அமலாக்கத்துறை அதிரடி: முன்னாள் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக்கிற்கு ‘லுக்அவுட்’ நோட்டீஸ்

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை மாநகர காவல் ஆணையாளராக இருந்த பரம்பீர் சிங், மாநில உள்துறை மந்திரி பதவி வகித்த அனில் தேஷ்முக் ஓட்டல்கள், பார்கள் மூலம் மாதம் ரூ.100 கோடி மாமூல் வசூலித்து தரும்படி காவல்துறையினருக்கு கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டினார். இதனால் அனில் தேஷ்முக் தனது பதவியை ராஜினாமா செய்தார். நிலையில் அனில் தேஷ்முக் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது.

இதன் தொடர்ச்சியாக சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. அனில் தேஷ்முக்கு அமலாக்கத்துறை நேரில் ஆஜராகுமாறு 5 முறை சம்மன் அனுப்பியது ஆனால் அனில் தேஷ்முக் தொடர்ந்து நேரில் ஆஜராவதை தவிர்த்து வருகிறார். இந்நிலையில் அனில் தேஷ்முக் வெளிநாடு தப்பி செல்வதை தடுக்கும் வகையில் அமலாக்கதுறை லுக்அவுட் நோட்டீஸ் விடுத்து அனைத்து விமான நிலையங்களுக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

நாட்டை விற்க விடமாட்டோம்: முசாபர் நகரில் ஒன்றுதிரண்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள்

மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து விவசாயிகள் அமைப்பினர் டெல்லியின் புறநகர் பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், மத்தியில் ஆளும் பாஜக புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறத் தயாராக இல்லை, இதுவரை விவசாயிகளுக்கும், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கும் இடையே 12 சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தும் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.

இந்நிலையில் முசாபர் நகரில் கிசான் மகா பஞ்சாயத்தில் மகாராஷ்டிரா, கர்நாடகம், பஞ்சாப், உ.பி., ஹரியாணா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்று திரண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய பாரதிய கிசான் யூனியன் தேசிய செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகைத் , “இதுபோன்ற கிசான் மகா பஞ்சாயத்துக் கூட்டம் நாடு முழுவதும் நடத்தப்படும். நாட்டை விற்பனை செய்வதிலிருந்து தடுப்போம். விவசாயிகள் காக்கப்பட வேண்டும், நாடு காக்கப்பட வேண்டும். வர்த்தகம், இளைஞர்கள் காப்பாற்றப் பட வேண்டும் என்பது தான் இந்தப் பேரணியின் நோக்கமாகும் என தெரிவித்தார்.

பொது மக்களை காவல்துறையினர் ‘வாடி… போடி’ ‘வா, போ’ என மரியாதை குறைவாக நடத்தக்கூடாது- உயர் நீதிமன்றம் உத்தரவு

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள சேர்தலா பகுதியை சேர்ந்த அணில் குமார் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், இரு நாட்களுக்கு முன், 16 வயது மகளுடன் கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தேன் அப்போது வழிமறித்த சேர்தலா காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில், என மகளின் முன் ‘எடா… வா, போ’ என, மரியாதைக் குறைவாகவும் இழிவாகவும் அவமரியாதையாக என்னை பேசினர் என மனுவில் தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தேவன் ராமச்சந்திரன் காவல்துறையினர் பொது மக்களை பல்வேறு இடங்களில் மிகவும் மோசமாக நடத்துவதாக புகார்கள் வருகின்றன. எக்காரணம் கொண்டும் பொதுமக்களை காவல்துறையினர் தரக்குறைவான வகையில் நடத்தக்கூடாது. காவல்துறையினரின் முன்னால் வரும் அனைவரும் குற்றவாளிகள் அல்ல. சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் காவல்துறையினர் மரியாதையுடன் நடத்த வேண்டும்.

பொதுமக்களை அநாகரீகமாக நடத்துவதை நாகரீக சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, கேரள முழுவதும் காவல்துறையினர் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை ‘வா, போ’ என ஒருமையில் அழைத்து பேச கூடாது. ‘எடா… எடீ…’ மற்றும் ‘வாடி… போடி’ என்பது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி அழைக்கக்கூடாது. இது தொடர்பாக கேரள காவல்துறை டி.ஜி.பி., அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும் இதுகுறித்து உடனடியாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினார்.

நடிகர் சிரஞ்சீவி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தனது ட்விட்டர் பதிவில் புகழாரம்

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் சிரஞ்சீவி திரையுலகினராலும், ரசிகர்களாலும் மெகா ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். இன்று சென்னை வந்திருந்த சிரஞ்சீவி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவர்களை சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்தச் சந்திப்பு குறித்த தனது ட்விட்டர் பக்கத்தில்  “தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலினைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. கட்சிகள் தாண்டி அவர் எடுத்திருக்கும் சில பயனுள்ள முயற்சிகள் மூலம் சிறந்த அரசியல் தலைவராக அவர் உயர்ந்திருப்பதற்கும், மக்களின் தலைவராக, தொலைநோக்குப் பார்வை மற்றும் அர்ப்பணிப்புடன், கொரோனா காலகட்டத்தில் சிறப்பான ஆட்சி தந்து வருவதற்காகவும் வாழ்த்துகள் கூறினேன்”. என தெரிவித்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்: ‘கொரோனாவால் பாதித்த பொருளாதாரத்தை உயிர்ப்பித்து வருகிறோம்’

டெல்லியில் நேற்று ரூ.6.29 லட்சம் கோடி சலுகை தொகுப்புகள் தொடர்பான இணையவழி கருத்தரங்கு ஒன்றில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசினார். அப்போது, “எதிர்காலத்தில் கொரோனா மூன்றாவது அலையை சமாளிப்பதற்கு மெட்ரோ அல்லாத நகரங்களில் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன், கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடன் உத்தரவாத திட்டம் அறிவிக்கப்பட்டது என தெரிவித்தார்.

மேலும் கிராமப்புறப்பகுதிகளிலும், இரண்டாவது நிலை, மூன்றாவது நிலை நகரங்களிலும் மருத்துவ திறன்களை அதிகரிப்பது மிகமும் முக்கிமானதாக இருக்கிறது. சுகாதார உள் கட்டமைப்பில் ஒட்டுமொத்த முன்னேற்றமும், பொருளாதார மறுமலர்ச்சிக்கு உதவப்போகிறது. இந்த கடன் உத்தரவாத திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக நிதி சேவைகள் துறையின் மூலம் வாரந்தோறும் கண்காணிப்பேன். இதில் தாமதங்களை சமாளிக்க முடியாது. கொரோனா பெருந்தொற்றால் பாதிப்புக்குள்ளான பொருளாதாரத்தை நாங்கள் உயிர்ப்பித்து வருகிறோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்

 

உலகிலேயே உயரமான சாலையை லடாக் எம்.பி. ஜம்யாங் செரிங் நம்கியால் திறப்பு

இந்தியாவில் ராணுவத்தின் 58 என்ஜினீயர் பிரிவு அமைத்துள்ள இந்த சாலை, கேலா கணவாய் வழியாக செல்லும் லடாக்கில் லே பகுதியையும் பாங்காங் ஏரியையும் இணைக்கும், 18 ஆயிரத்து 600 அடி உயரத்தில் அமைந்த உலகத்திலேயே உயரமான சாலை நேற்று திறந்துவைக்கப்பட்டது.

இதற்கு முன், 18 ஆயிரத்து 380 அடி உயரத்தில் அமைந்த, கர்துங்லா கணவாய் வழியாக சென்ற சாலை உலகிலேயே உயரமான வாகன சாலையாக திகழ்ந்த நிலையில் இந்த சாலையை திறந்துவைத்த லடாக் எம்.பி. ஜம்யாங் செரிங் நம்கியால், இது பொதுமக்கள் பயணிக்கக்கூடிய உலகிலேயே உயரமான சாலையாக இருக்கும் என்ன தெரிவித்தார்.

புதுச்சேரி சபாநாயகர் அரசு மருத்துவமனை அனுமதி

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 26 ஆம் தேதி தொடங்கி நான்கு நாட்கள் நிறைவடைந்துள்ளது. இன்று காலை சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்ற சபாநாயகர் செல்வம் சட்டப்பேரவைக்கு வந்தார். ஆனால், சபாநாயகர் செல்வம் பேரவைக்குள் வராமல் கார் வெளியேறியது.

இது தொடர்பாக சபாநாயகர் செல்வத்தின் தரப்பில் விசாரித்தபோது, “சபாநாயகர் செல்வம் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க வந்தார். அப்போது அவருக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு, அருகிலுள்ள அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

கன்னியாகுமரி முதல் டெல்லி வரை சைக்கிள் பேரணி

நாட்டின் 75-வது சுதந்திர தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது. இந்திய சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் கடந்த 22-ம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கடல் சங்கமம் பகுதியில் தொடங்கி  திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக  கர்நாடக மாநிலத்தை அடையும் இந்தப் பேரணியை ‘ஆசாதி கா அம்ருத் மகா உத்ஸவ்’ என்ற தலைப்பில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் சைக்கிள் பேரணி நடத்தி வருகின்றனர்.

இந்தப் பேரணி ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாகப் பயணிக்கும் பேரணிக் குழுவினர் காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ம் தேதி டெல்லியில் உள்ள ராஜ்கோட் பகுதியில் பேரணியை நிறைவு செய்கின்றனர். நேற்று மாலை தருமபுரி வந்து சேர்ந்த இந்தப் பேரணிக் குழுவினருக்கு தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் கிராமியக் கலை நிகழ்ச்சிகள், மேள, தாளங்களுடன் வரவேற்பு அளித்தார்.

 

தமிழிசை: நீட் தேர்வு பணம் படைத்தோர் மட்டுமே மருத்துவர் ஆக முடியும் என்ற நிலையை மாற்றியுள்ளது

ஏழை- எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் திருபுவனை எம்எல்ஏ அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இலவச நீட் தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தைத் துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று தொடங்கி வைத்தார். மேலும் பேசுகையில், “ஒரு நல்ல முயற்சி மேற்கொள்ளப்பட இருக்கிறது. கிருஷ்ண பகவான் அவதரித்த நாளில் மக்களைக் காப்பாற்றுவதற்காக அரக்கர்களை அழித்ததைப் போல, தடுப்பூசி மூலம் கரோனா என்ற அரக்கனை அழிக்க மருத்துவராகப் போகும் மாணவர்கள் உறுதி ஏற்க வேண்டும்.

நான் அடிப்படையில் ஒரு மருத்துவராக இருப்பதனால் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருப்பேன். ஏழை மாணவர்கள் முழு ஈடுபாட்டுடன் படித்தால் நிச்சயம் மருத்துவர் ஆகலாம். நீட் என்பது நல்ல தேர்வு. பணம் படைத்தவர்கள் மட்டுமே மருத்துவர் ஆக முடியும் என்ற நிலை இப்போது மாறி இருக்கிறது என்று ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.