அண்ணாச்சி, அண்ணாச்சி, விஜய் அண்ணாச்சி.. அரிசி விலை என்னாச்சு.. இப்போ போய் கேட்கலாமா? அவர் ஜனநாயகன் படத்தினாலே கவலையில் 4 நாட்களாக தலைமைச் செயலகத்தில் தலை காட்டாமல் தலைமறைவாக இருக்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆர்.பி. உதயகுமார் விடுத்த வீடியோவில், “ஜனநாயகன் படத்தின் பரிதாப நிலை கண்டு கவலையிலே 4 நாட்களாக தலைமைச் செயலகத்திற்கு முதல்வர் விஜய் தலைகாட்டவில்லை. விஜய்க்கு ஜனநாயகன் படம் ஊத்திக்கிச்சுன்னு கவலையாக உள்ளார். அவருக்கு மக்களின் கவலையை கவனத்திலே கொண்டு செல்ல வேண்டியது நம்முடைய கடமையாகும்.
தற்போது அனைத்து வகை அரிசிகள் விலை கடந்த ஒரு மாதத்தில் 5 ரூபாய் இருந்து 20 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது. இது சராசரியாக 20 சதவீத வரை விலை உயர்ந்து இருக்கிறது. 26 கிலோ அரிசி மூட்டைக்கு ரூபாய் 250 முதல் ரூபாய் 400 ரூபாய் வரை விலை அதிகரித்து இருப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களையும் கடுமையாக பாதித்திருப்பதை கண்டு முதல்வர் விஜய் கவலையோடு இருக்கிறாரோ என்னவோ தெரியவில்லை. தமிழகத்திற்கு ஓர் ஆண்டுக்கு 91 லட்சம் டன் அரிசி தேவை.
ஆனால் 75 லட்சம் டன் அரிசி மட்டுமே இங்கு உற்பத்தியாகிறது. அதிலும் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படவில்லை. ஜூன் ஜூலைக்கான நீரை கர்நாடகம் திறந்து விடவில்லை. இதனால் டெல்டா பகுதிகளில் வறட்சி தலைவிரித்து ஆடுகிறது.
நமது தேவையை பூர்த்தி செய்ய ஆண்டுக்கு ஒரு லட்சம் டன் உயர் ரக , சன்ன ரக அரிசி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் இம்முறை கர்நாடகாவில் போதிய மழை பெய்யாததால் சன்னரக அரிசி விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. அதனால் தமிழகத்திற்கு அவர்கள் அனுப்பும் அரிசியின் அளவும் குறைந்துவிட்டது.
அதோடு தமிழகத்தில் கடந்த 20 நாட்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்களில் சுமார் ஒரு லட்சத்துககு மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையால் நனைந்து வீணாகிவிட்டது. தற்போது தமிழ்நாட்டில் அரிசி விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது, குறைந்தபட்சம் கஞ்சி காய்ச்சி குடிப்பதற்கு கூட அரிசி கிடைக்கவில்லை விலை ஏறிக்கொண்டே போகிறது என மக்கள் கலங்கி போயிருக்கிறார்கள். மக்களுக்கு ரேஷன் கடை மூலம் வழங்கும் விலையில்லா அரிசியும் தற்போது சமைத்து சாப்பிடும் தரத்திற்கு ஏற்ற வகையில் இல்லை என்கிற ஒரு புகாரும் வந்து கொண்டுள்ளது.
அண்ணாச்சி, அண்ணாச்சி, விஜய் அண்ணாச்சி.. அரிசி விலை என்னாச்சு.. இப்போ போய் கேட்கலாமா? அவர் ஜனநாயகன் படத்தினாலே கவலையில் 4 நாட்களாக தலைமைச் செயலகத்தில் தலை காட்டாமல் தலைமறைவாக இருக்கிறார். அரிசி விலை என்ன ஆனால் நமக்கு என்ன என்ற நிலையிலே இருப்பாரோ? என்னவோ நமக்கு தெரியவில்லை?
ஆனால் நம்ம விஜய், நம்ம தம்பி, நம்ம அண்ணன், நம்ம மாமா, உங்க விஜி என்ன சொன்னார் தெரியுமா? மக்களுக்கு ஒரு பிரச்சனைனா இந்த விஜி வருவான், கேள்வி கேட்பான் சொன்னார் .இப்போ அரிசி விலை உயர்ந்திருக்கு இந்த பிரச்சனைக்கு என்ன சொல்ல போறாரு?” என ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.