வார்டு எலக்ஷனில் கூட நிற்காத தவெக 62 எம்எல்ஏக்களை வைத்து இருக்கும் அதிமுகவுக்கு சவால் விடுகிறது என தொல். திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். சென்னை திருவான்மியூரிலுள்ள ஸ்ரீஇராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்கூட்டம் நேற்றைய முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நன்றியுரை ஆற்றிய விஜய் திமுக ஆட்சியை, தமிழக முதலமைச்சரை, மத்தியில் ஆளும் பாஜகவை விமர்சித்துப் பேசினார். பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய், கதறல் சத்தமெல்லாம் எப்படியிருக்கு? இன்றைக்கு தமிழ்நாடு இருக்கின்ற சூழலில், நாம் ஒரு புதிய வரலாற்றைப் படைப்பதற்கு, தயாராக வேண்டிய அவசியத்தை, நீங்கள் அனைவருமே நன்றாக புரிந்து வைத்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.
ஒவ்வொரு குடும்பமும் நல்லா வாழ வேண்டும் என்று நினைப்பது அரசியலா? இல்லை ஒரே ஒரு குடும்பம் மட்டும் தமிழ்நாட்டை சுரண்டி நல்லா வாழ்வது அரசியலா? எல்லோருக்கும் நல்லது நடப்பதுதானே அரசியல். அதுதான் நம்ம அரசியலும். கட்சிக்கு திராவிடம், ஆட்சிக்கு திராவிட மாடல்னு, தினம் தினம் மக்கள் பிரச்சினைகளை மடைமாற்றி, மக்கள் ஆட்சியை மன்னராட்சிப் போல நடத்தும் இவர்கள், நமக்கு எதிராக செய்யும் செயல்கள் ஒன்றா, இரண்டா?
மாநாடு தொடங்கி, நான் கலந்துகொண்ட புத்தக வெளியீட்டு விழா, பரந்தூர் நிகழ்ச்சி, தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா, அன்றைய தினம் நகருக்குள் எந்த திருமண மண்டபமும், அரங்கமும் நமக்கு கொடுத்துவிடக் கூடாது என்று, மாமல்லபுரம் சென்று அந்த நிகழ்ச்சியை நடத்தினோம். ஏன் இன்று நடைபெறும் பொதுக்குழுக் கூட்டம் வரை எங்கெல்லாம் எப்படியெல்லாம் தடைகள் வந்தன? அத்தனை தடைகளையும் தாண்டி தவெக தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கும்.அது தொடர்ந்து நடக்கும்.
மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே, பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் பத்தாது, செயலிலும் ஆட்சியிலும் அதைக்காட்ட வேண்டும். மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியை ஒரு பாசிச ஆட்சி என்று அடிக்கடி அறிக்கைகள் கொடுத்துவிட்டு, இங்கு நீங்கள் செய்யும் ஆட்சி மட்டும் என்னவாம்? அதற்கு கொஞ்சம்கூட குறைவில்லாத அதே பாசிச ஆட்சிதானே.
ஒரு கட்சித் தலைவனாக எனது கட்சித் தொண்டர்களையும், என் நாட்டு மக்களையும் சந்திப்பதற்கும், பேசுவதற்கும் தடை போடுவதற்கு நீங்கள் யார்? தடையை மீறி என் மக்களை பார்க்க வேண்டும் என்றால் சென்றே தீருவேன். சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் அமைதியாக இருக்கிறேன்.நேற்று வந்தவன் எல்லாம் முதல்வராக கனவு காண்கிறேன் என்று கூறுகிறீர்கள். அது நடக்கவே நடக்காது என்று கூறுகிறீர்கள். பிறகு ஏன், மற்ற எந்த கட்சிகளுக்கும் இல்லாத தடைகளை விதித்துக் கொண்டே இருக்கிறீர்கள். அணை போட்டு ஆற்றை வேண்டுமானால் தடுக்கலாம். காற்றைத் தடுக்க முடியாது. அதையும் மீறி தடுக்க நினைத்தால், சாதாரணமாக இருக்கும் காற்று சூறாவளியாக மாறும். ஏன் சக்திமிக்க புயலாக கூட மாறும்.
தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து வரக்கூடிய செய்திகளைக் கேட்கும்போது மன உளைச்சலையும், மன வேதனையையும் தருகிறது. சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. அதற்கு எல்லாம் இந்த கரப்ஷன் கபடதாரி கவர்மென்ட்தான் காரணம். இந்த நிலை மாற வேண்டும். அதற்கு ஒரே வழி இங்கு உண்மையான மக்களாட்சி மலர வேண்டும். அது வரவேண்டும் என்றால் இவர்களை மாற்ற வேண்டும்.
மேலும், தொடர்ந்து பேசுகையில், இந்த பொதுக்குழு வழியாக, தமிழக மக்களுக்கு ஒரு உத்தரவாதத்தைக் கொடுக்கப் போகிறோம்.தவெக ஆட்சி உண்மையான மக்கள் ஆட்சி. தவெக தலைமையில் அருதிப்பெரும்பான்மை பெற்ற ஆட்சி.அதிகாரப்பகிர்வுடன் கூடிய ஆட்சி. அப்படியாக இந்த ஆட்சி அமைந்ததும் பெண்கள் பாதுகாப்பை நூறு சதவீதம் உறுதி செய்வோம். சட்டம் ஒழுங்கை முறையாக கண்டிப்பாக வைத்திருப்போம். கல்வி, சுகாதாரம், மருத்துவத்தில் கவனம் செலுத்துவோம். அதுவும், அனைவருக்கும் எளிதாக, சமமாக கிடைப்பதை உறுதி செய்வதுதான் தவெகவின் இலக்கு. 2026-ல் தவெகவுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி என விஜய் பேசியிருந்தார்.
இந்நிலையில், திருவண்ணாமலையில் நடந்த மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பேசினார். அப்போது, தவெக தலைவர் விஜய்யின் பேச்சை கடுமைாக விமர்சனம் செய்தது மட்டுமின்றி தவெகவை கிண்டல் செய்து பேசினார். ஏதோ தனியார் நிறுவனம் சர்வே நடத்தினார்களாம். அதில் 2-ஆம் இடம் வந்து விட்டார்களாம். அடுத்து அவர் தான் ஆட்சியை பிடிக்க போகிறாராம். பாவம் அவரை உசுப்பிவிடுறாங்க. வேண்டும் என்றே. அவருக்கு ஆசையை தூண்டிவிட்டு உள்ளே வந்து களமிறங்கி விளையாடுங்க என்று சொல்கின்றனர்.
2026 சட்டசபை தேர்தலில் 2 பேருக்கு இடையே தான் போட்டி. ஒரு பக்கம் திமுக. இன்னொரு பக்கம் தவெக. அதில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்றால் எடப்பாடி பழனிச்சாமி அவர்களே நீங்கள் போட்டியில்லை. உங்களை விட நாங்கள் தான் பெரிய சக்தி என்று கூறுகிறார். போட்டி என்பது திமுகவுடன் இப்போது கிடையாது. 2-வது இடத்தில் யார் என்பது தான் விஜய்க்கும், எடப்பாடிக்கும் போட்டி. 2-வது இடம் யாருக்கு என்பதில் தான் அண்ணாமலைக்கும், விஜய்க்கும் போட்டி. இந்த தமிழக அரசியல் களத்தில் 2-வது இடம் பிடிப்பது யார்? என்பதில் சண்டை நடக்கிறது. அந்த சண்டை எடப்பாடி பழனிச்சாமிக்கும், விஜய்க்கும் இடையே நடக்கிறது. திமுக கூட்டணியுடன் அவர்கள் மோத முடியாது. அதனை அவர்களே ஒப்புக்கொள்வார்கள். திமுக, தவெக இடையே தான் போட்டி என்று அவர் யாருக்கு பதில் சொல்கிறார்.
அது திமுகவுக்கு சொல்கிற பதிலா? கிடையாது. எங்கள் 2 பேருக்கும் தான் போட்டி என்று ஏற்கனவே எதிர்க்கட்சியாக இருக்கிற அதிமுகவுக்கு விடுக்கிற சவால்.சி வோட்டர் சர்வே அதிமுகவுக்கு ஒரு நெருக்கடியை தருகிறார். நீயா? நானா? 2-வது இடம். அவர்களே ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார்கள். திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி தான் முதன்மையாக இருக்கிறது. அதனை எதிர்க்கும் வலு அதிமுக, பாஜகவுக்கு இல்லை. அதனை எதிர்க்கும் வலு எங்களுக்கு தான் இருக்கிறது என்று வார்டு எலக்ஷனில் கூட நிற்காத கட்சி 62 எம்எல்ஏக்களை வைத்து இருக்கும் அதிமுகவுக்கு சவால் விடுகிறது. நீங்கள் 2 பேரும் சண்டை போட்டு கொள்ளுங்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி இப்போது திமுக கூட்டணியில் இருக்கிறது என்று சொல்கிறார்கள். அது உண்மை தான். ஆனால் ஒரு உண்மையை மறந்து விடக்கூடாது. விடுதலை சிறுத்தைகள் கட்சியும் சேர்ந்து உருவாக்கிய மதசார்பற்ற கூட்டணியில் இருக்கிறோம் என்பதை மறக்க வேண்டாம்” என தொல். திருமாவளவன் தெரிவித்தார்.