சுத்தமான குடிநீர், போதிய கழிவறைகள், தரமான கட்டிடங்கள் இன்றி முடங்கிக் கிடக்கும் அரசுப் பள்ளிகளை தெப்புத் தேற்றுவது எப்படி என்று ஆராயாமல் இந்துக்களின் கைகளில் உள்ள கயிறு மட்டும் ஏன் எல்லோரது கண்களையும் உறுத்துகிறது? என பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் கேள்வியெழுப்பியுள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, தமிழ்நாட்டில் மாணவர்களின் மனநலனை பாதுகாப்பது ஒட்டுமொத்த சமூகத்தின் கூட்டு பொறுப்பு. மெல்ல கற்கும் மாணவர்களை ஒதுக்காமல், தனித் திறமைகளை கண்டறிந்து ஊக்கப்படுத்த வேண்டும்.
பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை சீராக பராமரிக்க வேண்டும். பிரச்சனை வந்த பின் சரி செய்வதை விட, பிரச்சனை வராமல் முன்கூட்டியே தடுக்க வேண்டும். அதேபோல் மாதிரி பள்ளிகளில் உணவு, மனநலம், உட்கட்டமைப்பு ஆகிய மூன்றையும் தரமாக பேணி பாதுகாக்க வேண்டும். தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆலோசித்து வருகிறோம்.
அதேபோல் சாதி, மத அடையாளங்களோடு (சாதிய அடையாளை குறிக்கும் கயிறுகள் கட்டி) கல்வி வளாகத்திற்குள் யாரும் வரக்கூடாது. பிரிவினையை தூண்டக் கூடிய வேற்றுமையை வளர்க்கும் எதற்கும் பள்ளிக்குள் இடமில்லை. தமிழக பள்ளி வளாகங்களில் சமூக நீதி, அறிவியல் மற்றும் கல்வி மேம்பாடு ஆகிய மூன்றுக்கும் மட்டுமே இடம் உண்டு. பிரிவினையையோ, வேற்றுமையையோ வளர்க்கும் எதற்கும் இங்கு இடம் கிடையாது.
மாணவர்களின் குற்ற மனநிலையை மாற்றுவதற்கும், அவர்களை நல்வழிப்படுத்துவதற்கும் பள்ளிக் கல்வித்துறை புதிய திட்டத்தை வகுத்துள்ளது. மூடநம்பிக்கைகளுக்கோ அல்லது அறிவியலுக்கு புறம்பான காரியங்களுக்கோ கல்வி நிலையங்களில் இடமில்லை. இனி தன்னம்பிக்கை, பகுத்தறிவு, சமூக நீதி ஆகியவற்றை போதிப்பவர்கள் மட்டுமே பள்ளிகளுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
இந்நிலையில், வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பக்கத்தில், இந்துக்களின் கைகளில் உள்ள கயிறு மட்டும் ஏன் எல்லோரது கண்களையும் உறுத்துகிறது? கல்விக்கூடங்களில் மதம் சார்ந்த அடையாளங்களை அனுமதிக்க மாட்டோம் என்று வீர வசனம் பேசிய கல்வி அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள், “கையில் எந்தக் கயிறும் கட்டக் கூடாது” என்று இறுதியில் தனது இந்து மத வெறுப்பைக் கக்கியதன் மூலம் தாங்கள் திமுகவின் ” பி டீம்” என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார்.
பல நூறு ஆண்டுகளாக இந்துக்கள் பின்பற்றி வரும் மத நம்பிக்கைகளில் மூக்கை நுழைக்க எந்த அரசுக்கும், கட்சிக்கும், அமைப்பிற்கும் உரிமையில்லை என்ற அடிப்படை நாகரிகத்தை கல்வி அமைச்சர் தெரிந்து கொள்ள வேண்டும்.
சுத்தமான குடிநீர், போதிய கழிவறைகள், தரமான கட்டிடங்கள் இன்றி முடங்கிக் கிடக்கும் அரசுப் பள்ளிகளை தெப்புத் தேற்றுவது எப்படி என்று ஆராயாமல், இந்து மாணவர்களின் அடையாளங்களை அழிப்பதில் ஆர்வத்துடன் செயல்படுவது தான், தவெகவின் அனைவருக்குமான அரசியலா? “மதச்சார்பின்மை” என்ற போர்வையில் இந்து மாணவர்களின் அடிப்படை உரிமைகளை மட்டும் தவெக அரசு பறிக்க நினைப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் தைரியத்தில் இந்துக்களின் மத அடையாளங்களை அழிப்பதில் மட்டுமே முழுக் கவனம் செலுத்திக் கொண்டிருந்தால் ஆட்சிக்கு வந்த வேகத்தை விட அதிவேகத்தில், முதல்வர் விஜய் அவர்கள் தனது அதிகாரத்தை இழக்க நேரிடும்!” என வானதி சீனிவாசன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.