மு.க.ஸ்டாலின்: “நீதியின் பக்கம் நின்று, இந்தியா கூட்டணிக்கு வெற்றியை தேடித் தாருங்கள்..!”

சென்னை, பெசன்ட் நகரில் நடைபெற்ற I.N.D.I.A. கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் தயாநிதி மாறன், தென் சென்னை தொகுதி வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரை அறிமுகப்படுத்தி I.N.D.I.A. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.

அப்போது, “நாளை மறுநாள் ஏப்.19-ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல், நம் நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போர். நாடு காக்கும் இந்த ஜனநாயகப் போரில், இண்டியா கூட்டணிக்கு வெற்றி தேடித் தர தமிழகத்தின் தலைமகனான அண்ணாவை, முதன்முதலாக தேர்ந்தெடுத்து அனுப்பிய தென் சென்னை தொகுதிக்கு வந்திருக்கிறேன். தலைநகரில், தமிழக மக்களுக்கு இறுதி அறைகூவல் விடுக்கிறேன்.இந்திய நாட்டின் இரண்டாவது விடுதலைப் போர் என்று அழைக்கப்படுகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளில் ஏப்ரல் 19-ஆம் நாள் நடைபெற இருக்கிறது.

ஜனநாயகத்தையும் – மக்களாட்சி மாண்புகளையும் மதிக்கின்ற, கூட்டாட்சித் தத்துவத்தைப் போற்றி இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டை காக்கின்ற ஒரு புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளப் பெருமக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். பத்தாண்டு கால இருள் சூழ்ந்த ஆட்சியை அகற்றி, புதிய இந்தியாவுக்கான விடியலுக்கு அச்சாரம் இடும் நாள்தான் – ஏப்ரல் 19.

யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட, யார் ஆட்சி தொடர்ந்துவிடக் கூடாது என்பதை முடிவெடுப்பதற்கான தேர்தல் இது. குஜராத் மாடல், வளர்ச்சியின் நாயகன் என்ற முகமூடிகளுடன் இதுவரை தேர்தல் களத்தில் மோடி நின்றார். அவரது குஜராத் மாடல் என்பது போலியானது என்பதும், வளர்ச்சியின் நாயகன் என்பது பொய்யானது என்பதும் பத்தாண்டுகளில் தெரிந்து விட்டது. மக்கள் தெளிந்து விட்டார்கள். இப்போது அனைவருக்கும் தெரிவது, ‘ஊழல் மோடி’ தான். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தி பல்லாயிரம் கோடி பணத்தை பாஜக குவித்திருப்பதை தேர்தல் பத்திர ஊழல் அம்பலப்படுத்திவிட்டது.

உலகத்திலேயே மிகப்பெரிய ஊழல், சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய முறைகேடு என்று வர்ணிக்கப்படுகிற தேர்தல் பத்திர ஊழல், பாரதீய ஜனதா கட்சியும் நரேந்திர மோடியும் ஊடகங்களின் துணையோடு உருவாக்கி வைத்திருந்த போலி பிம்பத்தைச் சுக்கு நூறாக்கி, முகத்திரையைக் கிழித்துவிட்டன. தேர்தல் பத்திர நடைமுறையே முறைகேடானது, சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், ஊழல் மலிந்த தேர்தல் பத்திரத் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி நியாயப்படுத்தி பேசி வருவது, இதுவரை பாஜகவை ஆதரித்தவர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. வேறு எந்த நாட்டிலாவது இதுபோன்ற இமாலய ஊழல் அரங்கேறி இருந்தால், அந்த நாட்டின் பிரதமர் பதவி விலகி இருப்பார்.

தனது சுயநல அரசியலுக்காக ஒட்டுமொத்த இந்தியாவையும் மோடி நாசப்படுத்தி விட்டார். கருப்புப் பணத்தை மீட்பது, ஊழலற்ற ஆட்சியைத் தருவது, வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, தொழில் வளர்ச்சியை பெருக்குவது, வறுமையை ஒழித்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, சமூகநீதித் திட்டங்களைச் செயல்படுத்தி சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவது, பாதுகாப்பை உறுதிசெய்து மகளிர் வாழ்வை மேம்படுத்துவது என்ற எல்லா தளங்களிலும் படுதோல்வியை மோடியின் அரசு சந்தித்து இருக்கிறது.

வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டம் கோடிக்கணக்கான இளைஞர்களின் கனவுகளைச் சிதைத்து விட்டது. விஷம் போல் ஏறிய விலைவாசி உயர்வு ஏழை மக்களின் வாழ்க்கையைப் பாழ்படுத்திவிட்டது. பெட்ரோல், டீசல், சுங்கக் கட்டணக் கொள்ளை நடுத்தர மக்களை வதைத்துவிட்டது. இரக்கமற்ற ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு சிறு, குறு தொழில்களை சிதைத்துவிட்டது. மதச்சார்பின்மையைக் குழிதோண்டிப் புதைத்து, எப்போதும் மதப் பகையை வளர்க்கும் வெறுப்புப் பேச்சின் மூலம் சமுதாயத்தில் பதற்றத்தை ஏற்படுத்திக் குளிர்காய நினைக்கிறார்கள்.

அண்ணல் அம்பேத்கர் இயற்றி அளித்த அரசியலமைப்புச் சட்டம், மிகப்பெரிய நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள், மாநிலங்களின் முதலமைச்சர் பதவியில் இருந்தாலும் கைது செய்து சிறையில் அடைக்கும் கொடுமையும், ஆளுநர்களை வைத்துப் போட்டி அரசாங்கம் நடத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த விடாமல் முடக்கும் அநியாயம், மாநிலங்களுக்கு வரி மற்றும் நிதிப் பகிர்வில் பாரபட்சம் அரங்கேறாத நாளே இல்லை. இதுவரை இந்தியத் திருநாடு சந்திக்காத அளவு மாநில உரிமைப் பறிப்பு நடவடிக்கைகள் மோடி அரசால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்தன. சுதந்திர இந்தியாவில், பெட்ரோல் – டீசல் மீது மிக அதிகமான வரியை செஸ், சர்சார்ஜ் என்ற பெயரில் வசூலித்து, மாநிலங்களுக்குப் பகிர்ந்து தராமல், மக்களிடம் சுரண்டி மாநிலங்களையும் வஞ்சித்த மோசமான ஆட்சி, மோடியின் ஆட்சி!

வெள்ள நிவாரணம், வறட்சி நிவாரணம், சட்ட மசோதாக்களுக்கு அனுமதி, அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது, துணைவேந்தர்களை நியமனம் செய்வது போன்ற அன்றாட, இயல்பான நிர்வாக நடைமுறைகளுக்குக்கூட உச்ச நீதிமன்றத்தை நாடுவதற்கு மாநிலங்களுக்கு நிர்பந்தம் தருகிற கொடுங்கோல் ஆட்சியாக, மோடி தலைமையிலான ஆட்சி இருப்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். மாநிலங்களின் வயிற்றில் அடிப்பது, மாநில உரிமைகளை நசுக்குவதைப் பெருமையான செயல் என்று கருதிக்கொள்கிற அளவு அதிகார மமதையில் ஆட்டம் போடும் ஆட்சியாளர்களுக்குத் தக்க பாடம் புகட்டுவதற்கான தேர்தல் இது.

இந்தியா போன்ற மகத்தான, மாபெரும் ஜனநாயக நாட்டின் பிரதமராக, தனது கடமையில் நரேந்திர மோடி தோற்றுவிட்டார். எனவே, அவர் அந்த நாற்காலியில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அதை நாடு தாங்காது. நாடாளுமன்ற ஜனநாயகத் தேர்தல் முறையே இல்லாமல் போய்விடும், சர்வாதிகார அதிபர் ஆட்சி முறை கொண்ட நாடாக ஆர்எஸ்எஸ் – பாஜக ஆட்சியாளர்கள் இந்தியா மாற்றிவிடுவார்கள். இன்னொரு வாய்ப்புக் கிடைத்தால் இந்த நாட்டில் ஜனநாயகத்தை ஒழித்துக்கட்டி, மாநிலங்களின் எல்லைக் கோடுகளை மாற்றி, ஒற்றையாட்சி நாடாக மாற்றிவிடுவார்கள் என்ற அச்சம் நாடு முழுவதும் மக்கள் மனங்களில் இருக்கிறது. இந்தியாவைப் பாதுகாக்க மோடி ஆட்சி அகற்றப்பட வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு, தமிழர்களின் வளர்ச்சிக்கு மோடி அரசு தீட்டிய ஒரேயொரு சிறப்புத் திட்டத்தையாவது கூறுங்கள் என்று கடந்த ஒரு மாத காலமாகப் பரப்புரைக் கூட்டங்களில் ஒன்றிய அரசை நோக்கிக் கேள்வி எழுப்பி வந்தேன். தேசியப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒரு பைசா கூட தராமல் தமிழ்நாட்டை வஞ்சிப்பது நியாயமா என்றும் கேட்டு வந்தேன். ஆனால், அதற்கு எந்த நேர்மையான பதிலையும் பிரதமர் மோடியோ, அவரது அமைச்சரவை சகாக்களோ கூறவில்லை. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் மோடியும் பாஜகவும் எதிரிகள் என்பது இதில் இருந்தே உறுதியாகிவிட்டது. தமிழ்நாட்டில் அமைய இருந்த மாபெரும் முதலீட்டை, மிரட்டி குஜராத்துக்கு மடை மாற்றியவர்கள், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு முன்னேறுவதை அனுமதிக்கவே மாட்டார்கள். தமிழ்நாட்டின் வளமான எதிர்காலத்துக்கும், மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரவே கூடாது.

இவர்கள் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கத்தில் அடிமை பழனிசாமியின் கட்சியானது பாஜக போட்டுத் தந்த திட்டப்படி கள்ளக் கூட்டணி அமைத்து தனியாக நிற்கிறது. தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக, பாழ்படுத்திய அதிமுக ஆகிய இரண்டு கூட்டணியையும் புறக்கணிக்குமாறு தமிழ்நாட்டு மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் ஒருவரை ஒருவர் எதிர்ப்பது போல நாடகமாகிக் கொண்டிருந்தாலும், தேர்தலுக்குப் பிறகு கைகோத்து விடுவார்கள். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியை விமர்சிக்காதது மட்டுமல்ல, தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க-வுக்குத் தேவையென்றால் நேரடியாக ஆதரிப்பார்கள். 2019-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் வலுவான கூட்டணியை அமைத்தது திராவிட முன்னேற்றக் கழகம். அன்று முதல் நடந்த அனைத்து தேர்தல்களிலும் தொடர் வெற்றிகளைக் குவித்த சிறப்பும் பெருமையும் திமுக கூட்டணிக்கு உண்டு.

திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணியில் அகில இந்திய காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. நண்பர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யமும் நம் அணியில் இணைந்துள்ளது. திராவிடர் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் பேரவை உள்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகள், சமுதாய இயக்கங்கள் நமது அணிக்கு ஆதரவைத் தெரிவித்து உள்ளன. இந்தத் தொண்டர்களின் சலிக்காத உழைப்பைத் தமிழ்நாடு முழுவதும் நான் பார்த்தேன். அவர்களது முகங்களில் தெரிந்த நம்பிக்கை, என்னை மேலும் மேலும் உற்சாகம் அடைய வைத்துள்ளது.

தேர்தலுக்கு முன்னதாக நான் வெளியிட்ட அறிக்கையில், ” புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 40 தொகுதிகளிலும் யார் வேட்பாளர், எந்தச் சின்னம் என்பதை மறந்து விட்டு , ‘வேட்பாளர் மு.க.ஸ்டாலின்’ என்பதை மனதில் வைத்து அனைவரும் பணியாற்ற வேண்டும். அனைத்துத் தொகுதியிலும் நானே போட்டியிடுகிறேன் என்பதை உள்ளத்தில் தாங்கி அனைத்து உடன்பிறப்புகளும் பணியாற்ற வேண்டும்” என்று உரிமையோடு நான் கேட்டுக் கொண்டேன். அந்தச் சொல்லுக்கு கட்டுப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து உடன்பிறப்புகளும் தேர்தல் பணியாற்றி வரும் காட்சியை நான் பார்த்தேன். ‘இவர்களைத் தொண்டர்களாகப் பெற என்ன தவம் செய்துவிட்டேன்’ என்ற பெருமித உணர்வை நான் அடைகிறேன்.

இதே ஆர்வமும் சுறுசுறுப்பும் தேர்தல் முடியும் வரை இருந்தாக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பொதுமக்களை வாக்குச்சாவடிக்கு வர விழிப்புணர்வு ஏற்படுத்துவது முதல், வாக்குப் பெட்டிகள் உரிய பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவது வரையிலும் கண்துஞ்சாது கண்காணிக்க வேண்டும் என்று கழக உடன்பிறப்புகளைக் கேட்டுக் கொள்கிறேன். உங்களது உழைப்பின் பயன்தான் இந்தியாவையும் தமிழ்நாட்டையும் காக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

தமிழ்நாட்டில் தனக்கு பிடித்த ஊர்ப் பெயர்களில் ஒன்று ‘எப்போதும் வென்றான்’ என்று தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவார்கள். திராவிட முன்னேற்றக் கழகமும் எப்போதும், எல்லாத் தேர்தல்களிலும் வென்றான் என்பதை மெய்ப்பிக்கும் தேர்தல் இது.

ஊடகங்களின் கருத்துக் கணிப்புகளைக் கண்டு நம் கவனம் துளியும் சிதறிவிடக்கூடாது. அவற்றைக் கடந்த காலங்களிலும் நாம் பொருட்படுத்தியது இல்லை. கடைசி வாக்கு பதிவாகி, வெற்றிக் கனி நம் கைகளில் வந்து சேரும் வரை, கண் துஞ்சாது – பசி நோக்காது – கருமமே கண்ணாயினர் என நாம் கவனத்தோடும் உற்சாகம் குன்றாமலும் உழைத்திட வேண்டுகிறேன். கருத்துக்கணிப்புகளை எல்லாம் விஞ்சுகிற, நாடே தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்கிற வெற்றியாக நம் வெற்றி இருக்க வேண்டும்.

தேர்தல் விதிகளை முறையாகப் பின்பற்றி, வாக்காளப் பெருமக்கள் ஒவ்வொரையும் மீண்டும் தேடிச் சென்று சந்தித்து, அவர்களிடம் மோடி ஆட்சியில் நாடு எதிர்கொண்டுள்ள ஆபத்துகளை விளக்கிச் சொல்லி, திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்ற மகத்தான மக்கள் நலத்திட்டங்களையும் சாதனைகளையும் எடுத்துரைத்து, நம் அணியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.

இரண்டு முறை இருண்ட காலத்தைக் காட்டிய பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். இந்தியா கூட்டணியின் வெற்றியில்தான் இந்திய நாட்டின் சிறப்பான எதிர்காலமும் தமிழ்நாட்டின் முன்னேற்றமும் இருக்கிறது. திமுக தேர்தல் அறிக்கையும், அதை வழிமொழிந்தும் வலு சேர்த்தும் காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையும் திட்டங்களாக மாற வேண்டும்.

தமிழ்நாட்டின் வாக்காளப் பெருமக்களுக்கு பணிவான வேண்டுகோளை கரம் கூப்பி முன்வைக்கிறேன். இந்தியா என்றென்றும் மதச்சார்பின்மையும் கூட்டாட்சியும் சகோதரத்துவமும் கொண்ட நாடாகத் திகழ, தமிழ்நாட்டின் தனித்தன்மையை நிலைநாட்டுவதற்கு நம் முன் உள்ள ஒரே வாய்ப்பும் ஆயுதமும் உங்கள் வாக்குதான். உங்கள் பொன்னான வாக்குகள், இந்தியாவைக் காக்கட்டும், சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டை மீட்கட்டும். தமிழ்நாட்டின் தனித்தன்மையை உறுதி செய்யட்டும்.

தமிழ்நாட்டின் மக்கள் நலத் திட்டங்கள் தொய்வின்றித் தொடர, எங்கும் எதிலும் தமிழ்நாடு முன்னோடி என்ற பெருமை நிலைத்திட, தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்கு மதிப்பளிக்கிற அரசு டெல்லியில் அமைந்தாக வேண்டும். நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு, ஒன்றியத்தில் ஆட்சி மாற்றமே ஒன்றே தீர்வு. தமிழ்நாட்டின் பகைவர்களை, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் எதிரிகளை வீழ்த்துவோம்.

ஜனநாயகத்தைக் காக்கும் போர்க்களத்தில், நீதியின் பக்கம் நின்று, இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வரலாறு காணாத வெற்றியைத் தமிழ்நாட்டு மக்கள் தேடித் தர வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன் என மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

Rahul Gandhi: “ஊழலின் நாயகன் பிரதமர் மோடி ..!”

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் உள்ள 80 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் – 19, ஏப்ரல் -26, மே -4, மே -13, மே -20, மே -25, ஜூன் -1 தேதி முதல் ஏழு கட்டங்களிள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில், உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி I.N.D.I.A.கூட்டணியின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். இதில் ராகுல் காந்தி பேசுகையில், “இந்த தேர்தல் சித்தாந்தத்தின் தேர்தல்.

ஒருபுறம் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவும், அரசியலமைப்பையும் ஜனநாயக அமைப்பையும் அழிக்க முயற்சிக்கின்ற. மறுபுறம், இந்தியா கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சி அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க முயற்சிக்கின்றன. தேர்தலில் 2-3 பெரிய பிரச்சனைகள் உள்ளன. முதலாவது வேலையில்லாத் திண்டாட்டம், இரண்டாவது பணவீக்கம் ஆகும். ஆனால் பாஜக மக்களின் கவனத்தை திசை திருப்புவதில் ஈடுபட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு, பிரதமர் ஏ.என்.ஐ.க்கு பேட்டி அளித்தார். இது ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட நிகழ்ச்சி. அதில் தேர்தல் பத்திரங்கள் குறித்து பிரதமர் விளக்க முயன்றார். வெளிப்படைத்தன்மைக்காகவும் தூய்மையான அரசியலுக்காகவும் தேர்தல் பத்திரங்கள் கொண்டுவரப்பட்டதாக பிரதமர் கூறுகிறார். இது உண்மையாக இருந்தால் ஏன் அந்த திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இரண்டாவதாக, வெளிப்படைத் தன்மையை கொண்டு வர விரும்பினால், பாஜகவுக்கு பணம் கொடுத்தவர்களின் பெயர்களை ஏன் மறைத்தீர்கள்.

மேலும் அவர்கள் உங்களுக்கு பணம் கொடுத்த தேதிகளை ஏன் மறைத்தீர்கள்?. தேர்தல் பத்திரங்கள் திட்டம் உலகின் மிகப்பெரிய மிரட்டி பணம் பறிக்கும் திட்டம். இந்தியாவின் அனைத்து தொழிலதிபர்களும் இதைப் புரிந்துகொண்டு அறிந்திருக்கிறார்கள். இது குறித்து பிரதமர் மோடி எவ்வளவு தெளிவுபடுத்த விரும்பினாலும், அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஏனென்றால், பிரதமர் ஊழலின் நாயகன் என்பது நாட்டிற்கும் தெரியும்.

மேலும், கடந்த 10 ஆண்டுகளில் பணமதிப்பு நீக்கம், தவறான ஜி.எஸ்.டி. வரி விதிப்பு போன்ற மக்களை இன்னலுக்கு ஆளாக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளார். அதானி போன்ற பெரும் கோடீஸ்வரர்களுக்கு ஆதரவு அளித்து வேலைவாய்ப்பு உருவாக்கத்தை பிரதமர் மோடி குறைத்துள்ளார். மீண்டும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை வலுப்படுத்துவதுதான் எங்கள் முதல் பணி. வேலைவாய்ப்பு அளிப்பதற்கு நாங்கள் 23 யோசனைகளை வழங்கியுள்ளோம்.

ஒரு யோசனை புரட்சிகர யோசனை – உத்திரபிரதேசத்தின் அனைத்து பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோதாரர்களுக்கும் பயிற்சி பெறும் உரிமையை வழங்குவோம். மேலும், இளைஞர்களின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் டெபாசிட் செய்வோம். இந்த உரிமையை கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வழங்குகிறோம். போட்டித் தேர்வுக்கான வினாத்தாள்கள் கசிவுக்கு எதிராக சட்டம் இயற்றுவோம்” எனராகுல் காந்தி தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின்: கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து..!

கோயம்புத்தூர் மாவட்டம், சிட்டிபாளையத்தில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் கோவை வேட்பாளர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்களையும், பொள்ளாச்சி வேட்பாளர் திரு.ஈஸ்வரசாமி அவர்களையும், கரூர் வேட்பாளர் ஜோதிமணி அவர்களையும் அறிமுகப்படுத்தி I.N.D.I.A.கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.

அப்போது, நேற்று ஒரு வீடியோ பார்த்தேன். அதில் பயனடையாத ஒரு மகளிரிடம், ஒருவர் சென்று ஓட்டு கேட்கிறார்! அப்போது அந்த நபர் அந்த அம்மாவிடம், நீங்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள் என்று கேட்ட உடனே, அந்த அம்மா, “ஸ்டாலினுக்குதான் ஓட்டு போடுவேன்”என்று சொல்கிறார்கள். “நீங்கள் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை பெறுகிறீர்களா?” என்று அந்த நபர் கேட்கிறார்! அதற்கு அவர்கள், “இல்லை” என்று சொல்லிவிட்டு, உடனே, “எனக்குக் கிடைக்கவில்லை என்றால் என்ன? தேவையான எத்தனையோ மக்களுக்கு உதவுகிறார். நிறைய நல்லது செய்கிறார். அதனால், அவருக்குதான் ஓட்டு போடுவேன்” என்று அந்த அம்மா சொல்கிறார்கள்.

இப்படித்தான் நாங்கள் மக்களுக்கான ஆட்சி நடத்துகிறோம்! நம்முடைய கூட்டணி சார்பில் பிரச்சாரத்திற்கு போகும்போது, ஒரு கோடியே 15 இலட்சம் சகோதரிகள், எங்கள் அண்ணன் ஸ்டாலின் கொடுக்கும் தாய்வீட்டுச் சீர் மாதா மாதம் ஆயிரம் ரூபாய் பெறுகிறோம் என்று மகிழ்ச்சியாகச் சொல்கிறார்கள்!

அதுமட்டுமல்ல, நான் ஆட்சிப்பொறுப்பேற்ற அடுத்த நாளில் இருந்து, தமிழ்நாட்டில் மகளிர் சுதந்தரமாக, கட்டணமில்லாமல் விடியல் பேருந்தில் பயணம் மேற்கொள்கிறார்கள்! நான் அடிக்கடி ஒன்று சொல்வேன். கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து! அதுவும் ஒரு பெண் குழந்தை படித்தால், ஒரு தலைமுறையே படித்ததற்குச் சமம். அதனால்தான் உயர்கல்விக்கு வர மாணவிகளுக்கு மாதா மாதம் ஆயிரம் ரூபாய் தரும் புதுமைப்பெண் திட்டத்தைச் செயல்படுத்துகிறோம்.

இதே போன்று, அடுத்து மாணவர்களுக்கும், தமிழ்ப்புதல்வன் என்ற பெயரில், மாதம் ஆயிரம் ரூபாய் தரப்போகிறோம். இதுமட்டுமல்ல, நம்முடைய எதிர்காலத் தலைமுறையான குழந்தைங்கள் ஆரோக்கியமாக, பசி இல்லாமல் படிக்கவேண்டும் என்று இந்தியாவிலேயே முதல் மாநிலமாக, முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தைத் தொடங்கி, 16 இலட்சம் குழந்தைகளுக்குச் சுவையான காலை உணவு அளிக்கிறோம். இது இப்போது கனடா நாட்டிலும் எதிரொலித்திருக்கிறது!

இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறவேண்டும் என்று, தங்களின் திறன்களை மேம்படுத்திக்கொள்ள, “நான் முதல்வன்” திட்டத்தை செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில், 77 இலட்சத்து 78 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் நம்முடைய இளைஞர்களுக்கு கிடைத்திருக்கிறதாம்! EPFO புள்ளிவிவரம் சொல்கிறது! இது மாநில அரசின் புள்ளிவிவரம் இல்லை, ஒன்றிய அரசுடையது!

”மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தில் ஒரு கோடிப் பேருக்கும் மேல் பயனடைந்திருக்கிறார்கள். இப்படி தி.மு.க. எப்போதும் சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் என்று நிரூபித்தது மட்டும் இல்லை, இந்த ஸ்டாலின் ஆட்சியில், சொல்லாததையும் செய்வோம் என்று காட்டி இருக்கிறோம்!

அதுமட்டுமல்ல, உலகத்திற்கே கோவையைத் தெரியும் என்றால், அதற்குக் காரணம் அறிவியல் மேதை, ஜி.டி.நாயுடு அவர்கள்! அவரின் இந்தக் கோவை மண்ணில், உலகத்தரத்தில் பிரம்மாண்ட நூலகத்தை அறிவியல் மையமாக திராவிட மாடல் அரசு கோவையில் அமைக்கப் போகிறது! இப்படி தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டமும், ஒவ்வொரு குடும்பமும் பயனடையவேண்டும் என்று பார்த்துப் பார்த்துத் திட்டங்களைச் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.

கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையிலும், இவ்வளவு செய்கிறோம்! என்றால், நம்முடைய இந்தியா கூட்டணி அரசு அமையும்போது, எவ்வளவு செய்ய முடியும்! என்று நினைத்துப் பாருங்கள்! அதற்கு முன்னோட்டமாக, தி.மு.க. சார்பில் என்னவெல்லாம் செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதிகளாகக் கொடுத்திருக்கிறோம். அதில் தலைப்புச் செய்திகளை மட்டும் சொல்கிறேன்.

வியாபாரிகளுக்காக இரவு நேரங்களில், கோவையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ரயில் சேவை!

பொள்ளாச்சி இளநீருக்கும் மற்றும் தேங்காய்க்கும் புவிசார் குறியீடு!

பொள்ளாச்சியில் குளிர்பதனக் கிடங்கு!

பொள்ளாச்சி ரயில் நிலையம் புனரமைப்பு!

சேரன் எக்ஸ்பிரஸ் பொள்ளாச்சி வரை நீட்டிப்பு!

கோவை மெட்ரோ திட்டம் திருப்பூர் வரை நீட்டிப்பு!

மேட்டுப்பாளையம் – சத்தியமங்கலம் – கோபிசெட்டிபாளையம் – ஈரோடு அகல ரயில்பாதைத் திட்டம்!

மக்காச்சோளம் – சோயா போன்ற முக்கிய இடுபொருள் தானியங்களின் விலையைக் குறைக்க ரயில்வேயில் கட்டணச் சலுகை!

அதுமட்டுமல்ல! பத்தாண்டுகளாகத் தொடர்ந்து உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைக்கப்படும்!

சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டங்கள் ரத்து!

தொழிலாளர் விரோதச் சட்டங்கள் மறுசீரமைப்பு செய்யப்படும்!

கூட்டுறவு அமைப்புகளிலும், வங்கிகளிலும் விவசாயிகள் வாங்கியிருக்கும் கடனும் – வட்டியும் தள்ளுபடி!

உழவர்களின் வேளாண் விளைபொருட்களுக்கு மொத்த உற்பத்திச் செலவுடன் ஐம்பது விழுக்காடு என்பதை வலியுறுத்தி, குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம்!

தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்!

100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை நாட்கள் இனி 150 நாட்களாக உயர்வு! ஒரு நாள் ஊதியமாக 400 ரூபாய்!

மாணவர்களின் கல்விக் கடன் முற்றிலுமாகத் தள்ளுபடி!

வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் இல்லாதபோது, விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்!

இதையெல்லாம் இந்தியா கூட்டணி ஆட்சியில் வலியுறுத்தி நிறைவேற்றி, “தி.மு.க. சொன்னதைச் செய்யும்” என்று மீண்டும் நிரூபிப்போம்! இப்படி நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய நாங்கள் பணியாற்றிக்கொண்டு இருந்தால் தொழில்வளம் மிகுந்த இந்தக் கோவையை கடந்த 10 ஆண்டாக பா.ஜ.க. எப்படியெல்லாம் நாசமாக்கி இருக்கிறது என்று சொல்லட்டுமா?

பா.ஜ.க. ஆட்சியில் இரண்டு பெரிய தாக்குதல் நடத்தியது! கருப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்று சொல்லி, ஏழைகளின் சுருக்குப்பையில் இருந்த பணத்தையும் பறித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைதான் முதல் தாக்குதல். இதனால் பணப்புழக்கம் குறைந்து, பல தொழில்கள் முடங்கிப் போனது! இரண்டாவது தாக்குதல், ஜி.எஸ்.டி என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து, இந்தக் கோவையில் முதலாளிகளாக இருந்தவர்களை எல்லாம், கடனாளிகளாக மாற்றினார்கள்! பலர் தங்களின் கம்பெனிகளை இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்!

அதுமட்டுமல்ல வங்கதேசம் கூட பா.ஜ.க. அரசு போட்ட ஒப்பந்தத்தால், இங்கு உருவான நூலும்-துணியும் தேங்கிக் கிடக்கிறது. 35 விழுக்காடு மில்களை, மூட வேண்டிய நிலையில் இந்த மேற்கு மண்டலம் இருக்கிறது! இரண்டு முறை கோவைப் பகுதிக்கு வந்து, கொங்குப் பகுதி எனக்கு மிகவும் நெருக்கமான பகுதி என்று பிரதமர் பேசினாரே! தி.மு.க. தமிழ்நாட்டிற்கான வளர்ச்சித் திட்டங்களைத் தடுக்கிறது என்று சொன்னாரே! எப்படிப்பட்ட வடிகட்டிய பொய் இது! இந்தக் கோவை பொதுக்கூட்ட மேடையில் இருந்து, நான் பகிரங்கமாக ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறேன்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மிகப்பெரிய தொழில் நிறுவனம், 6500 கோடி ரூபாய் முதலீட்டில் கோவையைச் சேர்ந்த பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் முதலீட்டை மேற்கொள்வதாக முடிவானது. தமிழ்நாடு அரசும் இதற்கான எல்லா பேச்சுவார்த்தைகளும் முடிந்த பிறகு, அவர்களை மிரட்டி அந்தத் தொழில் திட்டத்தை குஜராத்திற்கு மாற்றிவிட்டார்கள்! இதுதான் கோவைக்கான பா.ஜ.க.வின் போலிப் பாசம்! எதிர்காலத்தில், மிகப் பெரிய வாய்ப்புகளைத் தரும், செமிகண்டக்டர் தொழில் திட்டத்தை குஜராத் மாநிலத்திற்கு மிரட்டி மடைமாற்றியது பா.ஜ.க. தான்!

எப்படி கூச்சமே இல்லாமல் ஓட்டு கேட்டு வருகிறீர்கள்? கோவையில் இருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா? கோவை மக்கள் மேல் ஏன் உங்களுக்கு இவ்வளவு வன்மம்? கோவை மக்கள் அமைதியை விரும்பக் கூடிய மக்கள். அமைதியான இடத்தில்தான் தொழில் வளரும், தொழில் வளர்ச்சி இருக்கும், நிறுவனங்களை நடத்த முடியும். பா.ஜ.க. போன்ற கலவரக் கட்சிகளை உள்ளே விட்டால், அமைதி போய்விடும்! தொழில் வளர்ச்சி போய்விடும்! நிறுவனங்களை நிம்மதியாக நடத்த முடியாது!

தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுப்பது யார் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்! அதனால், பிரதமர் இங்கு வந்து, இட்லி பிடிக்கும், பொங்கல் பிடிக்கும், தமிழ் பிடிக்கும், தமிழ்நாடு பிடிக்கும் என்று பேசும் போலி முகமூடி மொத்தமாகக் கிழிந்து தொங்கிவிட்டது! இப்படி “கோவை வேண்டாம்” – “தமிழ்நாடு வேண்டாம்” என்று புறக்கணித்த மோடிக்கு இப்போது தமிழ்நாடு சொல்ல வேண்டியது, “வேண்டாம் மோடி” சொல்லுங்கள், “வேண்டாம் மோடி” இன்னும் சத்தமாக, “வேண்டாம் மோடி” தெற்கிலிருந்து வரும் இந்தக் குரல், இந்தியா முழுவதும் கேட்கட்டும்! தமிழ்நாட்டு வளர்ச்சியைத் தடுத்தால், தமிழ்மொழியைப் புறக்கணித்தால், தமிழ்ப் பண்பாட்டுமேல் தாக்குதல் நடத்தினால், தமிழ்நாட்டு மக்களின் பதில் எப்படி இருக்கும் என்று ஏப்ரல் 19-ஆம் தேதி உங்கள் வாக்குகள் மூலம் நிரூபிக்கவேண்டும்!

பா.ஜ.க.கூட்டணியையும், பா.ஜ.க.வின் B-டீமான அ.தி.மு.க .கூட்டணியையும் ஒருசேர வீழத்தவேண்டும்! இந்தியா கூட்டணிக்கு நீங்கள் அளிக்கும் வாக்கு, இந்தியாவைக் காக்கட்டும்! தமிழ்நாட்டைக் காக்கட்டும்! நம்முடைய எதிர்காலத் தலைமுறையைக் காக்கட்டும்! பாசிசத்தை வீழ்த்த, இந்தியாவைக் காக்க – உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன்! நாற்பதும் நமதே! நாடும் நமதே! நாற்பதும் நமதே! நாடும் நமதே! நன்றி! வணக்கம்! என மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

Rahul Gandhi: தமிழ்நாட்டு மக்களுக்கும், எனக்கு இருப்பது அரசியல் உறவு அல்ல; குடும்ப உறவு..!

கோயம்புத்தூர் மாவட்டம், சிட்டிபாளையத்தில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி கோவை வேட்பாளர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்களையும், பொள்ளாச்சி வேட்பாளர் திரு.ஈஸ்வரசாமி அவர்களையும், கரூர் வேட்பாளர் ஜோதிமணி அவர்களையும் அறிமுகப்படுத்தி I.N.D.I.A.கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.

அப்போது, “இந்தியாவில் சிந்தாந்தப்போர் நடந்துக்கொண்டிருக்கிறது. அதனால் மோடி அரசு இப்போது வீட்டிற்கு போக வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் மோடி அரசு என்று சொன்னாலும், உண்மையில் இது அதானியின் அரசு. காரணம் மோடி பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் அதானிக்கு தந்துவிட்டார்.

அதானி விரும்பியதால் மும்பை விமான நிலையத்தை வேறு ஒருவரிடம் இருந்து பறித்து அதானிக்கு கொடுத்துவிட்டார். அதானி எதை விரும்பினாலும், மோடி அவருக்கு அதை எளிதாக வாங்கி கொடுத்துவிடுவார். நாடாளுமன்றத்தில் அதானி குறித்து நான் பேசியதால் என் மீது நடவடிக்கை பாய்ந்தது. எனது எம்.பி பதவி, நான் தங்கி இருந்த வீடு என அனைத்தையும் பறித்தார்கள். அந்த வீடு போனது பற்றிக் கவலை இல்லை. காரணம், நாடு முழுவதும் எனக்கு உங்கள் இதயங்களில் இடம் இருக்கிறது. லட்சக்கணக்கான தமிழர்கள் எனக்காக வீட்டுக் கதவை திறந்து வைப்பார்கள். தமிழ்நாட்டு மக்களுக்கும், எனக்கு இருப்பது அரசியல் உறவு அல்ல; குடும்ப உறவாகும்.

ஏன் தமிழ் மொழி, பண்பாடு, வரலாற்றின் மீது தாக்குதல் நடத்துகிறீர்கள்? தமிழ்நாட்டுக்கு வந்து தோசை பிடிக்கும் என கூறிவிட்டு, டெல்லிக்கு சென்று ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தலைவன் என பேசுகிறீர்கள். மோடிக்கு தோசை பிடிக்குமா, வடை பிடிக்குமா என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு பிரச்னை இல்லை. தமிழ் மொழி, கலாசாரத்தை பிடிக்குமா என்று கேட்கிறார்கள்.

தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெற, பல நிறுவனங்களை ED, IT போன்ற அமைப்புகள் மூலம் மிரட்டி, பணம் பெற்றுள்ளார்கள். இந்த அரசாங்கத்தை கட்டுப்படுத்தும் மோடிதான் இதனை செய்கிறார். மேலும் ஒரு பெரிய நிறுவனத்திற்கு ஒப்பந்ததைக் கொடுத்து, ரூ.1,000 கோடி அளவிற்கு மிகப்பெரிய நன்கொடையை பாஜக பெறுகிறது. மோடி செய்த ஊழலில் இது சிறு பகுதிதான். இந்த ஊழலை செய்துவிட்டு மோடி தன்னை சுத்தமானவர் என்று அழைத்துக் கொள்கிறார்.

மோடி ஆட்சியில், 22 பெரும் பணக்காரர்கள் 70 கோடி மக்களின் பணத்தை வைத்திருக்கிறார்கள். கோடீஸ்வரர்களுக்கு 16 லட்சம் கோடி கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்துள்ளார். இந்த பணத்தை வைத்து மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் விவசாயிகளுக்கு 24 ஆண்டுகளுக்கு ஊதியம் தந்திருக்கலாம்.

கல்வி வழங்கும் பல்கலைக்கழங்களில் வேந்தர்களாக, அரசின் முக்கிய நிர்வாக பொறுப்புகளில், தேர்தல் ஆணையத்தில், நீதித்துறையில், ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் கொண்டவர்கள் நிரம்பி இருக்கிறார்கள். அவர்கள் நாட்டின் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையற்று, மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இதனை உடனடியாக தடுத்தாக வேண்டும்.

சமூக நீதியை பொறுத்தவரை ஸ்டாலின் தெளிவாக கூறியிருக்கிறார். இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்ததும், இட ஒதுக்கீட்டிற்கு தடையாக இருக்கும் 50 விழுக்காடு உச்சவரம்பை நீக்குவோம். சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக எடுப்போம். இந்தியாவில் 30 லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக அந்த பணியிடங்களை நிரப்பி, வேலைவாய்ப்பின்மையை முற்றிலும் நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்வோம். சமூக நீதியை உயிர் மூச்சாகக் கொள்வோம்! கோவையில் வீசும் காற்று, விரைவில் புயலாக மாறும். அந்தபுயல் அதானிகளை, மோடிகளை அதிகாரத்தில் இருந்து தூக்கி எரியும்!” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் சூளுரை: I.N.D.I.A கூட்டணி ஆட்சி அமைந்தால், இந்தியா வளம் பெறும்..! தமிழகம் அதிகமாக வளம்பெறும்…!

தேனி மாவட்டம், லட்சுமிபுரத்தில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் தேனி தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், திண்டுக்கல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகிய I.N.D.I.A.கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.

அப்போது, நான் முதல்வரான பிறகு முதல் சந்திப்பில் இருந்து கோரிக்கை வைக்கிறேன். பிரதமரை நேரில் சந்தித்தும் பலனில்லை. மதுரை எய்ம்ஸ் போன்று, சென்னை மெட்ரோவும் அடிக்கல்லோடு நிற்கக் கூடாது என்று இப்போது மாநில அரசின் நிதியில் இருந்து, மெட்ரோ பணிகள் நடந்துக் கொண்டிருக்கிறது. இதனால் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டு, பணிகள் மெதுவாக நடக்கும் நிலைமை. இந்தப் பணிகளால் ஆண்டுக்கு நமக்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா? 12 ஆயிரம் கோடி ரூபாய். இத்தனை குளறுபடிக்கும் காரணம், மோடி. ஆனால், இத்தனையும் மறைத்து, பச்சைப் பொய் பேசுகிறார்.

அமைதியான இந்தியாதான் வளர்ச்சியான இந்தியாவாக வளர முடியும். நம்முடைய எதிர்காலத் தலைமுறைக்கு, அமைதியான இந்தியாவை உருவாக்கி வழங்கும் கடமை வாக்காளர்களான உங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அதை மனதில் வைத்து, இண்டியா கூட்டணிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காகத்தான் நான் வந்திருக்கிறேன்.

இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்தால், இந்தியா வளம் பெறும். குறிப்பாக, தமிழகம் அதிகமாக வளம்பெறும். இங்கே திராவிட மாடல் ஆட்சியை நாங்கள் அமைத்து மூன்றாண்டு காலமாக பல்வேறு சிறப்பான திட்டங்களைத் தீட்டி வருகிறோம். ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். மக்களுக்கு நான் செய்ய நினைத்த எல்லாவற்றையும் செய்து முடித்து விட்டேனா என்று கேட்டால், இல்லை. இன்னும் இன்னும் ஏராளமான பல வளர்ச்சித் திட்டங்களைத் தீட்ட வேண்டும். அதற்கு நமக்கு உடன்பாடான மத்திய அரசு, தமிழகத்தை மதிக்கும் மத்திய அரசு அமைய வேண்டும்.

மத்திய அரசின் கூட்டணியில் நாம் எப்போதெல்லாம் இருந்திருக்கிறோமோ, அப்போதெல்லாம் தமிழகத்துக்கு ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறோம். இது தமிழக மக்களான உங்களுக்கு நன்றாகத் தெரியும். அதிமுக மத்திய அரசில் கூட்டணி சேர்ந்தால், சுயநலத்துக்காகப் பயன்படுத்தும். திமுக மத்திய அரசில் இடம்பெற்றால், மாநிலத்தின் நலனுக்காகப் பயன்படுத்தும்.

திமுக ஆட்சியில்தான், வேளாண்மைக்குத் தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறோம். மூன்றே ஆண்டுகளில் இரண்டு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் கொடுத்திருக்கிறோம். நீங்கள் கஜானாவைத் தூர்வாரினீர்கள். நாங்கள் டெல்டா மாவட்டங்களில் கால்வாய்களைத் தூர்வாரிக் காவிரியைக் கடைமடைக்கும் கொண்டு சென்றோம். ஒவ்வொரு ஆண்டும் கொள்முதலில் சாதனை செய்கிறோம். வேளாண் துறை சார்பில் கண்காட்சி, திருவிழா, சங்கமம் என்று நடத்தி, உழவர்கள் உள்ளத்தில் நம்பிக்கை விதைக்கிறோம். மண்ணும் செழிக்கிறது, மக்களும் செழிக்கிறார்கள், இதுதான் திராவிட மாடல் ஆட்சி.

பாஜகவின் தொங்கு சதைகளான பழனிசாமி, பன்னீர்செல்வம், தினகரன் என்று யாராக இருந்தாலும், பாஜகவுக்குக் கொடுக்கும் அதே தண்டனையைக் கொடுங்கள். பாஜகவுக்கு சொந்த செல்வாக்கு இல்லாததால் பன்னீர்செல்வம், தினகரன் போன்ற வாடகை மனிதர்களை வைத்து, தேர்தலைச் சந்திக்கிறது. ‘B-டீம்’-ஆகப் பழனிசாமியின் அதிமுகவைக் குத்தகைக்கு எடுத்து, தனியாக நிற்க வைத்திருக்கிறது. சொந்தமாக முடிவெடுக்க முடியாமல், கீ கொடுத்த பொம்மைபோல் அதிமுகவை ஆட்டுவிக்கிறது பாஜக.

இவர்களை மொத்தமாகத் தோற்கடிக்க வேண்டாமா? தமிழுக்கும், தமிழினத்துக்கும், தமிழகத்துக்கும் வஞ்சகம் செய்யும் பாஜக கூட்டத்துக்கும், துரோகம் இழைக்கும் பழனிசாமி, பன்னீர்செல்வம், தினகரன், பாமக ஆகிய அடிமைக் கூட்டத்துக்கும், திண்டுக்கல், தேனி மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்” என முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.

Maharashtra: நீண்ட இழுபறிக்கு பிறகு ‛இந்தியா’ கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு வெற்றி..! சங்லி தொகுதியை சிவ சேனா தக்க வைத்து…!

வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தி எதிர்க்கட்சிகள் இணைந்து ‛இந்தியா’ கூட்டணியை உருவாக்கி உள்ளன. மகாராஷ்டிராவில் ‛இந்தியா’ கூட்டணியில் சிவசேனா உத்தவ் அணி, தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சரத்பவார் அணி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் உள்ளன. மகாராஷ்டிராவில் ஏப்ரல் 19, ஏப்ரல் 16, மே 7, மே 13, மே 20 ஆகிய தேதிகளில் ஆகமொத்தம் 5 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இந்தியாவில் அதிக நாடாளுமன்ற தொகுதிகளை கொண்ட மாநிலமான உத்தர பிரதேசத்துக்கு அடுத்த இடத்தில் மகாராஷ்டிராவில் மொத்தம் 48 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் 21 இடங்களில் சிவசேனா உத்தவ் அணி காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதேபோல் மீதமுள்ள 10 தொகுதிகளில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார் அணி போட்டியிடுகிறது.

சர்ச்சைக்குரிய சங்லி தொகுதியை சிவ சேனா தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதேநேரத்தில், பிவாண்டி தொகுதியை காங்கிரஸ் எடுத்துக்கொண்டுள்ளது. மேலும், சிவ சேனாவின் பாரம்பரிய தொகுதியான மும்பை வடக்கு, இம்முறை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தின் அடர்ந்த இருண்ட காலத்திலிருந்து இந்தியாவை மீட்டெடுத்து, மீண்டும் ஒரு விடுதலை வெளிச்சம் இந்தியா கூட்டணி

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞரின் உடன்பிறப்புகளுக்கு நேற்று எழுதியுள்ளார். அதில், பத்தாண்டுகால ஒன்றிய பாஜக ஆட்சியில் மாநிலங்களின் உரிமைகள் பலவும் பறிபோய்விட்டன. கல்வி உரிமை, மொழி உரிமை, நிதி உரிமை, சட்ட உரிமை என மாநிலங்களின் உரிமைகளை ஒன்றிய அரசு அபகரிக்கும் போக்கு தொடர்வதையும், ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரான அராஜகப் போக்கு மிகுவதையும் காண்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு போட்டியாக, நியமன பதவியில் உள்ள ஆளுநர்களை வைத்து அரசாங்கத்தை நடத்த நினைக்கும் எதேச்சாதிகார போக்கு என்பது மாநிலங்களுக்கு எதிரானது மட்டுமல்ல, இந்திய அரசியல் சட்டத்திற்கே எதிரானதாகும்.

ஆளுநர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த பொறுப்புக்கு சிறிதும் தகுதியில்லாதவர்களாக, மலிவான – தரம்தாழ்ந்த அரசியல் செய்யும் அவலத்தை இந்தியா இப்போதுதான் காண்கிறது. ஆன்மிக உணர்வுகளை அரசியலாக்கி மதவெறியை தூண்டுவது, இந்தி – சமஸ்கிருதத்தை திணித்து தமிழ் உள்ளிட்ட அவரவர் தாய்மொழிகளையும் அதன் பண்பாட்டையும் சிதைப்பது, திருவள்ளுவரில் தொடங்கி தெருவில் நடந்து போவோர் வரை எல்லார் மீதும் காவிச் சாயம் பூசுவது என்பதை ஒன்றிய ஆட்சியாளர்களே முன்னின்று செய்கின்ற மூர்க்கத்தனமான அரசியலை ஜனநாயக வழியில் முறியடிக்கும் வலிமை திமுகவிற்கு உண்டு.

அதை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசர – அவசிய தேவை இருக்கிறது என்பதை உணர்த்தக்கூடிய அளவில் சேலத்தில் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறவிருக்கிறது. சென்னையையும் பிற மாவட்டங்களையும் கடுமையாக பாதித்த மிக்ஜாம் புயல் – மழை காரணமாகவும், தென்மாவட்டங்களில் கடும் தாக்கத்தை ஏற்படுத்திய வரலாறு காணாத மழை – வெள்ளத்தினாலும் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட இளைஞரணி மாநில மாநாடு, ஜனவரி 21-ல் சேலத்தில் எழுச்சியுடன் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் – விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான தம்பி உதயநிதி முன்னெடுத்து வருகிறார். இளைஞரணி நிர்வாகிகள் அனைவரும் அவருக்கு தோளோடு தோள் நின்று பணியாற்றுவதை காண்கிறேன்.

அதுபோலவே, சேலம் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ள திமுக முதன்மை செயலாளர் – மாநாடுகளை சிறப்பாக நடத்திக்காட்டுவதில் வல்லவரான கே.என்.நேருவும், சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகளும் பந்தல் அமைப்பு தொடங்கி அனைத்து ஏற்பாடுகளையும் இரவு, பகலாக மேற்கொண்டு வருகிறார்கள். நான் வளர்த்து ஆளாக்கிய அணியின் இரண்டாவது மாநில மாநாட்டில் பங்கேற்பதில் ஒரு தாயின் உணர்வுடன் பெருமிதம் கொள்கிறேன். தொடர்ச்சியான பணிகள் காரணமாக, மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து ஒன்றிரண்டு கடிதங்களே என்னால் எழுத முடிந்தது.

எனினும், இளைஞரணியின் 25-ம் ஆண்டினையொட்டி 2007-ம் ஆண்டு நெல்லையில் நடைபெற்ற இளைஞரணியின் முதலாவது மாநில மாநாட்டின்போது, நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் உடன்பிறப்புகளுக்கு எழுதிய 25 கடிதங்களை முரசொலியின் ஒவ்வொரு நாளும் முதல் பக்கத்தில் மீண்டும் வெளியிட்டு, இன்றைய தலைமுறையினருக்கு வரலாற்று பாடத்தைக் கற்றுத் தந்திருக்கிறது கழகம். மாநாட்டு நாள் நெருங்கி வரும் நிலையில், உங்களில் ஒருவனான நான் இந்த மடலை எழுதுகிறேன். நாடாளுமன்ற தேர்தலும் நெருங்கி வருகிறது.

ஜனநாயகத்தின் அடர்ந்த இருண்ட காலத்திலிருந்து இந்தியாவை மீட்டெடுத்து, மீண்டும் ஒரு விடுதலை வெளிச்சம் நிறைந்த காலத்தினை மக்கள் காண்பதற்கு இந்தியா கூட்டணியின் முன்னெடுப்புகள் தொடங்கியுள்ளன. இந்த பொருத்தமான சூழலில்தான், மாநில உரிமை மீட்பு முழக்கத்தினை மையமாக கொண்டு இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறுகிறது. தம்பி உதயநிதி அழைக்கிறார். கழக உடன்பிறப்புகளே சேலத்தில் நடைபெறும் இளைஞரணி மாநாட்டில் திரண்டிடுவீர். நான் முன்பே சொன்னதுபோல கடல் இல்லாச் சேலம் மாவட்டம், கருப்பு – சிவப்பு கடல் ஆகட்டும். இந்தியாவின் ஒளிமிகுந்த புது வரலாற்றை இளைஞரணி படைக்கட்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.