நாடும் நாட்டு மக்களும் எக்கேடாய்ப் போனால் என்ன? என்று “Blastu Blastu” கொண்டாடத்தில் திளைக்கும் புதிய Nero அரசுக்கு எனது கடும் கண்டனம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம், கல்கண்டார்கோட்டை அருகே உள்ள ஆலந்தூரைச் சேர்ந்த மூதாட்டி தமிழ்க்கொடி என்பவர், வீட்டில் ஏற்பட்ட விபத்தில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் பின்னர் அவர் சாதாரண வார்டில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று ஜூலை 22-ந் தேதி நள்ளிரவு நேரத்தில் வார்டில் உறங்கிக் கொண்டிருந்த தமிழ்க்கொடியின் காலில் கட்டு போடப்பட்டிருந்த நிலையில், அவரது கால் விரலை எலி கடித்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மூதாட்டி சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால், முதலில் எலி கடித்ததை அவர் உணரவில்லை என்றும், பின்னர் காலில் ரத்தக்கசிவு இருப்பதை கவனித்த உறவினர்கள் உடனடியாக மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
தகவல் கிடைத்ததும் மருத்துவக் குழுவினர் விரைந்து வந்து மூதாட்டியை பரிசோதித்தனர். தொடர்ந்து காயத்திற்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், எலி கடித்ததால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தச் சம்பவம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்ற நோயாளிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் வார்டுகளில் எலிகள் நடமாட்டம் அதிகம் உள்ளதாக சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகள் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மருத்துவமனை நிர்வாகம் முழுப் பொறுப்பேற்று உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது பெண்ணின் கால் விரலை எலிகள் கடித்துக் குதறியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளை இன்றைய ஆட்சி எப்படி வைத்திருக்கிறது என்பதற்கு இந்த செய்தியே சாட்சி.
அரசை நம்பி சிகிச்சை பெற வந்து, எலி கடித்து கால் விரல் இழந்துள்ள அந்தப் பெண்ணிற்கு என்ன பதில் வைத்துள்ளது இன்றைய தவெக பொய்க்கால் குதிரை அரசு? இப்படி மக்கள் திண்டாடிக் கொண்டிருக்க, இத்துறையின் அமைச்சரோ, ஜனநாயகன் படத்தின் முதல் காட்சி பார்த்து கொண்டாடி Selfie பதிவிட்டுக் கொண்டிருக்கிறார். அவர் மட்டுமல்ல, இன்றைய தினம் முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் படம் பார்க்க “லீவு” போட்டிருப்பதாக வேறு செய்திகள் வருகின்றன.
நாடும் நாட்டு மக்களும் எக்கேடாய்ப் போனால் என்ன? என்று “Blastu Blastu” கொண்டாடத்தில் திளைக்கும் புதிய Nero அரசுக்கு எனது கடும் கண்டனம். உடனடியாக பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன், அவருக்கான இழப்பீடும் வழங்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.” என எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.