தாமரை மலர வாய்ப்பில்லை…. வீண் கர்வம் பிடித்தவர்களால் தாமரை வாடி கருகி போகும்..!

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இன்னமும் ஒரு சில ஆண்டுகள் இருக்கும் நிலையில் பாஜக தமிழகத்தில் கணிசமான வாக்குகளை பெறுவது மட்டுமல்லாது எப்படியாவது திமுகவுடன் கூட்டணி வைத்து கணிசமான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தினமும் மக்களின் மனதில் இருக்க நல்லதோ, கொட்டதோ ஏதாவது செய்து தினம் தினம் பத்திரிகையில் செய்திகள் வெளிவர செய்து கொண்டுள்ளது.

அதனால் தமிழகத்தில் திமுக- பாஜக இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வரும் நிலையில் திமுக அரசு மீது தொடர் குற்றச்சாட்டுக்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து வருகிறார். மேலும் திமுக நிர்வாகிகளை பாஜகவிற்கு இழுக்கும் நடவடிக்கையில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பாஜகவிற்கு திமுகவும் தக்க பதிலடி கொடுத்து மட்டுமல்லாமல் பாஜக நிர்வாகிகளை திமுக இழுத்து வருகிறது. கடந்த வாரம் மதுரை மாநகர மாவட்ட தலைவராக இருந்த டாக்டர் சரவணன் பாஜகவில் இருந்து விலகி, திமுகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக பாஜக பொறுப்பிலிருந்த மாநில மகளிர் அணி செயலாளர் மைதிலி வினோ திமுகவில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளளார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொள்ளாச்சியில் நடைபெறவுள்ள திமுக கூட்டத்தில் மாற்று கட்சியை சேர்ந்த 50 ஆயிரம் பேர் அமைச்சர் செந்தில் பாலாஜி மேற்பார்வையில் இணைய இருப்பதாக அரசால் புரசலாக பேசப்படுகிறது.

இந்நிலையில் பாஜக மாநில மகளிர் அணி செயலாளர் மைதிலி வினோ திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாக, இதனையடுத்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் மைதிலி வினோவை கட்சியில் இருந்து நீக்குவதாக கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தமராமசாமி அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பிற்கு பதில் அளித்து தனது முகநூல் பக்கத்தில் அறிக்கை வெளியிட்ட மைதிலி வினோ, பாரதீய ஜனதா கட்சியில் 22 ஆண்டுகளுக்கு முன்பு உறுப்பினராக இணைந்து கடின உழைப்பால் மாவட்ட மகளிரணி, மாநில மகளிரணி என பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றி வந்த நான் அண்மை காலமாக பாஜகவின் மாவட்ட தலைமையின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் கட்சியிலிருந்து விலகும் முடிவுக்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.

பாஜக என்றால் மக்களுக்கு என்னவென்றே தெரியாத காலகட்டத்தில் கட்சிக்காக பல போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றை நடத்தி கட்சியில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோரை இணைத்து கோவையில் பாஜக வளர்ச்சிக்கு எப்படியெல்லாம் பாடுபட்டுள்ளேன் என்பது உண்மையான பாஜகவினருக்கு நன்றாக தெரியும் என கூறியுள்ளார். மேலும் பாஜகவில் பெண்கள் யாருமே இல்லாத காலகட்டத்தில் மகளிரணியை கட்டமைத்தவர்களில் எனது பங்கு அலாதி என்பது தாங்கள் அறியாததே என கூறியுள்ளார்.

பாஜகவிற்கு வந்த உடன் மாவட்ட தலைவர் பதவியை பிடித்ததால் அடிப்படை என்ன என்பது தெரியாமல் இருப்பது நியாயம் தான். பாஜகவில் உழைப்பவருக்கு பதவி என்ற நிலை மாறி இன்று பணம் படைத்தவருக்கே பதவி என்ற நிலையல்லவா நிலவுகிறது. ரியல் எஸ்டேட் மூலம் சம்பாதித்த 310 கோடி ரூபாய் சொத்து இருப்பதால் நீங்கள் இன்று மாவட்ட தலைவர் என்றால், நாளை ஒருவர் 320 கோடி சொத்து வைத்திருந்தால் அவர் தான் அடுத்த மாவட்ட தலைவரா? இப்படி இருந்தால் கட்சிக்காக அடிப்படையிலிருந்து உழைத்தவர்கள் கதி என்னாவது? என்னை போன்ற உண்மை விசுவாசிகள் பலரும் தங்களது தவறான ஏதேச்சதிகார போக்கால் சுயமான முடிவெடுக்க துவங்கியுள்ளனர் என்பது தெரியுமா தங்களுக்கு? கட்சியின் மூத்த நிர்வாகிகளை அவமதித்து புறந்தள்ளி பணம் படைத்தவர்களுக்கு பதவி வழங்கும் தங்களை போன்றவர்கள் மாவட்ட தலைமை பொறுப்பில் உள்ள வரை இங்கு தாமரை மலர வாய்ப்பில்லை.

தாமரை மலர தண்ணீர் ஊற்றியவர்கள் பலரும் இன்று தங்களின் செயல்பாட்டால், தொண்டர்களுக்கும் உண்மை விசுவாசிகளுக்கும் மதிப்பளிக்கும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு செல்ல தயாராகி விட்டனர். எனவே மொட்டு வந்து மலர இருந்த தாமரை தங்களை போன்ற வீண் கர்வம் பிடித்தவர்களால் வாடி கருகி போகும் என்பது தான் நிதர்சனம்” எனத் தெரிவித்துள்ளார்.

மைதிலி வினோவின் குற்றச்சாட்டு பாஜகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கோவையில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சுற்றுபயணம் செய்து வரும் நிலையில், மைதிலி வினோ பொள்ளாச்சியில் நடைபெறும் விழாவில் திமுகவில் இணைவதுடன் கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணாமலையின் ஆணவ பேச்சுக்கு காலம் பதில் சொல்லும்.!

பத்திரிகை சுதந்திரம்தான் உலகப் போர்களை முடிவுக்குக் கொண்டு வந்தது. ஆனால் ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை துறை இன்று பல்வேறு தடைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. அதன் விளைவு ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை துறை தனது சுதந்திரத்துக்காகப் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

நாடு கடந்த பல ஆண்டுகளாகவே திரும்பும் திசையெல்லாம் லஞ்சம், லாவண்யம் தலைவிரித்து ஆட, நாட்டை ஆண்டோரும், ஆள்வோரும் அப்பாவி மக்களை போதைக்கு அடிமையாகி போலி வாக்குறுதிகளை வாரி இறைத்து ஆட்சி ஆதிக்கத்தை கைப்பற்றி நாட்டை “கார்ப்பரேட் முதலாளிகளுக்கு” விற்று சிறு மற்றும் நடுத்தர குடும்பங்களை பிச்சை எடுக்க வைத்து கொண்டுள்ளார்.

ஆட்சியாளர்களுக்கு துதிபாட பத்திரிகைகளுக்கு அரசியல்வாதிகள் பணத்தை வாரி இறைத்து துதிபாட வைக்கின்றனர். அரசியல்வாதிகளை எதிர்த்து கேள்வி கேட்கும் பத்திரிகைகளை பண பலம், படை பலம், அரசியல் செல்வாக்கு படைத்த  அரசியல்வாதிகள் பொதுவெளியில் தங்கள் செல்வாக்கை வளர்த்துக் கொள்ள கடந்த சில ஆண்டுகளாகவே “விபச்சார ஊடகங்கள்” என பேசி ஜனநாயகத்தையே கேவல படுத்திக் கொண்டுள்ளார்.

மேலும் கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள் பொது நிகழ்வுக்கு செல்லும் நிகழ்வுகளை விளம்பர படுத்த நிருபர்களுக்கு 100, 200 பணத்தை கொடுத்து பத்திரிகையில் அவர்களின் செய்திகளை வெளிவர செய்வது வாடிக்கையான விஷயமாகும். இந்நிலையில், “பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்திருந்த சமயம் அவரை வரவேற்பதற்கு பாஜக சார்பாக விதிமுறைகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற செய்தியாளர் ஒருவர் அண்ணாமலையிடம், கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, காவல்துறையின் அனுமதியுடன்தான் பேனர் வைக்கப்பட்டதாகவும், விதியை மீறி பேனர் வைத்ததற்கான ஆதாரம் உள்ளதா? என்று செய்தியாளரிடம் கேட்டார். இதற்கு அந்த செய்தியாளர், தன்னிடம் உள்ள ஆதாரம் குறித்து விளக்க ஆரம்பித்த போது, அவரை பேச விடாமல் தடுத்த அண்ணாமலை, உங்களுக்கு “200 ரூபாய் நிச்சயம்” என்று பேசினார்.

இதற்கு அங்கிருந்த மற்ற செய்தியாளர்கள் கண்டித்த போது, சரி 500 ரூபாய் வாங்கிக்கொள்ளுங்கள் அல்லது 1000 ரூபாய் வாங்கிக்கொள்ளுங்கள் என்று அண்ணாமலை பேசியது ஜனநாயகத்தை இழிவுபடுத்தும் செயலாகும். நாங்கள் கடந்து பாதைகள் அண்ணாமலைக்கு நினைவு படுத்துகிறோம்.

கி.மு.500 முதல் கி.பி.200 முடிய உள்ள காலத்தில் பல்வேறு புலவர்கள், பல்வேறு இடங்களில் அமர்ந்து பாடிய ஏராளமான பாடல்களில்  அக்காலத்து அரசர்கள் புலவர்களின் துணையோடு செயல்பட்டனர். புலவர்கள் பாடல்கள் ஓலைச் சுவடிகளில் இருந்து அழிந்துபோக, எஞ்சியவற்றைத் தொகுத்தது எட்டுத்தொகையும், பத்துப்பாட்டுமாகும். இக்காலப்பகுதியில் படைக்கப்பட்ட இலக்கண நூல்களுள் தொல்காப்பியம் மட்டுமே கிடைத்தது உலகறிந்தது.

சங்க இலக்கியங்களில் உலகிற்கே முன்னுதாரமாக நம்மை ஆண்டோர் பண்பாடு, கலாச்சார, நாகரிக வளர்ச்சி, நீதி வழுவாமை என எத்தனையோ நாற்பண்புகளில் சிறந்து விளங்கினர். அதனால் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்கள்  “தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” என பாடி நம் நாடி நரம்பு முறுக்கேற  செய்தார்.

நக்கீரனார், அகத்தியம், அரிசில் கிழார், தொண்டைமான், இளந்திரையன், ஓடைகிழார் நாஞ்சில் வள்ளுவன், காரி, நெட்டிமையார், பரணர், பிசிராந்தையார், பொய்கையார், மாங்குடி கிழார், மாசாத்தனார், மோசி கீரனார், வெண்ணிக் குயத்தியார், ஔவையார் போன்ற புலவர்கள் மன்னர்களின் வீரம், கொடை, புகழ் போன்றவற்றை பாடினார். மேலும் மன்னர்கள் அறநெறியில் தவறும்போது இடித்துரைத்து நல்வழி படுத்தினர்.

அதாவது  உறையூரைத் தலைநகராகக் கொண்டு, சிறந்த தமிழ்ப்புலவன்; நற்குணங்கட்கு இருப்பிடமானவன்; அறத்தின் நுட்பங்களை உணர்ந்து அறவழி ஒழுகிய சோழ மன்னன் கோப்பெருஞ்சோழன் ஆட்சி காலத்தில் புல்லாற்றூர் எயிற்றியனார் அரசருக்கு நீதி உரைத்ததை அமைச்சராகிய நீர் அறியாரோ இதோ அதை உமக்கு உரைக்கின்றேன். கோப்பெருஞ் சோழன் நல்லியல்புகட்கு மாறாக அவன் மக்களான இளங்கோச் சோழன் மற்றும் செங்கோச் சோழனும் தீய இயல்புகளைப் பெற்றிருந்தனர். தந்தையாண்ட பேரரசின் சில பகுதிகளை ஆண்டு வந்த இளங்கோச் சோழன் மற்றும் செங்கோச் சோழனும் பதவி ஆசையில் நாட்டை முழுவதும் ஆட்சி செய்ய விருப்பினர்.

மேலும் இளங்கோச் சோழன் சோழநாட்டுப் படைத்தலைவர் பரூஉத் தலையாரின் மகள் மணியிடையை விரும்பினான். அவளைத் திருமணம் செய்ய விரும்புவதாகப் படைத்தலைவரிடம் கூறி திருமணத்திற்கு முன்பு, தான் மன்னன் ஆவதற்கு உதவுமாறு பரூஉத் தலையாரிடம் வேண்டினான். இதுமட்டுமின்றி தம்பி செங்கோச் சோழனின் படையுடன் தந்தை கோப்பெருஞ் சோழனை எதிர்த்து வந்தனர். படை வருவதை அறிந்த கோப்பெருஞ் சோழன் பெரும் படையுடன் தன் மக்கள் மீது போர் புரியச் சென்றான்.

அந்நிகழ்ச்சியைக் கண்ட அவைப் புலவராகிய புல்லாற்றுார் எயிற்றியனார் கோப்பெருஞ் சோழனை  நல்வழிப்படுத்த கோப்பெருஞ்சோழனை நோக்கி, “பகைவரை வெல்ல வல்ல வேந்தே, பேரரசனாகிய கிள்ளியே, நின்னுடன் போர் செய்ய வந்தவர் நின்பகைவர் அல்லர், நீ உலகை வெறுத்துத் தேவர் உலகம் எய்த பின்னர் இவ்வரசாட்சிக்கு உரியவர் அவரே யாவர். இதனை நீ வென்ற பின்னர் இந்நாட்டை யாருக்கு அளிப்பை? நீ போரில் தோற்ற பின், நின் பகைவர் இழக்கத்தக்க பழியை உலகில் நிறுத்தியவன் ஆவாய்! ஆதலின், நினது மறன் ஒழிவதாக விண்ணோர் விருப்புடன் நின்னை விருந்தாக எதிர்கொள்ள நல்வினை செய்தல் நல்லது அதற்கு விரைந்து எழுக நின் உள்ளம் வாழ்வதாக”என்று உருக்கமாக உரைத்து  தடுத்து நிறுத்தினார் என்பது சரித்திரம்.

அதன்வரிசையில், கடையேழு வள்ளல்களில் ஒருவனாகத் திகழ்ந்த பாரி பறம்பு மலையின் மன்னன் மனித உயிர்களுக்கு மட்டுமன்றி முல்லைக் கொடியின் கொழு கொம்பாகத் தன் தேரையே நிறுத்தி வள்ளல். கபிலர் என்னும் செந்நாப் புலவரின் உற்ற நண்பன். மூவேந்தரான சேர சோழ பாண்டிய மன்னர்களும் பாரியின் புகழைக் குறித்துப் பொறாமை கொண்டனர். அவன் நாட்டைக் கைப்பற்ற எண்ணம் கொண்டனர்.

சிற்றரசனான பாரியின் மேல் அவர்களுக்கு இருந்த பொறாமையில் மூவேந்தரும் சேர்ந்து பறம்பு மலையை முற்றுகை இட்டனர். பல மாதங்களாகியும் பறம்பு மலையைக் கைப்பற்ற இயலவில்லை. மூவேந்தர் பறம்பு மலைக்குக் கீழே சுற்றிவளைத்துக்கொண்டு முற்றுகையிட்டிருந்த அவர்கள் எப்படியும் என்றைக்காவது ஒருநாள் பாரி கீழே இறங்கி வந்து தங்களுக்குப் பணிந்துதான் ஆகவேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருந்தனர்.

ஆனால் பாரி வள்ளலோ, மூவேந்தர் முற்றுகையினாலோ, பயமுறுத் தலினாலோ சிறிதும் அச்சமுறவுமில்லை; அயரவுமில்லை. எப்போதும் போல அவனும் அவனுடைய குடிமக்களும் வளமான நிலையில் மகிழ்ச்சி குன்றாமலே வாழ்ந்து வந்தார்கள். பாரி வள்ளலின் உயிர் நண்பர் புலவர் கபிலர் பறம்பு மலையில்  பாரி வள்ளலுடன் கூடவே இருந்தார். ஒரு நாள் பாரி வள்ளலின் சார்பாகக் கீழே முற்றுகையிட்டிருக்கும் மூவேந்தர்களைச் சந்தித்துச் செல்வதற்காகக் கபிலர் மலைமேலிருந்து கீழே வந்தார்.

மூவேந்தர்கள் கபிலரை தமிழ்ப் புலவர் என்ற முறைக்கு மரியாதை கொடுத்து வரவேற்று விருந்தினராக அவர்களோடு தங்கவைத்தனர். சிலநாட்கள் கழிந்தபின், ஒருநாள் கபிலரோடு பேசிக் கொண்டிருக்கும்போதே கபிலர் வாயிலிருந்து  பறம்பு மலை அரண்களைப் பற்றிய இரகசியமான விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ள முயன்றனர். மூவேந்தர் “நாங்கள் இவ்வளவு நாட்களாக இங்கே முற்றுகை இட்டிருந்தும் உங்கள் பாரி சிறிதும் கவலையே இல்லாமல் மலைமேல் சுகமாக இருக்கிறானே? எங்கள் முற்றுகை அவனை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லையோ?”

அதற்கு கபிலர், பதில் ஏதும் கூறாமல் மூவேந்தர்களையும் பார்த்து மெல்ல சிரித்தார். மேலும் “பாரியைப் பற்றியா கேட்கிறீர்கள்? மிகவும் நல்ல கேள்விதான்! நீங்கள் இத்தனை பலமாகவும் பயங்கரமாகவும் முற்றுகையிட்டிருந்தும்கூடப் பாரி இன்னும் மலைமேல் குறைவின்றி எப்படி வாழ்கிறான்? என்ற விவரம் உங்களுக்கும் தெரிய வேண்டியதுதான். ஆனால்…”

நீங்கள் மூன்று பேரரசர். பெரும்படைகளோடு வந்திருக்கின்றீர். ஆனால், பாரி ஒரு தனிநபர் வெறுங் குறுநில மன்னன். பாரியின் படைகளின் தொகை, உங்கள் படைகளில் நூற்றில் ஒரு பங்கு. இந்தப் படைகள் மட்டுமின்றி இன்னும் ஆயிரம் மடங்கு பெரும்படைகளை வேண்டுமானாலும் நீங்கள் கொண்டு வரலாம். பாரியை மாத்திரம் படை பலத்தால் அசைக்கக்கூட முடியாது உங்களால் என்பதை மறந்து விடாதீர்கள்.”

மூவருடைய முற்றுகை யினாலும் பறம்புமலை சிறிதும் பாதிக்கப்படாது. உழவர் உழாமலே இயற்கையிலேயே நான்கு உணவுப் பொருள்கள் மலைமேல் விளைகின்றன. மூங்கிலரிசி ஒன்று; பலாப்பழம் இரண்டு வள்ளிக்கிழங்கு மூன்று கொம்புத்தேன் நான்கு இந்த நான்கு குறையாத உணவுப் பொருள்களோடு பளிங்கு போலத் தெளிந்த இனிய நீர்ச்சுனைகளுக்கும் பறம்பு மலையில் பஞ்சமே இல்லை. இதனால் மலைமேல் உணவுப் பஞ்சமோ, தண்ணீர்ப் பஞ்சமோ ஏற்பட்டுப் பாரி அவற்றைத் தாங்க இயலாமல் வருந்தி நடுங்கிக் கீழே ஒடி வந்து உங்கள் முற்றுகைக்கு அடிபணிவான் என்று கனவிலும் நினையாதீர்கள்.

யானைப் படைகளையும் தேர்ப்படைகளையும் மலைமலையாகக் குவித்தாலும் போர் முயற்சி பயன் தராது. நீங்கள் மூவர் மட்டும் மலைமேல் ஏறி அவனோடு வாட் போர் செய்யலாமென்றலோ வாட் போரில் பாரி உங்களை இலேசில் விடமாட்டான். பாரியின் பறம்பு மலையில் முந்நூறு சிற்றுார்கள் உள்ளன, இந்த முந்நூறு ஊர்களையும் தன்னை நாடிவந்த பரிசிலர்களுக்கு ஒவ்வொன்றாகக் கொடுத்துத் தீர்த்துவிட்டான் பாரி. இப்போது அவனிடம் எஞ்சியிருக்கும் பொருள்கள் மூன்றே மூன்றுதாம். நானும் அவனும் பறம்பு மலையுமே. நீங்கள் என்னையும் பாரியையும் பறம்பு மலையையும் வெல்ல வேண்டுமானால் அதற்கு இம்மாதிரி ஆயுதங்கள் தாங்கிய போர்க்கோலமோ, படைகளோ தேவையில்லை!”

“மூவேந்தர்களே! நீங்கள் பாட்டுப்பாடும் பாணர்களாகவும் கூத்தாடும் விறலியர்களாகவும் வேடமிட்டுக்கொண்டு பாரிக்கு முன்னால் சென்று ஆடி பாட வேண்டும். ஆடி பாடி முடிந்ததும் ‘உங்களுக்கு என்ன பரிசில்வேண்டும்’ என்று கேட்பான் பாரி. ‘உன் உயிரும் பறம்பு மலையும் எங்களுக்கு வேண்டும்’ என்று நீங்கள் மூவரும் தலைவணங்கிக் குழைவான குரலில் கேளுங்கள். தயங்காமல் இரண்டையும் உடனே உங்களுக்குக் கொடுத்து விடுவான் அவன். நீங்கள் பாரியை வெல்ல இந்த ஒரே ஒருவழிதான் உண்டு. வாளோலோ, போராலோ, முற்றுகை யாலோ நீங்கள் நிச்சயமாக அவனை வெல்ல முடியாது” கபிலர் கூற மூவேந்தர் நெஞ்சத்தை அணுஅனுவாகச் சித்திரவதை செய்யும் விஷமத்தனம் நிறைந்த புன்னகை ஒன்று கபிலர் இதழ்களில் நெளிந்தது.

மூவேந்தர்கள் முகத்தில் ஈயாடவில்லை, கபிலர் பேசிய வார்த்தைகள் மூவேந்தர்களை வெட்கித் தலைகுனியும் படியாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஏற்ற  மூவேந்தர்களைக் கூனிக் குறுகி சிலைகள் வீற்றிருக்கும்படி செய்தார். மேலும் “பாரி, வாளுக்குமுன் பணியமாட்டான். கலைக்குமுன் பணிவான்.போரில் பகைவர்களுக்குத் தோற்காததன் நாட்டையும் உயிரையும் அரண்மனையில் தனக்குமுன் ஆடிப்பாடும் கலைஞர் களுக்குத் தோற்கத் தயாராயிருப்பான்.

கலைக்கும் கவிதைக்கும் தலை வணங்கி யாவற்றையும் அளிக்கத் தயாராயிருப்பான். ஆனால் போரால் அவனை அசைக்க முடியாது” முன்னிலும் பலமாக வாய்விட்டுச் சிரித்தார் கபிலர். சிரித்துக்கொண்டே மூவேந்தர்களையும் நோக்கி, “வருகிறேன் மன்னர்களே! நான் மலைமேல் போக வேண்டும்” என்று கூறிவிட்டு, தைரியமாகக் கைவீசிச் சிரித்துக்கொண்டே நடந்து செல்லும் அந்தப் புலவரை இமைக்காமல் பார்த்துக் கொண்டே திக்பிரமை பிடித்துப்போய் வீற்றிருந்தனர் மூவேந்தர்!

இதனால் தான் அன்று நாடும் நகரமும் செழிப்பாக இருந்தது. புலவர்கள் மட்டுமல்லாமல் மன்னர்களும் புலவர்களாக இருந்து  மட்டுமன்றி அவர்தம் மக்களும் பாடல் பாடும் அளவிற்குச் சிறந்த தமிழறிவு பெற்றிருந்தனர்.

“மன்னன் எவ்வழி :

மக்கள் அவ்வழி “- என்ற பழமொழிகேற்ப களவு, கொலை , கொள்ளை போன்ற எந்தவிதமான தீய செயல்களும் நடைபெறாமல் மன்னன் செங்கோல் தவறாது ஆட்சி புரிந்தால் நாட்டு மக்களும் மகிழ்ச்சியாக இருப்பர்.

காலக்கொடுமை உலகெங்கும் நடைபெற்ற “தொழில் புரட்சியின்” விளைவாக ஏற்பட்ட காலனி ஆதிக்கத்தால் மெல்ல மெல்ல மன்னராட்சி முடிவுக்கு வந்து பின்னர் படிப்படியாக  மக்களாட்சி வந்ததோ! அன்றிலிருந்து ஆட்சி அதிகாரங்களில் ஊரெங்குமுள்ள மொள்ளமாரிகள் மற்றும் முடிச்சவிக்கிகள் கைகளில் செல்ல களவு, கொலை, கொள்ளை போன்ற தீய செயல்கள் அரங்கேற கிடைத்தவன் கிடைத்ததை வாரி சுருட்டிக்கொள்ள ஆரம்பித்தான்.

புலவர்கள் இடத்தில் இருக்கும் பத்திரிகை துறைகள் ஜனத்தின் நான்காவது தூணாக இருந்தது. விடுதலை போராட வீரரும், பெண்கள் விடுதலை, ஜாதி பாகுபாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்தவருமான  பாரதியார் முதலில் ஜி.சுப்பிரமணிய ஐயர் நடத்திய ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் பணி அமர்ந்தார். இரண்டரை ஆண்டுகள் பணியாற்றிய பாரதியார் காரணம் எதுவும் தெரியாமல் நீக்கப்பட்டார்.

இதற்கிடையே பி.வைத்தியநாதய்யர் என்பவர் நடத்தி வந்த “சக்கரவர்த்தினி” பாரதியார் 1906-ல் ஆகஸ்ட் மாதம் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இந்த பத்திரிகையில் பாரதியார் குழந்தைத் திருமணம், சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம், வரதட்சணை, கைம்பெண் கொடுமை ஆகிய நடைமுறைகளை கடுமையாக எதிர்த்துக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். 1906-ல் பாரதியார் “சக்கரவர்த்தினி” பத்திரிகையிலிருந்தும் வெளியேறினார். அதன்பின்னர் பாரதியார் தனியாக பத்திரிகை தொடங்கி நடத்த ஆசைப்பட்டார். ஆனால் அந்த அளவுக்கு பாரதியாரிடம் நிதிவசதி இல்லை அதனால் பல நண்பர்களின் உதவியை நாடினர் ஆனாலும் பயனில்லை.

அதன்பின்னர் நாட்டின்மீது கொண்டிருந்த பற்றின் காரணமாக மண்டையம் திருமலாச்சாரியார் தொடங்கி “இந்தியா” இந்த பத்திரிகையில் ஆசிரியர் என்று மண்டையம் திருமலாச்சாரியாரின் உறவினர் சீனிவாசன் என்பவர் பெயர் இருந்தும் பாரதியார் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். அதுவும் நீண்ட நாட்கள் தொடரவில்லை. அதாவது பத்திரிகை துறையானது முழுக்கமுழுக்க அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டிற்கு மெல்ல மெல்ல நகர தொடங்கியது. உண்மை, நேர்மை, நாட்டு பற்று என சமூக சிந்தனையில் இருந்த பாரதியராலேயே நாடு சுதந்திரம் அடையும் முன்பே பத்திரிகை துறையில் தொடர முடியவில்லை என்பதே ‘நிதர்சனமான உண்மை’.

நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்களின் கொள்கைகளை வெளியுலகிற்கு உணர்த்த அவர்களே பத்திரிகைகள் ஆரம்பிக்க தொடங்கினர். அதுமட்டுமின்றி அரசியல் கட்சிகளுக்கு துதிபாடும் பத்திரிகைகளும் மெல்லமெல்ல வளர நாடு, நாட்டுப்பற்று, நாட்டு மக்கள் என தொடங்கிய பத்திரிகைகள் வந்த இடம் தெரியாமல் பறந்துபோக ஆசிரியர்களும் மகாகவி பாரதியைப் போல மறைந்துகொண்டே இருக்கின்றனர்.

நாட்டை ஆள்பவர்களும், அதிகாரங்களில் இருப்பவர்களும் பத்திரிகை துறையை நாள், வாரம், மாதம் என பிரித்து தரம் பார்த்து செய்திகள் கொடுக்க நாளடைவில் பத்திரிகை துறையானது அரசியல்வாதிகளின் செய்திகள் மற்றும் அதிகாரிகள் கொடுக்கும் செய்திகளை உண்மை தன்மை அறியாமல் எங்களின் TRP -காக அவசர அவசரமாக வெளியிடுகின்றோம். அவர்கள் கொடுக்கும் செய்திகள் அடுத்த நாளோ அல்லது ஒரு சில ஆண்டுகள் கழித்தோ உண்மை இல்லை என்று உணர்ந்தால் நாங்களும் முட்டாளாகி  நாட்டு மக்களையும் முட்டாளாக்குவது மட்டுமின்றி அந்த செய்தியையும் வெளியிடுகின்றோம்.

பண்டைய காலம் தொட்டே உண்மைகளை வெளியுலகிற்கு கொண்டு வருவோர் கையேந்திக் கொண்டு உள்ளோம் என்பது வரலாற்று பக்கங்களை திருப்பி பாருங்கள் அப்போது தான் உங்கள் ஆணவப் பேச்சுக்கு விடை தெரியும். கோடி கோடியாய் கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மக்களுக்கு நல்லது செய்வதை போல நிருபர்களுக்கு 100, 200 கொடுத்து  அவர்கள் விளம்பர படுத்தி கொள்ளும் நயவஞ்சக அரசியல்வாதிகளின் செயல் எப்போது ஒவ்வொரு நிருபரும் உணர்கின்றானோ அப்போது அரசியல்வாதியின் முகத்திரை கிழிவது சத்தியம்!

சிவசேனா: மாயாவதி மற்றும் ஒவைசிக்கு பத்ம விபூஷன், பாரத ரத்னா வழங்க வேண்டும்…!

நடந்தது முடிந்த உத்தரபிரதேசம், கோவா, உத்தரகாண்ட்,  மணிப்பூர்,  பஞ்சாப் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலில் 4 மாநிலங்களிலும் வெற்றி பெற்றுள்ள பாஜக ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில் சிவசேனா கட்சி தலைவர் சஞ்சய் ராவத் இதுகுறித்து பேசுகையில், ‘4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளதில் நாங்கள் வருத்தப்பட ஒன்றுமில்லை, உங்கள் மகிழ்ச்சியில் நாங்களும் ஒரு பகுதி.

மேலும் உத்தரகாண்டில் முதல் மந்திரி புஷ்கர்சிங் தாமி தோற்றது ஏன்? கோவாவில் 2 துணை முதல் மந்திரிகள் தோற்றது ஏன்? எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியமானது, பஞ்சாப் மாநிலத்தில் பாஜக போன்ற தேசிய கட்சி முற்றிலும் நிராகரிக்கப்பட்டுள்ளது. பிரதமர், உள்துறை மந்திரி, பாதுகாப்பு மந்திரி என அனைவரும் பஞ்சாப்பில் பிரமாண்டமாக பிரசாரம் செய்தும் அங்கு ஏன் பாஜக தோல்வியடைந்தது என கேள்வி எழுப்பினர்.

இதுமட்டுமின்றி பிரதமர், உள்துறை மந்திரி, பாதுகாப்பு மந்திரி என அனைவரும் பஞ்சாபில் பிரமாண்டமாக பிரசாரம் செய்தும் காங்கிரஸ், சிவசேனாவை விட குறைந்த வாக்குகளே பாஜக பெற்றுள்ளது. உத்தர பிரதேசம் அவர்களின் மாநிலமாக இருந்தபோதும், சமாஜ்வாதி கட்சி 47 இடங்களில் இருந்து 111 இடங்கள் கைப்பற்றியிருக்கிறது. மேலும் பாஜகவின் வெற்றிக்கு மாயாவதி மற்றும் ஒவைசி பங்களித்துள்ளனர், எனவே அவர்களுக்கு பத்ம விபூஷன், பாரத ரத்னா வழங்க வேண்டும்’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பாஜக குழுவில் இருந்து மேனகா காந்தி, வருண்காந்தி உள்ளிட்ட பல தலைவர் திடீர் நீக்கம்

உத்திர பிரதேசத்தில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டாத்தில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் தீவிரமாக பங்கேறு வருகின்றனர். லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஷ்ரா மற்றும் மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பக்கத்து கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் திகுனியாவில் திரண்டனர். அப்போது அந்த வழியாக பாஜகவினரின் வாகன அணிவகுப்பு ஒன்று வந்தது. இதில் கார் ஒன்று விவசாயிகள் மீது பயங்கரமாக மோதியதில் 2 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பாஜகவினர் வந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதன்காரணமாக அங்கு வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக பாஜக எம்.பி. வருண் காந்தி டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அதில், ‘வீடியோ மிகத் தெளிவாக இருக்கிறது. கொலை மூலம் போராட்டக்காரர்களின் வாயை அடைக்க முடியாது. ஒவ்வொரு விவசாயியின் மனதிலும் அகங்காரம், கொடூரம் பற்றிய செய்தி நுழைவதற்கு முன், அப்பாவி விவசாயிகளின் ரத்தத்துக்குக் காரணமாணவர்களை நீதி முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாஜகவின் 80 உறுப்பினர்கள் கொண்ட புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பட்டியலை தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டார். அதில் நிர்வாகக் குழுவில் இருந்து முன்னாள் மத்திய மந்திரி மேனகா காந்தி, பில்பித் எம்.பி. வருண் காந்தி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

ரஜனி பாட்டீல் மாநிலங்களவை உறுப்பினராக  போட்டியின்றி தேர்வு

மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்து வந்த ராஜீவ் சதவ் சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். எனவே இந்த காலியிடத்துக்கு வருகிற 4-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் மகா விகாஷ் அகாடி கூட்டணிகள் சார்பில் காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் ரஜனி பாட்டீலும், பாஜக சார்பில் சஞ்சய் உபாத்யாய் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

காங்கிரஸ் வேட்பாளருக்கு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவு இருப்பதால், இவர் எளிதில் வெற்றி பெற வாய்ப்பு உருவானது. இந்நிலையில் மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே மற்றும் மந்திரி பாலசாகேப் தோரட் ஆகியோர் சமீபத்தில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிசை சந்தித்தனர். அப்போது காங்கிரஸ் வேட்பாளர் போட்டியின்றி தேர்வாக ஏதுவாக பாஜக வேட்பாளரை போட்டியில் இருந்து திரும்ப பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

வேட்பு மனுவை வாபஸ் பெற நேற்று கடைசி நாள் என்பதால், பாஜக வேட்பாளர் சஞ்சய் உபாத்யாய் கடைசி நேரத்தில் தனது வேட்பு மனுவை திரும்ப பெற்றார். பாஜக வேட்பாளர் மனுவை திரும்ப பெற்றதால், காங்கிரஸ் வேட்பாளரை தவிர வேறு யாரும் போட்டியில் இல்லை. எனவே அந்த கட்சி வேட்பாளர் ரஜனி பாட்டீல் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகி உள்ளார்.

பாஜக, காங்கிரஸுக்கு அடுத்து பலம் மிக்க கட்சியாக திமுக உருவெடுத்தது

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் ஏற்கனவே நாடாளுமன்ற மாநிலங்களவை அ.தி.மு.க. உறுப்பினர்களாக இருந்த கே.பி.முனுசாமி மற்றும் ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றதை அடுத்து இருவரும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் தமிழகத்தில் இருந்து காலியான இரண்டு இடத்தை நிரப்ப இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்தது.

இந்த மாநிலங்களவை இடைத்தேர்தலில் கனிமொழி சோமு மற்றும் ராஜேஷ்குமார் ஆகிய இருவரை தி.மு.க. தனது வேட்பாளர்களாக நிறுத்தியது.இதனையடுத்து அதற்கான தேர்தல் நடைபெற்றால் ஒருவர் எம்பியாக தேர்வாக 34 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் தற்போது திமுகவிற்கு 159 எம்.எல்.ஏக்கள் மற்றும் அதிமுகவிற்கு 75 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். தி.மு.க.விற்கே வெற்றி வாய்ப்பு என்பதால், மற்ற அரசியல் கட்சிகள் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினர்களாக திமுகவின் கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதன்மூலம் மாநிலங்களவைகான திமுக எம்.பிக்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது பாஜக மக்களவை 301, மாநிலங்களவை 94 என்று 395 எம்.பி.க்களுடன் முதலிடத்திலும், காங்கிரஸ் மக்களவை 52, மாநிலங்களவை 33 என்று 85 எம்.பி.க்களுடன் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றது. ஏற்கனவே திரிணமூல் காங்கிரஸ் மக்களவை 22, மாநிலங்களவை 12 என 34 எம்.பி.க்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கும் நிலையில், திமுக தற்போது மக்களவை 24, மாநிலங்களவை 10 என 34 எம்.பி.க்களுடன் சமமான இடத்தை பிடித்துள்ளது.

அமரீந்தர் சிங்: சித்துவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டால் அவருக்கு எதிராக பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்துவேன்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், முன்னாள் பாஜக மாநிலங்களவை உறுப்பினருமான நவஜோத் சிங் சித்து 2017ஆம் ஆண்டு பாஜகவிலிருந்து காங்கிரஸ் கட்சி தாவினார்.தற்பொழுது பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும், மாநில காங்கிரஸ் தலைவரான நவஜோத் சிங் சித்துவுக்கும் இடையே உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது.

இதனையடுத்து, மேலிடம் கொடுத்த அழுத்தம் மற்றும் அவமானத்தின் காரணமாக அமரீந்தர் சிங் சமீபத்தில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். சித்து ஆதரவாளரான சரண்ஜித் சிங் சன்னி புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், அமரிந்தர் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், பஞ்சாப்பிற்கு மிகவும் ஆபத்தானவர் சித்து. வரப்போகும் சட்டசபை தேர்தலில் சித்து முதல் மந்திரி ஆவதை தடுக்க எந்த தியாகத்தையும் நான் செய்வேன்.

சித்துவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டால் அவருக்கு எதிராக பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்துவேன். மூன்று வாரங்களுக்கு முன்பாக நான் ராஜினாமா செய்ய இருப்பதாக கூறிய போது, தொடர்ந்து பதவியில் நீடிக்குமாறு சோனியா காந்தி என்னை கேட்டுக்கொண்டார். எனக்கு தந்திர வித்தையெல்லாம் தெரியாது. காந்தி குடும்பத்தினருக்கும் இது பற்றி தெரியும். ராகுல், பிரியங்கா எனது பிள்ளைகளை போன்றவர்கள் அனுபவமற்றவர்கள் அவர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்” என தெரிவித்தார்.

தமிழிசை: நீட் தேர்வு பணம் படைத்தோர் மட்டுமே மருத்துவர் ஆக முடியும் என்ற நிலையை மாற்றியுள்ளது

ஏழை- எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் திருபுவனை எம்எல்ஏ அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இலவச நீட் தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தைத் துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று தொடங்கி வைத்தார். மேலும் பேசுகையில், “ஒரு நல்ல முயற்சி மேற்கொள்ளப்பட இருக்கிறது. கிருஷ்ண பகவான் அவதரித்த நாளில் மக்களைக் காப்பாற்றுவதற்காக அரக்கர்களை அழித்ததைப் போல, தடுப்பூசி மூலம் கரோனா என்ற அரக்கனை அழிக்க மருத்துவராகப் போகும் மாணவர்கள் உறுதி ஏற்க வேண்டும்.

நான் அடிப்படையில் ஒரு மருத்துவராக இருப்பதனால் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருப்பேன். ஏழை மாணவர்கள் முழு ஈடுபாட்டுடன் படித்தால் நிச்சயம் மருத்துவர் ஆகலாம். நீட் என்பது நல்ல தேர்வு. பணம் படைத்தவர்கள் மட்டுமே மருத்துவர் ஆக முடியும் என்ற நிலை இப்போது மாறி இருக்கிறது என்று ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

 

பா.ஜனதா தீர்மானம் கோயம்புத்தூரை தலைநகரமாக கொண்டு கொங்கு மண்டலத்தை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை நகர பாரதீய ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பஜனை கோவில் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய 9 மாவட்டங்களையும் இணைத்து  கொங்குநாடு என்கிற புதிய மாநிலத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும். மேலும் கோவையை தலைநகராக அறிவிக்க வேண்டும். இதன் மூலம் நிர்வாக ரீதியாக, கோயம்புத்தூரில் இருந்து 500 கிலோ மீட்டர் தூரமுள்ள சென்னைக்கு செல்ல வேண்டிய இடர்பாடுகள் குறையும்.

தனி மாநிலமாகவோ அல்லது யூனியன் பிரதேசமாகவோ, கொங்கு மண்டலத்தை அறிவிக்க வேண்டும். இதனால் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அனைத்தும் கொங்கு மண்டலத்தில் எளிதாக கிடைப்பதால் சென்னையை தேடி மக்கள் அலைய வேண்டிய நிலை   வராது. சாலை வசதி, பஸ், ரெயில் போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகளும் கொங்கு மண்டலமான கோவை, சேலம், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், கரூர் ஆகிய ஊர்களில் சிறப்பான முறையில் இருக்கிறது.

இதனால் தலைநகர் டெல்லி மற்றும், மும்பை, பெங்களூரு, ஐதராபாத் போன்ற பிற மாநில தலைநகரங்களுக்கு, விமானம் மூலம் நேரடியாக சென்று வரும் வாய்ப்பும், கோயம்புத்தூரில் இயல்பாகவே அமைந்துள்ளது. இதன் மூலம் கொங்கு மண்டலம், “கொங்குநாடு” என்கிற பெயருடன் தனி மாநில அந்தஸ்துடன் உருவானால், இனி வரும் காலங்களில் இந்த மண்டலத்தின் வளர்ச்சி தனிச்சிறப்பு உடையதாக இருக்கும். எனவே, மத்திய அரசு இந்த கோரிக்கையை விரைந்து பரிசீலனை செய்து, கொங்கு மண்டல வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்பது உள்பட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.