பிரியங்கா காந்தி: ஜனநாயகத்தை காக்க உயிரையும் தியாகம் செய்ய தயார்..!

அரசியலமைப்பையும் அம்பேத்கரையும் அவமதிப்பதை பொறுத்துக் கொள்ளாதீர்கள். அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க உயிரையும் தியாகம் செய்ய தீர்மானிக்க வேண்டும் என பிரியங்கா காந்தி தெரிவித்தார். மகாத்மா காந்தி தலைமையில் கடந்த 1924- ஆம் ஆண்டு டிசம்பர் 27 -ஆம் தேதி நடந்த மாநாட்டின் வரலாற்று சிறப்புமிக்க நூற்றாண்டு விழாவை கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி பெலகாவியில் நடத்துவது என்று காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருந்த நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவால் ஒத்திவைக்கப்பட்ட அந்த மாநாடு, நேற்று பெலகாவியில் நடந்தது.

பெலகாவி சிபிஇடி மைதானத்தில் நடந்த மாநாட்டில் பிரியங்கா காந்தி பேசுகையில், நாட்டின் சுதந்திரத்திற்காக உயிரைக் கொடுத்த வரலாறு நமக்கு உண்டு. ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதியவர்கள் நாம் அல்ல. அரசியலமைப்பு சட்டத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற உயிரை விடவும் நாம் தயாராக இருக்கிறோம். தீய அரசுக்கு எதிரான நமது போராட்டம் தொடரும். எங்களுடன் இணைந்து போராட மக்களாகிய நீங்களும் உறுதியாக இருக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கரை அவமதித்தார். இப்படியொரு அரசையும், அமைச்சரையும் இதற்கு முன் நாம் பார்த்ததில்லை. அரசியலமைப்பையும் அம்பேத்கரையும் அவமதிப்பதை பொறுத்துக் கொள்ளாதீர்கள். அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க உயிரையும் தியாகம் செய்ய தீர்மானிக்க வேண்டும் என பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

பிரியங்கா காந்தி முதல்முறையாக வெற்றி பெற்ற சகோதரி பிரியங்கா காந்திக்கு இனிப்பு ஊட்டிய ராகுல் காந்தி..!

கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் முதல்முறையாக தேர்தல் களத்தில் நின்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிட்டு சுமார் 4 லட்சத்திற்கும் மேல் வாக்கு வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றார்.

இந்நிலையில், வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் பிரியங்கா காந்திக்கு வழங்கப்பட்டது. இதனை, சகோதரர் ராகுல் காந்தியிடம் வழங்கி, பிரியங்கா காந்தி வாழ்த்து பெற்றார். மேலும், வெற்றி பெற்ற தங்கை பிரியங்கா காந்திக்கு இனிப்பு ஊட்டி ராகுல் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், வயநாட்டைச் சேர்ந்த எனது சகாக்கள் இன்று எனது தேர்தல் சான்றிதழைக் கொண்டு வந்தனர். என்னைப் பொறுத்தவரை, இது ஒரு ஆவணம் மட்டுமல்ல, இது உங்கள் அன்பு, நம்பிக்கை மற்றும் நாங்கள் உறுதியளிக்கும் மதிப்புகளின் சின்னம். உங்களுக்கான சிறந்த எதிர்காலத்தை உருவாக்க இந்தப் பயணத்தை முன்னெடுத்துச் செல்ல என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு வயநாட்டிற்கு நன்றி என பிரியங்கா காந்தி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரியங்கா காந்தி: பொய்யான வெற்று வாக்குறுதிகளை மீண்டும் மீண்டும் அளித்து பதவியின் கண்ணியத்தை பிரதமர் அழித்துள்ளார்..!

140 கோடி இந்தியர்களுக்கு வெற்று வாக்குறுதிகளை மீண்டும் மீண்டும் அளித்து நாட்டின் மிக உயரிய மற்றும் மரியாதைக்குரிய பதவியின் கண்ணியத்தை பிரதமர் அழித்துள்ளார் என பிரியங்கா காந்தி கடுமையாக சாடி உள்ளது. நேற்றைய முன்தினம் “ஒருபோதும் நிறைவேற்ற முடியாத தேர்தல் வாக்குறுதிகளை அளித்த காங்கிரஸ் தற்போது மக்கள் முன் மிக மோசமாக அம்பலப்பட்டு நிற்கிறது” என காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிகள் பற்றி பிரதமர் மோடி விமர்சித்து இருந்தார்.

நரேந்திர மோடியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். அதில்,“உண்மையே கடவுள்” என்று மகாத்மா காந்தி சொல்வார். உபநிடதத்தில் எழுதப்பட்ட “சத்யமேவ ஜெயதே” என்பது நமது தேசிய முழக்கம். உண்மையை நிலைநாட்டும் இந்த பொன்மொழிகள் இந்திய சுதந்திர இயக்கம், இந்தியாவின் மறுசீரமைப்பு மற்றும் பொது வாழ்க்கையின் இலட்சியங்களாக மாறியது. உண்மையே பல்லாயிரம் ஆண்டுகால கலாச்சாரத்தின் அடிப்படையாக இருக்கும் நாட்டில், உயர்ந்த பதவியில் அமர்ந்திருப்பவர் அசத்தியத்தை நாடக்கூடாது.

இந்திய தேசிய காங்கிரசுக்கு எதிராக பிரதமர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானது. காங்கிரஸ் கட்சி எந்த மாநிலத்திலும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அடுத்த தேர்தலுக்காக காத்திருக்காமல் ஆட்சி அமைத்தவுடன் நிறைவேற்றத் தொடங்கியுள்ளது. கர்நாடகா, தெலுங்கானா, ஹிமாச்சலப் பிரதேசம் என எதுவாக இருந்தாலும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நாள்தோறும் உத்தரவாதங்கள் மூலம் பொதுப் பணம் மக்களின் பாக்கெட்டுகளில் போடப்படுகிறது.

நாட்டு மக்கள் முன் தனது வார்த்தைகளுக்கு இனி எந்த மதிப்பும் இல்லை என்பதை பிரதமர் புரிந்து கொண்டுள்ளார். சமீபத்தில், ‘100 நாள் திட்டம்’, ‘2047க்கான சாலை வரைபடத்திற்கு, 20 லட்சம் பேரின் கருத்துகளை எடுத்து’, ‘ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி வேலை வாய்ப்பு’, ‘100 ஸ்மார்ட் சிட்டி’, ‘கறுப்புப் பணத்தை மீட்பது’, ‘பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைத்தல்’ , ‘விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது’, ‘டாலருக்கு இணையாக ரூபாயை கொண்டு வருவோம்’, ‘நல்ல நாட்களை கொண்டு வருவோம்’… இப்படிப்பட்ட வாக்குறுதிகள் பொய் என நிரூபிக்கப்பட்டு, தற்போது நாட்டு மக்களுக்கு இதுபோன்ற வாக்குறுதிகளில் நம்பிக்கை இல்லை. .

140 கோடி இந்தியர்களுக்கு வெற்று வாக்குறுதிகளை மீண்டும் மீண்டும் அளித்து நாட்டின் மிக உயரிய மற்றும் மரியாதைக்குரிய பதவியின் கண்ணியத்தை பிரதமர் அழித்துள்ளார். காங்கிரஸைப் பற்றி கவலைப்படாமல், உண்மையைக் கடைப்பிடித்து தனது பதவியின் கண்ணியத்தை மீட்டெடுக்க அவர் பணியாற்ற வேண்டும்.

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தியை எதிர்த்து குஷ்பு போட்டியா..!?

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்திக்கு எதிராக குஷ்புவை பாஜக களமிறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராகுல் காந்தி வயநாடு மற்றும் அமேதி தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து இந்தத் தொகுதிக்கு நவம்பர் 13-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு வந்த உடனேயே வயநாடு தொகுதியில் போட்டியிடப் போகும் வேட்பாளர்கள் யார் என்ற பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தியை எதிர்த்து குஷ்புவை பாஜக களமிறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராகுல் காந்தி உருக்கம்: ‘அப்பா, உங்கள் போதனைகளே எனக்கு உத்வேகம் அளிப்பவை…’’

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 80-வது பிறந்தநாளை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். ராஜிவ் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான வீர் பூமிக்குச் சென்ற ராகுல் காந்தி டெல்லியில் மழை பெய்து வரும் நிலையில் மழையில் நனைந்தபடி, மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், நினைவிடத்தை வலம் வந்தார். அவரோடு, பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தனது தந்தையைப் பற்றி ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் , “அவர் இரக்கமுள்ள ஆளுமை, நல்லிணக்கம் மற்றும் நல்லெண்ணத்தின் சின்னம்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “அப்பா, உங்கள் போதனைகளே எனக்கு உத்வேகம் அளிக்கக் கூடியவை. உங்கள் நினைவுகளை என்னுடன் எடுத்துக்கொண்டு இந்தியாவுக்கான உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன்” என எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தி: சகோதரனுக்கும் சகோதரிக்கும் இடையிலான உறவு ஒரு பூச்செடி போன்றது..!

வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான அண்ணன் – தங்கைகளுக்கு இடையிலான பாசப் பிணைப்பை பறைசாற்றும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ரக்‌ஷா பந்தன் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் தங்கள் எக்ஸ் தள பக்கத்தில் தங்களுடைய புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ராகுல் காந்தி தனது பதிவில், “ரக்‌ஷா பந்தன் திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் – தங்கைக்கு இடையிலான உடைக்க முடியாத அன்பையும் பாசத்தையும் பறைசாற்றும் ஒரு பண்டிகை. இந்த பாதுகாப்புக் கயிறு, எப்போதும் உங்கள் புனிதமான உறவை வலுப்படுத்தட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அதே போல பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு சகோதரனுக்கும் சகோதரிக்கும் இடையிலான உறவு ஒரு பூச்செடி போன்றது, அதில் வெவ்வேறு வண்ணங்களின் நினைவுகள், ஒற்றுமையின் கதைகள் மற்றும் நட்பை ஆழமாக்குவதற்கான மரியாதை ஆகியவை அன்பு மற்றும் பரஸ்பர புரிதலின் அடித்தளத்தில் செழித்து வளரும்” என பிரியங்கா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Sonia Gandhi: “நாட்டின் ஜனநாயகத்தை மோடி படிப்படியாக அழித்து வருகிறார்..! ”

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் சார்பில் நேற்று பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் சோனியா காந்தி பேசுகையில், சுதந்திர போராட்ட காலத்தில் நமது முன்னோர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர். அவர்களின் தியாகத்தால் இந்தியா சுதந்திரமடைந்தது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக உருவெடுத்தது. ஆனால் கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியால் நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது.

இந்த நாடு ஒரு சிலரின் சொத்து கிடையாது. அனைத்து இந்தியர்களுக்கும் சொந்தமானது. பிரதமர் நரேந்திர மோடி நாட்டை விட, தன்னை உயர்ந்தவராக கருதுகிறார். நாட்டின் ஜனநாயகத்தை அவர் படிப்படியாக அழித்து வருகிறார். இந்திய அரசமைப்பு சாசனத்தை மாற்றவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்டி பாஜகவில் இணையச் செய்கின்றனர்.

மேலும் பேசுகையில், இது அநாகரிக அரசியல் ஆகும். நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் விலை கணிசமாக அதிகரித்து வருகிறது. விவசாயிகள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர். ஏராளமான இளைஞர்கள் வேலையில்லாமல் பரிதவித்து வருகின்றனர். வரும் மக்களவைத் தேர்தலில் சர்வாதிகார பாஜக ஆட்சிக்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டுகிறேன் என சோனியா காந்தி பேசினார்.

பிரியங்கா காந்தி: நாடு முழுவதும் பெண்களுக்கான விழிப்புணர்வு பிரசாரம் எடுத்து செல்லப்படும்

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி , நேற்று மாநிலத்தை சேர்ந்த உத்தரபிரதேச பெண்களுடன் சமூக வலைத்தளம் மூலம் கலந்துரையாடினார். அப்போது பெண்களுக்கான விழிப்புணர்வு பிரசாரம் உத்தரபிரதேசத்தை தாண்டி நாடு முழுவதும் எடுத்து செல்லப்படுமா? என பிரியங்கா காந்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த பிரியங்கா காந்தி, ‘நான் ஒரு பெண், என்னால் சண்டையிட முடியும் என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை உத்தரபிரதேசத்தில் நாம் தொடங்கினோம். ஆனால் இங்கு தேர்தல் முடிந்தவுடன் நாடு முழுவதும் அதை எடுத்து செல்வோம். பெண்களுக்கான சமத்துவம் என்பது முக்கிய பிரச்சினை. அதை யாரும் புறந்தள்ள முடியாது’ என்று தெரிவித்தார்.

பிரியங்கா காந்தி கேள்வி: பணமதிப்பிழப்பு நடவடிக்கை வெற்றி பெற்றிருந்தால் ஊழல் ஏன் முடிவுக்கு வரவில்லை?

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் 5-ம் ஆண்டு நிறைவையொட்டி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி, பிரதமர் மோடி டெலிவிஷனில் தோன்றி, ரூ.500 மற்றும் ரூ.1,000 மதிப்புள்ள கரன்சி நோட்டுகள் தடை செய்யப்படுவதாக அறிவித்தார்.

பண மதிப்பிழப்பு செய்யப்பட்டது, ஒரு பேரழிவு நடவடிக்கை. அத்திட்டம் வெற்றிகரமானதாக இருந்திருந்தால், ஊழல் ஏன் நிற்கவில்லை? கருப்பு பணம் ஏன் திரும்பி வரவில்லை? விலைவாசி ஏன் கட்டுக்குள் வரவில்லை?” என தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திரமோடிக்கு பிரியங்கா காந்தி 5 கேள்விகள்

பிரதமர் நரேந்திரமோடி 2016–ம் ஆண்டு நவம்பர் 8–ந்தேதி நள்ளிரவில் டெலிவி‌ஷனில் திடீரென எந்தவித முன்னறிவிப்பு இல்லாமல்‘ ஊழலுக்கும், கருப்பு பணத்துக்கும், கள்ள நோட்டுக்கும், பயங்கரவாதத்துக்கும் எதிராக போரிட்டு நாட்டை தூய்மைப்படுத்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் உடனடியாக செல்லாது என அறிவித்தார்.

இதை தொடர்ந்து பொதுமக்கள் கால்கடுக்க வங்கிகளுக்கு முன்பாக நீண்ட வரிசையில் காத்து கிடந்ததன விளைவாக சுமார் 80-க்கும் மேற்பட்ட உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின.மக்கள் படும் சிரமங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்களை தொடர்ந்து கோவாவில் உரையாற்றிய நரேந்திர மோடி தனக்கு 50 நாட்கள் அவகாசம் தரும்படியும் , அதற்குள்ளாக இந்த பிரச்சினைகளை சரி செய்து விடுவேன் அல்லது நீங்கள் கொடுக்கும் தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார் .

பணமதிப்பிழப்பு நடவடிக்கை நடந்து ஐந்து ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் கருப்பு பணம் ஒழிந்ததா என்றால் இல்லை என்பது தான் பதிலாக இருக்கிறது . பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக எந்த பலனும் கிடைக்கவில்லை என்பதை ரிசர்வ் வங்கி உறுதி செய்தது. இந்நிலையில், பிரியங்கா காந்தி இன்று மத்திய அரசுக்கு 5 கேள்விகளை முன்வைத்துள்ளார்.

பணமதிப்பிழப்பு நடைபெற்றது வெற்றிகரமான நிகழ்வு என்றால் ஊழல்கள் முடிவுக்கு வந்து விட்டதா? கருப்பு பணம் மீண்டும் இல்லையா? பொருளாதாரம் ஏன் முழுக்க முழுக்க பணம் இல்லாமல் டிஜிட்டல் முறையில் மாறவில்லை? இன்னும் எதற்காக தீவிரவாத செயல்கள் அரங்கேறுகின்றன? விலைவாசி எதற்காக உயர்கிறது? இவ்வாறு பிரியங்கா காந்தி ட்விட்டர் பதிவில் கேள்வி கணைகளை தொடுத்துள்ளார்.