ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் ஒரு வீட்டில் குட்கா பதுக்கியுள்ளதாக புஞ்சை புளியம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த வீட்டில் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அங்கு சாக்கு மூட்டைகளில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 134 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது. அப்போது, ஒரு நபர் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடினார்.
தொடர்ந்து, வீட்டில் இருந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் அவர் வழக்கறிஞர் ரேகா என்பதும், தப்பி ஓடியது அவரது கணவர் சந்தோஷ் என்றும் தெரியவந்தது. வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டிய காரில் கர்நாடக மாநிலத்தில் இருந்து குட்காவை கடத்தி வந்துள்ளனர்.
பின்னர், அவரது கணவர் ஸ்கூட்டரில் புஞ்சைபுளியம்பட்டி, அன்னூர், அவிநாசி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மளிகை கடைகளுக்கு சப்ளை செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர், வழக்கறிஞர் ரேகாவை கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.