விருதுநகர் மாவட்டத்தின் விருதுநகர் சட்டமன்றத் தொகுதி, விருதுநகர் நகராட்சி, விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் அருப்புக்கோட்டை ஒன்றியத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியது. இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், அதிமுக வேட்பாளர் வி.ஜி. கணேசன், நாதக வேட்பாளர் லட்சுமணன் மற்றும் தவெக வேட்பாளர் எஸ்.பி.செல்வம் ஆகியோருடன் நான்கு முனைப் போட்டியில் வி.ஐ.பி அந்தஸ்து பெற்ற தொகுதி.
இந்த, விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் இதில் உள்ளனர். 96,436 ஆண் வாக்காளர்கள், 1,02,141 பெண் வாக்காளர்கள் மற்றும் 39 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1,98,616 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 2021 தேர்தலில் திமுக வேட்பாளர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் எஸ். பாண்டுரங்கன் அவர்களை 21339 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில், தேமுதிக-வின் மாநில இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் போட்டியிட்டு அவரை எதிர்த்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான மாணிக்கம் தாகூர், 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக-வுடன் கூட்டணி அமைத்துள்ள தேமுதிக விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் வேட்பாளராக களமிறக்கியுள்ளார்.
விஜய பிரபாகரன் அதிமுக, பாஜக-வை விமர்சிப்பதைக் குறைத்துக் கொண்டு, திமுக அரசின் சாதனைகள், திட்டங்களை முன்வைத்து வாக்கு கேட்டு வருகிறார். மேலும் இத்தொகுதியில் இளைஞர்களின் வாக்குகளும் கணிசமாக இருப்பதால், நாதக வேட்பாளர் லட்சுமணன், தவெக வேட்பாளர் செல்வம் ஆகியோர் இளைஞர்களின் வாக்குகளையும், குறிப்பாக முதல் தலைமுறை வாக்காளர்களை குறி வைத்து தேர்தல் பிரசாரத்தையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தொகுதிக்கு புதுமுகமான அதிமுக வேட்பாளராக தொழிலதிபர் கணேசன் போட்டியிடுகிறார். இந்த முறையும் தொகுதி பாஜக-விற்கு ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கையில், கடந்த ஆறு மாதங்களாகவே களப்பணி ஆற்றி வந்த விருதுநகர் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் பாண்டுரங்கன் பெருத்த ஏமாற்றத்தில் உள்ளார். எனவே, கணேசனின் வெற்றிக்காக பாஜக-வினர் உழைப்பது சந்தேகமே. ஆகையால், விருதுநகரில் இலையை சூரியன் சுட்டெரிக்க முரசு மீண்டும் ஒலிக்க அதிகம் வாய்ப்பு உள்ளது.