டிடிவி.தினகரன்: திமுகவை எதிர்க்கும் எந்த கட்சியும் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேரலாம்..!

திமுகவை எதிர்க்கும், திமுக வெற்றி பெறக் கூடாது என்று கருதும் எந்தக் கட்சியும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையலாம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார். மதுரை அவனியாபுரத்தில் நேற்று நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் டிடிவி.தினகரன் பங்கேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு டிடிவி.தினகரன் பதிலளித்தார்.

அப்போது, அமமுக ஏற்கெனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துள்ளார். ஆனால், அந்த சந்திப்பு குறித்து வெளிப்படையாக பேசவில்லை. திமுகவை எதிர்க்கும், திமுக வெற்றி பெறக் கூடாது என்று கருதும் எந்தக் கட்சியும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையலாம்.

திமுகவுக்கு மாற்று தவெக என்று விஜய் கூறியிருப்பது, அவரது விரும்பம் மட்டுமே. தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சியாக மக்கள் மனதில் இருப்பது தேசிய ஜனநாயகக் கூட்டணிதான். சுயநலம், பதவி வெறியாலும், திமுக மீதுள்ள பயத்தாலும், தங்கள் மீது வழக்கு பதிவு செய்யக்கூடாது என்பதற்காகவும், திமுக தேர்தலில் வெற்றி பெற சிலர் மறைமுகமாக உதவி வருகின்றனர்.

காங்கிரஸ் ஆட்சியைவிட பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. ஆட்சியாளர்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். அதை மறைப்பதற்காக மத்திய அரசு மீது திமுகவினர் பழி சுமத்துகின்றனர். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லியில் பாஜக தலைவர்களை சந்தித்தது குறித்து எதுவும் தெரியாது. ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்கு துரோகம் செய்தார் என்று கூறும் பழனிசாமிதான் உண்மையில் துரோகத்தின் வடிவம். தனியாக கட்சி நடத்துவதால் நாங்கள் அதிமுகவில் இணைய வேண்டிய அவசியம் இல்லை என டிடிவி.தினகரன் தெரிவித்தார்.

டிடிவி தினகரன்: திமுக அரசு நடத்தும் கபட நாடகத்தை நம்புவதற்கு தமிழக மக்கள் ஒருபோதும் தயாராக இல்லை..!

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை ஏற்பதாக கூறிவிட்டு பின்னர் எதிர்ப்பதும், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில் அதற்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுப்பதும் என திமுக அரசு நடத்தும் கபட நாடகத்தை நம்புவதற்கு தமிழக மக்கள் ஒருபோதும் தயாராக இல்லை என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

அமமுக எட்டாம் ஆண்டு துவக்க விழாவையொட்டி டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் அறிவார்ந்த கொள்கைகளையும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் மனிதாபிமானக் கோட்பாடுகளையும் கலங்கரை விளக்கமாகப் பின்பற்றி, தமிழகத்தின் புகழை தரணி எங்கும் பரப்பி தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் இதயதெய்வம் அம்மா அவர்களை இத்தருணத்தில் வணங்குகிறேன்.

தனிப்பெரும் ஆளுமையாக திகழ்ந்த மாண்புமிகு அம்மா அவர்களின் திருவுருவத்தை கழகக் கொடியில் ஏந்தியும், இதயதெய்வம் அம்மா அவர்களின் மக்கள் நலக் கொள்கைகளை மனதில் நிலைநிறுத்தியும், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் உண்மையான நல்லாட்சியை தமிழகத்தில் அமைத்திடவும், சுயநலமிக்க துரோகக் கூட்டத்திற்கு தகுந்த பாடம் புகட்டிடவும், நாம் அனைவரும் இணைந்து கடந்த 2018 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 -ஆம் தேதி மதுரை மாவட்டம் மேலூரில் உருவாக்கிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழக மக்களின் அளவில்லா அன்போடும் ஏகோபித்த ஆதரவோடும் எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

அம்மா அவர்களின் கொள்கைகளையும், லட்சியங்களையும் நிறைவேற்றிடும் வகையில் தொடங்கப்பட்ட நம் இயக்கத்திற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த அன்புச் சகோதரர்களான மேலூர் திரு.R.சாமி, செயல் வீரர் திரு.P. வெற்றிவேல் உள்ளிட்ட பலர் நம்மை விட்டு இயற்கையோடு இயற்கையாக கலந்திருந்தாலும், விசுவாசத்தின் அடையாளமாகத் திகழ்ந்த அவர்களின் எண்ணம் ஈடேறும் நேரமும், காலமும் அருகில் வந்துவிட்டது.

மக்கள் சக்தியை மூலதனமாகக் கொண்ட இயக்கங்களால் மட்டுமே வலுவான அடித்தளத்தை அமைக்க முடியும் என்பதை செயல்படுத்திக் காட்டிய நம் இருபெரும் தலைவர்களான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் இதயதெய்வம் அம்மா அவர்களின் வழித்தடத்தை பின்பற்றி தமிழக அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக தனக்கென ஒரு தனி இடத்தை பெற்றிருக்கும் இயக்கமாக நம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் திகழ்ந்து வருகிறது.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தொகுதியான ஆர்.கே நகர் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆண்ட கட்சி மற்றும் ஆளுங்கட்சியை வீழ்த்தி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிபெற்று அம்மா அவர்களின் உண்மையான தொண்டர்கள் நாம் தான் என்பதை அன்றே நிரூபித்துக் காட்டினோம். அதன் தொடர்ச்சியாக 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், ஊரக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் என அனைத்து விதமான தேர்தல்களையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு, குறிப்பிடத்தக்க வாக்கு சதவிகிதத்தை பெற்றதோடு உள்ளாட்சி தேர்தல்களில் நூற்றுக்கும் அதிகமான இடங்களில் வாகை சூடி, முக்கிய பொறுப்புகளையும் வென்றுகாட்டினோம்.

நாம் பெற்ற வாக்குகள் ஒவ்வொன்றும் வெறும் வாக்குகள் அல்ல, நம் இயக்கத்திற்கு தமிழக மக்கள் வழங்கிய நற்சான்றுகள். தோல்விகளைக் கண்டு துவளாமல் வெற்றி ஒன்றை மட்டுமே இலக்காக கொண்டு, இரும்புப் பெண்மணியாக செயல்பட்டு, தமிழக மக்களின் வாழ்வில் வெளிச்சத்தை தந்த புரட்சித் தலைவி இதயதெய்வம் அம்மா அவர்களின் விசுவாசமிக்க உண்மைத் தொண்டர்களைக் கொண்டதுதான் நமது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.

நமது இயக்கம் என்பது மக்களுக்கு தொண்டாற்றும் பெருங்கடமையை முன்னேடுத்துச்செல்லும் ஒரு பொது வாழ்கை பயணம் என்ற எண்ணத்தோடு களப்பணியாற்றும் உங்கள் அனைவருக்கும் எனது இதயத்தின் அடித்தளத்திலிருந்து பொங்கிவரும் அன்பை என்றென்றும் உறித்தாக்குகிறேன். மாண்புமிகு அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்களாகிய நீங்கள் அளிக்கும் அன்பு, ஆதரவு, ஊக்கம் மற்றும் உறுதுணை என்ற இந்த பாசப் பிணைப்பை எவராலும், எக்காலத்திலும் பிரிக்க முடியாது என்ற நம்பிக்கை, மிகுந்த உத்வேகத்தையும் அளிக்கிறது.

இதயதெய்வம் அம்மா அவர்களின் மறைவுக்கு பின் ஆட்சி பீடத்தில் நம்மால் அமரவைக்கப்பட்டவர்கள், நம் புரட்சித்தலைவி அவர்கள் தன் உடல்நலனையும் பொருட்படுத்தாமல் கட்டிக் காத்த இயக்கத்தை தங்கள் சுயநலத்திற்காகவும், சுயலாபத்திற்காகவும் மூடுவிழா காணும் முயற்சியில் மும்முரமாகவும், முழுமூச்சாகவும் இறங்கியுள்ளனர். எந்த தீயசக்தியை வீழ்த்த புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும் போராடினார்களோ அதே தீய சக்திகளுடன் மறைமுக கூட்டணி வைத்துக்கொண்டு, நம் தலைவர்களின் நோக்கத்தை சிதைக்கும் வகையில் இயக்கத்தை பாதை மாற்றி அழைத்து சென்றுகொண்டிருக்கும் துரோகக் கும்பலை இதயதெய்வம் அம்மா அவர்களின் தொண்டர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

தேர்தலுக்கு முன் நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை வாரி வழங்கிய திமுக, ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளை நெருங்கும் நிலையில் அதனை நிறைவேற்ற மறுக்கிறது. பொதுமக்கள் தொடங்கி, விவசாயிகள், ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பு மக்களும் நாள்தோறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பச்சிளம் குழந்தைகள் தொடங்கி பள்ளி, கல்லூரி மாணவிகள், பணிக்கு செல்லும் இளம் பெண்கள், பெண் காவலர்கள் மற்றும் முதியவர்கள் என அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் தான் தற்போது நிலவுகிறது.

நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்களால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சந்திசிரிக்கும் நிலையில், குற்றங்களுக்கு அடிப்படைக் காரணமான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை தடுக்கத் தவறிய திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற தமிழக மக்கள் ஒவ்வொருவரும் ஆர்வத்துடன் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். திமுகவின் மீது மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் எதிர்ப்பை திசைதிருப்பும் வகையில் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை ஏற்பதாக கூறிவிட்டு பின்னர் எதிர்ப்பதும், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில் அதற்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுப்பதும் என திமுக அரசு நடத்தும் கபட நாடகத்தை நம்புவதற்கு தமிழக மக்கள் ஒருபோதும் தயாராக இல்லை.

சவால்களை எதிர்கொள்வதற்கு உரிய துணிச்சலும், மன உறுதியும் இருந்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். அத்தகைய துணிச்சல் மற்றும் மன உறுதியோடும் தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்காகவும், நலனுக்காகவும் போராடி வரும் நாம், நமது களப்பணிகளை மேலும் தீவிரப்படுத்திடுவோம். மக்கள் நலனையும், மாநிலத்தின் உரிமையையும் பாதுகாக்கத் தவறிய மக்கள் விரோத திமுக அரசை அடியோடு துடைத்தெறிந்திடும் நோக்கத்தில், திமுக அரசின் அவலங்களை ஒவ்வொரு வாக்காளரிடமும் முன் நிறுத்தி, மக்களை திரட்டி போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்திடுவோம்.

அதே நேரத்தில் மக்கள் விரோத திமுக அரசை வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் வீழ்த்தியே ஆகவேண்டும் என்ற எண்ணத்தோடு ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் அனைவரும் ஓரணியில் திரள வேண்டிய காலமும் நேரமும் நெருங்கிவிட்டது. நாம் அனைவரும் ஒற்றுமையோடு ஒருங்கிணைந்து பணியாற்றி மக்கள் விரோத திமுகவை வீழ்த்திடுவோம், இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நல்லாட்சியை தமிழகத்தில் அமைத்திடுவோம்!” என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

தினகரன்: தலைமையில் இருப்பவர்கள் அதிமுக தொண்டர்கள் ஏமாற வேண்டாம்..!

அதிமுக தலைமையில் இருப்பவர்கள் தங்களை ஜெயலலிதா என்று நினைத்து கொண்டுள்ளனர். அது வெறும் மாய பிம்பம். எனவே அதிமுக தொண்டர்கள் ஏமாற வேண்டாம்,” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். தமிழகத்தை குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பற்ற மாநிலமாக திமுக அரசு மாற்றிவிட்டதாக கூறி, தமிழக அரசைக் கண்டித்து அமமுக சார்பில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம்முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அமமுக பொதுசெயலர் டிடிவி தினகரன் தலைமை வகித்தார். இந்த போராட்டத்தில் பங்கேற்ற டிடிவி தினகரன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். “கடந்த 10 தேர்தல்களில் தோல்வி அடைந்ததால் அதிமுக பலவீனம் அடைந்துவிட்டது. திருநெல்வேலியில் அதிமுக 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது. வரும் 2026 சட்டப் பேரவை தேர்தலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கூட்டணி அமைத்து அமமுக போட்டியிடும்.

வரும் சட்டப் பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு வலுவான கூட்டணியாக அமையும். தற்போது அதிமுக தலைமையில் இருப்பவர்கள் தங்களை ஜெயலலிதா என்று நினைத்து கொண்டுள்ளனர். அது வெறும் மாய பிம்பம். எனவே அதிமுக தொண்டர்கள் ஏமாற வேண்டாம்” என்று அவர் கூறினார்.

டிடிவி தினகரன் விளாசல்: முன்பு துரோகி என்றால் எட்டப்பன்..! இனி துரோகி என்றால் பழனிச்சாமி பெயர் தான் ஞாபகம் வரும்..!

தமிழ்நாட்டு வரலாற்றில் முன்பெல்லாம் துரோகி என்றால் எட்டப்பன் என்று கேள்விப்பட்டுள்ளோம். அதுமாதிரி வருங்காலத்தில் பழனிச்சாமியின் பெயர் தமிழ்நாட்டு வரலாற்றில் ஒரு துரோகி என்றால் பழனிச்சாமி பெயர் ஞாபகம் வருகின்ற அளவுக்குச் செயல் கொண்டிருப்பவர் ஆவார் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்த அறிக்கையில், “அதிமுக கொள்கை வீரர்களின் கூடாரமாகத் திகழ்கிறது. பதவிக்காகவும், பணம் சேர்ப்பதற்காகவும் கட்சியைக் காட்டிக் கொடுக்கத் தயாராகி இருந்த திரைமறைவு அரசியல் பேராசைக்காரர்களின் கனவுகளும், கற்பனைகளும் காகித ஓடம் போல் கால வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுவிட்டன.

ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா?. களைகளும், பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகுமா?. விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா?. முடியாது, முடியாது என்று முழங்குவது கேட்கிறது” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், சென்னை அடையாற்றில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. அப்போது அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டு கொடியேற்றி கட்சி அலுவலகத்தைத் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, “ஏதோ லாட்டரி சீட்டு போலக் குருட்டு யோகத்தில் பதவிக்கு வந்துவிட்டு துரோகத்திற்கு ஒரு சின்னம் போட வேண்டும் என்றால் பழனிச்சாமி தான் என்கிற அளவிற்கு என்பதற்குத் தமிழ்நாட்டில் மக்களுக்குத் தெரிந்துள்ளது. முன்பெல்லாம் துரோகி என்றால் எட்டப்பன் என்று கேள்விப்பட்டுள்ளோம். அதுமாதிரி வருங்காலத்தில் பழனிச்சாமியின் பெயர் தமிழ்நாட்டு வரலாற்றில் ஒரு துரோகி என்றால் பழனிச்சாமி பெயர் ஞாபகம் வருகின்ற அளவுக்குச் செயல் கொண்டிருப்பவர் ஆவார். அவரே தெரியாமலேயே தான் தான் அந்த துரோகி அப்படித்தான் என்று ஒத்துக் கொண்டு உள்ளார் என்று தான் இதைப் பார்க்கிறேன்” என டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

திண்டுக்கல் சீனிவாசன்: ஜெயலலிதாவின் பணத்தை வெச்சி கோடீஸ்வரர்களான குடும்பங்கள் ஆயிரம்

ஜெயலலி​தா​வின் பணத்தை வைத்து சசிகலா, டிடி​வி.​தினகரன் என ஆயிரம் குடும்​பங்கள் கோடீஸ்​வரர்​களாகி​ விட்​டனர் என அதிமுக முன்​னாள் அமைச்சர் திண்​டுக்கல் சீனிவாசன் பேசி தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நாகப்​பட்​டினம் மாவட்ட அதிமுக அலுவல​கத்​தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்​றது. இந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்​னாள் அமைச்​சர்கள் தங்கமணி, திண்​டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ்​.மணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்​டத்​தில் திண்​டுக்கல் சீனிவாசன் பேசுகையில், முன்​னாள் முதல்வர் ஜெயலலி​தாவுக்கு உதவியாக வந்தவர்​கள்​தான் சசிகலா, டிடி​வி.​தினகரன் உள்ளிட்​டோர். ஆனால், அவர்​கள், அவர்​களைச் சேர்ந்​தவர்கள் என ஆயிரம் குடும்பத்​தினர் ஜெயலலி​தா​வின் பணத்தை வைத்து கோடீஸ்​வரர்​களாகி விட்​டார்​கள். அந்தப் பணத்தை வைத்​துக்​கொண்​டு​தான் சசிகலா, தினகரன் ஆகியோர் ஆட்சி​யைப் பிடிப்​போம் என்று கூறி வருகின்​றனர் என இவ்வாறு திண்​டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

டிடிவி தினகரன் கேள்வி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது என்ன பதில் சொல்லப் போகிறார்?

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அரசு நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டுள்ளது. ஆளுநருக்கு எதிராக கொந்தளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது என்ன பதில் சொல்லப் போகிறார்? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து டிடிவி தினகரன் தனது எகஸ் பக்கத்தில், துணை முதல்வர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அரசு நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு – மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு எதிராக கொந்தளித்த முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்போது என்ன பதில் சொல்லப் போகிறார்?

சென்னைத் தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் திரு.உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டு முறை தவறாக பாடப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.

சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதாக கூறி அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாண்புமிகு ஆளுநர் அவர்கள் மீது இனவாத கருத்துக்களை முன்வைத்த முதலமைச்சர் அவர்களும், ஆளுநர் அவர்களின் வயது மற்றும் பொறுப்பைக் கூட உணராமல் பொதுவெளியில் தரக்குறைவான விமர்சனங்களை முன்வைத்த துணை முதலமைச்சர் அவர்களும் தற்போது நடைபெற்றிருக்கும் தமிழ்த்தாய் அவமதிப்புக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

துணை முதலமைச்சர் தலைமை தாங்கிய நிகழ்வில் அன்னைத் தமிழின் பெருமையை உலகறியச் செய்யும் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டிருப்பதன் மூலம், தமிழ்ப்பற்று மற்றும் தாய்மொழிப்பற்று எனும் திமுக அரசின் கபட நாடகம் அம்பலமாகியுள்ளது.

மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம் என்ற வரிகளுக்கு ஏற்ப தமிழ்த்தாய் வாழ்த்திற்கு ஏற்பட்டிருக்கும் அவமதிப்பை சாதாரண நிகழ்வாக கடந்து செல்லாமல், அதற்கு காரணமானவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து முறையான பயிற்சி பெற்றவர்களை வைத்து பாடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன் என டிடிவி தினகரன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

டிடிவி தினகரன்: தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்..!

நாடு முழுவதும் உள்ள 1000-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. அதேபோல, தமிழகத்தில் 64 இடங்களில் சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சுங்க கட்டணத்தை ஒவ்வொரு ஆண்டும் உயர்த்திக்கொள்ள அனுமதியும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், லோக்சபா தேர்தல் வந்துவிட்டதால், கடந்த ஏப்ரல் மாதம் மாற்றி அமைக்கப்பட வேண்டிய சுங்கக்கட்டணம் நாடாளுமன்ற தேர்தலால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதற்கு பிறகு தேர்தல் முடிந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடந்த ஜூன் மாதம் சுங்கக்கட்டணத்தை உயர்த்தியிருந்தது. அதன்படியே, தமிழ்நாட்டிலுள்ள 36 சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு 5% வரை கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. அந்தவகையில், தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது. விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, சமயபுரம், மதுரை எலியார்பத்தி, ஓமலூர் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. ஸ்ரீபெரும்புதூர், வாலாஜா உள்பட 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. சுங்கக்கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று நேற்றைய தினம் தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், 17 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, சென்னசமுத்திரம், எலியார்பதி, கொடை ரோடு, கிருஷ்ணகிரி, மேட்டுப்பட்டி, மொரட்டாண்டி, நாதக்கரை, ஸ்ரீபெரும்புதுார், ஓமலுார், பாளையம், புதுார் பாண்டியபுரம், சமயபுரம், ஸ்ரீவைகுண்டம், வீரசோழபுரம், வேலன்செட்டியூர், விஜயமங்கலம், விக்கிரவாண்டி ஆகியவை கட்டணம் உயர்த்தப்பட உள்ள சுங்கச்சாவடிகள். இங்கு, 5 சதவீதம் கட்டண உயர்வு நடைமுறைக்கு வருகிறது. இதனால், வாகனங்களின் டயர்களுக்கு தகுந்தபடி, 5 முதல் 150 ரூபாய் வரை கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளது. அதேபோல, 26 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நடைமுறைக்கு வருவதாக தகவல் பரவி வருகிறது.

முதலில் 25 சுங்கச்சாவடிகள், அடுத்து 17 சுங்கச்சாடிவகள், அடுத்து, 26 சுங்கச்சாவடிகள் என மாறி மாறி கட்டண உயர்வு வெளியாகி வருகின்றன. கட்டண உயர்வு குறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முறையான அறிவிப்பை வெளியிடாததே இந்த குழப்பத்திற்கு காரணம் என்கிறார்கள். சரக்கு வாகனங்கள்: ஏற்கனவே சரக்கு வாகனங்கள், ஆம்னி பஸ்களின் கட்டணம் மறைமுகமாக உயர்ந்து வரும்நிலையில், சுங்கக்கட்டணமும் உயர்வது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

எனவே, சாலை அமைப்பிற்கான கட்டணத்தை வசூல் செய்தபிறகு, சுங்க கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுக்க துவங்கியிருக்கிறது. அதேபோல, சுங்கச்சாவடி கட்டண உயர்வால் சரக்கு வாகனங்களின் வாடகை உயர்வதோடு, சாமானிய பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளில் தொடங்கி அனைத்து விதமான அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரக்கூடிய சூழலையும் உருவாக்கியுள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அச்சம் தெரிவித்துள்ளார். எனவே, சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கான அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, தமிழகத்தில் காலாவதியான நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் சுங்கச்சாவடிகளை கண்டறிந்து அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என டிடிவி தினகரன் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.

அண்ணாமலை குப்புசாமி: தமிழகத்தில் ஒரு புதிய அரசியலை மக்களுக்கு காட்ட வேண்டும்..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், வேட்பாளர்கள் வாக்கு வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.

இந்நிலையில், தேனி தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரனை ஆதரித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார். அப்போது, “அண்ணாமலையும், டிடிவி தினகரனும் ஏன் ஒன்றிணைந்துள்ளோம் என்றால், தமிழகத்தின் அரசியல் மாறிக்கொண்டிருக்கிறது. 2026-ம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்கான அடித்தளம் தான் தற்போது நடக்கும் மக்களவை தேர்தல். 400 இடங்களை பெற்று மோடி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும், அதில் முதன்மை உறுப்பினராக தேனியின் குரலாக தானும் இருக்க வேண்டும் என்று டிடிவி.தினகரன் தேர்தலில் போட்டியிடுகிறார்.

இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். தமிழகத்தை முதலில் ஸ்டாலினிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். தமிழகத்தை கோபாலபுரம் குடும்பத்திடம் இருந்து காப்பாற்ற வேண்டும். 33 மாதங்களாக அவர்கள் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இந்தக் கூட்டணி அமைந்துள்ளது.

தேனியில் டிடிவி.தினகரன், ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் என அனைத்து இடங்களிலும் கூட்டணியின் மூத்த தலைவர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். டிடிவி.தினகரன் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. கட்சியில் இருந்து வேறு யாரவது ஒருவரை நிறுத்தியிருக்கலாம். ஏன், அவரே களத்தில் இறங்கியுள்ளார் என்றால், மோடி மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும், தமிழகத்தில் ஒரு புதிய அரசியலை மக்களுக்கு காட்ட வேண்டும் என்பதற்காக தான் என அண்ணாமலை குப்புசாமி தெரிவித்தார்.

அதிமுக மாநாட்டை சாடிய டிடிவி தினகரன்

மதுரையில் நாளை அதிமுக மாநாடு நடைபெறவுள்ளது. 10 தென் மாவட்டங்களில் இருந்து மட்டும் 4 லட்சம் பேர் பங்கேற்க ஏற்பாடு செய்யபப்ட்டுள்ளது. இந்நிலையில் மாநாடு குறித்து டிடிவி தினகரன் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “அன்றைய காலகட்டத்தில் பெரும் பணம் செலவழித்து கட்சி ஒன்று, சென்னை ஆவடியில் நடத்த இருந்த மாநாடு பற்றிய பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள் இன்று நடக்கவுள்ள துரோகிகளின் மாநாட்டோடு பொருந்துவது போல் உள்ளது.

“தம்பி பெரும் பணம் செலவழித்து, தோரணங்களும் தோகைகளும் ஓவியங்களும் கொண்டு மாநாடு நடத்தி பயன் எதுவும் வராது. திறமை மிக்க ஓவியன் ஒருவன் காட்டில் உள்ள நல்ல கனி தரும் மரங்களை அப்படியே நம் கண்முன்னே கனிகள் காய்த்து தொங்குவதை போல் ஓவியமாக வரைந்தான் . அனைவரும் கண்டு மெய்சிலிர்த்து வியந்தனர்.

ஆனால் தம்பி, அந்த ஓவியத்தில் உள்ள கனிகளை கண்டு ரசிக்க தான் முடியுமே தவிர அதனை உண்டு நம் பசியை போக்க முடியாது. அதே போன்று தான் தம்பி பெரும் பணம் மட்டுமே செலவழித்து நடத்தப்படும் மாநாடுகள் மக்களிடம் துளியும் நம்பிக்கை பெறாது, அவை அனைத்தும் பயனற்றது”. “சாதனைகளைக் காட்டி ஓட்டு வாங்கிட முடியாது என்றாலும் நோட்டுகளைக் காட்டி ஓட்டுகளை வாங்கிடலாம் என்ற துணிவு தான் தம்பி அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை”. என்று பதிவிட்டுள்ளார்.

எடப்பாடிக்கு நெருக்கமான கோபாலுக்கு அமமுகவில் தலைவர் பதவி…

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு வி.கே. சசிகலா சொத்துக்குவிப்பு வழக்க்கில் சிறைக்குச் சென்றதும், வி.கே. சசிகலாவையும், தினகரனையும் அதிமுகவில் இருந்து வெளியேற்றி எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கட்சியை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர். ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸுக்கு எதிராக வி.கே. சசிகலாவும், தினகரனும் வழக்குத் தொடுத்தனர். அதிமுக பொதுச் செயலாளரான தன்னையும், துணை பொதுச் செயலாளரான டிடிவி தினகரனையும் நீக்க முடியாது என கோர்ட்டில் வி.கே.சசிகலா தெரிவித்தார். இதற்கிடையே தனிக்கட்சியை டிடிவி தினகரன் தொடங்கினார்.

வி.கே. சசிகலா சிறையில் இருந்தபோதே அமமுகவை தொடங்கி, அதற்குப் பொதுச் செயலாளரான டிடிவி தினகரன், துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை நியமித்தார். ஆனால், தலைவர் பதவி மட்டும் காலியாக இருந்தது. தலைவர் பதவிக்கான பொறுப்பை துணைத் தலைவரே கவனித்து வந்தார். வி.கே.சசிகலாவுக்காக ‘தலைவர்’ பதவி காலியாக வைத்திருக்கப்பட்டுள்ளதாக அப்போது டிடிவி தினகரன் அறிவித்திருந்தார்.

ஆனால், கடந்த ஆண்டு நடந்த அமமுக பொதுக்குழு கூட்டத்தில், தலைவர் பதவிக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடத்தப்படும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமமுகவில் வி.கே. சசிகலா இனி சேர்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தினகரன் தரப்பில் அப்போதே கேட் போடப்பட்டது. எனினும், மறைமுகமாக சில பேச்சுகள் நடந்துகொண்டிருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், வி.கே. சசிகலாவுக்காக இத்தனை ஆண்டுகளாக ‘ரிசர்வ்’ செய்யப்பட்டிருந்த தலைவர் பதவி இன்று நிரப்பப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தப் பொதுக்குழுவில், பொதுச் செயலாளர், தலைவர், துணை தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அமமுக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதேபோல் அமமுக தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துவதற்கு இன்று பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, அமமுக தோற்றுவித்த பிறகு முதல் தலைவராக முன்னாள் எம்.பி கோபால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் முதல் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலும், துணைத்தலைவர் அன்பழகனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதியதாக தேர்வு செய்யப்பட்டவர்கள் இன்று முதல் 4 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார்கள்.

1998-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்.பியாக சி.கோபால் செயல்பட்டவர். அவர் அமமுகவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தப் பொதுக்குழுவில் அமமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சி. கோபால் பற்றிப் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசினார்.

அவர் பேசுகையில், “கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கோபாலை, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான் என்னிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் இயக்கத்துக்காக செயல்பட்டவர். கோபால் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது எடப்பாடி பழனிசாமியுடன் நட்பாகப் பழகியவர். அப்படி இருந்தும் அவர் எடப்பாடி பழனிசாமி பக்கம் செல்லவில்லை.

அவரை போலவே அவரது மகன் சோளிங்கர் பார்த்திபனும் என்னுடன் உள்ளார். அவர் தந்தை சொல்லைப் பின்பற்றக்கூடியவர். நான் கூட கேட்டேன்.. என்னால் பலன் அடைந்தவர்களே எனக்கு எதிராகச் சென்று விட்டார்கள். நீங்கள் என்னுடன் இருக்கிறீர்களே என கேட்டுள்ளேன். இன்று நான் பொதுச் செயலாளராக தேர்வான சான்றிதழையே பார்த்திபன் தான் எனக்கு வழங்கியுள்ளார்.” என டிடிவி தினகரன் பேசினார்.