வைஷ்ணவி: உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள்.. என்னை வரவேற்பதும் என்னை தேற்றுகிறது…!

உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் என்னை வரவேற்பதும் எனக்கு ஆதரவு கொடுப்பதும் என்னை தேற்றுகிறது என தவெகவில் இருந்து வெளியேறிய வைஷ்ணவி தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த இன்ஸ்டா பிரபலமான வைஷ்ணவி. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக இருந்து வந்தார். பெண் என்பதால் கட்சி நிர்வாகிகள் தன்னை புறக்கணிப்பதாகவும், தகாத வார்த்தைகளால் பேசி நிர்வாகிகள் மிரட்டுவதாகவும் கூறி திடீரென தவெகவில் இருந்து முழுமையாக தன்னை விடுவித்துக்கொள்வதாக கூறி கட்சியில் இருந்து வைஷ்ணவி விலகினார்.

இந்நிலையில் பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் செய்தியாளர்கள் சந்திப்பில், பெண்கள் மற்ற துறைகளில் செல்ல விரும்பினால் ஆதரவு தெரிவிக்கும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் குடும்பங்கள் அரசியலுக்கு செல்லும்போது ஆதரவு கொடுப்பதில்லை. மக்கள் பணி செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் இருப்பவர்கள் அதற்கான வாய்ப்புகளை வழங்கக்கூடிய உரிய அங்கீகாரத்தை வழங்கக்கூடிய கட்சி எது பாஜக என தெரிந்து கொண்டு சேர வேண்டும். அப்படிப்பட்ட கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உள்ளது. தவெகவில் இருந்து விலகிய வைஷ்ணவி மக்கள் பணி செய்ய பாஜவில் இணைந்து செயலாற்றலாம் என வானதி சீனிவாசன் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், மதிமுகவின் இணையதள ஒருங்கிணைப்பாளர் மினர்வா ராஜேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மக்கள் பணி என்றால் அது மதிமுக மட்டுமே என்றும் தலைவர் வைகோ மற்றும் துரை வைகோ தலைமையில் இணைந்து பணியாற்றலாம் வாருங்கள் என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், வைஷ்ணவி எக்ஸ் பக்கத்தில், என்னைப் போன்ற இளம் பெண்களும் இளைஞர்களும் உங்களை போன்ற அனுபவம் மிக்கவர்களின் வழிகாட்டுதலோடு மக்கள் குரலாக சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் ஒலிக்க வேண்டும் என்பதே என்னுடைய குறிக்கோள். உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் என்னை வரவேற்பதும் எனக்கு ஆதரவு கொடுப்பதும் என்னை தேற்றுகிறது. நன்றி அண்ணா! என பதிவிட்டுள்ளார்.

வைகோ: பயமா..! திமுகவின் அகராதியிலேயே கிடையாது…!

பயம் என்பது திமுகவின் அகராதியில் இல்லை… அமலாக்கத் துறை, வருமான வரித் துறை போன்ற அமைப்புகள் மத்திய அரசால் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் 26 அப்பாவிப் பொதுமக்கள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வேதனை அளிக்கிறது. அதே நேரத்தில், முஸ்லிம் இளைஞர்கள் சிலர் துணிச்சலுடன் செயல்பட்டு, மீதமுள்ள மக்களைப் பாதுகாப்பாக மீட்டெடுத்த செய்தி மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது. இந்தச் செய்தி ஊடகங்களில் விரிவாக வெளியிடப்படவில்லை.

நீட் தேர்வு விலக்கு குறித்து திமுகவின் வாக்குறுதி குறித்த கேள்விக்கு, நீட் வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. திமுகவின் நான்கு ஆண்டுகால ஆட்சியில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. சொல்லாத வாக்குறுதிகளையும் அரசு நிறைவேற்றி உள்ளது. திராவிட மாடல் ஆட்சி திருப்திகரமாக உள்ளது என வைகோ தெரிவித்தார்.

மேலும், வருமான வரித்துறை சோதனைகளுக்கு திமுக அஞ்சுவதாகக் கூறுவது குறித்த கேள்விக்கு, பயம் என்பது திமுகவின் அகராதியில் இல்லை. வருமான வரித்துறை, அமலாக்கத் துறை போன்ற அமைப்புகள் மத்திய அரசால் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், அந்த அமைப்புகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது. திமுகவினர் இதைப் பற்றி கவலைப்படவில்லை என வைகோ தெரிவித்தார்.

துரை வைகோ கண்டனம்: அப்பாவி மக்களின் பிணங்களை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் மதவாத வலதுசாரிகள்

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் படுகொலை அப்பாவி மக்களின் பிணங்களை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் மதவாத வலதுசாரி அரசியல் சக்திகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என துரை வைகோ வேண்டுகோள் விடுத்தார். தமிழ்நாடு ஆளுநர் R.N. ரவியைக் கண்டித்தும், வஃபு திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் மதிமுக சார்பில் கண்டனப் போராட்டம் நடைபெற்றது. மதுரையில் நடைபெற்ற கண்டனப் போராட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் துரை வைகோ பங்கேற்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் துரை வைகோ பேசுகையில், ஜம்மு காஷ்மீரில் குழந்தைகளும் பெண்களும் கதற கதற அவர்களின் தந்தையர்களும் கணவர்களும் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். காக்கா குருவிகளை சுடும் போது கூட வன்மத்தோடு சுட்டிருக்க மாட்டார்கள். ஆனால் இங்கு வன்முத்தோடு சுட்டிருக்கிறார்கள் சுடப்பட்ட அப்பாவி மக்களுக்கு எந்த அரசியலும் தெரியாது, வன்மமும் தெரியாது தாக்குகின்ற தீவிரவாதிகளின் குருற நோக்கமும் தெரியாது எதற்காக நாம் சுட படுகிறோம் என்றும் தெரியாது. இது மதம் சார்ந்ததா என்றால் அதுவும் கிடையாது. எந்த மதமும் இது போன்ற இழி செயல்களை ஆதரிப்பதில்லை.

இந்து மதமும் இஸ்லாமோ கிறிஸ்தவமோ எந்த மதமும் இதுபோன்ற இழிசெயலை ஆதரிப்பதில்லை. இது போன்ற இழி செயல்கள் மிகப்பெரிய பாவச் செயல் என்றே அனைத்து மதமும் கூறுகிறது. மதத்துக்கும் இதற்கும் என்னையா சம்பந்தம்? ஆனால் இதை மதப் பிரச்சனையாக திசை திருப்புகிறார்கள். இந்த மேடையின் முன்னால் அமர்ந்திருக்கிற மதுரையில் உள்ள நம் மாமாக்களுக்கும் தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமியர்களுக்கும் இந்தியாவிலுள்ள இஸ்லாமியர்களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? இதை ஆதரிக்கிறார்களா? கிடையாது.

ஆனால் சமூக வலைதளங்களில் எதை பரப்பிக் கொண்டுள்ளார்கள் இந்த மதவாத சக்திகள்? என்ன அக்கிரமம்? இந்த துயர சம்பவத்தை வைத்து, இந்த கொடும் செயலை வைத்து, சுட்டுக் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் பிணங்களை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் மதவாத வலதுசாரி அரசியல் சக்திகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மக்களே அது உங்கள் கையில் தான் உள்ளது. பாகிஸ்தான் துணை பிரதமர், காஷ்மீர் விடுதலைப் போராட்ட வீரர்கள் இதை செய்திருக்கலாம் என்று ஒரு அபாண்டமான விஷமத்தனமான கருத்தை முன்வைக்கிறார்.

நான் ஒன்றை சொல்கிறேன். விடுதலைப் போராட்ட வீரர்கள் தங்கள் உயிரை துச்சம் என்று நினைத்து போராடக் கூடியவர்கள். ஒருபோதும் இது போன்ற இழிவான செயல்களில் ஈடுபட மாட்டார்கள். அவர்கள் ஆயுதம் ஏந்திய ராணுவத்தினரை எதிர்ப்பார்கள். துப்பாக்கி ஏந்திய காவல்துறையை தாக்குவார்கள். ஆனால், இது போன்ற அப்பாவி மக்களை ஒருபோதும் தாக்க மாட்டார்கள். ஈழ விடுதலைப் போரிலும் சரி, பாலஸ்தீனத்திலும் சரி அப்படி யாரும் நடந்து கொள்ளவில்லை.

இதற்கெல்லாம் காரணம் யார்? நான் அரசியலுக்கு வந்த ஏழு வருடத்திற்கு முன்பாக சொன்னேன், வலதுசாரி சக்திகள் தான் இவைகளுக்கு காரணம் என்று. இந்த தீவிரவாத இளைஞர்களுக்கு இளம் வயதிலேயே மதரீதியிலான வன்மத்தை ஊட்டி இருப்பார்கள். பின் கையில் துப்பாக்கியை கொடுத்து அனுப்புகிறார்கள். இதற்கு காரணம் இஸ்லாமிய வலதுசாரி சக்திகள். உத்தரப்பிரதேசம் ராஜஸ்தானில் இஸ்லாமியர்கள் மாட்டிறைச்சி உண்பதற்காக அடித்துக் கொள்கிறானே அது இந்துத்துவ வலதுசாரி சக்திகள். இலங்கையில் நமது தொப்புள் கொடி உறவுகளான தமிழர்களை கொன்று குவித்தானே அது சிங்கள இனவாத வலதுசாரி சக்திகள். ரொகிங்கியா முஸ்லிம்களை கொன்று குவித்தார்களே அது புத்த மதவலதுசாரி சக்திகள்.

நம் தமிழ்நாட்டில் சாதி அரசியலை செய்து கொலைகளுக்கு காரணமான சக்திகளும் வலதுசாரி சக்திகள் தான். இந்த வலதுசாரி அரசியல் நம் நாட்டை விட்டு எப்போது வெளியேறுகிறதோ அன்றுதான் ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட இது போன்ற துயர சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி ஏற்படும். மக்கள், அரசியலில் ஈடுபடுபவர்களை அவர்களின் மக்கள்நல பணிகளை பார்த்து, அவர்கள் செய்யும் செயல்கள் நன்மையா தீமையா என்பதை பார்த்து தலைவர்களையும், அரசியல் இயக்கங்களையும் தேர்ந்தெடுங்கள். ஒருபோதும் சாதி மதத்தை வைத்து தேர்ந்தெடுக்கக்கூடாது என்று என் அன்பான பணிவான வேண்டுகோளை முன்வைக்கிறேன்.

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் சையத் அடில் ஹுசைன் என்ற இஸ்லாமிய இளைஞனும் ஒருவர். இவர் சுற்றுலாப் பயணிகளை காப்பாற்ற முயற்சித்தபோது தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். குதிரை சவாரி மூலம் சொற்ப வருமானம் ஈட்டி தனது ஏழைக் குடும்பத்தை பராமரித்து வந்தவர். நமது சகோதரன் கொல்லப்படுகிறானே என்ற ஆதங்கத்தில் தீவிரவாதிகளிடமிருந்து துப்பாக்கியை பறிக்கும் போராட்டத்தில் வீர மரணம் அடைந்துள்ளார். இந்துக்களை காப்பாற்றும் போராட்டத்தில் அவன் இறந்திருக்கிறான்.

சாவது யார் சுடுவது யார் என்று அவன் மதத்தை பார்க்கவில்லையே. அது அல்லவா மனிதநேயம். அந்த தீவிரவாத செயல் இந்தியாவுக்கு எதிரானது மட்டுமல்ல இஸ்லாத்திற்கும் எதிரானது மனிதநேயத்திற்கும் எதிரானது. ஒரு இந்து சகோதரி அவர் கண்முன்னே அவரது தந்தை சுட்டுக் கொல்லப்படுகிறார். தன் இரண்டு குழந்தைகளை காப்பாற்ற பதறி அடித்து ஓடியுள்ளார் அதை பார்த்த முசாஃபிர் என்ற வாகன ஓட்டி அவர்களை காப்பாற்றி அழைத்துச் சென்று பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துவிட்டு, நண்பர் சமீருடன் சென்று அந்தப் பெண்ணின் தந்தையின் சடலத்தின் முன் இரவு முழுவதும் காவல் காத்திருக்கிறார். அந்தப் பெண்மணி சொல்கிறார், காஷ்மீரில் என் தந்தையை இழந்தேன்; அதே சமயம் இரண்டு சகோதரர்கள் கிடைத்துள்ளார்கள் என்று. இது அல்லவா மனிதநேயம்.

வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு என நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளது. தமிழ்நாட்டை தாண்டி உத்திரபிரதேசம், ஜார்கண்ட், பீகார் போன்ற வட மாநிலங்களுக்கு சென்றால், அங்கு கல்வி இல்லை, வேலையில்லை. அவர்கள் வேலைவாய்ப்பு தேடி தமிழ்நாட்டிற்கு சாரை சாரையாய் வந்து கொண்டு இருக்கிறார்கள். அதைப்பற்றி எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு ஒன்றிய அரசிடம் பதில் உண்டா? 100 நாட்கள் வேலை திட்டம் பல பகுதிகள் வறட்சியான பகுதிகளாக, வானம் பார்த்த பூமியாக விவசாயமே செய்ய முடியாத பகுதிகளாக, தொழிற்சாலைகளே இல்லாத பகுதிகளாக உள்ளது. அவர்கள் இந்த 100 நாள் வேலையைத்தான் நம்பி உள்ளனர். அதை வைத்துத்தான் அவர்களின் இல்லங்களில் அடுப்பெரிகிறது. ஆனால், அதற்கு போதிய நிதி ஒதுக்காத ஒன்றிய அரசிடம் பதில் உண்டா? இல்லை.

இதையெல்லாம் மடைமாற்றத்தான் இந்த வஃபு திருத்த சட்டத்தை கொண்டு வந்து இருக்கிறார்கள். இந்த வஃபு திருத்தச் சட்டம் இந்திய அரசியலமைப்புக்கு எதிரான சட்டம். ஜனநாயக மாண்பிற்கு எதிரான சட்டம். இஸ்லாமியர்களின் நலனுக்கு எதிரான சட்டம் இந்த வஃபு சட்டத்தை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் முற்றிலும் எதிர்க்கிறது.திருப்பதி கோவில் நிர்வாகத்தில் ஒரு கிறிஸ்தவரை நியமிப்பதும், சீக்கியரின் பொற்கோவில் நிர்வாகத்தில் ஒரு இஸ்லாமியரை நியமிப்பதும் எவ்வளவு தவறானதோ அது போலதான் இதுவும்.

கோவில்களில் ஆறுகால பூஜைகள் நடக்கட்டும், மசூதிகளில் ஐவேளை தொழுகைகள் நடக்கட்டும், தேவாலயங்களில் ஜெப கூட்டங்கள் நடக்கட்டும், அதேபோல பகுத்தறிவு பிரச்சாரமும் நடக்கட்டும் என்று கடந்த அறுபது ஆண்டுகளாக தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் முழங்கி, மதநல்லிணக்கத்திற்கு அரணாக விளங்குபவர் எங்கள் தலைவர் வைகோ அவர்கள். மதிமுக தொடர்ந்து போராடும் அவர் வலியுறுத்திய மதநல்லிணக்கத்தை நாடு முழுவதும் கொண்டு சேர்த்து இஸ்லாமியர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ள இந்த சட்டத்தை எதிர்த்து மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் மறுமலர்ச்சி திமுக தொடர்ந்து போராடும் என்று பதிவு செய்கிறேன். ஒன்றிய பாஜக அரசு உடனடியாக இந்த வஃபு திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என துரை வைகோ பேசினார்.

வைகோ காட்டம்: தமிழ்நாட்டை கலவர பூமியாக்கி, சட்டம் ஒழுங்கு சீர்குலைக்க சீமான் முயற்சி..!

தமிழ்நாட்டை கலவர பூமியாக்கி, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்ற குற்றம் சுமத்துவதற்கான முதல்கட்ட முயற்சியே இது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிடர் இயக்கம் குறித்தும், திராவிட இயக்கத் தலைவர்கள் குறித்தும், அவதூறுகளையும், இழிவுகளையும் தொடர்ந்து அள்ளி வீசி வருகிற நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், எல்லை மீறி, வெறி உணர்ச்சியோடு, மனம் போன போக்கில் தந்தை பெரியார் எனும் மாமனிதரை கொச்சைப்படுத்தி பத்திரிகையாளர்களிடம் பேசி உள்ளார்.

தந்தை பெரியாரைப் பற்றி பேசிய கருத்துகளுக்கு ஆதாரம் என்ன? என்று கேட்டால், சிறிதும் பொறுப்பின்றி கோமாளித்தனமாகவும், ஆணவமாகவும், அநாகரிகமாக மேலும் மேலும் நடந்து கொள்கிறார். இதற்கு எதிர்வினையாக கட்சி வேறுபாடு இல்லாமல் தமிழகத்தில் போராட்டங்களும், நீதிமன்றங்களில் முறையீடு செய்வதும் நடந்து வருகின்றன.

சீமானின் பேச்சு சமூகத்தில் பதற்றம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்தப் பிரச்சினையில் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து அது தொடர்பான அறிக்கையை ஜனவரி 20 -ஆம் தேதி நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றக்கிளை, மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

பொது இடத்தில் அமைதியை குலைத்தல், கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசுதல் முதலான பிரிவுகளில் சீமான் மீது 60-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை எதனைப் பற்றியும் சிறிதும் பொருட்படுத்தாமல், அகம்பாவத்துடன் மேலும் மேலும் சீமான் உளறி வருவது வன்மையான கண்டனத்திற்கு உரியதாகும்.

தமிழ்நாட்டை கலவர பூமியாக்கி, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்ற குற்றம் சுமத்துவதற்கான முதல்கட்ட முயற்சியே இது. தமிழ்நாடு அரசு, இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இவரை நீதிமன்றத்தின் கூண்டிலேற்றி, விசாரித்து, உரிய தண்டனையை உடனடியாக அளிக்க வேண்டும். நாகரிக அரசியலை விரும்புகிற அனைவரும் இத்தகைய ‘தீய சக்திகளுக்கு’ தக்க பாடம் புகட்டிட தொடர்ந்து அணிதிரள வேண்டும்” என வைகோ தெரிவித்துள்ளார்.

எச்.ராஜா விமர்சனம் : காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக கட்சிகள் இலவச இணைப்புகள் ..!

இலவச இணைப்புகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்டவையும் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகின்றன என எச்.ராஜா விமர்சித்துள்ளார். தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் எச்.ராஜா திருச்சியில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது, “பாஜக அமைப்புத் தேர்தல் துவங்குவதற்கு முன்பாக தீவிர உறுப்பினர் தேர்வு தொடங்கி உள்ளது. மண்டல்களுக்கு தீவிர உறுப்பினர் படிவம் வழங்கப்பட்டு வருகிறது. திமுக 1963-க்கு முந்தைய காலத்துக்கு செல்வதாக உணர்கிறேன். திமுகவின் அயலக அணி போதைப் பொருள் கடத்த மட்டும் வைத்திருப்பதாக எண்ணினோம். பட்டவர்த்தனமாக தேச விரோதமாக செயல்படும் அமைப்பாக அது இருக்கிறது. அந்நிய நாடுகள் கூட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவின் பகுதி அல்ல என்று காட்டுவது இல்லை.

ஆனால் திமுக அயலக அணி, இந்திய பகுதியாக இல்லாமல் வரைபடம் வெளியிட்டுள்ளனர். இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும். திமுக மூத்தத் தலைவர்களே சிறுபிள்ளைகள் தலையிடுவதால் சிக்கல்கள் வருவதாக பேசி உள்ளனர். உதயநிதி வந்த பிறகு தரங்கெட்ட கட்சி திமுக என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் தவறுதலாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ஒரு வரி விடுபட்டது தொடர்பாக ஆளுநர் பற்றி உதயநிதி ஸ்டாலின் மிக அநாகரீகமாக பேசி உள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நாகரீகமான அரசியலை விரும்புவதாக இருந்தால் உதயநிதியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்தை சிதைத்தது திமுக தான். இலவச இணைப்புகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்டவையும் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகின்றன என எச்.ராஜா தெரிவித்தார்.

துரை வைகோ குற்றச்சாட்டு: மத்திய அரசு சர்ச்சையை கிளப்பி மதவாத அரசியல் செய்கிறது..!

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் மதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய திருச்சி எம்பியுமான துரை வைகோ பேசுகையில், மத்திய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை புறக்கணித்தால் வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் பாஜக டெபாசிட் கூட வாங்காது என பேசினார்.

அதன் பின்னர் துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், மத்திய அரசின் பட்ஜெட்டில் எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை, தமிழ்நாட்டிற்கு உரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என பாஜவினர் பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள். மக்களை திசை திருப்ப அவ்வாறு அவர்கள் செய்கிறார்கள். மக்கள் அதனை நம்ப மாட்டார்கள்.

இந்தியாவில் மொத்தமாக 1000 பேருக்கு கூட தெரியாத சமஸ்கிருத மொழியை திருச்சி விமான நிலையத்தில் கல்வெட்டில் வைத்துள்ளார்கள். அதை நாம் எதிர்த்து பேசினால் வட இந்தியாவில் அதனை காட்டி இந்து மதத்திற்கு எதிராக பேசுவதாக பிரசாரம் செய்கிறார்கள். சர்ச்சையை கிளப்பி மதவாத அரசியல் செய்வதற்காகவே இதுபோன்ற செயல்களில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதை வன்மையாக கண்டிக்கத்தக்கது என துரை வைகோ பேசினார்.

மதிமுக தேர்தல் அறிக்கை: விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்படும்..!

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு ம.தி.மு.க. தேர்தல் அறிக்கையை பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் உள்ள தேர்தல் பணிமனை அலுவலகத்தில் வெளியிட்டார்.
மதிமுக தேர்தல் அறிக்கையில்,
1. மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி முறை நிலவ வேண்டும்.
2. தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
3. திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தப்படும்.
4. புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்யவும், சுங்கச்சாவடிகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
5. மத்திய பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வலியுறுத்தப்படும்.
6. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்ட 200 நாட்களாக உயர்த்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
7.நாட்டின் பன்முகத் தன்மையை சீர்குலைக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்.
8. ஒரேநாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம்.
9. கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.
10. விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்படும்.
போன்ற சிறப்பு 74 அம்சங்களுடன் மதிமுக தேர்தல் அறிக்கையில் அடங்கியுள்ளது.

ஏன் இந்த பாகுபாடு: பாஜக கூட்டணி கட்சிகளுக்கு கேட்ட உடனே சின்னம்..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் முந்தய தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகள், இடங்களைப் பெற்றால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக, சின்னங்களை இழக்காத கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும். கடந்த ஆண்டு இந்திய தேர்தல் ஆணையம் மாநில அந்தஸ்து, தேசிய அந்தஸ்துகளை இழக்கும் கட்சிகள் பட்டியலை வெளியிட்டது.

இதில் புதுச்சேரியில் பாமக மாநில கட்சி அந்தஸ்தை பறிகொடுத்தது. இதனால் பாமக தமது மாம்பழ சின்னத்தையும் இழந்து இனி தேர்தல்களில் மாம்பழம் என்ற பொதுச் சின்னத்தில் போட்டியிடாத சூழ்நிலை உருவானது. அதேபோல டிடிவி தினகரனின் அமமுக, ஜிகே வாசனின் தமாகா மிக மிக சொற்பமான வாக்குகளைப் பெற்று டெபாசிட்டை இழந்தன. இதனால் இந்த கட்சிகளுக்கும் குக்கர் மற்றும் சைக்கிள் சின்னங்கள் கிடைக்காத நிலை ஏற்படாது. அதுபோல நாம் தமிழர் கட்சி, விசிக மற்றும் மதிமுகவிற்கும் சின்னங்கள் கிடைக்காத நிலை ஏற்படாது.

இந்நிலையில் லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் உரிய காலத்தில் விண்ணப்பித்து தங்களுக்கான சின்னங்களைப் பெறுவதில் முனைப்பு காட்டி வந்தன. பாமகவும் மாம்பழம் சின்னத்துக்கு விண்ணப்பித்திருந்தது. அமமுக குக்கர் சின்னத்துக்கும் ஜிகே வாசன் கட்சி சைக்கிள் சின்னத்துக்கும் மதிமுக பம்பரம் சின்னத்துக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பானை சின்னத்துக்கும் நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்துக்கும் விண்ணப்பித்தன.

ஆனால் பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக சேர்ந்த உடனேயே அக்கட்சிக்கு மாம்பழ சின்னம் உறுதி செய்யப்பட்டது. அதேபோல தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னமும் ஜிகே வாசனின் தமாகாவுக்கு சைக்கிள் சின்னமும் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டது. பாஜக கூட்டணியில் இடம் பெறாத மதிமுக, விசிக, நாம் தமிழர் கட்சிகளுக்கு கேட்ட சின்னத்தைத் தர முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதனால் இந்த அரசியல் கட்சிகள் அனைத்தும் நீதிமன்றங்களை நாடி தீர்ப்புக்கு காத்திருக்கிறது.

பாஜக கூட்டணியில் சேராத ஒரே காரணத்துக்காகவே ஒவ்வொரு தேர்தலிலும் பயன்படுத்திய சின்னங்களை தங்களுக்கு ஒதுக்க மறுப்பது என்பது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை என மதிமுக, நாம் தமிழர் கட்சித் தலைவர்களான துரை வைகோ, சீமான் தெரிவிக்கின்றனர்.