“பாரத் நியாய் யாத்திரை”.. தொடங்கும் ராகுல் காந்தி..!!

மணிப்பூர் முதல் மகாராஷ்டிரா வரை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஜனவரி 14-ம் தேதி பேருந்து மூலம் யாத்திரை தொடங்குகிறார். இது தொடர்பாக ராகுல் காந்தி வரும் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் தேதி மணிப்பூரில் இருந்து மும்பை வரை அதாவது 6,200 கிலோ மீட்டர் தூரம் யாத்திரை மேற்கொள்ளவுள்ளார் என காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ஜனவரி 14-ம் தேதி தொடங்கும் பாரத் நியாய் யாத்திரையை 6200 கி.மீ. பயணித்து ராகுல் காந்தி மார்ச் 20-ல் நிறைவு செய்கிறார். “பாரத் நியாய் யாத்திரை” என்று பெயரிடப்பட்டுள்ள யாத்திரை மூலம் 14 மாநிலங்கள் வழியாக ராகுல் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராகுல் காந்தி தலைமையில் நடைபெற உள்ள “பாரத் நியாய் யாத்திரை” 66 நாட்கள் பேருந்து மூலம் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மணிப்பூர், நாகலாந்து, அசாம், மேகாலயா, மேற்குவங்கம், பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்கள் வழியாகவும், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்கள் வழியாக பேருந்தில் ராகுல் காந்தி பயணம் செய்யவுள்ளார். பேருந்து மூலம் 85 மாவட்டங்கள் வழியாக பயணித்து ராகுல் காந்தி மக்களை சந்திக்கிறார்.

மல்யுத்த வீரர்களுடன் மல்யுத்தம் செய்யும் ராகுல்காந்தி..!

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங், பெண் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் கடந்த ஜனவரியில் இது தொடர்பாக ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்கள் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.

இது நாடு முழுவதும் பெரும் விவாதங்களை கிளப்பியது. நாட்டின் கொடியை சர்வதேச அரங்கில் உயர்த்த வீராங்கனைகள் இந்த கொடுமைகளை எல்லாம் தாங்கிக்கொள்ள வேண்டுமா? என்று அரசியல் கட்சியினர் கேள்வி யெழுப்பினர். இந்த போராட்டத்தையடுத்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் மேரிகோம் தலைமையில் குழு ஒன்றை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட வீராங்கனைகள், வீரர்கள் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து புகார்களை அளித்தனர். பின்னர் போராட்டம் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டது. ஆனால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு 3 மாதங்கள் கடந்த நிலையில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வீரர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். இது மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது.

நிலைமையை சமாளிக்க இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலில் பிரிஜ் பூஷனுக்கு தொடர்புடைய யாரும் போட்டியிட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நெருங்கிய உதவியாளர் சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்த போட்டியிலிருந்தே விலகுவதாக வீராங்கனை சாக்ஷி மாலிக் கண்ணீர் மல்க பேட்டியளித்திருந்தார். இது நாடு முழுவதும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக பத்மஸ்ரீ விருது பெற்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, தனது பத்ம விருதை திரும்ப ஒப்படைப்பதாக கூறினார்.

அதேபோல கடந்த 22ம் தேதி, பிரதமரிடம் விருதை ஒப்படைக்க டெல்லியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்றார். ஆனால் காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால், பிரதமரின் வீட்டு வாசலிலேயே அவர் விருதை வைத்துவிட்டு திரும்பிவிட்டார். இதன் தொடர்ச்சியாக விரேந்திர சிங்கும் தனது விருதை திரும்ப ஒப்படைப்பதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில் பல வருட கடின உழைப்பு, பொறுமை மற்றும் ஈடு இணையற்ற ஒழுக்கம் ஆகியவற்றுடன் தனது இரத்தத்தாலும் வியர்வையாலும் மண்ணை பாசனம் செய்த பிறகு, ஒரு வீரர் தனது நாட்டிற்கு ஒரு பதக்கத்தை கொண்டு வருகிறார்.

இன்று, அவர் ஜஜ்ஜாரின் சாரா கிராமத்தில் உள்ள சகோதரர் வீரேந்திர ஆர்யாவின் அரங்கை அடைந்து, ஒலிம்பிக் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா மற்றும் பிற மல்யுத்த வீரர்களுடன் கலந்துரையாடினார். ஒரே ஒரு கேள்வி – இந்த வீரர்கள், இந்தியாவின் மகள்கள், தங்கள் அரங்கில் சண்டையை விட்டுவிட்டு, தங்கள் உரிமைகளுக்காகவும், நீதிக்காகவும் தெருவில் போராடினால், அவர்களின் குழந்தைகளை இந்த பாதையைத் தேர்ந்தெடுக்க யார் ஊக்குவிப்பார்கள்?

இவர்கள் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த அப்பாவிகள், நேரடியானவர்கள், எளிமையானவர்கள், மூவர்ணக் கொடிக்கு சேவை செய்யட்டும். அவர்கள் முழு மரியாதையுடனும் மரியாதையுடனும் இந்தியாவை பெருமைப்படுத்தட்டும் என பதிவிட்டுள்ளார். மேலும் ராகுல்காந்தி மல்யுத்த வீரர்களுடன் மல்யுத்தம் செய்யும் பயிற்சி மேற்கொண்டார்.

விளம்பரங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்யும் பாஜக அரசுக்கு குழந்தைகளின் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகளை வாங்க பணமில்லையா…!?

மகாராஷ்டிராவின் நான்டெட் நகரில் ஷங்கர் ராவ் சவான் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் “குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் 142 குழந்தைகள் சேர்க்கப்பட்டன. அவர்களில் 42 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஆக்ஸிஜன் மற்றும் வென்டிலேட்டர் ஆகியவை உள்ளன. இவர்கள் அண்டை மாவட்டங்களான ஹிங்கோலி, பர்பானி, வாஷிம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில், கடந்த 48 மணி நேரத்தில் 16 பேர் குழந்தைகள் உள்பட 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த 31 பேர் உயிரிழந்த சம்பவம் மகாராஷ்டிர அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிரா அரசை கடுமையாகக் கண்டித்தது மட்டுமின்றி பாஜக அரசு விளம்பரங்களுக்காக கோடிக்கணக்கான ரூபாயை செலவழிப்பதாகவும், ஆனால், குழந்தைகளின் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகளை வாங்க பணம் இல்லை என்றும் விமர்சித்துள்ளார்.

ராகுல் காந்தி: ஆதிவாசிகளே நாட்டின் அசலான உரிமையாளர்கள்

உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து தகுதி நீக்க அறிவிப்பை திரும்ப பெற்றதால், மீண்டும் எம்பி ஆக பொறுப்பேற்ற ராகுல் காந்தி , முதல்முறையாக வயநாடு தொகுதிக்கு நேற்று வந்தடைந்தார். நாளில் ராகுல் காந்தி, வயநாட்டில் உள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்தின் புதிய மின் கட்டமைப்பு சேவையை அவர் தொடங்கி வைத்தார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, “பழங்குடிகளே நாட்டின் அசலான உரிமையாளர்கள். அவர்களைக் குறிக்க ஆதிவாசி என்றொரு வார்த்தை இருக்கிறது. அதன் அர்த்தம் நிலத்தின் அசல் உரிமையாளர்கள் என்பதாகும். அந்த வார்த்தை ஒரு குறிப்பிட்ட ஞானத்தின் அடையாளம். அது நாம் வாழும் இந்த பூமியின் மீதான புரிதலின் வெளிப்பாடு, நமது பூமி மீது நாம் கொண்டிருக்கும் உறவினை சுட்டிக்காட்டுவது. ஆதிவாசி எனும் வார்த்தை நமது பழங்குடியின சகோதர, சகோதரிகள் தான் தேசத்தின் உண்மையான உரிமையாளர்கள் என்பதை நாம் மதித்து ஏற்றுக் கொள்ள உதவுகிறது.

அதனால் உண்மையான உரிமையாளர்களுக்கு நிலத்தின், வனத்தின் மீதான உரிமையை வழங்க வேண்டும். அவர்கள் விரும்பியதை செய்யும் உரிமையையும் வழங்க வேண்டும். இந்த மண்ணின் அசல் உரிமையாளர்கள் என்ற வகையில் உங்களின் குழந்தைகள் பொறியாளர் ஆக வேண்டுமா? மருத்துவர் அல்லது வழக்கறிஞர் ஆக வேண்டுமா? அல்லது தொழில் முனைவோராக வர வேண்டுமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அதேவேளையில் வனத்தின் மீது உங்கள் உரிமைகளை விட்டுக் கொடுக்கக்கூடாது. வனத்திலிருந்து விளைவிக்கும் பொருட்களுக்கான உரிமை உங்களுடையது.

ஆனால் சிலர் உங்களை ‘வனவாசி’ என்று அழைக்கிறார்கள். வனவாசி என்ற சொல், இந்தியாவின் அசல் உரிமையாளர்கள் நீங்கள் என்ற உரிமையை மறுக்கிறது. அது உங்களை கட்டுப்படுத்துகிறது. வனவாசி என்ற சொல்லின் பின்னால் இருக்கும் அர்த்தம், நீங்கள் வனத்தினுள் மட்டுமே இருக்க வேண்டும் என்று சுருக்குகிறது. இதை ஏற்பதற்கில்லை. இந்த சொல் உங்களின் வரலாற்றை சிதைக்கிறது. உங்களின் பாரம்பரியம் மற்றும் நாட்டுடன் உங்களது உறவை சிதைக்கிறது.

ஆனால் எங்களுக்கு நீங்கள் ஆதிவாசி தான். உங்களிடம் இருந்து நாங்கள் நிறைய கற்றுக் கொள்கிறோம். உதாரணத்துக்கு இன்று உலகம் முழுவதும் சுற்றுச்சுழல் பாதுகாப்பு என்பது ஒரு பேஷன் வார்த்தையாகிவிட்டது. ஆனால் 2000, 3000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆதிவாசிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிப் பேசி நமக்கு முன்னோடிகளாக இருக்கிறார்கள்.

ஆதிவாசிகளிடமிருந்து வரலாறு, பாரம்பரியம், சுற்றுச்சூழல் மட்டுமல்ல ஒருவருக்கொருவர் எப்படி அணுகுவது, எப்படி மதிப்பது என்பதைக் கூட கற்றுக் கொள்ள முடியும். ஆதிவாசிகளின் குழந்தைகளுக்கு சிறந்த கல்வி, சிறந்த மருத்துவ வசதி கிடைக்க வேண்டும். நாங்கள் உங்களுக்கு எப்போதும் உற்ற துணையாக இருப்போம்” என தெரிவித்தார்.

“தோடர் இன மக்களுடன் நடனமாடிய ராகுல் காந்தி”

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்பி.யுமான ராகுல் காந்தி கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு எம்பி., ஆக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் மோடி சமூகத்தினர் குறித்து தவறாக பேசியதாக கூறி தொடரப்பட்ட வழக்கில், சூரத் நீதிமன்றம் இரு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதன் பேரில் அவர் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, அவர் உச்ச நீதிமன்றத்தில் மேற்முறையீடு செய்தார். உச்ச நீதிமன்றம் அவரது தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இதனால், அவர் எம்பி பதவியில் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி மீண்டும் வாயநாடு எம்பி. யாக பொறுப்பு ஏற்று கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்துக்கு சென்றார். மீண்டும் பதவி ஏற்ற பின் அவர் முதல் முறையாக வயநாடு தொகுதிக்கு இன்று செல்கிறார்.

டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்த அவர், அங்கிருந்து கார் மூலமாக பகல் 12 மணியளவில் நீலகிரி மாவட்டத்தில் உதகமண்டலம் எனும் ஊட்டி அருகே உள்ள எல்லநள்ளி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடந்த நிகழ்வில் பங்கேற்றார். அங்கு விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவை சந்தித்து, அவருடன் தேநீர் அருந்தினார். அங்கு, நீலகிரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் ஹோம் மேட் சாக்லேட் தயாரிப்பு குறித்து கேட்டறிந்தார்.

அங்கு மதிய உணவை முடித்துக் கொண்டு கூடலூர் செல்லும் வழியில் தோடர் பழங்குடியின மக்கள் வசிக்கும் முத்தநாடு மந்துக்கு மதியம் 1 மணியளவில் சென்றார். அங்கு வந்த அவரை தோடரின மக்கள் தலைவர் மந்தேஷ்குட்டன், மாவட்ட ஊராட்சி தலைவர் மு.பொன்தோஸ், தமிழ்நாடு காங்கிரஸ் பழங்குடியினர் பிரிவு மாநில தலைவர் ப்ரியா நாஷ்மிகர் மற்றும் தோடரின மக்கள் தங்களது பாரம்பரிய சால்வை அணிவித்து வரவேற்றனர்.

முத்தநாடு மந்தில் உள்ள பழமை வாய்ந்த மூன் போ மற்றும் அடையாள் ஓவ் கோயில்களை பார்வையிட்டார். அந்த கோயில்களின் பராம்பரியம் குறித்து ராகுல் காந்திக்கு கோயில் பூசாரி விளக்கினார். பின்னர், தோடர் இளைஞர்கள் இளவட்ட கல்லை தூக்கியதை கண்டுகளித்து, தோடரின மக்களுடன் நடனமாடினார். பெண்களுடன் நடனமாடிய ராகுல் அங்கிருந்த சிறு குழந்தையை தூக்கி முத்தம் கொடுத்து கொஞ்சினார். மேலும் அரவேணு பகுதியில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த விவசாய பெண்களிடம் நேரில் சந்தித்து தேவைகளை கேட்டறிந்தார்.

சுமார் அரை மணி நேரம் அங்கு செலவிட்ட ராகுல் காந்தி, அங்கிருந்து வயநாடு புறப்படும் போது, அவரது பயணம் குறித்து கேட்டதற்கு, ‘நான் பழங்குடியின மக்களை நேசிக்கிறேன். அவர்களை சந்தித்தது இனிமையான தருணம்’ என்றார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் வயநாடு புறப்ட்டுச் சென்றார். ராகுல் காந்தி வருகையையொட்டி முந்தநாடு மந்தில் பலத்த பாதுகாப்பு பணியில் நீலகிரி காவல்துறையினர் ஈடுபட்டனர்.

ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாரத் ஜோடோ யாத்ராவின் ஒரு பகுதியாக கூடலூரில் நடைபயணம் மேற்கொண்டார். தற்போது இரண்டாம் முறையாக நீலகிரி மாவட்டத்துக்கு வந்ததால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அவர் கோயம்புத்தூரிலிருந்து கார் மூலம் கோத்தகிரி மார்கமாக வந்தார். அவருக்கு அரவேணு பகுதியில் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். மக்களை கண்டதும் வாகனத்திலிருந்து இறங்கி அவர்களுடன் கைக்குலுக்கி பேசினார். உற்சாகமடைந்த பெண்கள் ‘வருங்கால பிரதமர் ராகுல் காந்தி’ என கோஷம் எழுப்பினர். அங்கிருந்து உதகை வந்தவருக்கு சேரிங்கிராஸ் பகுதியில் உதகை எம்எல்ஏ ஆர்.கணேஷ் தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

மக்களவையில் அமித் ஷா ஆவேசம்: “மாய தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம்”

மணிப்பூர் விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் இன்று நடந்த விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார். அப்போது, “பிரதமர் நரேந்திர மோடி மீது, இந்த அரசு மீது நம்பிக்கை போய்விடவில்லை. மாய தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளனர். எதிர்க்கட்சிகளின் உண்மையான குணம் என்ன என்பதை இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் அம்பலப்படுத்தும்.

அரசைப் பாதுகாக்க ஊழல் செய்வது என்பதுதான் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் குணம். சுதந்திரத்துக்குப் பிறகு மிகப் பெரிய அளவில் நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்ற பிரதமர் என்றால், அவர் நரேந்திர மோடிதான். மக்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகப் பெரிய புகழ் இருக்கிறது. நாட்டு மக்களுக்காக அவர் ஓய்வின்றி உழைக்கிறார். நாள்தோறும் 17 மணி நேரம் தொடர்ச்சியாக அவர் உழைக்கிறார். ஒருநாள்கூட அவர் விடுப்பு எடுத்துக்கொண்டது கிடையாது. மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் என்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. இந்த அரசு என்னவெல்லாம் செய்திருக்கிறது என்பதை நான் இப்போது கூறுகிறேன். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று கூறுவதையே வழக்கமாகக் கொண்ட கூட்டணி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி. வெறும் கடனை தள்ளுபடி செய்வதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. மாறாக, கடன் வாங்க வேண்டிய தேவை ஏற்படாத நிலையை உருவாக்குவதற்கான அமைப்பு முறையை நாங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

நாங்கள் விவசாயிகளுக்குக் கொடுத்திருப்பது இலவசங்கள் அல்ல. மாறாக, அவர்கள் தங்களை தற்சார்பு அடையச் செய்வதற்கான நடவடிக்கை. நரேந்திர மோடி அரசு வரலாற்றுச் சிறப்பு மிக்க சில முடிவுகளை எடுத்து, வாரிசு அரசியலுக்கும் ஊழலுக்கும் முடிவு கட்டி இருக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் குணம் என்பது அதிகாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதுதான். ஆனால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, கொள்கைகளைப் பாதுகாக்க போராடுகிறது.

அனைவருக்கும் வங்கிக் கணக்கு திட்டத்தை காங்கிரஸ் ஏன் எதிர்த்தது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஏழைகளுக்காக மத்திய அரசு ஒரு ரூபாய் வழங்கினால் அதில் 15 பைசாதான் அவர்களைச் சென்றடைகிறது என பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி சொன்னார். ஆனால், இன்று முழு தொகையும் ஏழைகளைச் சென்றடைகிறது” என்று அமித் ஷா உரையாற்றினார்.

மக்களவையில் ஸ்மிருதி இராணி: “இந்தியா ஊழல் செய்யாததால் நீங்கள் இந்தியா இல்லை”

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, “மணிப்பூரில் பாரத மாதா கொல்லப்பட்டுவிட்டார்” என கூறி குற்றம் சாட்டினார். அவரது இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, “முதல்முறையாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பாரத மாதாவின் மரணம் குறித்துப் பேசுகிறார். அவரது கூட்டணி கட்சி உறுப்பினர்கள் எல்லோரும் கை தட்டுகிறார்கள்.

நீங்கள் இந்தியா கிடையாது. இந்தியா ஊழல் செய்யாததால் நீங்கள் இந்தியா இல்லை. இந்தியா தகுதியை நம்புகிறது; வாரிசு அரசியலை அல்ல. நாடு சுதந்திரம் அடையும் முன் வெள்ளையனே வெளியேறு என்ற முழக்கத்தை நாடு முழங்கியது. இதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இன்று நாடு, ஊழலே இந்தியாவைவிட்டு வெளியேறு என்கிறது; வாரிசு அரசியலே நாட்டை விட்டு வெளியேறு என்கிறது. தகுதியைத்தான் இந்தியா கோருகிறது.

நாட்டில் அவசரநிலையைப் பிறப்பித்த கட்சி காங்கிரஸ். 1984-ல் சீக்கியர்களுக்கு எதிராக கலவரத்தில் ஈடுபட்ட கட்சி காங்கிரஸ். ஜம்மு காஷ்மீரில் கிரிஜா திக்கோ என்ற பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாகக் கொல்லப்பட்டதைத் தெரிவித்த திரைப்படத்தை பிரச்சாரம் என்று கூறிய கட்சி காங்கிரஸ். அதே கட்சிதான், தற்போது மணிப்பூர் குறித்துப் பேசுகிறது.

அவையில் பேசிய ராகுல் காந்தி தான் மேற்கொண்ட யாத்திரை குறித்தும், ஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370 சட்டப்பிரிவு அமல்படுத்தப்படும் என்று உறுதி அளித்ததாகவும் கூறினார். (அவையில் இருந்து ராகுல் காந்தி வெளியேறியதைச் சுட்டிக்காட்டி) அவையில் இருந்து வெளியேறிய நபரால் சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வரவும் முடியாது; ஒன்று மதம் மாறுங்கள்; இல்லாவிட்டால் கொல்லப்பட தயாராகுங்கள்; இல்லாவிட்டால் காஷ்மீரைவிட்டு வெளியேறுங்கள் என்று பண்டிட் மக்களை அச்சுறுத்துபவர்கள் காப்பாற்றப்படவும் மாட்டார்கள். மணிப்பூர் குறித்து விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. நாங்கள் அவையில் இருக்கிறோம். ஆனால், அவர்கள் அவையில் இல்லை” என பேசினார்.

ராகுல் காந்தி லக்னோ விமான நிலையத்தில் திடீர் தர்ணா..!!!

உத்திர பிரதேசத்தில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டாத்தில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் தீவிரமாக பங்கேறு வருகின்றனர். லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஷ்ரா மற்றும் மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பக்கத்து கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் திகுனியாவில் திரண்டனர். அப்போது அந்த வழியாக பாஜகவினரின் வாகன அணிவகுப்பு ஒன்று வந்தது. இதில் கார் ஒன்று விவசாயிகள் மீது பயங்கரமாக மோதியதில் 2 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பாஜகவினர் வந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதன்காரணமாக அங்கு வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் லகிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் இன்று அதிகாலை பன்வீர்பூர் கிராமத்திற்கு சென்றார். அப்போது காவல்துறையினர், பிரியங்கா காந்தியை அந்த கிராமத்திற்குள் அனுமதிக்காமல் கிராம எல்லையிலேயே காவல்துறையினர் கைது செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று லகிம்பூர் செல்ல இருந்த நிலையில், உத்திரபிரதேச அரசு அனுமதி மறுத்த நிலையில், லகிம்பூர் செல்ல ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு உத்தரப்பிரதேச அரசு அனுமதி வழங்கப்பட்டு அவர்களுடன் மேலும் 3 பேர் மட்டும் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

இதன்காரணமாக டெல்லி விமான நிலையத்திலிருந்து உத்தரபிரதேச மாநிலம் லக்னோ விமான நிலையத்திற்கு வந்த ராகுல்காந்தி, பஞ்சாப் மற்றும் சட்டீஸ்கர் முதலமைச்சர்கள் ஆகியோர் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

பின்னர் லக்னோ விமான நிலையத்தில் நிருபர்களிடம் ராகுல் காந்தி கூறுகையில், உத்தரபிரதேச அரசால் எனக்கு என்ன அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், காவல்துறையினர் என்னை விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல விடவில்லை.

நாங்கள் எங்கள் காரில் செல்ல விரும்புகிறோம். ஆனால் காவல்துறையினர் எங்களை அவர்கள் வாகனத்தில் அழைத்துச் செல்ல விரும்புகிறார்கள். எனது வாகனத்தில் செல்ல அனுமதிக்குமாறு அவர்களிடம் கேட்டேன். அவர்கள் ஏதோ திட்டமிடுகிறார்கள். நான் எப்படி செல்ல வேண்டும் எனக்கூற சட்டம் ஏதும் உள்ளதா? இங்கு என்ன நடக்கிறது என்பதை சரியாக காட்டுங்கள் என்றார்.

நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு அதிகாரிகள் லகிக்பூர் செல்ல அனுமதி வழங்கினர். அதனை தொடர்ந்து ராகுல் காந்தி தலைமையிலான 5 பேர் கொண்ட காங்கிரஸ் குழு வன்முறையால் பாதிக்கப்பட்ட லகிம்பூர் கேரிக்கு லக்னோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர்

ராகுல் காந்தி : காவலில் வைக்கப்பட்டுள்ளவர் உண்மையான காங்கிரஸ்காரர். இறுதிவரை போராடுபவர்

உத்திர பிரதேசத்தில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டாத்தில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் தீவிரமாக பங்கேறு வருகின்றனர். லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஷ்ரா மற்றும் மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பக்கத்து கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் திகுனியாவில் திரண்டனர். அப்போது அந்த வழியாக பாஜகவினரின் வாகன அணிவகுப்பு ஒன்று வந்தது. இதில் கார் ஒன்று விவசாயிகள் மீது பயங்கரமாக மோதியதில் 2 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பாஜகவினர் வந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதன்காரணமாக அங்கு வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் லகிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக சென்ற காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்திக்கு அனுமதி மறுத்த காவல்துறை  அவரை தடுப்புக்காவலில் வைத்துள்ளனர். இதனிடையே, காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி  தனது டுவிட்டர் பக்கத்தில், “காவலில் வைக்கப்பட்டுள்ளவர் எதற்கும் அஞ்சாதவர், உண்மையான காங்கிரஸ்காரர். இறுதிவரை போராடுபவர். இந்த சத்தியாகிரகம் ஓயாது” எனப் பதிவிட்டுள்ளார்.

அமரீந்தர் சிங்: சித்துவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டால் அவருக்கு எதிராக பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்துவேன்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், முன்னாள் பாஜக மாநிலங்களவை உறுப்பினருமான நவஜோத் சிங் சித்து 2017ஆம் ஆண்டு பாஜகவிலிருந்து காங்கிரஸ் கட்சி தாவினார்.தற்பொழுது பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும், மாநில காங்கிரஸ் தலைவரான நவஜோத் சிங் சித்துவுக்கும் இடையே உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது.

இதனையடுத்து, மேலிடம் கொடுத்த அழுத்தம் மற்றும் அவமானத்தின் காரணமாக அமரீந்தர் சிங் சமீபத்தில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். சித்து ஆதரவாளரான சரண்ஜித் சிங் சன்னி புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், அமரிந்தர் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், பஞ்சாப்பிற்கு மிகவும் ஆபத்தானவர் சித்து. வரப்போகும் சட்டசபை தேர்தலில் சித்து முதல் மந்திரி ஆவதை தடுக்க எந்த தியாகத்தையும் நான் செய்வேன்.

சித்துவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டால் அவருக்கு எதிராக பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்துவேன். மூன்று வாரங்களுக்கு முன்பாக நான் ராஜினாமா செய்ய இருப்பதாக கூறிய போது, தொடர்ந்து பதவியில் நீடிக்குமாறு சோனியா காந்தி என்னை கேட்டுக்கொண்டார். எனக்கு தந்திர வித்தையெல்லாம் தெரியாது. காந்தி குடும்பத்தினருக்கும் இது பற்றி தெரியும். ராகுல், பிரியங்கா எனது பிள்ளைகளை போன்றவர்கள் அனுபவமற்றவர்கள் அவர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்” என தெரிவித்தார்.