ரயில் நிலையத்தில் சட்டக் கல்லூரி மாணவி ஒருவருக்கும், டிக்கெட் பரிசோதகர்களுக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பில் இரு தரப்பினர் மீதும் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து எழும்பூர் ரயில் நிலையத்திற்கு நேற்று சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் வந்துள்ளார்.
அங்கு பணியில் இருந்த பெண் பயணச்சீட்டு பரிசோதகர்கள் அவரிடம் டிக்கெட் கேட்டுள்ளனர். அதற்கு அந்த மாணவி, “நான் ரயிலில் பயணம் செய்யவில்லை, உறவினரை வழியனுப்ப வந்தேன்” என்று கூறியுள்ளார். இதனால் பிளாட்பார்ம் டிக்கெட் கேட்டனர்.
அந்த டிக்கெட்டையும் அந்த மாணவி எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் அவரை தங்களது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். விசாரணையின் போது மாணவியின் மொபைல் போனை டிக்கெட் பரிசோதகர் வாங்கி வைத்துள்ளார். இதனால் கோபமடைந்த மாணவி, “தன்னுடைய செல்போனை கொடுங்கள்” என்று கேட்டு வாக்குவாதம் செய்தார்.
ஒரு கட்டத்தில் அவர் செல்போனை கொடுக்காததால் திடீரென மாணவி, டிக்கெட் பரிசோதகரின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் இருதரப்புக்கும் இடையே கடுமையான கைகலப்பு மற்றும் சண்டை உருவானது. அந்த டிக்கெட் பரிசோதகருடன் இன்னொரு டிக்கெட் பரிசோதகரும் இருந்தார். தற்போது இச்சம்பவம் தொடர்பாக எழும்பூர் ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.