அரசை, அமைச்சர்களை விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமாகாது என்றும் சமூகத்திற்கு இடையே பகை, வெறுப்பை ஊக்குவிப்பதாகக் கூற முடியாது என்றும் ஜனநாயகத்தில் மாறுபட்ட கருத்துகளின் குரல் மதிக்கப்பட வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்து பழனி கோயில் நில மோசடி விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் குறித்து அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட வினோத் சூர்யாவிற்கு ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பழனி கோயில் நில முறைகேடு விவகாரத்தில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய குற்றச்சாட்டின் கீழ், வினோத் சூர்யா சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், தன்மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி வினோத் சூர்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் மீது அவதூறு வழக்கு தானே தொடர முடியும்.
அதை விடுத்து கலவரத்தை தூண்டுவது, அமைதியை குலைப்பது போன்ற பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்ய முடியுமா? இதை தவிர்க்குமாறு அரசுக்கு அறிவுறுத்துங்கள் என்று அரசு குற்றவியல் வழக்கறிஞர் ரியாஷிடம் தெரிவித்தார். பின்னர் இந்த வழக்கில் காவல் துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.
இந்நிலையில், தனக்கு ஜாமீன் கோரி வினோத் சூர்யா சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில், வினோத் சூர்யாவுக்கு ஜாமீன் அளிக்கக்கூடாது என்றும், அவர் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, அரசை, அமைச்சர்களை விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமாகாது என்றும் சமூகத்திற்கு இடையே பகை, வெறுப்பை ஊக்குவிப்பதாகக் கூற முடியாது என்றும் தெரிவித்தார். கோவில் நிலம் குறைந்த விலைக்கு விற்கப்பட்டதாக தெரிவித்தது இரு பிரிவினரிடையே விரோதத்தை தூண்டியதாக கருத முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.
மேலும், ஜனநாயகத்தில் மாறுபட்ட கருத்துகளின் குரல் மதிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்து, பழனி கோயில் நில மோசடி விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் குறித்து அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட வினோத் சூர்யா என்பவரை ஜாமீனில் விடுவிக்கவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.