மினி வேன் கிணற்றுக்குள் பாய்ந்து 5 பேர் பலி கிணற்றில் 45 சவரன் நகைகளை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

ஆம்னி வேன் கிணற்றுக்குள் பாய்ந்து 5 பேர் பலி கிணற்றில் கிடந்த பட்டு புடவைகள், தங்க செயின், மோதிரம் உள்பட மொத்தம் 45 சவரன் நகைகளை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். கோயம்புத்தூர் மாவட்டம் சங்கிலியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மோசஸ் இவரது மனைவி வசந்தா, மகன் கெர்சோம், இவரது மனைவி சைனி கிருபா, ஒன்றரை வயது குழந்தை ஸ்டாலின், உறவினர்கள் ரவி கோயில் பிச்சை, இவரது மனைவி லெற்றியா கிருபா, ரவி கெர்சோன் என்பவரின் மகள் ஜெரினியா எஸ்தர் ஆகிய 8 பேரும் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே வெள்ளாளன்விளை கிராமத்தில் நடந்த தூய பரிசுத்த ஆலய பிரதிஷ்டை விழாவில் பங்கேற்பதற்காக நேற்று காலை மினி வேனில் சென்றுக் கொண்டு இருந்தனர்.

நேற்று மாலை 4.00 மணியளவில் சாத்தான்குளம் அருகே சிந்தாமணிக்கும் மீரான்குளத்துக்கும் இடையே மினி வேன் வந்துக்கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்த மினி வேன் சாலையில் தாறுமாறாக ஓடி சாலையின் வலதுபுறம் இருந்த தடுப்புச்சுவர் இல்லாத கிணற்றுக்குள் தலைக்குப்புற பாய்ந்தது. இதில் சுதாரித்துக்கொண்டு சைனி கிருபாகரன், ஜெரின் எஸ்தர் ஆகிய 2 பேர் காரின் கதவை திறந்து வெளியே குதித்து உயிர் தப்பினர்.

இதில், மோசஸ், அவரது மனைவி வசந்தா, அவரது மகன் ஹெர்சோம், ஜெயபால் மகன் ரவி கோயில் பிச்சை, அவரது மனைவி லெட்ரியா கிருபா, ஹெர்சோம் மகனான ஒன்றரை வயது ஸ்டாலின் ஆகியோர் காருடன் கிணற்றுக்குள் விழுந்தனர். இந்நிலையில், சைனி கிருபாகரன், ஜெரின் எஸ்தர் ஆகிய 2 பேரும் அந்த வழியில் சென்றவர்களிடம் இதைப் பற்றி கூறி கதறி அழுதனர். அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு கெர்சோன் என்பவரை லேசான காயத்துடன் பொது மக்கள் மீட்டனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தூத்துக்குடியில் இருந்து முத்துக்குளி வீரர்கள் இரு பொக்லைன் இயந்திரங்கள், ராட்சத கிரேன் ஆகியவற்றின் துணையுடன் பல நேரமாக மீட்பு பணி நடைபெற்றது. இந்த கோர விபத்தில் மோசஸ், வசந்தா, ரவி, எப்சியா கிருபா மற்றும் ஒன்றரை வயது குழந்தை ஆகிய ஐந்து பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில், இறந்தவர்களின் உடல்களுக்கு கனிமொழி MP நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் இறந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவு பிறப்பித்தார். மேலும் சாலை ஓரத்தில் தடுப்புகள் இல்லாதது இந்த விபத்திற்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் தமிழக அரசின் தலைமை செயலாளர் என்.முருகானந்தம் IAS பிறப்பித்துள்ள உத்தரவில், சாலைகளின் தரம் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை ஓரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் உள்ள பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்து அதனை சுற்றி சுற்றுச்சூழல் அல்லது பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவத்தில் தங்க நகைகள் கிணற்றுக்குள் விழுந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இரண்டு மின் மோட்டார் மூலம் 5 மணி நேரத்துக்கு மேலாக கிணற்றில் உள்ள தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இறுதியாக காவல்துறை, தீயணைப்பு வீரர்கள் இணைந்து கிணற்றில் கிடந்த முக்கியமான பையை மீட்டு அதிலிருந்த த45 சவரன் நகை, வெள்ளிப்பொருட்கள் மற்றும், ரொக்க பணம், செல்போன் ஆகியவை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தமிழிசை செளந்தரராஜன்: அக்காவும், தம்பியும் சேர்ந்து ஸ்டாலினை வீட்டிற்கு அனுப்புகிறோமா, இல்லையானு பாருங்கள்..!

அண்ணனும், தம்பியும் சேர்ந்து காங்கிரஸை வீட்டிற்கு அனுப்புவோம் என்று பேசுவதை கேட்டு இருக்கிறேன். இன்று சொல்கிறேன்.. இந்த அக்காவும், தம்பியும் சேர்ந்து ஸ்டாலினை வீட்டிற்கு அனுப்புகிறோமா, இல்லையா என்று பாருங்கள் என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார். சென்னை திருவான்மியூரில் நடந்த பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்றுப் பேசினார். அப்போது, என்னை இனி யாரும் உயரம் குறைவு என்று சொல்ல முடியாது. ஏனென்றால் தொண்டர்களால் உயர்ந்து நிற்பவள் நான்.

இது பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் மட்டுமல்ல. இது 2026-ல் திமுகவை வீட்டிற்கு அனுப்பும் முதல் கூட்டம் இது. இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஒன்றும் இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ரூ.1.5 லட்சம் கோடி வட்டியில்லா கடன் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகம் என்ற பெயரில் ஆயிரம் மருந்தகங்களை திறக்கப் போகிறார்களாம். இதைவிட காப்பியடிக்க கூடிய ஒரு முதல்வரை பார்க்க முடியாது. 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே பிரதமர் மக்கள் மருந்தகங்களை திறந்து வைத்துவிட்டார்.

இம்முறை மருத்துவத்திற்கு அதிகளவில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் கேன்சர் மருத்துவமனை கொண்டு வரப்படவுள்ளது. ஏனென்றால் இன்றளவில் 9 பேரில் ஒருவருக்கு கேன்சர் வருகிறது. அண்ணாமலை இருப்பதே சிலருக்கு பயமாக இருக்கிறது. அவர் இருந்தால், எங்களுக்கு வெற்றி என்று திமுகவினர் சொல்கிறார்கள். அண்ணாமலை இருந்தால் பாஜகவுக்கு வெற்றி என்று நாங்கள் ஏற்கனவே சொல்லி வைத்துள்ளோம். இப்போது பயத்தில் அவர்கள் சொல்லி கொண்டு இருக்கிறார்கள். ஆன்மீகத்தை தமிழ்நாட்டை காப்பாற்ற போகிறது, காவி தான் தமிழகத்தை ஆளப் போகிறது.

பெரியாரை பற்றி தவறாக பேசினால் ஓட்டு கிடைக்காது என்று கூறுகிறார்கள். பெரியாரின் பெயருக்கு களங்கள் விளைவித்தால் ஓட்டு கிடைக்காது என்று கனிமொழியும் கூறியிருக்கிறார். தூத்துக்குடியில் போட்டிபோடுவதற்கு முன் நான், பனங்காட்டு நரி.. எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டேன் என்று கூறினேன். அதற்கு கனிமொழி, ட்விட்டர் ஐடியிலுள்ள பெரியாரின் படத்தை எடுத்துவிட்டு பன மரத்தை வைத்தார்.

பெரியாரை விடவும் பனமரம் அதிக வாக்குகளை பெற்றுக் கொடுக்கும் என்று கனிமொழி நினைத்தார். அதனை இன்று மாற்றி பேசுகிறார். நாடாளுமன்றத்தில் திமுக எம்பி-க்கள் சமஸ்கிருதம், இந்தி என்று பேசிக் கொண்டே இருக்கிறார்கள். தொடர்ந்து ஒரு தமிழ்நாட்டு பெண் 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார். அதற்காகவாது தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பிரதமருக்கு மாலை போட வேண்டும்.

1967-ல் கலைஞர் பேசும் போது, அண்ணன் இருக்கிறார்.. தம்பி நான் இருக்கிறேன். அண்ணனும், தம்பியும் சேர்ந்து காங்கிரஸை வீட்டிற்கு அனுப்புவோம் என்று பேசுவதை கேட்டு இருக்கிறேன். இன்று சொல்கிறேன்.. இந்த அக்காவும், தம்பியும் சேர்ந்து ஸ்டாலினை வீட்டிற்கு அனுப்புகிறோமா, இல்லையா என்று பாருங்கள். பாஜகவை ஆட்சிக்கு கொண்டு எப்போதும் அண்ணாமலையுடன் நானிருப்பேன். அண்ணா வளர்தத்து தமிழ் அல்ல, ஆண்டாள் வளர்த்த தமிழ், பெரியார் வளர்த்த தமிழ் அல்ல, பெரியாழ்வார் வளர்த்த தமிழ் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என தமிழிசை செளந்தரராஜன் பேசினார்.

கனிமொழி வேண்டுகோள்: சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும்..!

சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, நேற்று நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்காக 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. வெயில், நெரிசலால் 240 பேர் மயக்கம் அடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து மக்கள் கூட்டத்தை கண்காணிக்க தமிழக காவல் துறை தவறியதாக அதிமுகவும், பாஜகவும் குற்றம் சாட்டியுள்ளன.

இந்நிலையில், திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ராணுவ விமான சாகச நிகழ்ச்சியை காணவந்த பொதுமக்கள் கூட்ட நெரிசலால் அவதியுற்றதும், வெப்ப நிலையும் அதிகமாக இருந்த நிலையில் 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது. சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கனிமொழி: ஒன்றுமே செய்யாத மத்திய அரசுடன் எப்படி நெருக்கமாக இருக்க முடியும்…!?

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் 253 -வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் இருக்கும் முழு உருவ சிலைக்கு தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு, நாடாளுமன்ற திமுக குழு தலைவர் மற்றும் திமுக துணைப்பொது செயலாளர் கனிமொழி, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் தான் ஒண்டி வீரன் மணிமண்டபம் அமைக்கப்பட்டது. திமுக ஆட்சியில் அருந்ததிய சமுதாயத்திற்கான மூன்று சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் சிலரால் வழக்கு தொடர்ந்த போதிலும் அந்த வழக்கில் மிகப்பெரிய வெற்றியை முதலமைச்சர் பெற்று கொடுத்துள்ளார். வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்காதவர்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் உழைக்கக்கூடிய அரசாக செயல்படுகிறது. மத்திய அரசின் பட்ஜெட்டில், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு ஒதுக்க கூடிய நிதி ஒதுக்கப்படவில்லை. மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியும் ஒதுக்கப்படவில்லை.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதி முதல்வரால் கேட்டும் அது கிடைக்கப்பெறவில்லை என எதுவும் கிடைக்காத நிலையில், தமிழ்நாட்டுக்கு ஒன்றுமே செய்யாத மத்திய அரசுடன் எப்படி நெருக்கமாக இருக்க முடியும்? பாஜக உடனான திமுகவின் அணுகுமுறையில் எந்த மாற்றமும் இல்லை. மக்களிடம் பழகும் போது எளிமையாக அன்பாக பழகக் கூடியவர் முதலமைச்சர். அதே வேளையில் தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்காக போராடும்போது தலைவர் கலைஞரைப் போல் உறுதியாக இருப்பார் கனிமொழி பேசினார்.

“ஆளுநர் ஏதோ ஒரு கட்சிக்காரர் போல் நடந்து கொள்ளும் பொழுது எதிர்க்கட்சிகளும் இப்படிதான் புறக்கணிப்பார்கள்..!”

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் மினி எம்பிஏ படிப்பில் பட்டம் பெற்ற 10 திருநங்கைகள் உட்பட 18 பேருக்கு பட்டமளிக்கும் விழா நடைபெற்றது. இதில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணை பொது செயலாளருமான கனிமொழி கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார்.

அப்போது கனிமொழி எம்.பி. மேடையில் பேசுகையில், “இந்த பயணம் என்பது பல விஷயங்களை சொல்லி கொடுக்க கூடிய ஒன்று, ஒரு காலத்தில் திருநங்கைகள் ஒரு பாஸ்போர்ட் வாங்க வேண்டும் என்றாலும் வாங்க முடியாது. கல்லூரியில் சேர முடியாது, திருநங்கைகள் இருக்கிறார்கள் என்று எந்த அடையாளமும் இருக்காது. இந்த சமூகம் அவர்கள் மீது காட்டிய வேறு விதமான பார்வை தான் அதிகளவில் திருநங்கைகளை ஆபரேஷன் செய்ய வைத்தது.

திருநங்கைகள் கல்லூரிகளுக்கு செல்ல விரும்பினால் நீங்கள் ஆணா? பெண்ணா? என்று கேள்வி கேட்டு பதில் சொல்லாமல் அங்கேயே அவர்களது வாழ்க்கை முற்றுப்புள்ளியோடு நின்ற சூழல் இருந்தது. வாழ்வதற்கே, போராடிக் கொண்டிருப்பவர்கள் திருநங்கைகள். திருநங்கைகளுக்கு ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் செய்து கொடுத்த தலைவர்தான் கலைஞர். பெரியார் வழியில் வந்த இந்த ஆட்சி இன்று வரை அதை செய்து கொண்டிருக்கிறது.

இந்தக் கல்வி உங்கள் மீது ஒரு நம்பிக்கையை தரும். எங்களால் தலை நிமிர்ந்து நிற்க முடியும் என்ற சூழ்நிலையை உருவாக்கக்கூடியது கல்வி. நீங்கள் பல பேருக்கு முன்னுதாரணமாக மாற முடியும். இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து மனிதர்களுக்கும் முன் உதாரணமாக இருப்பவர்கள் நீங்கள்” என கனிமொழி பேசினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்திப்பில் சந்தித்த கனிமொழி பேசுகையில், “கடந்த 2008 -ஆம் ஆண்டு, முதன்முதலாக தலைவர் கலைஞர்தான் திருநங்கைகளின் எதிர்காலத்திற்காக ஒரு அங்கீகாரத்தை கொடுத்தார். இந்த நாட்டிலேயே திருநங்கைகளை முதன்முதலாக அங்கீகரித்த மாநிலம் தமிழ்நாடு. சமீபத்தில் முதலமைச்சர் அவர்கள், திருநங்கைகள் மேலே படிப்பதற்கு தடை வந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்களுக்கான படிப்பு மற்றும் ஹாஸ்டல் செலவை அரசு ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்து உள்ளார்.

ஆளுநர் நடுநிலையாக இருக்க வேண்டும். அவர் ஏதோ ஒரு கட்சிக்காரர் போல் நடந்து கொள்ளும் பொழுது எதிர்க்கட்சிகளும் இப்படிதான் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவிப்பார்கள் என கனிமொழி பேசினார்.

கனிமொழி: இந்த தேர்தல் 2-வது சுதந்திரப் போராட்டம் …!

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் மாணிக்கம் தாகூரை ஆதரித்து, விருதுநகரில் மூளிப்பட்டி அரண்மனை அருகே திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, ”இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். யார் பிரதமராக வர வேண்டும் என்பதை தீர்மானிப்பதைவிட யார் வரக்கூடாது என்பதை தீர்மானிக்க வேண்டும். 2-வது சுதந்திரப் போராட்டம் இந்த தேர்தல். பாஜக வெற்றி பெற்றால், அப்படி ஒரு விபத்து நடந்தால் இதுதான் இந்தியாவின் கடைசி தேர்தல். சர்வாதிகாரம் மட்டும்தான் தலைவிரித்தாடும்.

நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளுக்காக கேள்வி எழுப்பியதற்காக மாணிக்கம் தாகூர் பல முறை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதானி பற்றி ராகுல் காந்தி தொடர்ந்து பேசுகிறார் என்பதால் பதவியிலிருந்தே நீக்கம் செய்யப்பட்டார். தேர்தல் நேரத்தில் காங்கிரஸின் அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. 2 முதல்வர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாஜக ஆட்சிக்கு வந்ததும் எதிர்க்கட்சியினர் மீதுதான் 80 சதவிகித வழக்குகள் போடப்பட்டுள்ளன. உரிமைக்காக போராடிய விவசாயிகள் மீது ஒரு அமைச்சரின் மகன் காரை ஏற்றி 4 பேரை கொலை செய்தார். ஆங்கிலேயர் நமது பணம், பொருள், உரிமைகளை பறித்தார்கள். இன்னொரு ஆங்கிலேயர் ஆட்சிதான் இங்கு நடக்கிறது. நமது உரிமைகள் பறிக்கப்படுகிறது. சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன.

இதுவரை வராத மோடி தற்போது தேர்தல் வந்ததும் தமிழகத்தை சுற்றி சுற்றி வருகிறார். அவருக்கு ஒட்டு விழாது, தமிழக மக்கள் தெளிவாக உள்ளார்கள் என்பது அவருக்கு தெரியவில்லை. இங்கு உள்ள ஆளுநர் எல்லாம் தெரிந்ததுபோல் பேசுகிறார். அண்ணாமலை இப்போது என் மண், என் மக்கள் என்கிறார். கர்நாடகத்தில் இருந்தபோது நான் தமிழன் இல்லை. கன்னடகாரன். கடைசி மூச்சுவரை கன்னடக்காரன்தான் என அழைக்க வேண்டும் என்று கூறினார். ஆனால், இப்போது ஏன் கோவை தொகுதியில் போட்டியிடுகிறார் எனத் தெரியவில்லை.

நாம் போராடி பெற்ற தமிழ்நாடு என்ற பெயரை கூறக் கூடாது என ஆளுநர் ரவி கூறுகிறார். அவருக்கு என்ன உரிமை இருக்கிறது. தேர்தல் வந்தவுடன் தமிழ் மீது பிரதமர் மோடிக்கு பற்று வந்துவிட்டது. தேர்தலுக்குப் பிறகு நல்ல தமிழாசிரியரை முதல்வர் அனுப்பிவைப்பார். நமது வங்கிக் கணக்கில் குறைந்த அளவு தொகை இருப்பு இருந்தால் அதற்கும் பணம் பிடிக்கிறார்கள். ஆனால், இண்டியா கூட்டணி ஆட்சி வந்த பிறகு இந்த பழக்கம் நிறுத்தப்படும். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். வரவில்லையெனில் மாணிக்கம் தாகூரை கேளுங்கள். தமிழ்நாட்டை வளப்படுத்தும் ஆட்சி மத்தியில் உருவாகும்.

தமிழகத்துக்கு வரவேண்டிய நிதியும், நிவாரணமும் வரும். விருதுநகரில் ஆனைக்குட்டம் அணையில் ஷட்டர்களை பழுதுபார்க்க ரூ.29 கோடியில் ஒப்பந்தப்புள்ளி விடப்படும். ரூ.447 கோடியில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. நமது ஆட்சி அமைந்ததும் மக்களை கஷ்டப்படுத்தாத முறையில் ஜிஎஸ்டி மாற்றி அமைக்கப்படும். உங்கள் கோரிக்கைகள் நிறைவேற, நாட்டை காப்பாற்ற, குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க மாணிக்கம் தாகூருக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என கனிமொழி பேசினார்.

கனிமொழி: தமிழகத்தில் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்…!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதன்வரிசையில், ஈரோடு மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி திருப்பூர் மாவட்டம் வெள்ள கோவிலில் நடந்த தேர்தல் பரப்புரையில், “இன்றைக்கு இந்தியாவை ஆளும் பாஜகவால் மக்கள் மதம், ஜாதியால் பிரித்து வைக்கப் பட்டுள்ளனர்.

பாஜக ஆளும் மாநிலங்களில் மக்களிடையே ஒற்றுமை இல்லை. மணிப்பூர் மாநிலம் கலவரத்தால் கொழுந்து விட்டு எரிகிறது. அங்கு பிரதமர் மோடி ஒரு முறை கூட செல்லவில்லை. இயற்கை சீற்றங்களால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டிருந்த போதும் கூட வரவில்லை.

ஆனால், தேர்தல் நேரத்தில் மட்டும் அடிக்கடி வருகிறார். டெல்லி விவசாயிகள் போராட்டத்தை பாஜக கண்டுகொள்ளவில்லை. விவசாயிகள், சிறுபான்மையினர், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதானி, அம்பானிகளுக்கு வேண்டப்பட்ட அரசாக பாஜக அரசு உள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தனது பிரச்சாரத்தில் மோடியை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை.

திமுக அங்கம் வகிக்கும் கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் காஸ், சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகள் அனைத்தும் அகற்றப்படும். தென்னை விவசாயிகளின் கோரிக்கையான கொப் பரைக்கு அடிப்படை ஆதார விலை வழங்கப்படும்” என கனிமொழி பேசினார்.

அக்ஷா பவன் முதியோர் இல்லத்தில் கனிமொழி அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம்

ஜனவரி 5 -ம் தேதி திமுக துணை பொது செயலாளருமான, கழக நாடாளுமன்ற குழு துணை தலைவருமான கனிமொழி MP அவர்களின் 56 வது பிறந்த நாளை திமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நீலகிரி மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் ஆலோசனைப்படி, நீலகிரி மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் நீலகிரி கூடலூர் ஆஷா பவன் முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி, மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கூடலூர் ஒன்றிய செயலாளர் அ.லியாகத் அலி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கோமதி தலைமையில் இன் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது இதில் மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் ஜெயந்தி முன்னிலை வகித்தார், மாவட்ட மகளிர் துணை அமைப்பாளர்கள் ச.பரிமளா (கூடலூர் நகர மன்ற தலைவர்) சிவகாமி (நெல்லியாளம் நகராட்சி தலைவர்) செல்வி. வள்ளி (தேவர் சோலை பேரூராட்சி தலைவர்), கௌரி (சோலூர் பேரூராட்சி தலைவர்) வெண்ணிலா (நகர மன்ற உறுப்பினர்), மாவட்ட மகளிர் தொண்டர் அணி தலைவர் சித்ராதேவி (ஓவேலி பேரூராட்சி தலைவர்) மாவட்ட மகளிர் தொண்டரணி துணைத் தலைவர் அன்ன புவனேஸ்வரி, மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர்கள் கீர்த்தனா (ஊராட்சி ஒன்றிய தலைவர்), தனபாக்கியம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு எம்பி கனிமொழி பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி இனிப்புகள் பரிமாறி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

சொன்னதை செய்த கனிமொழி..! 7ஆம் வகுப்பு மாணவியின் பெற்றோர் நெகிழ்ச்சி..!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே தாமிரபரணி ஆற்றையொட்டி அமைந்திருக்கும் மேலாத்தூர் – சொக்கப்பழங்கரை ஊராட்சியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, கடந்த 27-ம் தேதி அன்று ஆய்வு செய்தார்.

அப்போது , கண் பார்வை குறைபாடுள்ள சிறுமியைக் கண்ட கனிமொழி எம்.பி, அந்த சிறுமியின் அருகே சென்று கண் பார்வை கோளாறு குறித்து அக்கறையோடு விசாரித்தார். அதற்கு அந்த சிறுமி, தனது பெயர் ரேவதி என்றும் ஏழாம் வகுப்பு படித்து வருவதாகவும் கூறியவர், தனக்கு கண் பார்வை பிரச்சனை இருப்பதாகவும்ம் அதற்கு மருத்துவச் சிகிச்சை வேண்டும் என்று கனிமொழி எம்.பியிடம் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து சற்றும் யோசிக்காத கனிமொழி, அவ்வளவு தானே சரி செய்துவிடலாம் என நம்பிக்கை பொங்க அந்தச் சிறுமியிடம் பேசி ஊக்கமும் உற்சாகமும் அளித்தார். அதைத் தொடர்ந்து திருநெல்வேலியில் உள்ள தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனையில் சிறுமி ரேவதி அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு நேற்று அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சிறுமி ரேவதி இன்று வீடு திரும்பிய நிலையில், ஏரல் வட்டாட்சியர் கோபாலகிருஷணன் சொக்கப்பழங்கரை கிராமத்திற்கு சென்று ரேவதியிடம் நலம் விசாரித்தார்.

மேலும், கனிமொழி எம்.பியும் சிறுமி ரேவதியிடம் தொலைப்பேசியில் நலம் விசாரித்தார். இதற்குப் பதில் அளித்த அந்த சிறுமி கண் அறுவை சிகிச்சைக்கு உதவியதற்கு நன்றி கூறியதுடன், தான் வளர்ந்த பிறகு மருத்துவராக பணியாற்றுவேன் எனக் கூறினார். இதனிடையே தங்கள் மகளின் எதிர்காலம் குறித்த கவலையில் இருந்த ரேவதியின் பெற்றோர், சொன்னதை செய்த கனிமொழியால் நெகிழ்ந்துவிட்டனர்.

மோடியின் கால் விரல் நகத்தில் உள்ள தூசுக்கு கூட சமமாக மாட்டீர்கள்…! மக்கள் போட்ட பிச்சையில் எம்பியாகியுள்ளீர்கள்…!

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது திமுக எம்பி கனிமொழி பேசிய போது, தமிழகத்தின் வரலாறு பிரதமர் மோடிக்கு தெரியுமா? நாடாளுமன்றத்தில் செங்கோலை வைத்து அது சோழர் பரம்பரையில் இருந்து வந்ததாக சொன்னீர்கள். கண்ணகியின் கோபத்தால் பாண்டியனின் செங்கோல் தகர்ந்த கதை உங்களுக்கு தெரியுமா. எங்கள் மீது இந்தியை திணிப்பதை விட்டுவிட்டு சிலப்பதிகாரத்தை படியுங்கள். அதில் உங்களுக்கான பாடம் நிறைய உள்ளது. இவ்வாறு கனிமொழி பேசியிருந்தார்.

இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். அவர் என் மண் என் மக்கள் பாதயாத்திரையின் போது தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில் பேசியது, சகோதரி கனிமொழி அவர்கள் முதலில் பெரியாரை பற்றி படிக்க வேண்டும். பெரியார் சிலப்பதிகாரத்தை பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த 1951 -ம் ஆண்டு ஜூலை 22 ஆம்தேதி சேலத்தில் ஒரு மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் தந்தை பெரியார், கணவன் கோவலன் இறந்த நிலையில் கோபம் கொண்ட கண்ணகி ஒரு பக்கம் கொண்டையை எடுத்து மதுரை மீது எறிகிறாளாம். அது உடனே தீப்பிழம்பாக மாறி மதுரையையே சுட்டு எரித்துவிடுகிறதாம்.

இதை நம்ப முடிகிறதா. பாண்டியன் மன்னன் செய்த தவறுக்கு மதுரை மக்கள் சாம்பலாக வேண்டுமா. இதுதான் கற்புக்கரசிக்கு இலக்கணமா என பெரியார் கேள்வி எழுப்பியிருந்தார். எனவே பிரதமர் மோடியை சிலப்பதிகாரம் படிக்கச் சொல்ல வேண்டாம். பெரியார் சிலப்பதிகாரத்தை பற்றி என்ன சொல்லி இருக்கிறார் என நீங்கள் படியுங்கள்.

ஊழலுக்கு பிறந்தவர்கள் நீங்கள். சிறை சென்று திரும்பியவர்கள், 2ஜி முறைகேட்டில் சிக்கியவர்கள். கலைஞர் டிவியில் 3000 கோடி பணபரிவர்த்தனையில் சிக்கி சிறைக்கு சென்றவர். நீங்கள் எல்லாம் மோடியின் கால் விரல் நகத்தில் உள்ள தூசுக்கு கூட சமமாக மாட்டீர்கள். ஏதோ கருணாநிதி என்ற பெயர் இருப்பதால் மக்கள் போட்ட பிச்சையில் எம்பியாகியுள்ளீர்கள்.

நீங்கள் எல்லாம் பிரதமர் குறித்து பேசவே கூடாது. அவரை பற்றி நாடாளுமன்றத்தில் பேச எந்த தகுதியும் கிடையாது. பிரதமர் இரவும் பகலும் நாட்டு மக்களுக்காக உழைத்து வருகிறார். எதை படிக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அதனால்தான் திருக்குறளை படிக்கிறார், அதனால்தான் கனியன் பூங்குன்றனாரை படிக்கிறார். அதனால்தான் சிலப்பதிகாரத்தையும் படிக்கிறார் என மிகவும் காட்டமாக விமர்சித்துள்ளார்.