திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரம்பரிய நெல் திருவிழா ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் ஆராய்ச்சி மையம் சார்பில் தொடங்கியுள்ளது. திருத்துறைப்பூண்டி உழவர் சந்தை பகுதியில் இருந்து இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மற்றும் பாரம்பரிய நெல் மீட்பாளர் நெல் ஜெயராமன் உள்ளிட்டவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு நெல் கோட்டை வைத்து மாட்டுவண்டியில் காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு விவசாயிகள் ஊர்வலமாக வந்து இந்த திருவிழாவில் பங்கேற்றுள்ளனர்.

இந்த நெல் திருவிழாவில் திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி தஞ்சை, நாகை, திருச்சி, தர்மபுரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற பிற மாவட்டங்களில் இருந்தும் இயற்கை முறையில் சாகுபடி செய்யும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர். இயற்கை முறையில் பாரம்பரிய நெல் சாகுபடியில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட விவசாயிகள் மற்றும் வேளாண் கல்லூரி மாணவர்கள் இந்த நெல் திருவிழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் 174 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் அரங்கங்கள் அமைக்கப்பட்டு அவற்றை ஏராளமான விவசாயிகள் பார்வையிட்டு வருகின்றனர். நெல் திருவிழாவின் முக்கிய நோக்கமான இயற்கை பாரம்பரிய நெல் ரகங்களை பங்கேற்றுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் 2 கிலோ இலவசமாக வழங்கப்பட்டு அவற்றை சாகுபடி செய்து அடுத்த ஆண்டு நான்கு கிலோவாக விவசாயிகள் திருப்பி அளிக்க உள்ளனர். இதன் மூலமாக பாரம்பரிய இயற்கை நெல் ரகங்கள் சுழற்சி முறையில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் பரவலாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.