ஆட்சியில் இல்லாத போது எங்களை பனையூருக்கு அழைத்து சந்தித்த விஜய், ஆட்சியில் இருக்கும் போது சந்திக்க மறுப்பது ஏன் என்று தூய்மை பணியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ரிப்பன் மாளிகையில் தூய்மை பணியாளர்கள் 7வது நாளாக போராடி வரும் சூழலில், பணி நிரந்தரம் கோரிக்கை, விடுமுறை கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.
தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் 7-வது நாளாக போராடி வருகின்றனர். இதனிடையே தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதிகளில் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டு வருகின்றனர்.நேற்றிரவு போராட்டத்தில் ஈடுபட்டோருன் தவெக நிர்வாகி லயோலா மணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

ஆனால் எந்த முடிவும் கிடைக்கப்படவில்லை. இரவு நேரத்தில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால் இன்று மீண்டும் போராட்டத்தை தொடங்கி இருக்கின்றனர். திமுக ஆட்சியின் போது தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது, தவெக ஆதரவு அளித்திருந்தது. தூய்மை பணியாளர்களை பனையூர் அலுவலகத்திற்கு அழைத்து விஜய் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

தற்போது முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வரும் சூழலில், தூய்மை பணியாளர்கள் போராட்டம் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் பேசுகையில், 5 ஆண்டு காலம் ஒப்பந்தம் முறையில் பணியாற்றுபவர்கள், பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தார்.அன்று பனையூருக்கு அழைத்து ஆதரவு தெரிவித்தவர், இன்று எங்களை சந்திக்க மறுக்கிறார். நாங்கள் என்ன தீண்டத்தகாதவர்களா? குப்பை அள்ளுகிறவர்கள் என்று மதிக்காமல் இருக்கிறார்கள்.

சென்னையின் பூர்வக்குடி நாங்கள்.. பணி நிரந்தரம் மட்டுமே கேட்கிறோம். அரசு ஊழியர்களுக்கு 3-வது குழந்தை பிறந்தால், ஓராண்டு விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள். ஆனால் ஒப்பந்த பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு என்பதே கிடையாதா? காவல்துறையினர் அராஜகம் நடக்கிறது. எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டம் நிச்சயமாக தொடரும். அதேபோல் ஆட்சியில் இல்லாத போது சந்தித்த விஜய், ஆட்சியில் இருக்கும் போது சந்திக்கலாமே.. எங்களின் கோரிக்கைகள் சின்னச்சின்ன கோரிக்கைகள் தான்.

எங்களின் சம்பவம் ரூ.832 தான். மாத விடுப்பு, மகப்பேறு விடுப்பு, வார விடுப்பு கொடுங்கள் என்றே கேட்கிறோம். கிளவுஸ் கூட எங்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. மாநகராட்சி ஆணையர் தான் தடையாக இருக்கிறார். சங்கத்திற்கு ஒரு அலுவலகம் அமைக்க வேண்டும். பணி நிரந்தரம் செய்கிறோம் என்று பேச்சுவார்த்தை நடத்தி காலக்கெடு நிர்ணயித்து கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என தூய்மை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.