திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் என்ற காரணத்தால் தவ் அர்ஜுனா மற்றும் சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோர் தன் மீதும் அவதூறு பரப்புவதை ஏற்க முடியாது, 15 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் சட்டரீதியான நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்றும் சபரீசன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைத்த நாள் முதலே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மீது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்து ஆதவ் அர்ஜுனா பேசுகையில், 32 துறைகளில் தலா 16 துறைகள் என உதயநிதிக்கும், மாப்பிள்ளை சபரீசனுக்கும் பிரித்துக் கொண்டு வசூலித்து, மொத்த அமைச்சர்களும் கொடுத்தார்கள் என பேசி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஆதவ் அர்ஜுனாவின் இந்த குற்றச்சாட்டு தமிழக அரசியலில் பேசுபொருளானது.
அதேபோல் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், தமிழகத்தில் முன்பெல்லாம் மாப்பிள்ளை சபரீசன், மகன் உதயநிதி சொல்வதை கேட்ட பிறகே தொழில் தொடங்க முடியும். தற்போது இது போன்ற சூழல் இல்லை, இருக்காது. தலைமைச் செயலகத்தில் புரோக்கர்கள் இருந்த நிலை மாறி இப்போது பொதுமக்கள் செல்கின்றனர் என சிடிஆர் நிர்மல்குமார் விமர்சித்தார்.
திமுக ஆட்சியின் போது சபரீசன் எந்த அரசு பொறுப்பிலும், திமுகவின் கட்சிப் பொறுப்பிலும் இல்லை. இருந்த போதும் சபரீசன் மீது தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் சபரீசன் வக்கீல் மூலமாக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.
சபரீசன் அனுப்பிய நோட்டீஸில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் என்ற காரணத்தால் தன் மீதும் அவதூறு பரப்புவதை ஏற்க முடியாது. எதிர்காலத்தில் அவதூறு கருத்துக்களை வெளியிட மாட்டோம் என்று உறுதிமொழி அளிக்க வேண்டும். 15 நாட்களுக்குள் செய்யத் தவறினால், இரு அமைச்சர்களும் சட்டரீதியான நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.