லாட்ஜூக்கு பெண்களை அழைத்து செல்லும் ஆண்களை குறி வைத்து மிரட்டி பணம் பறிப்பு..!

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் சென்னை கிழக்கு முகப்பேர் பகுதியில் தங்கி, தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த மாதம் 27-ந்தேதி பெண் ஒருவரை அரும்பாக்கம் பகுதியில் உள்ள லாட்ஜிக்கு அழைத்து சென்றார். அப்போது அவரிடம் காவல்துறை என்று கூறி ஒருவர் ‘கூகுள் பே’ மூலம் ரூ.15 ஆயிரம் பெற்றார். பின்னர், மணிகண்டனிடம் அந்த நபர், விசாரணைக்கு அழைக்கும் போது காவல் நிலையத்துக்கு வர வேண்டும் என்று கூறி சென்றார்.

அதன்படி, மணிகண்டனை அந்த நபர் 28-ந்தேதி அன்று செல்போனில் அழைத்து ஆணையர், ஆய்வாளருக்கு பணம் தரவேண்டும் என்று கூறி மீண்டும் அவரிடம் ‘கூகுள் பே’ மூலம் ரூ.65 ஆயிரம் பெற்றார். பின்னர் மணிகண்டனிடம் இதே பாணியில் ரூ.12 ஆயிரத்து 500 பணமும், அவர் அணிந்திருந்த 4 பவுன் மோதிரத்தையும் கடந்த 2-ந்தேதி பறித்துள்ளார். அந்த நபர் பணம் கேட்டு மணிகண்டனை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இதுபற்றி சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அரும்பாக்கம் லாட்ஜ் அருகே உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் அந்த நபர் வந்திருந்த ‘போலீஸ்’ என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த மொபட் வாகனத்தின் எண்ணை வைத்து காவல்துறை விசாரணை நடத்தினார்கள். இதில் அந்த வாகனம் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர் ஒருவருக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது. பின்னர் அந்த பெண் காவலரிடம், காவல்துறை விசாரணை நடத்தினார்கள். இதில் அவர், தன்னுடன் தங்கி இருக்கும் பாலாஜி என்பவர்தான் அன்றைய தினம் எனது மொபட் வாகனத்தை ஓட்டி சென்றார் என்று கூறினார்.

இதையடுத்து பாலாஜியை காவல்துறை கைது செய்தனர். இதில்,  தியாகராயநகர் முத்துரங்கம் சாலை பகுதியை சேர்ந்த பாலாஜி என தெரியவந்தது. பாலாஜி 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றி உள்ளார். இந்நிலையில் படிப்புக்கு ஏற்ற வேலை தனக்கு கிடைக்காததால் மோசடியில் ஈடுபட்டு வந்ததாகவும், மணிகண்டனை மிரட்டி பறித்த ரூ.92 ஆயிரத்து 500 பணத்தை ‘ஆன்லைன்’ சூதாட்டத்தில் இழந்து விட்டதாகவும், 4 கிராம் தங்க மோதிரத்தை அடகு வைத்து செலவு செய்து விட்டதாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்தார்.

நீட் தேர்வு தோல்வி.. மாணவன் தற்கொலை.. மகன் இறந்த சோகத்தில் தந்தை எடுத்த விபரீதம்

மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கு முதலில் ப்ளஸ் 2 தேர்வு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் கிடைத்து வந்த மருத்துவக் கல்லூரி இடங்கள், தற்போது நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றால் மட்டுமே கிடைக்கும் என மாறிவிட்டது. இந்த நீட் தேர்வால் கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் மருத்துவக் கனவு தகர்ந்து போவதாக திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.

மேலும், தமிழக அரசு சார்பில் நீட் விலக்கு மசோதாவும் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கோச்சிங் சென்டர்களில் சென்று படித்தால் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் என்ற சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது. அதனால் வசதி இல்லாத மாணவர்களால் கோச்சிங் சென்டர்களுக்கு செல்ல முடியாததால் அவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பதில்லை என பரவலான குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.மேலும் நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் ஆங்காங்கே தற்கொலை செய்து கொள்ளும் சம்பவமும் அரங்கேறி வருகிறது.

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்ற மாணவன் தனியார் நீட் கோச்சிங் சென்டருக்கும் அவர் சென்று படித்துள்ளார். இந்நிலையில், நடப்பாண்டு நீட் தேர்வு எழுதியும் ஜெகதீஸ்வரன் தோல்வி அடைந்தார். தொடர்ந்து இரண்டு முறை நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தன்னால் இனி மருத்துவரே ஆக முடியாது என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியில் இருந்த மாணவன் ஜெகதீஸ்வரன், சனிக்கிழமையன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தொடர் தோல்வி அடைந்ததில் இருந்து யாரிடமும் பேசாமல் இருந்ததாக மாணவனின் பெற்றோர்களும் உறவினர்களும் தெரிவித்தனர். இந்நிலையில் மூன்றாவது முறை முயற்சி செய்யலாம் என அண்ணா நகரில் இருக்கக்கூடிய தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்திற்கு அழைத்துச் சென்ற தந்தை செல்வ சேகர், விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்துவிட்டு முன்பணமும் செலுத்தி இருக்கிறார். அவரை பயிற்சி மையத்திற்கு மீண்டும் அழைத்துச் செல்ல இருந்த நிலையில் மாணவன் ஜெகதீஸ்வரன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், ஜெகதீஸ்வரனின் தந்தை, ” என் பிள்ளை போன்ற மாணவர்கள் தொடர் தற்கொலையில் ஈடுபட்டு வருகிறார்கள் அது நிறுத்தப்பட வேண்டும் என்றால் இந்த நீட் தேர்வை உடனடியாக தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். நேற்றைய தினம் ஊடகங்களுக்கு பேட்டியளித்த நிலையில் நள்ளிரவில் செல்வ சேகர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி, “கடந்த ஒரு வருடமாக எந்த மாணவரும் நீட் தேர்வுக்காக தற்கொலை செய்துகொள்ளவில்லை” என பேசியிருந்தார். இந்நிலையில் நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவனும் அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாட்டின் வெறித்தனம்… 9-வயது சிறுமி காயம்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்..!

சென்னை, சூளைமேட்டைச் சேர்ந்தவர் ஹர்ஷின் பானு, இவர் தனது 9 வயது மகள் ஆயிஷா மற்றும் 5 வயது ஆண் குழந்தையை அழைத்துக் கொண்டு ஆர் பிளாக் இளங்கோ தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர்களுக்கு எதிரே வந்து கொண்டிருந்த இரண்டு பசு மாடுகள் யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென்று சிறுமி ஆயிஷாவை தன் கொம்புகளால் தூக்கி கீழே வீசி தரையில் போட்டு தொடர்ந்து தாக்கியது.

இந்நிலையில் அதை பார்த்த சிறுமியின் தாயார் கூச்சலிட்டு கதறியபடி சத்தம் போட்டதால் அருகில் இருந்தவர்கள் செங்கல் உள்ளிட்ட பொருட்களை எடுத்து அடித்து மாட்டை விரட்ட முயற்சித்தனர். நீண்ட நேரம் சிறுமியை விடாமல் மீண்டும், மீண்டும் முட்டியதால் சிறுமி பலத்த காயமடைந்தார். ஒரு கட்டத்தில் அங்கிருந்தவர்கள் அந்த மாட்டினை விரட்டியடித்து சிறுமி ஆயிஷாவை காப்பாற்றினர். இதனை அடுத்து சிறுமியை அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதித்தனர். மாடு சிறுமியை வெறியோடு தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொழிலதிபரை மிரட்டி பணம் கேட்ட காங்கிரஸ் நிர்வாகி துப்பாக்கியுடன் கைது..!

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த அஸ்வத்தாமன் என்பவர்,தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் மாநில முதன்மை பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். கடந்தசில நாட்களுக்கு முன் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்ற தொழிலதிபரை துப்பாக்கி காட்டி மிரட்டி பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தொழிலதிபர் ஜெயபிரகாஷ், மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறை தனிப்படை அமைத்து அஸ்வத்தாமனை தேடி வந்தனர்.

இந்நிலையில், பெங்களூரில் இருந்து காரில் வந்த அஸ்வத்தாமனை, திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி காவல் துறையினர் நசரத்பேட்டையில் கைது செய்து அவரிடமிருந்து ஒரு துப்பாக்கி மற்றும் 7 தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். பின்னர், பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். துப்பாக்கி காட்டி தொழிலதிபரை மிரட்டிய அஸ்வத்தாமன், சென்னையின் பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

கலைஞர் கருணாநிதி 5-ம் ஆண்டு நினைவு நாள்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பின்னர் அங்கிருந்து பேரணியை தொடங்கினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான இந்த பேரணியில் தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, பொன்முடி, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், மஸ்தான், தங்கம் தென்னரசு, சேகர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி உட்பட திமுக அமைச்சர்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக மூத்த நிர்வாகிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த பேரணியில் பங்கேற்றனர். சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் சென்ற இந்த பேரணி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் நிறைவடைந்தது. அங்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உட்பட அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தெரிந்தவர்… தெரியாதவர்களிடம் அடையாள அட்டை…மொபைல் எண்…. கொடுக்கிறீர்களா..!? உஷாரய்யா… உஷார்…!

சென்னை, ஆவடியை சேர்ந்த கௌதமி என்பவர் தனது பெயரில் யாரோ தனியார் வங்கியில் தனது மொபைல் மற்றும் முகவரியை மாற்றி கடன் அட்டை பெற்று, சுமார் ரூ.7,58,029 வரை அமேசானில் பொருட்கள் வாங்கியுள்ளதாக ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் புகார் அளித்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த ஆவடி காவல் ஆணையரக சைபர் கிரைம் ஆய்வாளர் மகாலஷ்மி தலைமையிலான காவல்துறை வழக்கு பதிவு செய்தனர்.

விசாரணையில் முன்னாள் ஐசிஐசிஐ வங்கி ஊழியரான சைதாப்பேட்டையை சேர்ந்த அபுபக்கர் சித்திக் என்பவர் வங்கியில் வேலை பார்த்து வந்தபோது தனது உறவினர்களின் அடையாள அட்டை, மொபைல் எண்களை பயன்படுத்தி அவற்றின் மூலம் கடன் அட்டையை வங்கி வாடிக்கையாளர்கள் பெயரில் பெற்றுள்ளார். அதன்பின்னர் அபுபக்கர் சித்திக் கடன் அட்டையை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது.

மின் இணைப்பு மனுவை பரிசீலிக்க ரூ.3,500 லஞ்சம்.. ஓராண்டு சிறை தண்டனை

சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்த ஜெயபால் என்பவர் தனது வீட்டுக்கு இரண்டு மின் இணைப்பு பெற, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு கடந்த 2013-ல் விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பம் பரிசீலிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இதையடுத்து, அவர் எம்ஜிஆர் நகர் பிரிவு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலகத்துக்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த வணிக ஆய்வாளர் விஜயகுமார் மனுவை பரிசீலனை செய்ய ரூ.3,500 தந்தால் வேலை நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, 2013 ஜூன் 6ம் தேதி லஞ்சம் கேட்ட விஜயகுமார் மீது ஊழல் தடுப்பு பிரிவில் ஜெயபால் புகார் செய்தார். காவல்துறையினரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் ஜெயபால் லஞ்ச பணம் ரூ.3,500-யை விஜயகுமாரிடம் கொடுக்கும்போது லஞ்ச ஒழிப்பு காவல்துறை அவரை கைது செய்தனர். அவர் மீது ஊழல் தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் விஜயகுமாருக்கு ஓராண்டு ஆண்டு சிறை தண்டனையும் ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

மணிப்பூர் வன்முறை பத்ரி சேஷாத்ரி சென்னையில் கைது..!

சென்னையைச் சேர்ந்த பிரபல பதிப்பாளர் பத்ரி சேஷாத்திரி, மணிப்பூர் வன்முறை சம்பவம் குறித்து ஒரு யூ டியூப் சேனலில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து, பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் ப.கவியரசு என்பவர் ஜூலை 27-ல் புகார் அளித்திருந்தார்.

அந்த மனுவில், மணிப்பூர் வன்முறைச் சம்பவம் குறித்து பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி என்பவர் ஒரு யூடியூப் சேனலில், இரு தரப்பு மக்களிடையே அமைதியை குலைக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் விதத்திலும் பேசியுள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்திருந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை ஏளனமாகவும், அவமதிக்கும் வகையிலும், அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசியிருந்தார். எனவே, அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இது குறித்து குன்னம் காவல்துறை கடந்த 27-ம் தேதி வழக்குப் பதிவு செய்து, சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை மேற்கொண்டனர். இதையடுத்து, சென்னையில் உள்ள அவரது வீட்டில் இருந்த பத்ரி சேஷாத்ரியை குன்னம் காவல்துறை கைது செய்து, பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

பின்னர், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு, குன்னத்திலுள்ள மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் எஸ்.கவிதா முன்பு காவல்துறை ஆஜர்படுத்தினர். அப்போது, பத்ரி சேஷாத்ரியை ஆக.11 வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து காவல்துறை அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில், புகழ்பெற்ற பதிப்பாளர், மேடைப் பேச்சாளர் பத்ரி சேஷாத்ரியை தமிழக காவல்துறை கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை செயல்படுத்துவது ஒன்று மட்டும் தான் காவல்துறையின் பணியா? என குறிப்பிட்டுள்ளார்.

லஞ்சம் கேட்ட தமிழர் கட்சி ஊராட்சி தலைவர் கைது..!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள இலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சீவாடி ஊராட்சி. இதன் ஊராட்சி தலைவராக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ரங்கநாதன் உள்ளார். சீவாடி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சென்னையை சேர்ந்த அப்துல்லா என்பவர் நிலம் வாங்கி இருந்தார். அப்துல்லா அந்த நிலத்தை வீட்டுமனை பிரிவுகளாக மாற்றுவதற்காக ஊராட்சியின் அங்கீகாரம் பெறுவதற்காக விண்ணப்பித்து இருந்தார்.

அப்போது ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன், அந்த வீட்டு மனை பிரிவாக மாற்ற அங்கீகாரம் வழங்குவதற்கு ரூ..25 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத நிலத்தின் உரிமையாளர் அப்துல்லா சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு காவல்துறைருக்கு தகவல் தெரிவித்தார்.

லஞ்சஒழிப்பு காவல்துறையினர் அறிவுறுத்தல்படி அப்துல்லா முன்பணத்தை வழங்குவதாக கூறி நேற்று மாலை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே ரங்கநாதனிடம் கொடுத்தார். அதனை ரங்கநாதன் வாங்கியபோது மறைந்து இருந்த சென்னையில் இருந்து வந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறை ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதனை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.74 லட்சம் மோசடி வழக்கில் 2 பேர் கைது… மேலும் ஒருவர் தலைமறைவு.!

சென்னை, அம்பத்தூர், பச்சையப்பன் பிரதான சாலையைச் சேர்ந்த சத்ய நாராயணன், அவரது மனைவி ஷாலினி, மாதவரம் சத்யமூர்த்தி நகரைச் சேர்ந்த தாமஸ் ஆகியோருக்கு திருச்சி மாவட்டம், துறையூர் வட்டத்தைச் சேர்ந்த காயத்ரி அறிமுகமாகியுள்ளளார். சத்ய நாராயணன், தனக்கு பல அரசியல் கட்சியினர் தெரியும், அவர்கள் மூலமாக, கூட்டுறவுத்துறையில் வேலை வாங்கி தருவதாக காயத்ரியிடம் கூறியுள்ளார்.

மேலும் அவர்களுக்கு நெருங்கிய வட்டத்தில் இந்த தகவலை தெரிவித்துள்ளார். இதன்விளைவாக, காயத்ரி உள்ளிட்ட 8 பேரிடம் சத்ய நாராயணன் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ரூ.74 லட்சம் பெற்றதாக தெரிய வருகிறது. ஆனால் சத்ய நாராயணன் சொன்னதுபோல வேலை வாங்கித் தரவில்லை. ஆகையால் காயத்ரி உள்ளிட்ட மற்ற 8 பேரும் சத்ய நாராயணன் பணத்தை திருப்ப கேட்டுள்ளனர். இந்நிலையில், காயத்ரி அம்பத்தூரில் உள்ள சத்யநாராயணன் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

ஆனால் அவர்கள் மூவரும் வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. இதுகுறித்து கடந்த 2021-ல் காயத்திரி மத்திய குற்றப்பிரிவில் புகாரளித்தார். இதை விசாரித்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறை, நேற்று கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் அருகே நின்றிருந்த ஷாலினி மற்றும் தாமஸ் இருவரையும் கைது செய்தனர். மேலும் சத்ய நாராயணனை தீவிரமாக தேடுகின்றனர்.