கடந்த ஆட்சியில் 500 பேர் வரக்கூடிய கோயிலுக்கு மல்டி லெவல் கார் பார்க்கிங் ஏன்? கோயில் நிதியை கமர்சியலாக பயன்படுத்தியது ஏன்? என அமைச்சர் ரமேஷ் கேள்விக்கு முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “ஆய்வின் அடிப்படையில் தான் மல்டி லெவல் பார்க்கிங் ஏற்படுத்தப்பட்டது” என பதில் அளித்தார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தின் 17-வது கூட்டத்தொடர் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இரண்டாவது நாளாக இன்று அவை கூடிய நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், “அறநிலையத்துறையை பொறுத்தவரைக்கும் கோவில்களின் வருமானம், கோவில்களுக்கான, கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்காக செலவிடப்படும் என்பது தான் ஆளுநர் உரையில் இடம்பெற்ற சாராம்சம். இன்னொன்று சமீபத்தில் வெளியிடப்பட்ட திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் அந்த பணிகள் துவங்கப்படாத பணிகள்.
அது ஏன் நிறுத்தப்பட்டது? என்றால் அந்த கோவில்களில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், தங்கும் இடம் வசதிகள், கழிப்பறை வசதிகள் போன்றவற்றை மேம்படுத்துவதை காட்டிலும், கமெர்சியலாக கோவில்களுக்கு திருமணம் மண்டபம் கட்டுவதிலும், வணிக வளாகங்கள் அமைப்பதிலும் அதன் மூலம் வருவாய் ஈட்டுவதில் மட்டுமே குறிக்கோளாக வைத்துக்கொண்டு இந்த திட்டங்களை துவங்கியதன் காரணமாக தான்.
மேலும் அதன் மீது பல்வேறு நீதிமன்ற வழக்குகள் ஸ்டே ஆர்டர் இருப்பதனாலே அதனை எல்லாம் ரத்து செய்து இருக்கிறோம். இதற்கு ஒரே ஒரு உதாரணமாக எந்த அளவுக்கு கமெர்சியலாக மாற்றுவதற்கு.. குன்னூரில் இருக்கக்கூடிய அருள்மிகு விநாயகர் கோவில் நிதியை பயன்படுத்தி அந்த கோவிலில் 10 கோடி ரூபாயை பயன்படுத்தி அங்கு மல்டிலெவல் கார் பார்க்கிங் வசதியை ஏற்படுத்துவதற்காக இந்த திட்டத்தினை அந்த அரசு அமைத்துள்ளது.

இதற்கு முன்னாள் இருந்த அமைச்சர் இந்த அறிவிப்பினை அறிவித்துள்ளார்கள். இந்த கோவிலுக்கு நாள் ஒன்றுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை 500 தான். இந்த கோவில்களில் அடிப்படையான கழிவறை வசதிகள் கூட இல்லை. இதே போன்று குன்னூர், உதகையை சுற்றியுள்ள 500 கோவில்களில் கழிவறை வசதிகளே இல்லாமல் உள்ளது. இப்படிப்பட்ட கோயில்களில் கழிவறை கட்டுவதை விட கார் பார்க்கிங் கட்டுவதற்கு என்ன தேவை இருக்கிறது. இது கமர்சியல் திட்டங்கள் இல்லையா.. கோவில் நிதியில் இப்படி கமர்சியல் திட்டங்களை செய்வதை தான் நாம் ரத்து செய்துள்ளோம்.
இதற்கு பதில் அளித்த சேகர்பாபு, இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் விதி 69-இன் படி குறிப்பிடப்பட்டுள்ள அந்த பணிகள் சட்டப்பிரிவு 36-ன் பிரிவுக்கு உட்பட்டு தான் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அமைச்சரே முடிவு செய்து திருமண மண்டபங்களையும், வணிக வளாகங்களையும் ஏற்படுத்துவதற்கு உத்தரவிட்டதாக அமைச்சர் உண்மைக்கு புறம்பாக பேசியுள்ளார். அன்றைய சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவின் பேரில் தான் கொண்டு வரப்பட்டது. அங்கு இருக்கக் கூடிய 50 கோவில்களிலும் நான் நேரடியாகவே ஆய்வு செய்தேன்..
நகராட்சியின் பரிந்துரை அடிப்படையில் வருமான அதிகரிக்கும் நோக்கத்தோடு, அந்த வருமானத்தை வைத்து கோவில்களின் வசதியை மேலும் அதிகரிக்கவும், குன்னூருக்கு சுற்றுலா வருபவர்களுக்கு கார் பார்க்கிங் வசதியை மேற்கொண்டோம்.. மேலும் இப்போது யார் அறிவுறுத்தலின் பேரில் இந்த அரசாணையை வெளியிட்டு இருக்கிறாரோ அவர் தான் அப்போது ஆணையராக இருந்த போது இதே அறிவுறுத்தலின் பேரில் அரசாணையை அமல்படுத்தினோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என சேகர்பாபு தெரிவித்தார்.