கன்னியாகுமரி மாவட்டம் அருகே ஆசிரியையின் குளியலறை வீடியோ வைத்து, 2 நபர்கள் தொடர்ந்து மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அந்த பெண்ணின் கணவர் டெம்போ ஓட்டுநராக இருக்கிறார். இந்நிலையில், அந்த ஆசிரியை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பரபரப்பான மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “நான், தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன். எனது கணவர் டெம்போ டிரைவராக உள்ளார். நான் எனது வீட்டின் குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்த போது, அதே பகுதியை சேர்ந்த ஜெயகாந்தன் என்பவர் ரகசியமாக செல்போனில் வீடியோ எடுத்தார். இதை கவனித்து நான் கூச்சலிட்டதும், அவர் தப்பினார். பின்னர் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு, வெளியே கூறினால் கொன்று விடுவதாக மிரட்டினார்.
இதுகுறித்து நான் யாரிடமும் சொல்லவில்லை. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு, நான் தனியாக இருக்கும்போது ஒரு நாள் எனது வீட்டுக்குள் வந்த ஜெயகாந்தன் அந்த வீடியோவை என்னிடம் காட்டி, நான் சொல்வது போல் கேட்க வேண்டும் என கூறி மிரட்டி, என்னுடன் உடலுறவில் ஈடுபட்டார். அதற்கு பிறகு பலமுறை வீடியோவை அழித்து விடுவதாக சொல்லி, நம்ப வைத்து உடலுறவு கொண்டார். அதையும் எனக்கு தெரியாமல் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார்.
அது மட்டுமல்லாமல், என்னிடம் இருந்து ரூ.47,000 வரை ரொக்கத் தொகை வாங்கினார். இதனிடையே ஜெயகாந்தன் வெளிநாடு சென்றார். அந்த நேரத்தில், அவரது நண்பர் ஜெகன் என்பவர் வந்து மேற்கண்ட சம்பவத்தை கூறி பலமுறை என்னை மிரட்டி பலாத்காரம் செய்தார். இதுபற்றி நான் எனது கணவரிடம் தெரிவித்தபோது, அவர் இது குறித்து கேட்டார். அவரையும் இருவரும் சேர்ந்து மிரட்டுகிறார்கள். எனவே, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என தன்னுடைய மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, சம்பவம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட காவல் நிலையம் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, தக்கலை காவல்துறையினர் தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்துதல், பலாத்காரம் செய்தல், மறைந்திருந்து ரகசியமாக வீடியோ எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் ஜெயகாந்தன் மற்றும் ஜெகன் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.