உலகம் போற்றுகின்ற ஒரு பாரத தலைவரை, சாதாரண மனிதராக எண்ணிக்கொண்டு கேலியாக பேசிய விஜய்யின் பேச்சை கடுமையாக கண்டிக்கத்தக்கது. ஆகவே, நான் சொன்னது போல இனிவருங்காலங்களில் இவை அனைத்தும் தவிர்த்து நாகரிகமான அரசியலில் ஈடுபட வேண்டும் என சரத்குமார் தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் விஜய் கட்சியின் முதலாவது பொதுக்குழுக் கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில் பேசிய விஜய் மத்தியில் ஆளும் பாஜக மற்றும் தமிழகத்தை ஆளும் திமுகவை விஜய் நேரடியாக விமர்சித்துப் பேசினார். நடிகர் விஜய் குறிப்பாக முதல்முறையாகப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெயரைக் குறிப்பிட்டு விமர்சித்தார்.
மேலும், 2026-ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் என்பது மக்கள் இதுவரை பார்க்காத ஒன்றாக இருக்கும் எனக் குறிப்பிட்ட அவர், அந்தத் தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே தான் போட்டி நிலவும் என்றும் அவர் குறிப்பிட்டார். விஜய்யின் இந்த அரசியல் பேச்சு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. தவெக தலைவர் விஜய் பேச்சுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் பல்வேறு கருத்துகளைக் கூறி வருகிறார்கள்.
இந்நிலையில், சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”புதிதாக திரு.விஜய் துவங்கியிருக்கின்ற தவெகவின் முதல் பொதுக்குழுக் கூட்டத்தில் உண்மைக்கு புறம்பாக மத்திய அரசை விமர்சித்து பேசியது விநோதமாகவும், வேடிக்கையாகவும் இருந்தன. பாரத பிரதமருக்கு தமிழகம் என்றால் அலர்ஜி, தமிழக GST வருவாயை வாங்கிக்கொண்டு பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதியே ஒதுக்குவதில்லை,

இருமொழிக்கொள்கையில் உறுதி, வக்பு சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும், தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை என்று மாநில அரசு சொல்லும் அதே கருத்துக்களை விஜய் பிரதிபலித்திருப்பது தான் மேலும் வேடிக்கை. உலக அளவில் இந்திய பொருளாதாரம் முன்னேறிவரும் நிலையில், விரைவில் 3-வது இடத்தை எட்டிப்பிடிக்கும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவிக்கும் சூழலில், நமது தேசத்தை, தேசத்தின் பொருளாதாரத்தை வளர்ச்சிகரமான முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை, சர்வதேச தலைவர்களும் வியந்து பாராட்டி வருவதை நாம் அனைவரும் அறிவோம்.
இத்தகைய பெருமைக்குரிய பாரத பிரதமர் குறித்து எதிர்மறையாக பேசுவதற்கு முன்பாக எதை பேசினாலும், உண்மையை படித்துப்பார்த்து, தமிழ்நாட்டில் எந்தெந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருக்கின்றன, எதற்காக மாநில அரசுக்கு கல்விக்கான நிதியை விடுவிக்காமல் மத்திய அரசு இருக்கிறது, வரிப்பங்கீடு ஏன் குறைகிறது, எவ்வளவு ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள் என்ற புள்ளிவிபரங்களை அறிந்து, புரிந்து கொண்டு, ஆராய்ந்து தெளிவாக பேசியிருந்தால், அதுவும் பொதுக்குழுவில் பேசியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
2004-14 காலகட்டத்தில், தமிழ்நாட்டிற்கு வரிப் பகிர்வு ரூ. 94,971 கோடியாக இருந்தது. ஆனால், 2014-24 வரையிலான காலகட்டத்தில் ரூ. 2,92,013 கோடி வழங்கப்பட்டுள்ளது. இது 207% அதிகமாகும். 2004-14 ஆம் ஆண்டில் மத்திய அரசின் உதவி மற்றும் அரசின் மானியங்கள் மூலம் ரூ. 57,925 மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால், 2014-24 காலகட்டத்தில் ரூ. 2,55,875 கோடி வழங்கப்பட்டது. இது 342% அதிகமாகும் என மத்திய நிதியமைச்சர் ஆதாரப்பூர்வமாக பேசியுள்ளதை அவர் படிக்கவில்லை என நினைக்கிறேன்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயி தலைமையிலான பாஜக ஆட்சியில் தங்க நாற்கரச்சாலை திட்டம் இந்தியாவிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்திய பொருளாதார முன்னேற்றத்திற்கு முதன் முதல் காரணமாக அது அமைந்தது என்பதை நாம் அனைவரும் இன்று வரை உணர்வோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது போன்று நாட்டின் முன்னேற்றத்திற்காக செயல்பட்டு கொண்டிருப்பது பாரதிய ஜனதா கட்சி என்பதை நீங்கள் உணர மறந்துவிட்டீர்கள்.
அதுமட்டுமன்றி தமிழகத்தில் நெடுஞ்சாலை வசதிகள், சாலை போக்குவரத்து, இரயில்வே உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் மேம்பாடு, புதிய விமானநிலையங்கள் உருவாக்கம், பிரதமரின் வீடுகட்டும் திட்டம், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு, சிலிண்டர் மானியம், பிரதமரின் மருத்துவ காப்பீடு, மக்கள் மருந்தகம், சிறு, குறு, நடுத்தர தொழில் மேம்பாட்டிற்காக பல கோடி கடனுதவித் திட்டங்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன்வளர் பயிற்சி, கல்வி மேம்பாடு என எத்தனையோ திட்டங்களை அறிவித்து வெற்றிகரமாக செயல்படுத்தி இருப்பது மத்திய அரசு என்பதையும் நீங்கள் உணர மறந்துவிட்டீர்கள்.
ஆளுங்கட்சிக்கு சாதகமாக பேசுவதாக எண்ணி, மத்தியிலே நடந்து கொண்டிருக்கின்ற சிறந்த ஆட்சியை, ஒரு இந்திய குடிமகனாக பாரதத்தை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்லும் பாரத தலைவர், உலகம் போற்றுகின்ற ஒரு சாதனை மனிதரை, சாதாரண மனிதராக எண்ணிக்கொண்டு கேலியாக பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. ஆகவே, ஏற்கெனவே நான் சொன்னது போல இனிவருங்காலங்களில் இவை அனைத்தும் தவிர்த்து அனைத்து தரவுகளையும் ஆராய்ந்து உண்மையான கருத்துகளை பேசி ஆக்கப்பூர்வமான, நாகரிகமான அரசியலில் ஈடுபடுவீர்கள் என நம்புகிறேன்.” என சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.