தமிழகத்தில் தொடரும் ஆணவ கொலைகள்..!

நிலவு குழந்தைகளுக்கு சோறூட்ட மட்டுமல்ல அறிவியல் வளர்ச்சி இன்னும் சில நூற்றாண்டுகளில் நிஜப் பாட்டி அங்கே வடை சுட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்ற அளவிற்கு இன்றைய நவீன உலகில் மனிதன் உலகையே தனது உள்ளங்கையில் வைக்கும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனாலும் மனிதன் மதம், மொழி, இனம் போன்ற மூட நம்பிக்கைகளால் பிளவுபட்டு கிடக்கின்றான். அவனுடைய மூட நம்பிக்கைகள் அவனது ஆறாம் அறிவை செயல்பட வைப்பது இல்லை. அவனது ஆறாம் அறிவு செயல்படாத காரணத்தின் விளைவு ஆங்காங்கே வன்முறைகள் வெடிக்கின்றது. கெளரவம் என்ற பெயரில் நடக்கும் ஆணவ கொலைகள் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து நடைபெற்று வரும் சூழ்நிலையில் நாடு எங்கே சென்று கொண்டுள்ளது என சிந்திக்க வைக்கிறது.

இந்நிலையில், வேற்று இனத்தை சேர்ந்தவரின் காதலை கைவிட மறுத்ததால் தங்கையை, அண்ணனே அடித்துக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள பருவாய் கிராமத்தைச் சேர்ந்த வெல்டிங் பட்டறை தொழிலாளி தண்டபாணி. இவரது மனைவி தங்கமணி. இவர்களது மகன் சரவணன் மகள் வித்யா உள்ளனர். சரவணன் எலெக்ட்ரீஷியனாகப் பணியாற்றி வந்தார். சரவணனின் தங்கை வித்யா கோயம்புத்தூர் அரசுக் கல்லூரியில் முதுகலை முதலாமாண்டு படித்து வந்தார். வித்யாவும், திருப்பூர் விஜயாபுரத்தை சேர்ந்த வெண்மணி என்ற வாலிபருக்கும் காதல் மலர்ந்தது. இந்த விவகாரம் வித்யா வீட்டிற்கு தெரியவந்தது. வித்யா வீட்டிற்கு வெண்மணி வந்து பெண் கேட்டுள்ளார்.

இந்நிலையில்,கடந்த 30-ஆம் தேதி வித்யாவின் வீட்டில் இருந்தவர்கள் தேவாலயத்துக்கு சென்றிருந்ததாக கூறப்படுகிறது. வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது பீரோ விழுந்த நிலையில் காயத்துடன் வித்யா சடலமாக கிடந்தார். பீரோ விழுந்து வித்யா இறந்திருக்கலாம் என பெற்றோர் நினைத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் வித்யாவின் பெற்றோரும், உறவினர்களும் உடலை அடக்கம் செய்தனர். வித்யா உயிரிழந்த தகவலை கேள்விப்பட்ட அவரது காதலன் வெண்மணி அதிர்ச்சியடைந்தார். மேலும் காதலியின் சாவில் மர்மம் உள்ளது என காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதேபோல கிராம நிர்வாக அதிகாரிக்கும் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து பல்லடம் தாசில்தார் சபரிகிரி, கிராம நிர்வாக அதிகாரி பூங்கொடி மற்றும் வருவாய்த்துறையினர் முன்னிலையில் வித்யா உடல் நேற்று முன்தினம் தோண்டி எடுக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினர் உடற்கூராய்வு செய்தனர். அதில் உடற்கூராய்வில் வித்யா தலையின் பின்பக்கத்தில் பலத்த காயம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வித்யா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காமநாயக்கன்பாளையம் காவல்துறை விசாரணையை தொடங்கினர். வித்யாவின் பெற்றோர் மற்றும் அவரது அண்ணன் சரவணன் ஆகியோரிடம் விசாரணை நடந்தது.

பல மணி நேர விசாரணைக்குப் பிறகு, வித்யாவை கொலை செய்ததை சரவணன் ஒப்புக்கொண்டார். விசாரணையில், எனது தங்கை மீது அதிக பாசம் வைத்திருந்தேன். அவரது காதல் விவகாரம் தெரியவந்ததும் கண்டித்தேன். காதலை கைவிட வேண்டும். படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினேன். ஆனால், தங்கை அதனை கண்டுகொள்ளவில்லை. மாறாக என்னிடம் பேசுவதை தவிர்த்து வந்தாள். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சம்பவத்தன்று அறையில் வித்யா படுத்து இருந்தார். அப்போது, அரிவாளின் பின்பக்கத்தால் அவளது தலையில் பலமாக தாக்கினேன்.

இதில் அவள் சம்பவ இடத்திலேயே இறந்தாள். இதன்பின்னர் கொலையை மறைக்க பீரோ விழுந்து அவள் இறந்ததுபோல் சித்தரிக்க பீரோவை தலை மீது சாய்த்துவிட்டு வீட்டில் இருந்து வெளியேறிவிட்டேன் என தெரிவித்தார். இதையடுத்து, சரவணன் மீது கொலை வழக்குப்பதிவு செய்த காமநாயக்கன்பாளையம் காவல்துறையினர் கைது செய்தனர். காதலை கைவிட மறுத்ததால் தங்கையை, அண்ணனே அடித்துக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2035-ல் இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையம் அமைக்கும்..! நிலவின் 2040-ல் ஓர் இந்தியர் நிலவில் இறங்குவார்..!”

தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை மற்றும் புவி அறிவியல் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், “விண்வெளி ஆய்வில் இந்தியா குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்துள்ளது. சரியாக ஓராண்டுக்கு முன் இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம், சந்திரனின் தென் துருவத்தில் மென்மையாக இறங்கி உலகையே வியப்பில் ஆழ்த்தியது. அதோடு, இந்த வரலாற்று நிகழ்வு விண்வெளி ஆய்வில் இந்தியாவை முன்னணி நாடாக நிலைநிறுத்தியது.

இந்த நிகழ்வை அடுத்தே, ஆகஸ்ட் 23 -ஆம் தேதியை தேசிய விண்வெளி தினமாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு அறிவித்தார். மேலும், சந்திரயான் -3 தரையிறங்கிய தளத்திற்கு ‘சிவ சக்தி பாயின்ட்’ என்று பெயரிடப்படும் என்றும் கூறினார். அதன்படி நடைபெறும் இந்த முதலாம் ஆண்டு கொண்டாட்டத்தின் கருப்பொருளாக, “நிலவைத் தொடும் போது வாழ்க்கையைத் தொடுதல்: இந்தியாவின் விண்வெளி சகாப்தம்” என்பதாக அறிவிக்கப்பட்டது.

சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் பத்திரமாக இறங்குவதற்காக கடினமாக உழைத்தவர்கள் நமது விஞ்ஞானிகள். இந்த முழு சாதனையின் பெருமை நமது பிரதமரையே சாரும். போதுமான வளங்கள் இன்றி நமது விண்வெளித்துறை கடந்த 60 வருடங்களாக இயங்கிவந்தது. அந்த நிதி சிக்கலில் இருந்து நமது விண்வெளித் துறையை விடுவிக்கும் புரட்சிகரமான முடிவை எடுத்தவர் பிரதமர் நரேந்திர மோடி.

இதன் காரணமாக விண்வெளித் துறையில் 3-4 ஆண்டுகளில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்தது. வளப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்த விதம், அதன் விளைவுதான் இன்று உலக நாடுகளிலேயே இந்தியா விண்வெளித் துறை முதலிடம் வகிக்கிறது. அடுத்த ஆண்டு மிகவும் முக்கியமான ஆண்டு. ககன்யான் மிஷன் என்றாலே 2025-ம் ஆண்டு நினைவில் நிற்கும். தற்போதைய எங்கள் திட்டத்தின்படி 2035-ல் இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்கும். 2040-ல் ஓர் இந்தியர் நிலவில் இறங்குவார்” என ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

மயில்சாமி அண்ணாதுரை: பூமியில் குறைந்து வரும் எரிபொருளுக்கு மாற்று சக்தி நிலவில் உள்ளதா ..?

2008 -ம் ஆண்டு நிலவுக்கு ஏவப்பட்டு அதில் நீர் இருப்பதற்கான சுவடுகள் இருப்பதை கண்டுபிடித்த இந்தியாவின் சந்திரயான் 1 விண்கல திட்டத்தின் இயக்குநராக பணியாற்றியவர் தமிழ்நாட்டை சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை. இவர் சந்திரயான் 3 திட்டம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்து இருக்கிறார்.

அப்போது பேசிய மயில்சாமி அண்ணாதுரை, “பூமியில் குறைந்து வரும் எரிபொருளுக்கு மாற்று சக்தி நிலவில் உள்ளது. இனி நிலாதான் வளைகுடா நாடுகளாகவும், அமெரிக்காவாகவும் இருக்கும். வளைகுடா நாடுகளுக்கு நாம் ஏன் செல்கிறோம். நிலவில் வெப்ப நிலையில் 50 டிகிரி இருந்து நாம் ஏன் அங்கு செல்கிறோம் என்றால், இங்கு உள்ளதை விட அங்கு அதிக ஊதியம் கொடுக்கிறார்கள் என்பதால்தான்.

ஏன், அங்கு அதிக ஊதியம் கொடுக்கிறார்கள்? அங்கு எண்ணெய் வளம் உள்ளது. எண்ணெய் வளத்தை எடுப்பதற்காக வழங்குகிறார்கள். அங்கு நீரே இல்லை. இருப்பினும் எவ்வளவோ தூரத்தில் கடல் இருந்தாலும், அந்த நீரை கொண்டு வந்து பெரிய நகரங்களை உருவாக்குகிறார்கள். எல்லாவற்றுக்கும் மூலக் காரணம் மற்ற இடங்களில் இல்லாத அளவுக்கு அங்கு உள்ள எண்ணெய் வளம்.

மனித சமுதாயம் தன்னுடைய நாகரீகத்தை தொடங்கியது நீரை ஒட்டிதான். இப்போது இந்த இரண்டையும் சேர்த்து நான் பார்க்கிறேன். நிலவில் தென் துருவம் என்பது இரண்டும் சேர்ந்த ஒன்று. நிலவில் மற்ற இடங்களில் உள்ளதை விட நீர் அதிகம் உள்ள இடம் துருவ பகுதி. இப்போதுள்ள எண்ணெய் வளம் குறையும்போது நமக்கு ஒரு வளம் தேவை.

அந்த வளம் இருக்கும் இடம் நிலவு. அருகில் நீரும் உள்ளது. இரண்டும் சேரும்போது நிலவின் தென் துருவத்தை அடுத்த ஒரு அமெரிக்க கண்டமாக நான் பார்க்கிறேன். இந்தியாவுக்காக மாற்றுவழி கண்டுபிடிக்க மேற்கு நோக்கி சென்ற கொலம்பஸ் தவறுதலாக கண்டுபிடித்த நாடுதான் அமெரிக்கா. அந்த அமெரிக்கா கண்டுபிடிக்க தவறிய நிலவில் நீரை இந்தியா கண்டுபிடித்தது.

இந்த இரண்டையும் சேர்த்து பார்த்தோம் என்றால் இந்தியா நிலவில் கண்டுபிடித்தது அடுத்த அமெரிக்கா. இது இரண்டையும் சேர்த்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன். இப்போது எப்படி அமெரிக்காவை நோக்கி உலகில் உள்ள எல்லோரும், ஐரோப்பியர்களாக இருக்கலாம், ஆசிய கண்டத்தினராக இருக்கலாம், ஆஸ்திரேலியர்களாக இருக்கலாம். இவர்கள் எல்லோரும் எப்படி போகிறார்களோ, அதுமாதிரி இப்போது எல்லா விஞ்ஞானிகளும் நிலவை நோக்கி போய்கொண்டு இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.” என்றார்.

நீல சூப்பர் மூன்.. நைட் வானத்தை பாருங்க..

இந்த பிரபஞ்சம் பல ஆச்சரியங்களை உள்ளடக்கியது. பல நேரங்களில் வானில் ஏற்படும் பல மாற்றங்கள் நம்மை வியக்க வைக்கும். இதுபோன்ற நிகழ்வுகளை ஒரு முறை நாம் மிஸ் செய்தால் அதன் பிறகு இதைப் பார்க்கப் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருக்கும். அப்படியொரு ஆச்சரியமான நிகழ்வு தான் இப்போது நடக்க உள்ளது. இதை நீங்கள் மிஸ் செய்தால் மீண்டும் இதைப் பார்க்க 9 ஆண்டுகளுக்கு மேலாகக் காத்திருக்க வேண்டுமாம். நமது பூமியின் ஒரே துணைக்கோள் நிலவு. இது பூமியில் இருந்து பல லட்சம் கிமீ தொலைவில் சுற்றி வருகிறது. இதற்கிடையே இந்த ஆகஸ்ட் மாதம் சந்திரன் மிகவும் பெரியதாகவும் பிரகாசமாகவும் தெரியுமாம்.

நேற்றைய தினம் நிலவைப் பார்த்திருந்தால் கவனித்திருக்கலாம். வானில் சூப்பர் மூன் (supermoon) தெரிந்திருக்கும். இதை மிஸ் செய்துவிட்டால் கவலைப்படாதீர்கள். இம்மாத இறுதியில் இதை விட அரிய நீல சூப்பர் மூன் தெரியுமாம். பூமி எப்படி சூரியனைச் சுற்றுகிறதோ.. அதேபோலத் தான் நிலவும் நமது பூமியைச் சுற்றி வருகிறது. இது அனைவருக்கும் தெரியும்.. அப்படிச் சுற்றி வரும் போது பூமிக்கு மிக அருகில் நிலவு வரும் நிகழ்வு தான் சூப்பர் மூன் என்று அழைக்கப்படும். நிலவின் சுற்றுப்பாதையில் பூமிக்கு அருகில் இருக்கும் போது இந்த நிகழ்வு நிகழ்கிறது. இந்த நிகழ்வில் வழக்கத்தைக் காட்டிலும் நிலவு பெரிதாகவும் பிரகாசமானதாகவும் இருக்கும்.

இந்த மாதம் முழுக்கவே நிலவு சற்று பெரிதாகவும் பிரகாசமாகவுமே தெரியும். இது வழக்கமான முழு நிலவைக் காட்டிலும் 8% பெரியதாகவும் 16% பிரகாசமாகவும் இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் 3 அல்லது 4 முறை மட்டுமே பூமிக்கு நிலவுக்கு மிக அருகில் வரும். அதைத்தான் நாம் சூப்பர் மூன் என அழைக்கிறோம். இந்த சூப்பர் மூன் நிகழ்வு கடைசியாக ஜூலை 3-ம் தேதி நடந்தது. இந்தாண்டு மொத்தம் சூப்பர் மூன் நிகழ்வுகள் நடக்க உள்ளது. அதில் இரண்டு சூப்பர் மூன் நிகழ்வு இந்த மாதத்திலேயே நடக்குமாம்.

முதலாவது சூப்பர் மூன் நேற்று இரவு வந்துள்ள நிலையில், அடுத்து அரிதான சூப்பர் மூன் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி வர உள்ளது. இதை மிஸ் செய்தால் பிறகு மீண்டும் இதைக் காண 2032 வரை காத்திருக்க வேண்டும். “சூப்பர் மூன்” என்பது பூமிக்கு எவ்வளவு அருகில் இருக்கிறது என்பதைக் குறிக்கிறது என்றால் நீல நிலவு எத்தனை முறை நிலவு நமது பூமியைச் சுற்றி வருகிறது என்பதைக் குறிக்கும். பொதுவாகச் சந்திரன் பூமியைச் சுற்றி வர 27.3 நாட்கள் ஆகும். அதேநேரம் ஒரு காலண்டர் மாதத்தில் இரண்டாவது முறையாக முழு நிலவு இருக்கும் போது அதை நாம் நில நிலவு எனக் குறிப்பிடுகிறோம். எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், ஒரே மாதத்தில் இரண்டு முறை பவுர்ணமி வரும் போது அதை நாம் நீல நிலவு என்று குறிப்பிடுகிறோம்.

நீல நிலவு என்பது 2, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் நிகழ்வு என்றாலும் கூட, சூப்பர் மூன் நிகழ்வின் போது இந்த நீல நிலவும் வருவது அதிசயம் தான். கடைசியாக டிசம்பர் 2009-ம் ஆண்டு தான் இந்த நீல சூப்பர் மூன் வந்துள்ளது. இப்போது மீண்டும் இந்தாண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி இது நிகழவுள்ளது. அன்றைய தினம் நிலவு மிகவும் பொரியாகவும் பிரகாசமானதாகவும் இருக்குமாம்.