிரதமர் குறித்து எதிர்மறையாக பேசுவதற்கு முன்பாக எதை பேசினாலும், உண்மையை படித்துப்பார்த்து, தமிழ்நாட்டில் எந்தெந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருக்கின்றன, எதற்காக மாநில அரசுக்கு கல்விக்கான நிதியை விடுவிக்காமல் மத்திய அரசு இருக்கிறது, வரிப்பங்கீடு ஏன் குறைகிறது, எவ்வளவு ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள் என்ற புள்ளிவிபரங்களை அறிந்து, புரிந்து கொண்டு, ஆராய்ந்து தெளிவாக பேசியிருந்தால், அதுவும் பொதுக்குழுவில் பேசியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

2004-14 காலகட்டத்தில், தமிழ்நாட்டிற்கு வரிப் பகிர்வு ரூ. 94,971 கோடியாக இருந்தது. ஆனால், 2014-24 வரையிலான காலகட்டத்தில் ரூ. 2,92,013 கோடி வழங்கப்பட்டுள்ளது. இது 207% அதிகமாகும். 2004-14 ஆம் ஆண்டில் மத்திய அரசின் உதவி மற்றும் அரசின் மானியங்கள் மூலம் ரூ. 57,925 மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால், 2014-24 காலகட்டத்தில் ரூ. 2,55,875 கோடி வழங்கப்பட்டது. இது 342% அதிகமாகும் என மத்திய நிதியமைச்சர் ஆதாரப்பூர்வமாக பேசியுள்ளதை அவர் படிக்கவில்லை என நினைக்கிறேன்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயி தலைமையிலான பாஜக ஆட்சியில் தங்க நாற்கரச்சாலை திட்டம் இந்தியாவிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்திய பொருளாதார முன்னேற்றத்திற்கு முதன் முதல் காரணமாக அது அமைந்தது என்பதை நாம் அனைவரும் இன்று வரை உணர்வோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது போன்று நாட்டின் முன்னேற்றத்திற்காக செயல்பட்டு கொண்டிருப்பது பாரதிய ஜனதா கட்சி என்பதை நீங்கள் உணர மறந்துவிட்டீர்கள்.

அதுமட்டுமன்றி தமிழகத்தில் நெடுஞ்சாலை வசதிகள், சாலை போக்குவரத்து, இரயில்வே உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் மேம்பாடு, புதிய விமானநிலையங்கள் உருவாக்கம், பிரதமரின் வீடுகட்டும் திட்டம், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு, சிலிண்டர் மானியம், பிரதமரின் மருத்துவ காப்பீடு, மக்கள் மருந்தகம், சிறு, குறு, நடுத்தர தொழில் மேம்பாட்டிற்காக பல கோடி கடனுதவித் திட்டங்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன்வளர் பயிற்சி, கல்வி மேம்பாடு என எத்தனையோ திட்டங்களை அறிவித்து வெற்றிகரமாக செயல்படுத்தி இருப்பது மத்திய அரசு என்பதையும் நீங்கள் உணர மறந்துவிட்டீர்கள்.

ஆளுங்கட்சிக்கு சாதகமாக பேசுவதாக எண்ணி, மத்தியிலே நடந்து கொண்டிருக்கின்ற சிறந்த ஆட்சியை, ஒரு இந்திய குடிமகனாக பாரதத்தை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்லும் பாரத தலைவர், உலகம் போற்றுகின்ற ஒரு சாதனை மனிதரை, சாதாரண மனிதராக எண்ணிக்கொண்டு கேலியாக பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. ஆகவே, ஏற்கெனவே நான் சொன்னது போல இனிவருங்காலங்களில் இவை அனைத்தும் தவிர்த்து அனைத்து தரவுகளையும் ஆராய்ந்து உண்மையான கருத்துகளை பேசி ஆக்கப்பூர்வமான, நாகரிகமான அரசியலில் ஈடுபடுவீர்கள் என நம்புகிறேன்.” என சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.

மு.க.ஸ்டாலின்: திமுகவிற்கு எதிராக “தினுசு தினுசா” எதிரிகளை உருவாக்கும் பாஜக..!

ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜகவின் சதித்திட்டங்களுக்கு முதன்மைத் தடையாக இருக்கும் தமிழ்நாடும் – திராவிட முன்னேற்றக் கழகமும்தான். அதனால், பல்வேறு வடிவங்களில் எதிரிகளை உருவாக்குவார்கள்; நாடகங்கள் நடத்துவார்கள் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வெற்றிக்காகப் பாடுபட்ட கழக நிர்வாகிகளுக்கான பாராட்டு விழா நேற்று மாலை, நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாகப் பங்கேற்று, திமுக கழக நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார்.

அப்போது, மு.க.ஸ்டாலின் பேசுகையில், “ஆல் போல் தழைத்து, தமிழ்நாட்டையும் தமிழினத்தையும் முன்னேற்றிட அல்லும் பகலும் உழைத்து, வேல் போல் பாய்ந்து எதிரிகள் படையைத் தோற்கடித்திடும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்வீரர்கள், பேரறிஞர் அண்ணாவும் – தலைவர் கலைஞரும் வளர்த்தெடுத்த எனதருமை உடன்பிறப்புகள் அனைவருக்கும் முதலில் என்னுடைய வாழ்த்துகள்! பாராட்டுகள்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடந்த சமயம் உங்களிடம் நான் தொலைபேசியில் பேசும்போதே, தேர்தல் முடிந்தவுடனே உங்களை எல்லாம் சந்திக்கிறேன் எனச் சொல்லி இருந்தேன். மாவட்டக் கழகச் செயலாளரும் அமைச்சருமான முத்துசாமி அவர்களிடம் பாக முகவர்களை அறிவாலயத்துக்கு அழைத்துவரச் சொல்லி இருந்தேன். அவரோ, “பாக முகவர்களோடு என்னுடன் கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் இந்த வெற்றிக்காக உழைத்து இருக்கிறார்கள். அதனால் கூட்டம் ஏற்பாடு செய்கிறேன்” என்று சொல்லி லேட்டாக இருந்தாலும் மிக பிரம்மாண்டமாக இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்து இருக்கிறார் செயல்வீரர் முத்துசாமி அவர்கள். அவருக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள்!

தேர்தலைப் பொருத்தவரை வரலாறு காணாத வெற்றியையும் நாம் பார்த்து இருக்கிறோம்! மிக மோசமான தோல்வியையும் சந்தித்து இருக்கிறோம். பெற்ற வெற்றிகளால் நாம் தலைக்கனமும் கொண்டதில்லை; அடைந்த தோல்விகளால் சோர்வடைந்து முடங்கியதுமில்லை! ஒவ்வொரு முறையும் எழுச்சி பெற்று, முன்பை விட வீரியமாகக் கழகம் செயல்படுவதற்கு அடிப்படையாக இருப்பது உங்களைப் போன்ற உடன்பிறப்புகள்தான்! அதனால்தான், நான் தலைவராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு சந்தித்த 2018 உள்ளாட்சித் தேர்தல் தொடங்கி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரையிலும் தொடர் வெற்றிகளை நாம் பெற்று இருக்கிறோம்.

பொதுவாகத் தேர்தல் பணிகளில் ஈடுபடுகிறவர்களிடம், களநிலவரம் எப்படி இருக்கிறது? வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என நான் விசாரிக்கும்போது, “இரண்டு மடங்கு உழைப்பைக் கொடுத்து இருக்கிறோம்; மூன்று மடங்கு உழைப்பைக் கொடுத்திருக்கிறோம்!” என்று சொல்வார்கள்… ஆனால் உங்கள் ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொருத்தவரை, கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று முறை மூன்று மடங்கு உழைப்பைக் கொடுத்து தொடர் வெற்றியை நீங்கள் உறுதிசெய்து இருக்கிறீர்கள்! அதற்காக உங்களுக்குச் சிறப்பான வாழ்த்துகள், பாராட்டுகள்!

தேர்தல் பணி என்பது, கட்சிக் கூட்டம் மாதிரி கிடையாது. கடுமையான களப்பணி அது! ஒவ்வொரு நாளும் – ஒவ்வொரு நிமிடமும், பொதுமக்களைச் சந்திக்க வேண்டும். நம்மைப் பற்றி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமான மதிப்பீட்டை வைத்து இருக்கிறார்கள். அவர்களிடம் நம் கொள்கைகள் – திட்டங்கள் – சாதனைகளை எடுத்துச் சொல்லி, அவர்களுக்கு ஏதாவது குறைகள் – கோபம் இருந்தால் அதற்குத் தீர்வு காண்கிறோம் என உறுதியளித்து, அவர்களின் நன்மதிப்பைப் பெற வேண்டும். அதை வாக்குகளாக மாற்ற வேண்டும். தேர்தல் நாள் தொடங்கி, வாக்கு எண்ணிக்கை முடிந்து, வெற்றிச் சான்றிதழை வாங்கும்வரை உணவு – தண்ணீர் – குடும்பம் – தூக்கம் என அனைத்தையும் மறந்துவிட்டுத் தவறுகள், முறைகேடுகள் எதுவும் நடக்காத அளவுக்கு விழிப்போடு பணியாற்ற வேண்டும்! அப்படி பணியாற்றி வெற்றியைத் தேடித்தந்திருக்கும் உங்களை பாராட்டுவது மூலமாக திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராக, தலைமைத் தொண்டனாகப் பெருமை அடைகிறேன்.

தந்தை பெரியார் பிறந்த மண்ணில் மாபெரும் வெற்றியைத் தேடித்தந்து, தமிழ் மண்ணில் பிற்போக்குத் தனங்களையும் – வெறுப்பையும் பேசும் மக்கள் விரோத சக்திகளுக்கும் – அவர்களின் கைப்பாவைகளுக்கும் இடமில்லை என இந்தத் தேர்தலில் நிரூபித்து இருக்கிறோம்.  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் என்பது நாம் ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளை நிறைவு செய்யப்போகும் நேரத்தில் வந்த தேர்தல். நம் ஆட்சி பற்றிய மக்களின் தீர்ப்பாகக் கருதப்பட்ட முக்கியமான தேர்தல்.

அதில் பெருவெற்றியைப் பெற்றுத் தந்த உங்களிடம் நான் கேட்டுக்கொள்வது, இன்னும் ஓராண்டில் பொதுத் தேர்தலைச் சந்திக்கப் போகிறோம். பொதுத் தேர்தல் களத்தில் நம் எதிர்க்கட்சிகள் எல்லாம் நம்மிடம் இருந்து வெற்றியைப் பறிக்க எவ்வளவு வேண்டுமானாலும் தரம் தாழ்ந்து போவார்கள். ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜகவின் சதித்திட்டங்களுக்கு முதன்மைத் தடையாக இருக்கும் தமிழ்நாடும் – திராவிட முன்னேற்றக் கழகமும்தான்.

அதனால், பல்வேறு வடிவங்களில் எதிரிகளை உருவாக்குவார்கள்; நாடகங்கள் நடத்துவார்கள். இந்த மாதிரியான நாடகங்களை 75 ஆண்டுகளாக – ஏன், அதற்கு முன்பிருந்தே பார்த்துக்கொண்டு இருப்பவர்கள் நாம். அதனால், என்ன திட்டம் போட்டாலும் அதை முறியடிப்பதற்கான வலிமை நம்மிடம் உள்ளது. அந்த வலிமைதான் நீங்கள்! உங்களை மாதிரி உழைக்கும் கோடிக்கணக்கான உடன்பிறப்புகள்! நம் மேல் நம்பிக்கை வைத்து வாக்களிக்கும் தமிழ்நாட்டு மக்கள்!

என்னை பொருத்தவரைக்கும், நான் கொள்கை – உழைப்பு – சாதனை ஆகியவற்றை நம்புகிறவன். அதற்கு நேர்மையாகவும் – தடம் மாறாமலும் இருப்பதால்தான் மக்கள் நம்முடன் இருக்கிறார்கள். அந்த மக்களைக் காக்க – இந்த தமிழ்நாட்டை தொடர்ந்து முன்னேற்ற – 2026-இல் களம் காண்போம்! உங்கள் உழைப்பைக் கொடுங்கள்! வரலாறு காணாத வெற்றியைக் காண்போம்! நன்றி! வணக்கம்!”என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

அண்ணாமலை விமர்சனம்: மாமனார் கொடுத்த காசில் வண்டி ஓட்டவில்லை..!

நான் என் மாமனார் கொடுத்த காசில் வண்டி ஓட்டவில்லை, லாட்டரி விற்று வரவில்லை. எனக்கு கொஞ்சம் தன்மானம் அதிகம். சொந்தமாக நின்று சுயம்புவாக நிலைத்து பேசுபவன் நான் என ஆதவ் அர்ஜுனாவை அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்தார். சென்னை திருவான்மியூரிலுள்ள ஸ்ரீஇராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்கூட்டம் நேற்றைய முன்தினம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பொதுக்குழுவில் பேசிய தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசினார். அப்போது, “பல பொய் பிரச்சாரங்களை உருவாக்க வேண்டும் என்ற கோணத்தில் செட் செய்யப்பட்டவர் தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. டெல்லியில் பிரதமர் மோடி அமர்ந்து கொண்டு மற்ற மாநிலங்களில் செட் செய்து கொண்டு இருக்கிறார்.

தமிழகத்தில் திமுக அண்ணாமலையையே செட் செய்து விட்டது நன்றாக கவனித்தால் தெரியும், திமுகவின் பிரச்சினைகளை அவர் எப்படி திசை திருப்புவார் என்று. நமது தலைவர் விஜய் புலி மாதிரி அமைதியாக இருக்கும் போது திடீரென ஒரு ஆடு வந்து சம்பந்தமே இல்லாமல் வந்து, தொழிலை சம்பந்தப்படுத்தி பெண்ணை கேவலமாக பேசியிருக்கிறார். ஒரு பெண்ணை கேவலமாக பேசும் தலைவரை பாஜக வைத்திருக்கும் போதே தெரிந்துவிட்டது அந்த கட்சியின் நிலைமை.” என ஆதவ் அர்ஜுனா விமர்சித்து இருந்தார்.

இந்நிலையில், கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு அண்ணாமலை பதிலளித்தார். அப்போது, “அண்ணாமலை அரசியலுக்கு வந்திருப்பது அதிகாரத்திற்கு அல்ல. தமிழகத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பது தான். என்னால் யாருக்கும் பிரச்சினை வராது. மாற்றி, மாற்றி பேசுபவன் நான் அல்ல. எனக்கு தமிழகம் முதன்மையானது. பாஜக வளர்ச்சி முக்கியம். எனது தனிப்பட்ட வளர்ச்சியோ, மற்றவர் வளர்ச்சியோ முக்கியம் கிடையாது” என அண்ணாமலை தெரிவித்தார்.

மேலும் அண்ணாமலை பேசுகையில், “திமுகவுக்கு எதிராக அதிக போராட்டங்களை நடத்திய கட்சி பாஜக. திமுகவுக்கு எதிராக பேசியதாக அதிக அவதூறு வழக்குகள் என் மீது தான் இருக்கின்றன. கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டிலேயே ஒரு கட்சித் தலைவர் மீது அதிக FIR போட்டு இருக்கிறார்கள் என்றால் அது என் மீது தான். திமுகவை தீர்க்கமாக எதிர்த்து தினமும் பேசுவது யார்? வாய் வியாபாரிகளுக்கு மாமனார் பணம் இருக்கிறது. கொழுத்துப் போய் இருக்கிறார்கள். மைக் ஓசியில் வந்துவிடுகிறது, என்ன வேண்டுமானாலும் பேச வாய்ப்பு கிடைக்கிறது.

நேர்மையான அரசியல்வாதியாக வாழ்ந்து கொண்டிருப்பவன் நான். படித்து முடித்த முதல் நாளில் இருந்து எந்த தனியார் நிறுவனத்திலும் சம்பளம் பெறாதவன். என் முதல் சம்பளமே மக்களின் வரிப்பணம் தான். 10 ஆண்டுகளாக மக்கள் பணியாற்றியவன் நான். எனது சொந்த நிறுவனத்தில் கூட ஒரு ரூபாயைக் கூட நான் சம்பளமாகப் பெற்றதில்லை. இத்தனைக்கும் நான் இப்போது எந்த அரசுப் பதவியிலும் இல்லை, பஞ்சாயத்து தலைவராகக் கூட இல்லை என்றாலும், ஒரு ரூபாய் பணத்தை தனியாரிடம் இருந்து பெற்றதில்லை.

2011 IPS ரேங்க்கில் எனது ரேங்க் 2. நான் என் மாமனார் கொடுத்த காசில் வண்டி ஓட்டவில்லை, லாட்டரி விற்று வரவில்லை. எனக்கு கொஞ்சம் தன்மானம் அதிகம். சொந்தமாக நின்று சுயம்புவாக நிலைத்து பேசுபவன் நான். எனக்கு கொஞ்சம் வாய் பேச்சு, குறும்பு அதிகம். வைராக்கியம் அதிகம். நான் இங்கு பவருக்காக வரவில்லை. எதை இழந்தாலும் மீண்டும் வருவேன்” என ஆவேசமாக அண்ணாமலை பேசினார்.

சீமான்: நரேந்திர மோடி என்னை சந்திக்க வரவில்லை..! அதனால் அவரை சந்திக்க போவதும் இல்லை..!

பிரதமர் நரேந்திர மோடி வரும் 6-ந் தேதி தமிழகம் வருவது மக்களை சந்திக்கதான்.. என்னை சந்திக்க அல்ல. நான் அவரை சந்திக்க போவதும் இல்லை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். திருச்சியில் இன்று செய்தியாளர்களின் கேளிவிக்கு சீமான் பதிலளித்தார். அப்போது, 2026 சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்துவோம் என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் கூறியிருப்பதை வரவேற்கிறேன். திமுகவுடன் மோதி அந்த கட்சியை அழிக்க வேண்டும் என நினைக்கிற என் தம்பி விஜய்யின் நிலைப்பாட்டை நான் வரவேற்கிறேன்.

நான் ஆள் சேர்த்துக் கொண்டு சண்டக்குப் போகிறவன் அல்ல. பிரபாகரனை வீழ்த்த உலக நாடுகளின் படையை துணை தேடி சிங்களர் வந்தனர்; ஆனால் அத்தனை படையையும் எதிர்க்க எந்த நாட்டிடம் உதவி கோரவில்லை பிரபாகரன். அதே மரபில் என் எதிரியை நான் தனியாகவே சந்திப்பேன். ஒரு நாய், 4 நாய்களை சேர்த்துக் கொண்டு வேட்டைக்கு போனால் சரி; ஆனால் ஒரு புலி, 10 புலிகளை சேர்த்துக் கொண்டு வேட்டைக்கு போனால் நன்றாக இருக்காது.

தனித்து நிற்பதற்குதான் வீரமும் துணிவும் தேவை. நாங்கள் வீரர்கள்; தனித்து நிற்கிறோம்; மோதுகிறோம். கொள்கையே இல்லாமல் எப்படி கூட்டணி அமைக்க முடியும் என யாரும் கேள்வி கேட்பதும் இல்லை; கூட்டணி வைத்தால்தான் வெல்ல முடியும் என்பது மரபா? சட்டமா? நாங்கள் யார் எதிரி என்பதை தீர்மானித்துவிட்டுதான் களத்துக்கு வந்தவர்கள்.

யாரை எதிர்க்கிறோம் என்பது தெரியாமல் அரிவாளை தூக்கிக் கொண்டு வீதியில் நின்று கொண்டு எவனை வெட்டலாம் என தேடவில்லை. யாரை வீழ்த்த வேண்டும் என்ற முடிவுடனேயே போருக்கு வந்துள்ளோம். அதனால் எங்களுக்கு எந்த குழப்பமும் இல்லை. அடுத்த 4 மாதங்களில் யார் யாருடன் கூட்டணி என்பது எல்லாம் தெரிந்துவிடும். பிரதமர் நரேந்திர மோடி வரும் 6-ந் தேதி தமிழகம் வருவது மக்களை சந்திக்கதான்.. என்னை சந்திக்க அல்ல. நான் அவரை சந்திக்க போவதும் இல்லை என சீமான் தெரிவித்தார்.பிரதமர் நரேந்திர மோடி வரும் 6-ந் தேதி தமிழகம் வருவது மக்களை சந்திக்கதான்.. என்னை சந்திக்க அல்ல. நான் அவரை சந்திக்க போவதும் இல்லை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

திருமாவளவன் விமர்சனம்: வார்டு எலக்ஷனில் கூட நிற்காத தவெக.. அதிமுகவுக்கு சவால் விடுக்கிறது..!

வார்டு எலக்ஷனில் கூட நிற்காத தவெக 62 எம்எல்ஏக்களை வைத்து இருக்கும் அதிமுகவுக்கு சவால் விடுகிறது என தொல். திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். சென்னை திருவான்மியூரிலுள்ள ஸ்ரீஇராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்கூட்டம் நேற்றைய முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நன்றியுரை ஆற்றிய விஜய் திமுக ஆட்சியை, தமிழக முதலமைச்சரை, மத்தியில் ஆளும் பாஜகவை விமர்சித்துப் பேசினார். பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய், கதறல் சத்தமெல்லாம் எப்படியிருக்கு? இன்றைக்கு தமிழ்நாடு இருக்கின்ற சூழலில், நாம் ஒரு புதிய வரலாற்றைப் படைப்பதற்கு, தயாராக வேண்டிய அவசியத்தை, நீங்கள் அனைவருமே நன்றாக புரிந்து வைத்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

ஒவ்வொரு குடும்பமும் நல்லா வாழ வேண்டும் என்று நினைப்பது அரசியலா? இல்லை ஒரே ஒரு குடும்பம் மட்டும் தமிழ்நாட்டை சுரண்டி நல்லா வாழ்வது அரசியலா? எல்லோருக்கும் நல்லது நடப்பதுதானே அரசியல். அதுதான் நம்ம அரசியலும். கட்சிக்கு திராவிடம், ஆட்சிக்கு திராவிட மாடல்னு, தினம் தினம் மக்கள் பிரச்சினைகளை மடைமாற்றி, மக்கள் ஆட்சியை மன்னராட்சிப் போல நடத்தும் இவர்கள், நமக்கு எதிராக செய்யும் செயல்கள் ஒன்றா, இரண்டா?

மாநாடு தொடங்கி, நான் கலந்துகொண்ட புத்தக வெளியீட்டு விழா, பரந்தூர் நிகழ்ச்சி, தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா, அன்றைய தினம் நகருக்குள் எந்த திருமண மண்டபமும், அரங்கமும் நமக்கு கொடுத்துவிடக் கூடாது என்று, மாமல்லபுரம் சென்று அந்த நிகழ்ச்சியை நடத்தினோம். ஏன் இன்று நடைபெறும் பொதுக்குழுக் கூட்டம் வரை எங்கெல்லாம் எப்படியெல்லாம் தடைகள் வந்தன? அத்தனை தடைகளையும் தாண்டி தவெக தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கும்.அது தொடர்ந்து நடக்கும்.

மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே, பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் பத்தாது, செயலிலும் ஆட்சியிலும் அதைக்காட்ட வேண்டும். மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியை ஒரு பாசிச ஆட்சி என்று அடிக்கடி அறிக்கைகள் கொடுத்துவிட்டு, இங்கு நீங்கள் செய்யும் ஆட்சி மட்டும் என்னவாம்? அதற்கு கொஞ்சம்கூட குறைவில்லாத அதே பாசிச ஆட்சிதானே.

ஒரு கட்சித் தலைவனாக எனது கட்சித் தொண்டர்களையும், என் நாட்டு மக்களையும் சந்திப்பதற்கும், பேசுவதற்கும் தடை போடுவதற்கு நீங்கள் யார்? தடையை மீறி என் மக்களை பார்க்க வேண்டும் என்றால் சென்றே தீருவேன். சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் அமைதியாக இருக்கிறேன்.நேற்று வந்தவன் எல்லாம் முதல்வராக கனவு காண்கிறேன் என்று கூறுகிறீர்கள். அது நடக்கவே நடக்காது என்று கூறுகிறீர்கள். பிறகு ஏன், மற்ற எந்த கட்சிகளுக்கும் இல்லாத தடைகளை விதித்துக் கொண்டே இருக்கிறீர்கள். அணை போட்டு ஆற்றை வேண்டுமானால் தடுக்கலாம். காற்றைத் தடுக்க முடியாது. அதையும் மீறி தடுக்க நினைத்தால், சாதாரணமாக இருக்கும் காற்று சூறாவளியாக மாறும். ஏன் சக்திமிக்க புயலாக கூட மாறும்.

தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து வரக்கூடிய செய்திகளைக் கேட்கும்போது மன உளைச்சலையும், மன வேதனையையும் தருகிறது. சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. அதற்கு எல்லாம் இந்த கரப்ஷன் கபடதாரி கவர்மென்ட்தான் காரணம். இந்த நிலை மாற வேண்டும். அதற்கு ஒரே வழி இங்கு உண்மையான மக்களாட்சி மலர வேண்டும். அது வரவேண்டும் என்றால் இவர்களை மாற்ற வேண்டும்.

மேலும், தொடர்ந்து பேசுகையில், இந்த பொதுக்குழு வழியாக, தமிழக மக்களுக்கு ஒரு உத்தரவாதத்தைக் கொடுக்கப் போகிறோம்.தவெக ஆட்சி உண்மையான மக்கள் ஆட்சி. தவெக தலைமையில் அருதிப்பெரும்பான்மை பெற்ற ஆட்சி.அதிகாரப்பகிர்வுடன் கூடிய ஆட்சி. அப்படியாக இந்த ஆட்சி அமைந்ததும் பெண்கள் பாதுகாப்பை நூறு சதவீதம் உறுதி செய்வோம். சட்டம் ஒழுங்கை முறையாக கண்டிப்பாக வைத்திருப்போம். கல்வி, சுகாதாரம், மருத்துவத்தில் கவனம் செலுத்துவோம். அதுவும், அனைவருக்கும் எளிதாக, சமமாக கிடைப்பதை உறுதி செய்வதுதான் தவெகவின் இலக்கு. 2026-ல் தவெகவுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி என விஜய் பேசியிருந்தார்.

இந்நிலையில், திருவண்ணாமலையில் நடந்த மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பேசினார். அப்போது, தவெக தலைவர் விஜய்யின் பேச்சை கடுமைாக விமர்சனம் செய்தது மட்டுமின்றி தவெகவை கிண்டல் செய்து பேசினார். ஏதோ தனியார் நிறுவனம் சர்வே நடத்தினார்களாம். அதில் 2-ஆம் இடம் வந்து விட்டார்களாம். அடுத்து அவர் தான் ஆட்சியை பிடிக்க போகிறாராம். பாவம் அவரை உசுப்பிவிடுறாங்க. வேண்டும் என்றே. அவருக்கு ஆசையை தூண்டிவிட்டு உள்ளே வந்து களமிறங்கி விளையாடுங்க என்று சொல்கின்றனர்.

2026 சட்டசபை தேர்தலில் 2 பேருக்கு இடையே தான் போட்டி. ஒரு பக்கம் திமுக. இன்னொரு பக்கம் தவெக. அதில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்றால் எடப்பாடி பழனிச்சாமி அவர்களே நீங்கள் போட்டியில்லை. உங்களை விட நாங்கள் தான் பெரிய சக்தி என்று கூறுகிறார். போட்டி என்பது திமுகவுடன் இப்போது கிடையாது. 2-வது இடத்தில் யார் என்பது தான் விஜய்க்கும், எடப்பாடிக்கும் போட்டி. 2-வது இடம் யாருக்கு என்பதில் தான் அண்ணாமலைக்கும், விஜய்க்கும் போட்டி. இந்த தமிழக அரசியல் களத்தில் 2-வது இடம் பிடிப்பது யார்? என்பதில் சண்டை நடக்கிறது. அந்த சண்டை எடப்பாடி பழனிச்சாமிக்கும், விஜய்க்கும் இடையே நடக்கிறது. திமுக கூட்டணியுடன் அவர்கள் மோத முடியாது. அதனை அவர்களே ஒப்புக்கொள்வார்கள். திமுக, தவெக இடையே தான் போட்டி என்று அவர் யாருக்கு பதில் சொல்கிறார்.

அது திமுகவுக்கு சொல்கிற பதிலா? கிடையாது. எங்கள் 2 பேருக்கும் தான் போட்டி என்று ஏற்கனவே எதிர்க்கட்சியாக இருக்கிற அதிமுகவுக்கு விடுக்கிற சவால்.சி வோட்டர் சர்வே அதிமுகவுக்கு ஒரு நெருக்கடியை தருகிறார். நீயா? நானா? 2-வது இடம். அவர்களே ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார்கள். திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி தான் முதன்மையாக இருக்கிறது. அதனை எதிர்க்கும் வலு அதிமுக, பாஜகவுக்கு இல்லை. அதனை எதிர்க்கும் வலு எங்களுக்கு தான் இருக்கிறது என்று வார்டு எலக்ஷனில் கூட நிற்காத கட்சி 62 எம்எல்ஏக்களை வைத்து இருக்கும் அதிமுகவுக்கு சவால் விடுகிறது. நீங்கள் 2 பேரும் சண்டை போட்டு கொள்ளுங்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி இப்போது திமுக கூட்டணியில் இருக்கிறது என்று சொல்கிறார்கள். அது உண்மை தான். ஆனால் ஒரு உண்மையை மறந்து விடக்கூடாது. விடுதலை சிறுத்தைகள் கட்சியும் சேர்ந்து உருவாக்கிய மதசார்பற்ற கூட்டணியில் இருக்கிறோம் என்பதை மறக்க வேண்டாம்” என தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

சபாநாயகர் அப்பாவு: வருமான வரித்துறை விஜய்யின் மீது நடவடிக்கை எடுக்குமா..?

ரூ.220 கோடி வரி ஏய்ப்பு செய்யும் விஜய்யின் மீது மத்திய வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்குமா..? என சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் விஜய் கட்சியின் முதலாவது பொதுக்குழுக் கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில் பேசிய விஜய் மத்தியில் ஆளும் பாஜக மற்றும் தமிழகத்தை ஆளும் திமுகவை விஜய் நேரடியாக விமர்சித்துப் பேசினார். நடிகர் விஜய் குறிப்பாக முதல்முறையாகப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெயரைக் குறிப்பிட்டு விமர்சித்தார்.

மேலும், 2026-ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் என்பது மக்கள் இதுவரை பார்க்காத ஒன்றாக இருக்கும் எனக் குறிப்பிட்ட அவர், அந்தத் தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே தான் போட்டி நிலவும் என்றும் அவர் குறிப்பிட்டார். விஜய்யின் இந்த அரசியல் பேச்சு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. தவெக தலைவர் விஜய் பேச்சுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் பல்வேறு கருத்துகளைக் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில், திருநெல்வேலியில் செய்தியாளர்களின் சபாநாயகர் அப்பாவு பதிலளித்தார். அப்போது, “நம்ம தம்பி விஜய் கட்சியை ஆரம்பித்துள்ளார். அவர் கட்சி ஆரம்பித்ததில் எந்தவொரு தவறும இல்லை. அதை வரவேற்கிறோம். மக்களுக்கு நல்லது செய்ய கட்சியை ஆரம்பித்துள்ளார். ஆனால், அவரது கட்சியில் பொதுச்செயலாளராக இருக்கிறாரே புஸ்ஸி ஆனந்த். அவருக்கும் அமித் ஷாவுக்கும் இருக்கும் தொடர்பு தெரியுமா.. இருவருக்கும் இடையே எத்தனை ஆண்டு பழக்கம் இருக்கிறது என்பது தெரியுமா.. அப்படிப்பட்ட நபரைப் பொதுச்செயலாளராக வைத்திருக்கும் கட்சி எப்படி இருக்கப் போகிறது என்பதை நீங்களே சொல்லுங்கள்..

ஏற்கனவே வருங்கால முதல்வர் என்று புஸ்ஸி ஆனந்திற்கு போஸ்டர் அடித்துள்ளனர். இதுதான் பாஜகவின் மறைமுக திட்டம். விஜய் கட்சியின் பொதுச்செயலாளர் தான் அடுத்த முதல்வர் என்றால் என்ன செய்ய முடியும். 1000 கோடி ரூபாய் வருமானத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துள்ளதாக அவர்களே சொல்கிறார்கள். ரூ.1000 கோடிக்கு வெறும் ரூ.80 கோடி தானே வருமான வரி கட்டி இருக்கிறீர்கள். அப்போ மீதி ரூ.220 கோடி வருமான வரி கட்ட வேண்டும் தானே.

மத்திய வருமான வரித்துறை இதில் நடவடிக்கை எடுக்குமா..? அப்படி எடுத்தால் தான் விஜய் தானாகக் கட்சி ஆரம்பித்துள்ளார்.. பாஜக சொல்லி கட்சியை ஆரம்பிக்கவில்லை என்பதை மக்கள் நம்புவார்கள். அப்படி பாஜக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால்.. பாஜக சொல்லியே இவர் கட்சியை ஆரம்பித்துள்ளார். அவர்களிடம் வேறு ஒரு திட்டமும் இருப்பதாகவே தெரிகிறது” என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

டிடிவி.தினகரன்: திமுகவை எதிர்க்கும் எந்த கட்சியும் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேரலாம்..!

திமுகவை எதிர்க்கும், திமுக வெற்றி பெறக் கூடாது என்று கருதும் எந்தக் கட்சியும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையலாம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார். மதுரை அவனியாபுரத்தில் நேற்று நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் டிடிவி.தினகரன் பங்கேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு டிடிவி.தினகரன் பதிலளித்தார்.

அப்போது, அமமுக ஏற்கெனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துள்ளார். ஆனால், அந்த சந்திப்பு குறித்து வெளிப்படையாக பேசவில்லை. திமுகவை எதிர்க்கும், திமுக வெற்றி பெறக் கூடாது என்று கருதும் எந்தக் கட்சியும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையலாம்.

திமுகவுக்கு மாற்று தவெக என்று விஜய் கூறியிருப்பது, அவரது விரும்பம் மட்டுமே. தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சியாக மக்கள் மனதில் இருப்பது தேசிய ஜனநாயகக் கூட்டணிதான். சுயநலம், பதவி வெறியாலும், திமுக மீதுள்ள பயத்தாலும், தங்கள் மீது வழக்கு பதிவு செய்யக்கூடாது என்பதற்காகவும், திமுக தேர்தலில் வெற்றி பெற சிலர் மறைமுகமாக உதவி வருகின்றனர்.

காங்கிரஸ் ஆட்சியைவிட பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. ஆட்சியாளர்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். அதை மறைப்பதற்காக மத்திய அரசு மீது திமுகவினர் பழி சுமத்துகின்றனர். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லியில் பாஜக தலைவர்களை சந்தித்தது குறித்து எதுவும் தெரியாது. ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்கு துரோகம் செய்தார் என்று கூறும் பழனிசாமிதான் உண்மையில் துரோகத்தின் வடிவம். தனியாக கட்சி நடத்துவதால் நாங்கள் அதிமுகவில் இணைய வேண்டிய அவசியம் இல்லை என டிடிவி.தினகரன் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி: தொண்டர்களை உற்சாகப்படுத்த விஜய் அப்படி உசுப்பேத்த பேசியிருப்பார்..!

வரும் சட்டசபை தேர்தலில் தவெகவிற்கும், திமுகவிற்கும் நேரடி போட்டி என்பது அவரது சொந்த கருத்து. கட்சி தலைவர் என்ற முறையில் கட்சியின் வளர்ச்சிக்காக தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக விஜய் ஏதேனும் பேசியிருப்பார் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சேலம் மாவட்டம், ஓமலூர் பேருந்து நிலையம் முன்பு அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து, பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் நீர்மோர் மற்றும் பழங்களை வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அப்போது, தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து சந்திசிரிக்கிறது. இதுசம்பந்தமாக சட்டமன்றத்தில் பேச எதிர்கட்சிகளுக்கு அனுமதிக்காமல் வெளியேற்றுகின்றனர். ஊசிலம்பட்டியில் காவலர் அடித்து கொலை செய்த சம்பவம், சிவகங்கையில் பயிற்சி மருத்துவர் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு வர சட்டமன்றத்தில் பேச முயன்றேன். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டு, வேண்டுமென்றே திட்டமிட்டு எங்களை வெளியேற்றிவிட்டனர்.

வரும் 2026 சட்டசபை தேர்தலில் தவெகவிற்கும், திமுகவிற்கும் நேரடி போட்டி என்பது அவரது சொந்த கருத்து. கட்சி தலைவர் என்ற முறையில் கட்சியின் வளர்ச்சிக்காக தொண்டர்களை உற்சாப்படுத்த அவ்வாறு பேசுவர். தமிழகத்தில் பிரதான எதிர்கட்சி அதிமுக என்பதை மக்களே ஏற்றுக் கொண்டுள்னர். செங்கோட்டையன் டில்லி பயணம் சென்றது குறித்து எனக்கு தெரியாது. தவெக தலைவர் அதிமுகவை விமர்சித்து பேசாததற்கு காரணம், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் ஆட்சி பொறுப்பில் இருந்த போது, புதிய கட்சிகள் கூட பாராட்டும் விதமாக ஆட்சி செய்தனர். அதனால் தான் அதிமுகவை யாராலும் விமர்சிக்க முடியவில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தொடர் கடும் வெயில் எதிரொலி: 1 முதல் 5-ஆம் வகுப்புக்கான தேர்வு தேதிகள் மாற்றம்..!

தொடர் கடும் வெயில் தாக்கம் காரணமாக 1 முதல் 5-ஆம் வகுப்புகள் வரையிலான இறுதித் தேர்வுகள் முன்கூட்டியே ஏப்ரல் 7 முதல் 17-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக தொடக்கக் கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3 முதல் 27-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட நிலையில் பத்தாம் வகுப்புக்கான தேர்வு மார்ச் 28-ஆல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதேபோல, 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் ஏப்ரல் 9-ல் தொடங்கி 21-ஆம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்து இருந்தது. அதன்படி மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், கோடை வெயில் தாக்கம் கடந்த ஒரு சில நாட்களாக அதகரித்து வரும் நிலையில் மேலும் தமிழகம் முழுவதும் கோடை வெயில் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு மட்டும் இறுதி பருவத் தேர்வை முன்கூட்டியே நடத்தி முடிக்க வேண்டுமென பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்த நிலையில். இதனை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான தேர்வு தேதிகளை மாற்றி திருத்தப்பட்ட கால அட்டவணையை தொடக்கக் கல்வித் துறை வெளியிட்டது. அதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3இறுதி பருவத் தேர்வுகள் ஏப்ரல் 7 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. ஒவ்வொரு வகுப்புக்கும் பாடவாரியாக தேர்வு நடைபெறும் விவரங்கள் அதில் இடம் பெற்றுள்ளன. இந்த அட்டவணையை பின்பற்றி உரிய வழிகாட்டுதல்களின்படி தேர்வுகளை நடத்தி முடிக்க அனைத்து விதமான பள்ளிகளுக்கும் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.