அதிமுக போல பாஜகவுடன் கள்ளக் கூட்டணி வைக்கும் அவசியம் திமுகவுக்கு இல்லை..!

முன்னாள் முதலமைச்சரும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கருணாநிதி நூற்றாண்டை குறிக்கும் விதமாக 100 ரூபாய் நினைவு நாணயத்தில் தமிழ் வெல்லும்’ என்ற வாசகம் போதித்த கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டார். அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.

கருணாநிதி உருவம் பொறித்த நாணயத்தில் இந்தி எழுத்து ஏன் இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கேட்பதால் அவருக்கு என்ன ஆச்சு என்ற கவலை மேலும் அதிகரிக்கிறது. இந்தியாவில் உள்ள நாணயங்கள் எதுவாக இருந்தாலும் அதில் ஆங்கிலமும் இந்தியும் இருப்பது வழக்கம். அ.திமு.க.வை உருவாக்கிய எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நாணயம் வெளியிடப்பட்டிருப்பதையும் அதிலும் இந்தி எழுத்துகள் இருப்பதையும் கூடவா எடப்பாடி பழனிசாமி அறியவில்லை?

கருணாநிதிக்காக வெளியிடப்பட்டுள்ள நாணயத்தில்தான் ‘தமிழ் வெல்லும்’ என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது. இதைக்கூட உணராமல் எடப்பாடி பழனிசாமி உளறியிருப்பதால் அவரை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பதில்லை எனப் புரியவில்லை.

எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக, தமிழ்நாடு அரசின் சார்பில் கருணாநிதிக்கு நிறுவப்பட்ட சிலையை, பாஜக தலைவராக ஒரு காலத்தில் இருந்த இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்ததை இப்போது விமர்சிக்கிற எடப்பாடி பழனிசாமி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்ட கருணாநிதி சிலையைத் திறந்து வைத்தது காங்கிரஸ் தலைவராக இருந்த அன்னை சோனியா காந்திதான் என்பதையாவது அறிவாரா?

உறவுக்கு கை கொடுப்போம்-உரிமைக்கு குரல் கொடுபபோம் என்பதே கருணாநிதி எங்களுக்கு கற்றுத் தந்திருக்கும் அரசியல் இலக்கணம். அந்த வகையில்தான் மத்திய அரசின் நாணயம் வெளியீட்டு விழாவும், ஆளுநரின் தேநீர் விருந்தும் நடைபெற்றது. திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், தமிழ்நாட்டிற்குரிய நிதியை வழங்காமலும்-தமிழ்நாட்டிற்கானத் திட்டங்களை செயல்படுத்தாமலும் வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஒருமுறையாவது படித்துப் பார்க்கட்டும்.

ஆதரித்தாலும் எதிர்த்தாலும் அதில் உறுதியாக இருக்கின்ற இயக்கம் திமு கழகம் என்பதை இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திராகாந்தி அம்மையாரே கருணாநிதியின் தலைமைப் பண்பு குறித்து பாராட்டியிருக்கிறார். அதே தலைமைப் பண்பையும் பக்குவமான அணுகுமுறையையும் இன்றைய கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நிறைந்திருக்கிறது.

அதிமுகவைப் போல பாஜகவுடன் கள்ளக்கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை. பாஜகவை எப்படியாவது தமிழ்நாட்டில் வளரச் செய்ய வேண்டும் என்று சொந்தக் கட்சியான அதிமுகவையே அழித்துக் கொண்டிருக்கிறார் என்று அவரது கட்சித் தொண்டர்களே குமுறுகின்ற நிலையை மறைப்பதற்கு, திமுக மீது பழி போட்டுத் திசை திருப்ப நினைக்கும் எடப்பாடி பழனிசாமியின் நாடகத்தை பொதுமக்கள் நம்பமாட்டார்கள்.

அத்திக்கடவு- அவினாசி திட்டம்: அத்திக்கடவு-அவினாசி திட்டம் என்பது மேற்கு மாவட்ட மக்களின் நெடுங்கனவு. அதனை 1972 -ஆம் ஆண்டில் முதன் முதலில் செயல்படுத்த கருணாநிதி முனைந்தவர். அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும், ஒவ்வொரு முறையும் திமுக ஆட்சி அமைந்தபோது மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகளையும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் அந்தத் திட்டம் எப்படி செயல்படுத்தப்பட்டது என்பதை மேற்கு மாவட்ட மக்கள் அறிவார்கள்.

அதனால் தான் மேற்கு மாவட்ட மக்களும், விவசாயிகளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர் தலைமையிலான அரசுதான் உறுதியான நடவடிக்கைகள் மூலம் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியுள்ளது. கருணாநிதியை மத்திய அரசே கொண்டாடுவதையும், மேற்கு மாவட்ட மக்களின் நெடுங்காலக் கனவை திராவிட மாடல் அரசு நிறைவேற்றியிருப்பதையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் ‘காந்தாரி’ போலக் கதறுகிறார் எடப்பாடி பழனிசாமி. பதற்றத்தில் அவர் பேசுவதெல்லாம் பிதற்றலாக உள்ளது என ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலைஞர் மற்றும் அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை..!

முன்னாள் முதலமைச்சரும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நூறு ரூபாய் நினைவு நாணயம் வெளியிடப்படுகிறது. இந்த நாணையத்தை கருணாநிதியின் பிறந்த நாளான கடந்த ஜுன் 3-ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் இந்த நாணயம் குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாமல் போனது.

நாணயத்திற்கான நடைமுறைகள் முடிந்த நிலையில், நாணய வெளியீட்டு விழாவை இன்று நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் இன்று நடக்கிறது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கருணாநிதி நூற்றாண்டை குறிக்கும் விதமாக 100 ரூபாய் நினைவு நாணயத்தை இன்று மாலை 6.50 மணியளவில் வெளியிடவுள்ளார். அதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின் பெற்று கொள்ளவுள்ளார்.

இந்த நாணயத்தினை வெளியிட தமிழகம் வந்துள்ள மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நாணய வெளியீட்டு விழாவுக்கு முன்னதாக கலைஞர் மற்றும் அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். இதனை அடுத்து கலைஞர் நினைவிடம் அருகே உள்ள கலைஞர் உலகம் எனப்படும் அருங்கட்சியத்தை பார்வையிட்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை தொடங்கி வைத்தார்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021-ஆம் ஆண்டு ஆட்சி அமைந்த பிறகு, அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற உறுதிபூண்டு, ரூ.1,916.41கோடி மதிப்பீட்டில் திருத்திய நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்பட்டன.அதன் தொடர்ச்சியாக திட்டப்பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளன. இந்நிலையில், அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் நேற்று தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் பவானி ஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்தில் இருந்து ஆண்டுக்கு 1.50 டிஎம்சி உபரி நீரை வினாடிக்கு 250 கனஅடி வீதம் 70 நாட்களுக்கு நீரேற்று முறையில், 1,065 கிமீ நீளத்துக்கு கொண்டு செல்ல முடியும். நிலத்தடியில் குழாய் பதிந்து கொண்டு செல்லப்படும் இந்த தண்ணீர், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 24,468 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில், நீர்வளத்துறையின் 32 ஏரிகள், ஊராட்சி ஒன்றியத்தின் 42 ஏரிகள் மற்றும் 971 குளம், குட்டைகள் என மொத்தம் 1,045 நீர்நிலைகளில் நிரப்பப்படும்.

திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, நீர்வளத்துறையின் செயலாளர் க.மணிவாசன், நீர்வளத்துறையின் முதன்மை தலைமைப் பொறியாளர் சா.மன்மதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஈரோட்டில் இருந்து காணொலி மூலமாக அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், கே.இ.பிரகாஷ் எம்.பி.,எம்எல்ஏ.க்கள் ஈ.ஆர்.ஈஸ்வரன், ஏ.ஜி. வெங்கடாசலம், சி.சரஸ்வதி, ஈரோடு மேயர் எஸ்.நாகரத்தினம், ஈரோடு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, திருப்பூர் ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், கோவை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இத்திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அவரது எக்ஸ் பக்கத்தில், 1972-ல் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி செயல்படுத்திட முனைந்த அத்திக்கடவு – அவிநாசி திட்டம், பல்வேறு ஆட்சி மாற்றங்களால் தடைபட்டிருந்தது.

இந்த திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி அந்தப் பகுதி மக்கள்கடந்த 2016-ம் ஆண்டு காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தபோது, அவர்களை நேரில் சந்தித்து, திமுக ஆட்சியில் இந்த திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தேன்.

இந்த திட்டத்துக்கான பணிகள் 2019-ல் தொடங்கப்பட்டிருந்தாலும், நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகுதான், இத்திட்டத்தை நிறைவேற்றிட உறுதிபூண்டு, ரூ.1,916.41 கோடி மதிப்பீட்டில் திருத்திய நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்பட்டன.

ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வுக்கு வளம் சேர்க்கும் இந்த திட்டத்தை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாறு அந்த பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை: 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு..!:

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் காலை 10.30 மணியளவில் கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அழைப்பு விடுத்துள்ளார். அடுத்த மாதம் 15-ஆம் தேதி நடைபெறும் திமுக-வின் முப்பெரும் விழா குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் அமைப்பு ரீதியாக மாவட்டங்களை அதிகரித்து புதிய நிர்வாகிகளை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், கட்சி வளர்ச்சி குறித்தும், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், கட்சியின் முப்பெரும் விழா குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய ‘நாடாளுமன்ற தேர்தல் 2024 -40/40 திசையின் தீர்ப்பு’ என்ற நூல் வெளியிடப்பட்டது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி பெற்று கொண்டார். தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றியை தென் திசையின் தீர்ப்பு புத்தகம் ஆவணமாக பதிவு செய்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் 40 தொகுதியிலும் திமுக கூட்டணி எப்படி வெற்றியை சாத்தியமாக்கியது என்பது உள்ளிட்டவை புத்தகத்தில் இடம்பெற்றது.

பின்னர் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், நாடாளுமன்றத் தேர்தலில் 40 க்கு 40 வெற்றிக்கு உழைத்த நிர்வாகிகள், வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி. ⁠தொடர்ந்து 10 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளோம். சுணக்கமின்றி செயல்பட்டால் அடுத்த முறையும் திமுக ஆட்சிதான். ⁠200 தொகுதிகளில் வெற்றி பெறுவதுதான் இலக்கு. அந்தளவுக்கு நலத்திட்டங்களை மக்களுக்கு அளித்திருக்கிறோம். வாக்குகளாக மாற்ற களப்பணி அவசியம்.

ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதை மாவட்ட செயலாளர்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். ⁠சில மாவட்டச் செயலாளர்கள் மீது புகார்கள் வந்திருக்கின்றன. நிர்வாகிகள் குறித்தும புகார்கள் உள்ளன. அனைத்து புகார்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும்.. ⁠சார்பு அணிகளை மாவட்டச் செயலாளர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அனைத்து பூத் கமிட்டிகளையும் செம்மைப்படுத்த வேண்டும். ⁠கழகத்தின் அனைத்து அமைப்புகளிலும் செப்டம்பர் 15-க்கு முன்பாக பொது உறுப்பினர் கூட்டம் நடத்தப்பட வேண்டும். மினிட் புத்தகம் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். ⁠உங்கள் உழைப்பின் அடிப்படையிலேயே உயர்வு இருக்கும்.அரவனைத்துச் செல்பவரே மாவட்ட செயலாளர். வெற்றி பெறுபவரே வேட்பாளர்.

அமைச்சர்களும் கழகத்தின் அடிமட்டத் தொண்டர்களுக்கு உதவிகளைச் செய்து கொடுக்க வேண்டும்.⁠ முதலீட்டுகளை ஈர்க்க அமெரிக்காவில் இருந்தாலும் கழகத்தையும் அரசையும் கவனித்துக் கொண்டிருப்பேன். ⁠கலைஞர் 100 நாணயம் வெளியீட்டில் கலந்து கொள்ள வேண்டும். ⁠கழகத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க அர்ப்பணிப்போடு செயல்படுங்கள் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

அந்தரத்தில் தொங்கி..! வயநாட்டில் சிகிச்சையளித்த சபீனாவுக்கு கல்பனா சாவ்லா விருது..!

நாட்டின் 78-வது சுதந்திர தினம் இன்று 15-ஆம் தேதி நாட்டு மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் காலை 9 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றியேற்றினார்.

முன்னதாக, காலை 8.45 மணிக்கு சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்கு கோட்டை கொத்தளத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முப்படை அதிகாரிகள், டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை காவல் ஆணையர் அருண் ஆகியோரை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிமுகம் செய்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, சென்னை கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பிறகு, கோட்டை கொத்தளத்தின் மேல் உள்ள கொடியேற்றும் இடத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்து, தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து, தமிழக மக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார். இதனை தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்கும் விதமாக விருதுகள் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார். அந்தவகையில், நர்ஸ் சபீனாவுக்கு கல்பனா சாவ்லா விருதும், மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் விருதும் வழங்கினார் தமிழக முதல்வர். அந்தவகையில், தமிழ்நாட்டிற்கும், தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த “தகைசால் தமிழர்” என்ற பெயரிலான விருது, ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்று வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான விருதுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், இலக்கியவாதியுமான மூத்த தலைவர் குமரி அனந்தன் தேர்வு செய்யப்பட்ட நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கையால், இந்த விருதினை குமரி அனந்தன் பெற்றார்.

அதேபோல, கல்பனா சாவ்லா விருது, செவிலியர் சபீனாவுக்கு வழங்கப்பட்டது. வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களுக்கு தமிழகத்தின் கூடலூரை சேர்ந்த செவிலியர் சபீனா, ஜிப்லைன் மூலம் ஆற்றைக் கடந்து சென்று சிகிச்சை அளித்தது குறித்த குறித்த குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. செவிலியர் சபீனாவின் இந்த வீர செயலுக்காக அவருக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், செவிலியர் சபீனாவிற்கு கல்பனா சாவ்லா விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றினார்..!

நாட்டின் 78-வது சுதந்திர தினம் இன்று 15-ஆம் தேதி நாட்டு மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் காலை 9 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றியேற்றினார்.

முன்னதாக, காலை 8.45 மணிக்கு சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்கு கோட்டை கொத்தளத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முப்படை அதிகாரிகள், டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை காவல் ஆணையர் அருண் ஆகியோரை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிமுகம் செய்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, சென்னை கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பிறகு, கோட்டை கொத்தளத்தின் மேல் உள்ள கொடியேற்றும் இடத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்து, தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.. இதையடுத்து, தமிழக மக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார்.

கோவில்களில் திருப்பணிகளுக்கு அரசு நிதிக்கான வரைவோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கல்..!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து புதிய உத்வேகத்துடன் இந்து சமய அறநிலையத் துறையானது தனது கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு, குடமுழுக்குகள் நடத்துதல், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது. மேலும், சட்டமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.

மேலும் 2021 – 2022 -ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற மானியக் கோரிக்கையில், கிராமப்புறத் திருக்கோயில்கள் மற்றும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்களின் திருப்பணிக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி தலா ஒரு லட்சத்தை 2 லட்சம் ரூபாயாக உயர்த்தியும், அதன் எண்ணிக்கையை தலா 1,000- லிருந்து 1,250 ஆக உயர்த்தியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2021-2022 மற்றும் 2022-2023 ஆகிய நிதியாண்டுகளில் 2,500 கிராமப்புறத் திருக்கோயில்கள் மற்றும் 2,500 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்களின் திருப்பணிக்கு தலா 2 இலட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 100 கோடி ரூபாய்க்கான வரைவோலைகள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் ஏற்கனவே வழங்கப்பட்டது.

இவற்றில் 1,085 கிராமப்புறத் திருக்கோயில்கள், 1,070 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்கள் என 2,155 திருக்கோயில்களில் திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதர திருக்கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள நிதி வசதி குறைவாக உள்ள ஒரு கால பூஜை கூட செய்திட இயலாத திருக்கோயில்களுக்கு உதவும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ள ஒரு கால பூஜைத் திட்டத்தில் ஏற்கனவே வைப்பு நிதியாக ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் வழங்கப்பட்டிருந்த ஒரு இலட்சம் ரூபாயை 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் 17,000 திருக்கோயில்கள் பயன்பெற்று வருவதோடு, முதன் முறையாக அதன் அர்ச்சகர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகையாக ரூ.1,000/- வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 2024-2025 ஆம் நிதியாண்டிற்கு கூடுதலாக 1,000 திருக்கோயில்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படுவதோடு, வைப்பு நிதியை ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ.2.50 இலட்சமாக உயர்த்தி வழங்கிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, 2023-2024 -ஆம் நிதியாண்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 1,250 கிராமப்புறத் திருக்கோயில்கள் மற்றும் 1,250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள தலா 2 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 50 கோடி ரூபாய்க்கான வரைவோலைகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருக்கோயில்களின் நிர்வாகிகள் மற்றும் பூசாரிகளிடம் வழங்கினார்.

இதன்மூலம் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்கள் மட்டுமின்றி, கட்டுப்பாட்டில் இல்லாத திருக்கோயில்களிலும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பொலிவு பெற்றிடும். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 27.02.2024 அன்று நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் கூட்டத்தில், கிராமப்புறத் திருக்கோயில்கள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள வழங்கப்பட்டு வரும் தலா 2 இலட்சம் ரூபாய் நிதியுதவியினை ரூ.2.50 லட்சமாக உயர்த்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திராவிட மாடல் ஆட்சியின் மூன்றாண்டு சாதனை மலர் வெளியீடு..!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், திராவிட மாடல் அரசு 2021-ஆம் ஆண்டு மே திங்கள் 7-ஆம் நாள் ஆட்சிப் பொறுப்பேற்று மூன்றாண்டுகள் நிறைவடைந்ததையொட்டி தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ’தமிழரசு’ இதழின் மூலம் “தலை சிறந்த மூன்றாண்டு! தலை நிமிர்ந்த தமிழ்நாடு!” என்னும் பெயரில் மூன்றாண்டு சாதனை மலரை வெளியிட்டார். திராவிட மாடல் அரசு 2021-ஆம் ஆண்டு மே திங்கள் 7-ஆம் நாள் பொறுப்பேற்று மூன்றாண்டுகள் நிறைவடைந்து; நான்காம் ஆண்டிலும் தொடர்ந்து சிறப்பான பல திட்டங்களைச் செயல்படுத்திப் பல்வேறு துறைகளிலும் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

திராவிட மாடல் அரசு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்து, பல்வேறு புதுமையான திட்டங்களை நிறைவேற்றி தமிழ்நாடு, இந்திய அளவில் படைத்துள்ள சாதனைகள் ஒன்றிய அரசின் நிதிஆயோக் – நிர்யாத் அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கைகள் நாட்டிற்குப் பறைசாற்றியுள்ளன. அதாவது, தமிழ்நாடு இந்தியாவில் உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் முதல் மாநிலம், தொழில் வளர்ச்சியில் முன்னணி மாநிலம், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில் முதலிடம், ஜவுளித் துணிகள் ஏற்றுமதியில் முதலிடம், மருத்துவத் துறையில் முன்னணி மாநிலம், மகளிர் முன்னேற்றத்தில் தமிழ்நாடு முதலிடம், கர்ப்பிணிப் பெண்கள் சுகதாரத்தில் தமிழ்நாடு முதலிடம், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிடம், மகப்பேற்றுக்குப் பிந்தைய சிசு கவனிப்பில் முன்னணி மாநிலம் என பல்வேறு திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு.

மேலும் வேளாண் உற்பத்தியில் முன்னணி மாநிலம், தோல் பொருள்கள் ஏற்றுமதியில் தலைசிறந்த மாநிலம், மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம், பொறியியல் சார்ந்த பொருள்கள் ஏற்றுமதியில் இரண்டாம் இடம், தொழில் வளர்ச்சிக்கான 50 சிறப்புப் பொருளாதார மண்டலங்களை ஏற்படுத்தியதில் தமிழ்நாடு முதலிடம் போன்ற சாதனைகளை படைத்து வருகிறது. இவை குறித்துச் சான்றோர்களும், பத்திரிகைகளும், ஊடகங்களும் பாராட்டி வருகின்றன. இவையல்லாமல் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் காலை உணவுத் திட்டம் தெலுங்கானா மாநிலத்திலும், கனடா நாட்டிலும் பின்பற்றப்படுகின்றது.

இந்த அரசின், “நான் முதல்வன்” போன்ற வேறு பல திட்டங்களும் இந்திய அளவிலும், வெளிநாட்டிலும் புகழ் பரப்பிவரும் சூழ்நிலையில், திராவிட மாடல் அரசு கடந்த மூன்றாண்டு காலத்தில் பல்வேறு துறைகளிலும் நிறைவேற்றியுள்ள திட்டங்கள், அவற்றின் பயன்கள் ஆகியவற்றைத் துறைவாரியாகத் தொகுத்து தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ’தமிழரசு’ இதழின் மூலம் “தலை சிறந்த மூன்றாண்டு! தலை நிமிர்ந்த தமிழ்நாடு!” என்னும் பெயரில் மூன்றாண்டு சாதனை மலரை சிறப்பாகத் தயாரித்துள்ளது. இச்சாதனை மலரில் பல்வேறு பெருமக்களின் கட்டுரைகளாக, மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி எழுதிய “தமிழ்நாட்டின் நலன்கள் உறுதி செய்யப்பட்டுவிட்டது”.

தமிழ்நாடு திட்டக்குழு துணைத் தலைவர் ஜெ. ஜெயரஞ்சன் எழுதிய, “விடியல் பயணம் ஒரு சமூக நீதித்திட்டம்”, சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் நாகநாதன் அவர்கள் எழுதிய, “திராவிட மாடல் தத்துவமும் தனித்துவமும்”, பேராசிரியர் ராஜன் குறை அவர்கள் எழுதிய “மூன்றாண்டு காலத்தில் முதன்மைச் சாதனைகள், வழக்கறிஞர் அ.அருள்மொழி அவர்கள் எழுதிய, “வினைத்திட்பம்’ கொண்ட முதலமைச்சர்”, கல்வி ஆலோசகர் திரு.ஜெயபிரகாஷ் காந்தி அவர்கள் எழுதிய, “கல்விக் கட்டமைப்பில் உயரம் தொட்ட முதலமைச்சர்”, திரு.கனகராஜ் அவர்கள் எழுதிய, “முற்றுகைக்கு மத்தியிலும் மூன்றாண்டு சாதனைகள்”, பத்திரிகையாளர் திரு.திலீப் மண்டல் அவர்கள் எழுதிய, “ஒருங்கிணைந்த வளர்ச்சியும் சமூக நீதியும் தமிழ்நாட்டின் திராவிட மாடல்” போன்ற மலர்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு அரசைப் பாராட்டியுள்ளன.

மேலும் பத்திரிகையாளர் சங்கீதா கந்தவேல் அவர்கள் எழுதிய, “பெண்களுக்கான மேம்பாட்டுக்கு வழிகோலும் திராவிட மாடல்”, பத்திரிகையாளர் திரு.அருள் எழிலன் அவர்கள் எழுதிய, “தமிழ்நாட்டைப் பின்தொடரும் இந்தியா” ஆகிய கட்டுரைகளும், இம்மலரில் இடம் பெற்றுத் தமிழ்நாடு அரசைப் பாராட்டியுள்ளன. இத்தகைய பாராட்டு மொழிகளுடன், அழகிய வடிவமைப்புடனும், பல்வேறு வண்ணப் புகைப்படங்களுடனும் இந்த மூன்றாண்டு சாதனை மலர் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

M.K Stalin: இடஒதுக்கீட்டினால் வந்துவிடுகிறார்களே என்று …! எரியுதுடி மாலா… ஃபேன போடு” என்று கதறுகிறார்கள்..!

சிதம்பரத்தில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் சிதம்பரம் வேட்பாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவருமான திரு.தொல்.திருமாவளவன் மற்றும் மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் சுதா ஆகியோருக்கு ஆகிய I.N.D.I.A. கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.

அப்போது, “இந்தத் தேர்தலில், நீங்கள் போடும் வாக்கு, திருமா அவர்கள் குறிப்பிட்டதைப் போல, எம்.பி.களுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்கள் மேல் அன்பும், தமிழ்நாட்டு மேல் உண்மையான அக்கறையும் கொண்ட ஒருவர் பிரதமராக வர நீங்கள் வாக்களிக்க வேண்டும்! சமூகநீதியைக் காக்கும் ஒரு பிரதமர் தில்லியில் அமர வாக்களிக்க வேண்டும்! சமூக நல்லிணக்கம், மதச்சார்பின்மை, ஏன்? அரசியல் சட்டத்தைப் பாதுகாக்கும் ஒரு பிரதமர் நாட்டை ஆள வாக்களிக்க வேண்டும்!

ஏன் என்றால், இப்போது இருக்கும் பிரதமர் மோடிக்கு, சமூகநீதிமேல் அக்கறை இல்லை! மதச்சார்பின்மையை மருந்துக்குக் கூட நினைப்பது இல்லை! சமத்துவத்திற்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை! வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்தியாவை அவருக்குப் பிடிக்கவில்லை! மொத்தத்தில் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை, ’பகையாளி இந்தியாவாக’ மாற்ற நினைக்கும் ஒரு பிரதமர் நமக்குத் தேவையில்லை!

இந்தத் தேர்தல் மூலமாக, இரண்டாம் விடுதலைப் போராட்ட வரலாற்றை எழுத நமக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புதான் இந்தியா கூட்டணி! தமிழ்நாட்டில் வேரூன்றியுள்ள சமூகநீதி இந்தியா முழுவதும் பரவ உருவாகியுள்ள வாய்ப்புதான் இந்தியா கூட்டணி! சமூகநீதி நமக்கு சாதாரணமாகக் கிடைத்துவிடவில்லை! ஏராளமான தியாகங்களால் விளைந்ததுதான் சமூகநீதி! மாபெரும் தலைவர்களெல்லாம் உழைத்து, நமக்கான உரிமையைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர், டாக்டர்.நடேசனார், தந்தை பெரியார், இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர், எம்.சி.ராஜா, புரட்சியாளர் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், வி.பி.சிங் போன்ற தலைவர்களால் போற்றி வளர்க்கப்பட்டதுதான் சமூகநீதிக் கருத்தியல்! இந்தச் சமூகநீதிதான் ஒடுக்கப்பட்ட மக்களை இன்றைக்கும் உயர்த்திக் கொண்டு இருக்கிறது!

1921-ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தை ஆட்சி செய்த நீதிக்கட்சிதான், நம்முடைய மக்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்கியது. இந்த இடஒதுக்கீட்டிற்கு 1950-ஆம் ஆண்டு பேராபத்து வந்தது! தந்தை பெரியார் வெகுண்டெழுந்தார்! தமிழ்நாடே கொந்தளித்தது! பெருந்தலைவர் காமராசர் பிரதமர் நேருவிடம் வலியுறுத்தினார். புரட்சியாளர் அம்பேத்கர் அதற்கான சட்டத்திருத்தத்தை உருவாக்கிக் கொடுத்தார். இந்தத் தலைவர்களின் முயற்சியால்தான், “சமூக மற்றும் கல்வியில் பின்தங்கியுள்ள இதர பிற்படுத்தப்பட்ட – பட்டியலின – பழங்குடியின மக்களின் கல்வி, வேலைவாய்ப்பிற்காக மாநிலங்கள் செய்யும் எந்தச் சிறப்பு ஏற்பாடும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதுதான்” என்ற அரசியல்சட்ட அங்கீகாரம் கிடைத்தது.

இப்போது தமிழ்நாட்டில் நாட்டிற்கே வழிகாட்டும் வகையில், 69 விழுக்காடு இடஒதுக்கீடு இருக்கிறது என்றால், அதற்குக் காரணம், திராவிட இயக்கம்! தலைவர் கலைஞர்! இப்போது இரண்டு, மூன்று தலைமுறையாகத்தான், நம்முடைய வீட்டில் இருந்து, இன்ஜினியர்கள், டாக்டர்கள், வருகிறார்கள். அத்தி பூத்தது போன்று சில ஐ.ஏ.எஸ். – ஐ.பி.எஸ். அதிகாரிகள் வர முடிகிறது!

இதெல்லாம் பா.ஜ.க.வின் கண்களை உறுத்துகிறது! இந்த வேலைக்கு இவர்கள் எல்லாம், இடஒதுக்கீட்டினால் வந்துவிடுகிறார்களே என்று நினைக்கிறார்கள்! ”எரியுதுடி மாலா… ஃபேன போடு” என்று கதறுகிறார்கள்! இடஒதுக்கீட்டை நம்மிடம் இருந்து தட்டிப்பறித்து, நம்முடைய குழந்தைகள் படித்து வேலைக்குச் செல்வதை கெடுக்க… என்னென்ன செய்ய முடியுமோ, அத்தனையும் செய்கிறார்கள்! இப்படிப்பட்ட பா.ஜ.க.வுடன்தான் – பா.ம.க. கூட்டணி அமைத்திருக்கிறது!

சில நாட்களுக்கு முன்பு வரை, விமர்சித்து பேசியவர்கள் இப்போது சேர்ந்திருக்கிறார்கள்! மனசாட்சி உள்ள பா.ம.க.வின் தொண்டர்கள்கூட இதை ஜீரணிக்க முடியாமல் வேதனையுடன் தலைகுனிந்து நிற்கிறார்கள்! பா.ஜ.க. – பா.ம.க. கூட்டணி சந்தர்ப்பவாதக் கூட்டணி! ஆனால், நாங்கள் உருவாக்கி இருக்கும், இந்தியா கூட்டணி கொள்கைக் கூட்டணி!

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்து மோடி பிரதமரானால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது! நாடாளுமன்றத்தில் விவாதம் இருக்காது! அரசியலமைப்புச் சட்டம் அடியோடு மாற்றப்படும்! தேர்தல் ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்படும்! மாநில அரசுகள் முனிசிபாலிட்டிகளாக மாற்றப்படும்! ஆளுநர்களை வைத்துப் போட்டி அரசாங்கம் நடத்தப்படும்! நாடெங்கும் மதவெறி தலைவிரித்தாடும்! மதக்கலவரத்தில் ஈடுபடுகிறவர்களைத் தேசத்தியாகிகளாகப் போற்றுவார்கள்!

அனைத்து மக்களும் சகோதர – சகோதரிகளாக வாழ்கிறோமே – அப்படிப்பட்ட நம்மைப் பிளவுப்படுத்துவார்கள்! வேற்றுமைகளும் – அடிமைத்தனமும் நிறைந்த சமூகத்தை மீண்டும் உருவாக்குவார்கள்! நம்முடைய குழந்தைகளின் படிப்பைப் பறிப்பார்கள்! மக்களைச் சிந்திக்க விடமாட்டார்கள்! பொய்களையே வரலாறாக எழுதுவார்கள்! இஸ்லாமிய – கிறிஸ்துவ மக்களை இரண்டாம்தர குடிமக்களாக மாற்றி – அவர்களுக்கு எதிராக வெறுப்பை விதைப்பார்கள்.

ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, ஒரே உணவு, ஒரே அரசு, ஒரே கட்சி, ஒரே தலைவர் என்று ஒரே ஒரே என்று ஒரேடியாக நாட்டை நாசமாக்கிவிடுவார்கள்! பா.ஜ.க.வின் திட்டங்கள் மிக மிக மோசமானது! அதைவிட ஆபத்தானது… மறுபடியும் நம்முடைய தமிழ்நாட்டின் மீது மாபெரும் பண்பாட்டுத் தாக்குதல் நடத்துவார்கள்… ஆட்சி நடத்துவது தில்லியா? இல்லை, நாக்பூரா? என்று சந்தேகம் வந்துவிடும்! பதவியில் இருக்கிறவர் பிரதமரா? இல்லை, ஆர்.எஸ்.எஸ். தலைவரா? என்று நினைக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிடும்! இந்த ஆபத்தை மக்கள் உணர்ந்திடக் கூடாது என்றுதான் ஊழல் – குடும்ப அரசியல் – இப்போது கச்சத்தீவு என்று திசைதிருப்புகிறார்.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

கல்வி கொடை வள்ளல் ராஜேந்திரன் அவர்களுக்கு சால்வை அணிவித்த மு.க. ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மதுரை மற்றும் ராமநாதபுரத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நேற்றும் மதுரை சென்றார். நேற்று இரவு முனிச்சாலை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மறைந்த பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன் சிலையைத் திறந்து வைத்தார். அதன் பின்னர் மதுரை விமான நிலைய சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நேற்று இரவு ஓய்வெடுத்தார்.

இன்று காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மதுரை சிலைமான் பகுதியில் உள்ள மறைந்த முன்னாள் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான முரசொலி மாறனின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, அங்குள்ள முரசொலி மாறன் படிப்பகத்தை பார்வையிட்டு அண்ணா மன்றத்தின் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டார்.

பின்னர் மதுரை மாநகராட்சி திரு.வி.க. மேல்நிலைப் பள்ளிக்கு 10 வகுப்பறைகள், இறைவணக்க கூட்ட அரங்கம், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் ஆகியவற்றை ரூ. 1.10 கோடி செலவில் அமைத்து தந்தமைக்காகவும், இந்த ஆண்டு மதுரை மாநகராட்சி, கைலாசபுரம் ஆரம்பப் பள்ளியில் 4 வகுப்பறைகள், ஒரு ஆழ்துளை கிணறு, உணவு அருந்தும் இடம், கழிப்பறைகள் ஆகியவற்றை ரூ. 71.45 இலட்சம் செலவில் அமைத்து தந்தமைக்காகவும், மேலும் பல்வேறு சமூக பணிகளை மேற்கொண்டு வரும் மதுரை தத்தநேரியை சேர்ந்த திரு. ராஜேந்திரன் அவர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைத்து சிறப்பித்து, தனது வாழ்த்துகளை தெரிவித்து, சால்வை அணிவித்து, அவருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையை வழங்கி பாராட்டினார்.