எஸ்.வி.சேகர்: திமுகவை சும்மா திட்டிக் கொண்டிருந்தால் பாஜக வளரவே முடியாது…!

சும்மா திமுகவை திட்டிக் கொண்டிருந்தால் அவர்களால் வளரவே முடியாது. திமுக ஒழுங்காக ஆட்சி செய்யவில்லை என்றால் நாடாளுமன்ற தேர்தலில் எப்படி 40 தொகுதிகளில் வெற்றி பெற்றார்கள்? அனைத்து ஓட்டுகளையும் திமுகவினரே போட்டார்களா? என முன்னாள் பாஜக நிர்வாகி எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

சென்னை மந்தைவெளியில் உள்ள எஸ்.வி சேகர் இல்லத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.அப்போது, “தமிழ்நாட்டில் பாஜக 25 ஆண்டுகள் ஆனாலும் ஆட்சிக்கு வரவே முடியாது. ஒழுங்காக படிக்காத காரணத்தால் தான் அண்ணாமலை அரசியலுக்கு வந்தார். இங்கு சரியாக இல்லை என்று தான் வெளிநாடு படிக்க சென்று இருக்கிறார். அண்ணாமலை வாயை திறந்தால் பொய். தமிழகத்தில் ஒரு பிராமணர் கூட இல்லாமல் அனைவரையும் ஒழித்துக் கட்டிவிட்டார்.

சும்மா திமுகவை திட்டிக் கொண்டிருந்தால் அவர்களால் வளரவே முடியாது. திமுக ஒழுங்காக ஆட்சி செய்யவில்லை என்றால் நாடாளுமன்ற தேர்தலில் எப்படி 40 தொகுதிகளில் வெற்றி பெற்றார்கள்? அனைத்து ஓட்டுகளையும் திமுகவினரே போட்டார்களா? பிராமணர் சமூகத்தை யாரும் பெரிய வாக்கு வங்கியாக பார்க்கவில்லை. பிராமணர்கள் 7 சதவீதம் இருக்கிறார்கள்.

ஆனால், 3 சதவீதம் என்கிறார்கள். பிராமணர்களில் 50 சதவிகிதம் பேர் கையில் செல்போன் கூட இல்லாமல் உள்ளார்கள். தினசரி கூலி வேலை, கட்டிட வேலை, புரோகிதம் போன்ற பணிகளை தான் செய்கிறார்கள். EWS எந்த இட ஒதுக்கீட்டுக்கும் எதிரானது அல்ல. தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இதில், 7 பேராவது பிராமண எம்.எல்.ஏ.க்கள் இருக்க வேண்டும். ஜெயலலிதா இருந்தவரை ஒரு 3 பேர் இருந்தார்கள். இப்போது ஒருவர் கூட இல்லை.

பிராமணர் நல வாரியம் அமைப்போம் என்று நாளை திமுக அறிவித்தால், அவர்களுக்காக பிரச்சாரம் செய்வேன். ஆனால் எந்தக் கட்சியிலும் சேர மாட்டேன். எந்த கட்சி இதைச் சொன்னாலும் அதற்கு ஆதரவாக நான் பிரச்சாரம் செய்வேன். யாராக இருந்தாலும் தனது சமூகத்திற்காக பேசுவது சரி. ஆனால் எந்தக் காரணத்திற்காகவும் மற்ற சமூகத்தை குறைத்து பேசுவது தவறான அயோக்கியத்தனமான செயல். இருவிதமான பிராமணர்கள் தமிழகத்தில் உள்ளார்கள்.

பாஜக என்ன சொன்னாலும் சரி என்று சொல்லும் ஒரு முட்டாள்தனமான பிரிவு இருக்கிறார்கள். ஜாதி, சடங்கு, சம்பிரதாயம் எல்லாவற்றையும் வீட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும். வெளியில் வந்தால் தமிழ்நாட்டுக்காரன், இந்தியன் என்று இருக்க வேண்டும். எல்லா இடத்திலும் சாதியை தூக்கிக்கொண்டு அலைய முடியாது. தமிழக பாஜகவில் ஒரு பிராமணர்கள் கூட இல்லாத நிலையை அண்ணாமலை கொண்டு வந்துள்ளார். நான் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இல்லை.

ஆனால், அவர் பிரதமர் என்பதால் மோடியின் புகைப்படங்கள் என் வீட்டில் இருக்கிறது. என் வீட்டில் வந்து பாருங்கள் ஜெயலலிதா, கலைஞர் புகைப்படமும் தான் இருக்கிறது. எப்போது பள்ளிக்கூடத்தில் நீ என்ன சாதி என்று கேட்பதை நிறுத்துகிறார்களோ, அதுவரை சாதியை நிறுத்த முடியாது இது உண்மை. சமூகத்திற்கு நல்லது செய்ய அரசியலுக்கு வந்து, அது எனக்கு தவறாக முடிந்துவிட்டது. என்னை கட்சி அரசியலுக்கு கொண்டு வந்தது ஜெயலலிதா தான். வேற்றுமையை பெரிதாக்கி வெறுப்பை வளர்த்தால் வாழ்வு சுமூகமாக இருக்காது.

பொதுவெளியில் பேசும்போது, என்ன பேச வேண்டும் என்பதை விட, எதை பேசக்கூடாது என்பதை தெரிந்திருக்க வேண்டும். மைக்கை பார்த்ததும் வாந்தி எடுப்பது போல் பேசக்கூடாது. கஸ்தூரி பேசியது மிகவும் கண்டிக்கத்தக்க செயல். தமிழ்நாட்டில் குஷ்பு போல் நமக்கு எதிர்காலம் இருக்கும் என்று கஸ்தூரி இப்படி பேசி இருக்கலாம். தனக்கு அண்ணாமலை வாய்ப்பு கொடுப்பார் என நினைத்திருக்கலாம். ஆனால் அது ரிவர்ஸில் வொர்க் அவுட் ஆகிவிட்டது.

ஆனால், சுதாகர் ரெட்டி போன்ற பாஜக தலைவர்களே அதனை எதிர்த்துவிட்டார்கள். தமிழ்நாடு பாஜகவில் கஸ்தூரிக்கு கதவு மூடப்பட்டு விட்டது. ஆந்திராவிலும் வழக்கு போட்டுவிட்டார்கள். கஸ்தூரி இனிமேல் தனி கட்சி ஆரம்பித்தால் வேண்டுமானால் எதிர்காலம் இருக்கும். ஏனென்றால் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம்.” என எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.

செந்தில் பாலாஜி: தடைகள் வந்தபோதெல்லாம் தாயுமானவராய் இருந்து என்னை தாங்கிய தளபதிக்கு வாழ்நாள் முழுக்க கடன்பட்டிருக்கிறேன்..!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் கள ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த தொடக்கமாக கோயம்புத்தூரில் விளாங்குறிச்சியில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டிடத்தை திறந்து வைத்ததுடன், வீட்டு வசதி வாரியம் சார்பில் நிலம் விலக்கு அளிக்கப்பட்டவர்களுக்கு நில விடுவிப்பு ஆணைகளை வழங்கினார்.

மேலும் நேற்று 2-வது நாளாக கள ஆய்வில், தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில், கோயம்புத்தூர் காந்திபுரத்திலுள்ள அனுப்பர்பாளையம் கிராமத்தில் ரூ.300 கோடி மதிப்பில் 8 தளங்களுடன் 1,98,000 சதுரடி பரப்பில் தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டும் பணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், கோயம்புத்தூரில் தான் தமிழ் புதல்வன் திட்டம் துவங்கப்பட்டது. இன்று இந்த நிகழ்வில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு மாவட்டமாக சென்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு வருகிறேன். கோயம்புத்தூருக்கு இதுவரை 3 முறை வந்து, பல்வேறு அரசு நிகழ்வுகளில் கலந்துகொண்டு திட்டங்களை துவக்கி வைத்துள்ளேன்.

கடந்த 3 ஆண்டுகளில் அறிவித்த அறிவிப்புகளின் நிலை குறித்து அமைச்சர்களை ஆய்வு செய்யச் செல்ல அறிவித்து, முதலீடுகள் ஈர்ப்புக்காக அமெரிக்கா சென்றேன். அங்கிருந்து வந்த பின்பு அமைச்சர்களிடம் திட்டங்களின் நிலை குறித்து கேட்டதோடு, ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு செய்யும் பணிகளை கோயம்புத்தூரில் இருந்து துவங்கியுள்ளேன்.

நேற்று முதல் கோயம்புத்தூர் மாவட்ட மக்களின் கோரிக்கைகளை கேட்டுள்ளோம். கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி கம்பேக் கொடுத்துள்ளார். செந்தில் பாலாஜி தடையெல்லாம் தகர்த்து வந்துள்ளார். செந்தில் பாலாஜி கோயம்புத்தூரின் பொறுப்பு அமைச்சராக இருந்து அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தீவிர களப்பணியாற்றி வந்தார். மீண்டும் அதே உத்வேகத்துடன் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க தீவிர களப்பணியாற்றுவார். அது உறுதி உறுதி என தெரிவித்து, செந்தில்பாலாஜியை பாராட்டினார்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னை பாராட்டியதற்கு செந்தில்பாலாஜி நன்றி தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தடைகள் வந்தபோதெல்லாம் தாயுமானவராய் இருந்து என்னை தாங்கிய திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான தளபதி மு.க.ஸ்டாலினின் இந்த அளவற்ற அன்பிற்கு நான் எந்நாளும் கடமைப்பட்டுள்ளேன். முதலமைச்சர் ஆணைக்கு இணங்க களப்பணியாற்றி நலத்திட்ட பணிகளை வேகப்படுத்தி கோயம்புத்தூர் மாவட்ட மக்களின் மேம்பாட்டுக்காக அயராது பாடுபடுவேன் என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜெயக்குமார்: முதல்வர் ஸ்டாலின், கருணாநிதி புகழ் பாடுகிறார்..! உதயநிதி, ஸ்டாலின் புகழ் பாடுகிறார்..!

தமிழக முதல்வர் ஸ்டாலின், கருணாநிதியின் புகழ் பாடுவதையும், உதயநிதி, ஸ்டாலின் புகழ் பாடுவதையும் அன்றாட நிகழ்வுகளாக வைத்துக் கொண்டிருக்கிறார்களே தவிர, மக்கள் நலம் காப்பதில் கவனம் செலுத்துவதில்லை என ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிற மாநிலச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன்பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். “தமிழக முதல்வர் ஸ்டாலின், கருணாநிதியின் புகழ் பாடுவதையும், உதயநிதி, ஸ்டாலின் புகழ் பாடுவதையும் அன்றாட நிகழ்வுகளாக வைத்துக் கொண்டிருக்கிறார்களே தவிர, மக்கள் நலம் காப்பதில் கவனம் செலுத்துவதில்லை.

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில், திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கையும், ஜனநாயக விரோதப் போக்கையும் மக்களிடையே எடுத்துச் சென்று சட்டப்பேரவை தேர்தலை அதிமுக சந்திக்கும். 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக படுதோல்வி அடையும். தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணி எப்படி இருக்கும் என்பதை கடந்த காலங்களை பார்த்துப் புரிந்து கொள்ளலாம்” என ஜெயக்குமார் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி அறிவுரை: எதுவேண்டுமானாலும் நடக்கலாம்..! “திமுக கூட்டணி கட்சித் தலைவர்களை விமர்சிக்காதீர்!”

திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் குறித்து அதிமுக நிர்வாகிகள் யாரும் விமர்சிக்க வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிற மாநிலச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் உற்சாக வரவேற்பளித்தனர். பின்னர் வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று, மாவட்டம் தோறும் நடைபெறும் உறுப்பினர் சேர்க்கை மற்றும் அதிக அளவில் இளைஞர்களை கட்சிக்குள் சேர்ப்பது, அவர்களுக்கு பொறுப்புகள் வழங்குவது, தற்போது அதிமுக மீது மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பன உள்ளிட்டவை குறித்து மாவட்டச் செயலாளர்களிடம் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, “ஒவ்வொரு மாவட்டத்திலும் உறுப்பினர் சேர்க்கை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதில் மந்தநிலை தென்பட்டால் மாவட்டச் செயலாளர் மீது நடவடிக்கை பாயும். அதை மனதில் வைத்து மாவட்டச் செயலாளர்கள் செயல்பட வேண்டும். விரைவில் உட்கட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக கட்சி நிர்வாகிகள் தயாராக வேண்டும். அதனைத் தொடர்ந்து பொதுக்குழு நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்.

தற்போது அரசியல் சூழல் மாறி வருகிறது. தேர்தல் நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் குறித்து அதிமுக நிர்வாகிகள் யாரும் விமர்சிக்க வேண்டாம். திமுக ஆட்சியில் நடந்து வரும் கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்கள் உள்ளிட்ட மக்கள் விரோத நடவடிக்கைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பணிகளை மாவட்ட செயலாளர்கள் தீவிரப்படுத்த வேண்டும்” என கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

செல்வப்பெருந்தகை: மக்களைப் பற்றி மட்டுமே கவலைப்படும் தலைவர் ராகுல் காந்தி தான்

எதைப் பற்றியும் கவலைப்படாமல், மக்களைப் பற்றி மட்டுமே கவலைப்படும் தலைவர் ராகுல் காந்தி தான் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை சீரமைத்து, வலிமைப்படுத்துவதற்கான கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, கட்சியின் தேசிய செயலாளர் சூரஜ் ஹெக்டே, காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் ராஜேஸ்குமார், முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய செல்வப்பெருந்தகை, “நாட்டுக்கு சுதந்திரத்தை வாங்கி கொடுத்தது காங்கிரஸ் கட்சி. வேறு கட்சியினரால் இதைக் கூற முடியுமா? காங்கிரஸ் கட்சியால் மட்டுமே கூற முடியும். காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம் எல்லோருக்கும் சேர்ந்த சித்தாந்தம். அந்த அளவுக்கு காங்கிரஸ் கட்சி கொள்கை கோட்பாடு உள்ளது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒரு கொடி பறக்கிறது என்றால் அது காங்கிரஸ் கட்சியின் கொடி தான்.

கூட்டணி குறித்து பேசும்போது கூட்டணி கட்சியினர் கிராம கமிட்டி உள்ளதா எனக் கேட்கிறார்கள். 100 சதவீதம் கிராமக் கமிட்டி கட்டமைப்பை உருவாக்க இருக்கிறோம். கிராம கமிட்டி மற்றும் பூத் கமிட்டிகளை அமைக்கும் வரை நாங்கள் தூங்கப் போவதில்லை. மற்ற கட்சியினர் எல்லாம் எங்களிடம் கமிட்டி உள்ளது என கூறுகிறார்கள். அதுபோல எங்களிடம் 100 சதவீதம் கமிட்டி இருக்கும்.

எதைப் பற்றியும் கவலைப்படாமல், மக்களைப் பற்றி மட்டுமே கவலைப்படும் தலைவர் ராகுல் காந்தி தான். மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சி இந்தியாவில் தலைமை ஏற்க வேண்டும். ராகுல் காந்தி தலைமை ஏற்க வேண்டும் என நாம் ஆசைப்பட்டால் மட்டும் போதாது, கடுமையாக உழைக்க வேண்டும்; கட்சியை பலப்படுத்த வேண்டும்” என செல்வப்பெருந்தகை பேசினார்.

செல்வப்பெருந்தகை: தமிழகம் முழுவதும் 100 சதவீதம் கிராமக் கமிட்டிகளை அமைக்க இருக்கிறோம்..!

திமுக – காங்கிரஸ் கூட்டணி இணக்கமாகவும், வலிமையாகவும், எஃகு கோட்டை போன்ற உறுதியடனும் இருக்கிறது. இண்டியா கூட்டணியை யாரும் சிதைக்க முடியாது. இதில் எந்த சந்தேகமும் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை சீரமைத்து, வலிமைப்படுத்துவதற்கான கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, கட்சியின் தேசிய செயலாளர் சூரஜ் ஹெக்டே, காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் ராஜேஸ்குமார், முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதன்பின்னர், செய்தியாளர்களின் கேள்விக்கு செல்வப்பெருந்தகை பதிலளித்தார். அப்போது, “தமிழகம் முழுவதும் 100 சதவீதம் கிராமக் கமிட்டிகளை அமைக்க இருக்கிறோம். சோனியா காந்தி பிறந்த தினமான டிசம்பர் 9-ஆம் தேதி கிராம தரிசனம் என்ற திட்டத்தை தொடங்கி, தலைவர்கள் ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று தங்கி பொதுமக்களிடம் குறை கேட்க உள்ளனர். கிராம தரிசனத்தை கன்னியாகுமரியில் முதலில் தொடங்க இருக்கிறோம். தை மாதத்தில் கிராம மற்றும் பூத் கமிட்டி மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

திமுக காங்கிரஸ் கூட்டணி இணக்கமாகவும், வலிமையாகவும், எஃகு கோட்டை போன்ற உறுதியுடனும் இருக்கிறது. இண்டியா கூட்டணியை யாரும் சிதைக்க முடியாது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. காமராஜர் தேசத்தின் சொத்து; அவரை யார் வேண்டுமானலும் கொண்டாடலாம். ஆனால், சொந்தம் கொண்டாட முடியாது. சொந்தம் கொண்டாடக் கூடிய உரிமை காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உண்டு. தவறுகளை சுட்டிக் காட்டுவதும், நல்ல திட்டங்களை கொண்டு வருவதை பாராட்டுவதும், வரவேற்பதும் தான் ஜனநாயகம். கருத்துகளை சொல்வதால், இண்டியா கூட்டணியில் பிளவு, சலசலப்பு இருப்பதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

பிரதமர் மோடி நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைத்து வருகிறார். இந்தியாவின் ஆயிரக்கணக்கான சதுர அடி நிலம் சீனா வசம் சென்று விட்டது. இந்தியாவுக்கு பாதுகாப்பு இல்லை. அந்நிய நாடுகளான இலங்கை, பங்களாதேஷ், சீனா, பூடான், நேபாளம் ஆகியவை பகை நாடுகளாக மாறி வருகின்றன. பாஜக ஆகாய தாமரை என மாநாடு நடத்தி, மோடி ஆட்சிக்கு வந்தால் மீனவர்கள் இறக்கமாட்டார்கள் என தெரிவித்தனர்.

ஆனால், தமிழக மீனவர்கள் இன்னமும் உயிரிழந்து தான் வருகின்றனர். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு குறித்து, சரவணன் வெளியிட்ட அறிக்கை அவரது சொந்தக் கருத்துத்தான்; கட்சியின் கருத்து இல்லை. அமரன் படத்திற்கு தமிழக அரசு வரிவிலக்கு அளிக்க வேண்டும். என முதலமைச்சரிடம் கேட்டுக் கொள்ள இருக்கிறேன்,” என செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

அதே விக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் பதிலடி..! எந்த திசையில் யார் வந்தாலும் திமுகவுக்கே வெற்றி..!

தமிழக வெற்றிக்கழகம் கட்சி தலைவர் விஜயின் முதல் மாநில மாநாட்டில் வைத்து தன் கட்சி கொள்கைகளை அறிவித்து, தனது அரசியல் மற்றும் கொள்கை எதிரிகள் யார் யார் என்பதை தெளிவாக எடுத்து உரைத்து தவெக தலைவர் விஜய் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில் தவெக தலைவர் விஜய்யின் மாநாடு நடைபெற்ற விக்கிரவாண்டியை அடுத்த திருவெண்ணெய் நல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கலைஞரின் முழு உருவ வெண்கல சிலையை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன்பின்னர் பேசிய உதயநிதி ஸ்டாலின் தவெக தலைவர் விஜய்க்கு பதிலடி கொடுத்தார்.

“எந்த திசையில் இருந்து யார் வந்தாலும் திமுகவுக்கே வெற்றி கிடைக்கும். டெல்லியில் இருந்து வந்தாலும் சரி, லோக்கலில் இருந்து வந்தாலும் சரி, திமுகவுக்கே வெற்றி. 2026 சட்டமன்ற தேர்தலில் எந்தக் கூட்டணி அமைந்தாலும் திமுகவுக்கே வெற்றி கிடைக்கும்,” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

ஆ.ராசா கண்டனம்: ஒட்டுமொத்த பெண்களை நடிகை கஸ்தூரி கேவலப்படுத்தி இருக்கிறார்..!

ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை குற்றப்பரம்பரையாக சித்தரிப்பதா? என திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆ.ராசா வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘பிராமண சமுகம் ஒடுக்கப்படுகிறது’ என்ற பெயரில் சென்னையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டு இருக்கிறது. ஊடகத்தின் கவனத்தை ஈர்க்க திராவிட இயக்கத் தலைவர்களைக் குறிப்பாகத் தந்தை பெரியார், டாக்டர் கலைஞர் உள்ளிட்டவர்களை அந்த ஆர்ப்பாட்டத்தில் இழிவுபடுத்திப் பேசியிருக்கிறார்கள். ‘பிராமணர்கள் பாதுகாப்பு வலியுறுத்தல்’ என்ற போர்வையில் திமுக அரசுக்கு எதிராகக் களங்கத்தை உருவாக்கத் திட்டமிட்டடு இருக்கிறார்கள்.

பண்பாட்டு அடிப்படையில் விந்திய மலைக்கு வடக்கே ஒரு வாழ்க்கை முறையும், விந்திய மலைக்கு தெற்கே ஒரு வாழ்க்கை முறையும் இருந்தது என்ற வரலாறு ஏன் இவர்களுக்குத் தெரியவில்லை? வானவியல், கணிதம், கட்டக்கலை, சிற்பம், ஓவியம் போன்ற நுண்கலைகளில் பழந்தமிழர் சிறந்து விளங்கிக் கொண்டிருந்த காலத்தில், கி.மு. 3000-ஆம் ஆண்டில் மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர்கள் தங்கள் ஆடு, மாடுகளுக்கு மேய்ச்சல் இடம் தேடி கைபர் போலன் கணவாய் வழியே உள்ளே நுழைந்தனர். கொஞ்சக் காலத்தில் பிராமணர்கள் மதத் தலைமையைக் கைப்பற்றினார்கள்.

இவர்களின் மனுதர்மம் வடக்கே உள்ள வாழ்வியல் முறையை வகுத்துத் தந்தது. பிறப்பால் மக்கள் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்று பிரிக்கப்பட்டனர். கடவுளிடம் நேரடித் தொடர்பு கொண்டவர்கள் பிராமணர்கள் என்றும், அரசாளப் பிறந்தவர்கள் சத்திரியர்கள் என்றும், வணிகம் செய்யப் பிறந்தவர்கள் வைசியர்கள் என்றும் இந்த மூன்று தரப்பினருக்கும் சேவை செய்யப் பிறந்தவர்கள் சூத்திரர்கள் என்றும் மனுதர்மம் கூறுகிறது.

அந்த மனுதர்மம் மூலம் பிராமணர்கள் மற்ற சமூகத்தினரை அடக்கி ஒடுக்கி கீழ்நிலைக்குத் தள்ளினார்கள். சூத்திரர்கள், உயர் சாதியினர் வாழும் பொதுத் தெருக்களில் நடக்க உரிமை மறுக்கப்பட்டது. கல்வி கற்கும் உரிமையும் பறிக்கப்பட்டது. கோயில்களின் உள்ளே சென்று வழிபடவும் உரிமை இல்லை. பொதுக் குளங்கள், கிணறுகளில் நீர் எடுக்கவும் உரிமை இல்லை 61601 மனுதர்மம் பெயரில் தீண்டாமை கொடுமைகள் அரங்கேற்றப்பட்டன. தமிழர்கள் சமத்துவ வாழ்வியல் முறையைக் கடைப்பிடித்தார்கள்.

வள்ளுவர் தனது குறளில், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வாசெய்தொழில் வேற்றுமை யான்’ என்று குறிப்பிடுகிறார். சங்க காலம்தொட்டு, ஏறத்தாழ பத்தாம் நூற்றாண்டு வரை தமிழர்கள் சமத்துவ வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். ஆண், பெண் சமத்துவம் தமிழர் வாழ்வில்மேலோங்கியிருந்தது. ஆனால், பிராமணர்கள் கடவுளின் பெயரால் மற்றவர்களை உயர்ந்தவர்கள் என்று சொல்வதுதான் இன்றைய பிரச்னைக்கு காரணமாக விளங்குகிறது.’மனிதராகப் பிறந்த அனைவரும் சமமானவர்களே’ என்ற அறிவியல் உண்மைக்கு மாறாக தம்மை உயர் சாதியினராகக் காட்டிக் கொள்ளக் குறிப்பிட்ட வகுப்பினர் இப்போதும் முயன்று கொண்டிருக்கிறார்கள் என்பதன் வெளிப்பாடுதான் அவர்கள் நடத்தியிருக்கும் ஆர்ப்பாட்டம். அது பாதுகாப்பு வலியுறுத்தல் ஆர்ப்பாட்டம் அல்ல.

தன் சமூக பெருமையை நிலைநாட்ட நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்.பிரதமர் மோடி ஆட்சியில் ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் செயலாளராக இருப்பவர்களின் 90 விழுக்காட்டுக்கும் மேலானோர் பிராமணர்கள். மற்ற பிரிவினர் இவர்களைக் காட்டிலும் தகுதி பெற்றவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு முக்கியத் துறைகளை நிர்வகிக்கும் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. அதுபோலவே, நீதியரசர்களில் மிகப் பெரும்பான்மையினர் உயர் ஜாதியினராக உள்ள நிலை பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்து வருவதை உயர் பொறுப்பில் உள்ளோரே சுட்டிக்காட்டும் நிலை உள்ளது..

தமிழ்நாடு அரசுப் பணிகளில் இட ஒதுக்கீட்டு முறையை சட்டப்படி நடைமுறைப்படுத்தி மனிதர்கள் யாராயினும் அவர்களுக்கு பாரபட்சம் காட்டாமல், கல்வித் தகுதிக்கு ஏற்ப பதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தென்னகத்தில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் பிராமணர்கள் தங்களை உயர் சாதியினராகவும், மற்றவர்கள் தங்களைவிடத் தாழ்ந்தவர்களாகவும் எண்ணிச் செயல்படுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?இந்து மதத்தில் ஏறத்தாழ 90 சதவிகித மக்கள் பிற்படுத்தப்பட்டவர்களாக பட்டியலினத்தவராகப் புறக்கணிக்கப்பட்ட நிலையில், 1916ஆம் ஆண்டு தொடங்கிய நீதிக்கட்சி, திமுக போன்ற திராவிட இயக்கங்கள் இந்த 90 சதவிகித மக்களின் சுயமரியாதைக்காகப் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

திராவிட இயக்கம், தென்னிந்திய நல உரிமைச் சங்கம், நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், தந்தை பெரியார் முன்னெடுத்து நடத்திய போராட்டங்களாலும் வேள்விகளாலும்தான் இன்றைக்கு ஒடுக்கப்பட்டவர்கள் முன்னேறி வந்து கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், “பாராட்டிப் போற்றி வந்த பழமை லோகம். ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்’ என முழக்கமிட்டார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.

ஒடுக்கப்பட்டவர்கள் உயர்வுக்கு வருவதைப் பொறுத்துக் கொள்ளமுடியாமல்தான் அவர்கள் மீது இன்றைக்கும் களங்கத்தை வீசுகிறார்கள்.”பிராமணர் அல்லாதார் பதவிகளுக்கு வந்தால் லஞ்சம் வாங்குவார்கள்’எனச் சொல்லி ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை மிக மோசமாகஇழிவுபடுத்தியிருக்கிறார் முன்னாள் நடிகை கஸ்தூரி. டிவி விவாதநிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய நடிகை கஸ்தூரி, ‘திறமை அடிப்படையில் பிராமணர் அல்லாதார் பதவிகளுக்கு வந்ததால் லஞ்சம் வாங்குகின்றனர்என்று பேசி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சமூகத்தினர் என ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் அனைவரையும் மிக மோசமானவர்களாகச் சித்தரிக்க முயன்றிருக்கிறார்.

பிராமணர் சமூகம் உயர்வானது நிலைநிறுத்த, ஒடுக்கப்பட்ட சமூகத்தினரைக் ‘குற்றப்பரம்பரை’ வர்ணம் அடித்திருக்கிறார்.”தெலுங்கர்கள் அந்தப்புரத்துச் சேவகர்கள்” எனச்சர்ச்சை கருத்தைச் சொல்லிவிட்டு, “அப்படி சொல்லவில்லை’ என வியாக்கியானம்பேசுகிறார். சினிமாவில் மார்க்கெட் போன பிறகு தன்னை நிலைநிறுத்திக்கொள்ளஊடக வெளிச்சம் தன் மீது விழ…அதன் மூலம் அரசியல் அங்கீகாரம் பெற..பிற சமுதாயத்துக்கு பெண்களையும் அதிகாரிகளையும்கேவலமாகச் சித்தரிப்பதை அனுமதிக்கவே முடியாது. இது இன்னொரு ஆரிய ஆதிக்க உணர்வின் வெளிப்பாடு. அதனைத் திராவிட மாடல் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. ஆரியத்தை எப்போது தலைதூக்க விடமாட்டோம்.

தெலுங்கர்களை மட்டுமல்ல.. பெண்களையே கஸ்தூரி கேவலப்படுத்தியிருக்கிறார். ‘அந்தப்புரத்து சேவகர்கள்’ என்று ஒரு பெண்ணே பெண் இனத்தையே கேவலமாகச் சித்தரிப்பவர்களுக்கு மற்ற இனத்தைப் பற்றி என்ன கவலை இருக்கப் போகிறது? இந்து கோயில்களுக்குப் பெண்களை நேர்ந்து விடுவதைச் சட்டத்துக்குப் புறம்பானதாக அறிவித்து, தேவதாசி ஒழிப்புச் சட்டத்தைச் சென்னை மாகாண சட்டமன்றத்தில் 1947-ல் நிறைவேற்றி தேவதாசிகளுக்குத் திருமணம் செய்யும் உரிமையைத் பெற்றுத் தந்த மண் தமிழ்நாடு. இங்கே ஆரியம் வெற்றி பெறாது.

“பட்டியலின மக்களுக்கு இருப்பதுபோல, பிராமணர்களைப் பாதுகாக்கச் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்” என அந்த ஆர்ப்பாட்டத்தில் முழங்கியிருக்கிறார்கள். பட்டியலினத்தவரை மிகவும் கீழ் சாதியினராக நினைப்பவர்கள், அவர்களுக்கு இருப்பது போலவே சிறப்புச் சட்டம் வேண்டும் என்பதைக் கேட்டு சிரிக்கத்தான் தோன்றுகிறது. எல்லா சமூகத்தினரைப் போலவே பிராமண சமுகமும் எந்த பிரச்னையும் இல்லாமல் இங்கே வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கு ஏதோ நாளும் அநீதி இழைக்கப்படுவதாகவும், அவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு ஒடுக்கப்படுவதாகவும்கூறி பொய்யான தோற்றத்தைக் கட்டமைக்க ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.

அரசுத் துறை உயர் பதவிகள் என்றாலும் தனியார்த் துறை பணிகள்என்றாலும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளாக இருந்தாலும் அனைத்து உயர் அதிகாரங்களையும் அனுபவித்துக் கொண்டு, தங்களுக்கு பாதுகாப்பு இல்லை,ஒதுக்கி வைக்க முயற்சி நடக்கிறது என்றெல்லாம் கூப்பாடு போடுவது,பட்டியல் சமூக மக்களுக்கான சிறப்புச் சட்டங்களைக் கேலி செய்யும் முயற்சி.அனைத்து சமுகத்தினரும் பாதுகாப்பாக வாழ்வதற்கோ, விரும்பிய தொழிலை நிம்மதியாக செய்வதற்கோ எந்தவொரு தடையும் தமிழ்நாட்டில் இல்லை என்பது நாடறிந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான ஆட்சி அனைத்து சமூகத்தினரையும் அரவணைத்துச் செல்கிறது. சாதி மோதல்களோ மதக் கலவரமோ இல்லாமல், ‘எல்லோருக்கும்

“எல்லாம்” என்ற கொள்கையைக் கடைப்பிடித்துச் செல்கிறது. சமாதான சகவாழ்வு, சமத்துவ நல்லிணக்கம் என்ற அடிப்படையில் இயங்கி வருகிறது. சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வரும் தமிழ் மண்ணில் சமூக அமைதியைக் குலைக்க, ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் அவதூறு பிரசாரத்தை மேற்கொண்டு பீதியைக் கிளப்புவது உள்நோக்கம் கொண்டது.பிராமண சமூகத்தினருக்கு எதிராக எந்த சிறு வன்முறையும் தமிழ்நாட்டில் கடந்த நான்காண்டுகளில் நடைபெறவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாப்புக்கான சட்டத்தை நீர்த்துப் போக வைப்பதற்காகவோ அல்லது தங்கள் சமூகம் மோசமாகப் பாதிக்கப்படுவது போல ஒரு தோற்றத்தை உருவாக்கவோ திட்டமிடுகிறார்கள் என்பது அப்பட்டமாகவே வெளிப்பட்டிருக்கிறது.

திமுகவின் ஐம்பெரும் முழக்கங்களிலேயே ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்; வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம் என்றிருக்கிறது; அவற்றில் திமுக என்றும் உறுதியாக இருக்கிறது. ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து அதனை நிறைவேற்றியும் வருகிறது. திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை. திராவிட மாடல் ஆட்சியின் முதன்மையான இலக்கு ‘அனைவருக்கும் அனைத்தும்; எல்லோருக்கும் வளர்ச்சி; எளியோருக்கும் ஏற்றம்’ என்பதுதான். வாய்ப்புகளை உருவாக்கி, புறந்தள்ளப்பட்ட மக்களுக்கு அந்த வாய்ப்புகள் சென்றடையச் செய்யவே நாளும் பாடுபட்டு வருகிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு. வன்முறையிலோ வெறுப்பு அரசியலிலோ என்றைக்கும் நம்பிக்கையற்ற அரசு இது! வெறுப்பின் பெயரால் அரசியல் ஆதாயம் தேடவும் திராவிட மாடல் ஆட்சிக்குக் களங்கம் கற்பிக்கவும் எடுக்கப்படும் முயற்சிகள் ஒருபோதும் இம்மண்ணில் வெற்றி பெறாது என ஆ.ராசா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் பாணியில் ஸ்டாலின் அட்டாக்: புதுசா கட்சி தொடங்குறவன் எல்லாம் திமுக அழியணும்னு நினைக்கிறாங்க..!

யார் யாரோ, வருகிறவர்கள் எல்லாம் புதிது புதிதாக கட்சித் தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும், ஒழிய வேண்டும், என்று கூறி வருகின்றனர் என விஜய் பாணியில் மு.க. ஸ்டாலின் பதிலளித்து உள்ளார்.

நடிகர் விஜய் புதிதாக தொடங்கியுள்ள தவெக முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெற்றது. மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது தான் எங்களின் கொள்கை. கொள்கை ரீதியாக பாஜகவும், அரசியல் ரீதியாக திமுகவும் எங்கள் எதிரிகள் என திமுக குறித்து கடும் விமர்சனங்களை விஜய் முன்வைத்டூ இருந்தார்.

மேலும் விஜய் பேசுகையில், பிளவுவாத அரசியல், ஊழல் மலிந்த அரசியல் ஆகிய இரண்டையும் எதிர்க்க போகிறோம். மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி எனக் கூறி ஏமாற்றுகின்றனர். எங்கள் கட்சி வண்ணம் தவிர வேறு வண்ணத்தை எங்கள் மீது பூச முடியாது. மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கையை முன்னிறுத்தி செயல்படுவோம் என விஜய் பேசினார்.

தொடர்ந்து பேசுகையில், திராவிட மாடல் என்ற பெயரில் பெரியார், அண்ணா புகைப்படங்களை வைத்து கொண்டு தமிழ்நாட்டை சுரண்டும் குடும்ப சுயநல அரசியல் செய்பவர்கள்தான் தான் தங்களது அரசியல் எதிரி இவ்வாறு ஆளுங்கட்சியான திமுகவை தாக்கி விஜய் பேசியிருந்தார்.

விஜய் மாநாட்டில் பேசியது குறித்து அண்மையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, எல்லாவற்றுக்கும் எங்களின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலளித்துள்ளார். அதற்கு மேல் பதில் சொல்ல விரும்பவில்லை என நாசுக்காக தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னை கொளத்தூர் தொகுதியில் முதல்வர் படைப்பகத்தை திறந்து வைத்து, அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, திமுக அரசு சிறப்பாகச் செயல்படுவது சிலருக்கு பிடிக்கவில்லை. யார் யாரோ, வருகிறவர்கள் எல்லாம் புதிது புதிதாக கட்சித் தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும், ஒழிய வேண்டும், என்று கூறி வருகின்றனர்.

அவர்களுக்கெல்லாம் நான் பணிவோடு கேட்டுக் கொள்வது, நான்கு ஆண்டுகளைத் தொடக்கூடிய நிலையில் இந்த ஆட்சி செய்திருக்கக்கூடிய சாதனைகளை எண்ணிப் பார்க்க வேண்டும். அண்ணா கூறுவதுபோல் ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், வாழ்க வசவாளர்கள்! அதைத்தான் நானும் சொல்ல விரும்புகிறேன். எங்களுடைய போக்கு, மக்களுக்கு செய்யக்கூடியதுதான்.

தேவையில்லாமல் எல்லோருக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. தேவையும் இல்லை. எங்களுடைய நேரத்தை வீணடிக்க நாங்கள் விரும்பவில்லை. மக்களுக்கான பணி செய்வதற்கே எங்களுக்கு நேரம் போதவில்லை. எந்த நம்பிக்கையோடு மக்கள் இந்த ஆட்சியை எங்களிடம் ஒப்படைத்தார்களோ அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவோம்” என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

எடப்பாடி பழனிசாமி: திமுக ஆட்சியில் பட்டியல் இன மக்களுக்கு எந்தவித பாதுகாப்பு இல்லை..!

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் பட்டியல் இன மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. திமுக ஆட்சியில் பட்டியல் இன மக்களுக்கு எந்தவித பாதுகாப்பும் கிடையாது. என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் எடப்பாடியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அதன் பின்னர், அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, அதிமுக மக்களுக்காக தொடங்கி, உழைக்கிற கட்சியாக உள்ளது. தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது நிறைய திட்டங்களை மக்களுக்காக செய்துள்ளோம். அப்படி இருக்கும் போது தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அதிமுகவை எப்படி விமர்சிப்பார்? அவர் விமர்சிக்காதது மற்றவர்களின் ஆதங்கமாக உள்ளது. மேலும் தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் திமுக ஆட்சியில் நடக்கும் ஊழல்கள் குறித்து விசாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுக கூட்டணி பலமாக இருப்பதாக சொல்வது நம்பத்தகுந்ததாக இல்லை. 3 ஆண்டு காலம் எந்த ஒரு போராட்டத்தையும் நடத்தாத திமுக கூட்டணி கட்சிகள், தற்போது ஒவ்வொரு போராட்டமாக அறிவித்து வருகிறார்கள். கூட்டணி ஆட்சி குறித்து காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். இவ்வளவு பிரச்சனைகளை வைத்துக்கொண்டு திமுக கூட்டணி பலமாக இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் பட்டியல் இன மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. திமுக ஆட்சியில் பட்டியல் இன மக்களுக்கு எந்தவித பாதுகாப்பும் கிடையாது. அதிமுகவில் எந்த ஒரு பிளவும் இல்லை. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது பொதுக்குழு உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றி நீக்கப்பட்டுள்ளார்கள். அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு இனிமேல் இடம் கிடையாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.