காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் குடும்பம் குறித்து ஆபாச பதிவு..! தட்டி தூக்கிய காவல்துறை.. !

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன், குறிப்பிட்ட சமூக மக்களை இழிவாக பாடல் பாடி வீடியோ வெளியிட்டதாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் நீதிபதியால் கண்டிக்கப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இவரை தொடர்ந்து எந்த வார்த்தை பேசக்கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டாரோ, அதே வார்த்தையை பொதுமேடையில் பேசி சர்ச்சையில் சீமான் சிக்கினார்.

கடந்த ஆகஸ்ட் 4 -ஆம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் குறித்து பொதுமேடையில் தொண்டர்கள் மத்தியில் அவ்வளவு ஆபாச வார்த்தைகளை பேசிய சீமானுக்கு கண்டனங்கள் குவிந்தது. தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த சமயத்தில்தான் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், சீமானுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

மேலும் இப்படிப்பட்ட வெறுப்பு பேச்சுகளை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார். சீமானுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியதால், எஸ்.பி. வருண்குமார் மீது நாதக நிர்வாகிகள் அவதூறு பரப்பி வருகின்றனர். காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், அவரது மனைவி, அவரது குடும்பத்தினர் குறித்து சமூக வலைதள பக்கத்தில் ஆபாசமாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தலைவன் எவ்வழியோ…என்பதற்கு ஏற்றாற்போல் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களும் அதே போல் அருவருக்கத்தக்க வகையில் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி அவதூறு பரப்பி வருகின்றனர். இந்த சூழலில் இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் புகார் அளித்தார். அந்த புகாரில், “நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் கண்ணன் என்பவர் எனது குடும்பத்திற்கு ஆபாச வார்த்தைகளால் மிரட்டல் விடுத்துள்ளார்.

இவை அனைத்தும் முழுக்க முழுக்க இடும்பாவனம் கார்த்திக், சாட்டை துரைமுருகன், சீமானின் தூண்டுதலிலேயே நடக்கிறது. குறிப்பாக திட்டமிட்டு என் மீதும் என் குடும்பத்தின் மீதும் கட்டவிழ்க்கப்பட்ட வன்முறை ஆகும். காவல்துறை கண்காணிப்பாளர் குடும்பத்திற்கே கொலை மிரட்டல், குறிப்பாக என் தாய்க்கும், என் மனைவிக்கும் ஆபாசப் பாடல் மூலம் அவதூறு பரப்பி உள்ளார்.

என் மனைவி ஒரு சாதாரண குடும்பப் பெண் மட்டும் இல்லை, அவர் ஒரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆவார். ஆகையால் என்னையும், என் குடும்பத்தினருக்கும், கொலை மிரட்டல் விடுத்தது மட்டும் அல்ல, ஆபாச வார்த்தைகளால் சமூக வலைதளங்களில் கொச்சைப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.இதனை தொடர்ந்து திருச்சி மாநகர காவல்துறை நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கண்ணன் என்பவரை அதிரடியாக கைது செய்து, திருச்சி சைபர் க்ரைம் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விஜயலட்சுமியின் ஆவேசமான வீடியோ…! சீமானை பாக்கெட்டில் போட்டுக் கொள்ளலாம் என யாராவது பிளான் வைத்திருந்தால்..!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011 -ம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் அவர் கர்நாடகா மாநிலம் பெங்களூருக்குச் சென்று விட்ட நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். விஜயலட்சுமியின் புகாரின் பேரில் வளசரவாக்கம் காவல்துறை நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம் பெறப்பட்டு நடிகை விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அடுத்த ஒரு மாதத்தில், வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு தனது வழக்கறிஞர்களுடன் சென்ற நடிகை விஜயலட்சுமி, சீமான் மீதான புகாரை வாபஸ் பெறுவதாக கூறி எழுத்துப்பூர்வமான கடிதத்தை அளித்தார். தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி, விஜயலட்சுமிக்கு அடைக்கலம் கொடுத்திருந்த நிலையில், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மீண்டும் வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு பெங்களூருக்குச் சென்றுவிட்டார் விஜயலட்சுமி. சீமானுக்கு எதிராக வீடியோ வெளியிட்டு வந்த வீரலட்சுமிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை விஜயலட்சுமியும் வீடியோ வாயிலாக பேசி இருந்தார்.

மேலும், சீமான் மீதான வழக்கை வாபஸ் பெற்றது பற்றி அதிருப்தியோடு பேசி இருந்தார். திரும்பவும் சென்னைக்கு வரும் மனநிலையில் இல்லை. சீமான் சாரிடமும் பேசினேன். வழக்கை வாபஸ் பெற யாரும் கட்டாயப்படுத்தவில்லை. புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. காவல்துறை நடவடிக்கை குறித்துத் தெரியவில்லை. முதலில் என்னை விசாரித்தார்கள். சீமானுக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பினார்கள். என்னால் தனி ஒருவராகப் போராட முடியவில்லை. சீமானை எதிர்கொள்ள எனக்குப் போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை. சீமான்தான் சூப்பர். அவருக்குத்தான் தமிழ்நாட்டில் ஃபுல் பவர் இருக்கிறது. அவர் முன்னால் யாருமே ஒண்ணுமே பண்ண முடியாது. நான் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புதிதாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகை விஜயலட்சுமி. அதில் பேசியுள்ள அவர், “எனது வழக்கின்போது, 2 விபச்சாரிகளை வைத்து திமுக அரசியல் செய்வதாக நாம் தமிழர் கட்சியினர் சொன்னபோது ஆளுங்கட்சியான திமுக, எந்த அளவுக்கு இந்த வழக்கில் தீவிரமாக விசாரித்து எனக்கு நியாயம் வாங்கித் தந்திருக்க வேண்டும்? ஆனால், ஆகஸ்ட் முதல் ஜனவரி வரை காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். சீமான் ஒருபக்கம், நாம் தமிழர் கட்சியினர் ஒருபக்கம் திமிர் பிடித்து சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். 12 வருடங்களாக இந்த வழக்கில் நியாயம் கிடைக்காமல் பெண்ணான நான் கதறிக் கொண்டிருக்கிறேன்.

இது ஒன்றும் தீர்க்க முடியாத வழக்கு அல்ல. காவல்துறைக்கு தெரியும் இல்லையா? கடந்த மார்ச் மாதத்தில், சீமான், மதுரை செல்வம் என்பவர் மூலமாக பேச்சுவார்த்தை வந்து, கயல்விழிக்கு தெரியாமல் நான் 50 ஆயிரம் கொடுக்கிறேன் எனக் கூறி வீடியோ வாங்க என்னை எப்படி எல்லாம் டார்ச்சர் செய்தார், நான் எப்படி கதறிக்கொண்டு வந்து புகார் கொடுத்தேன் என்பது எல்லோருக்கும் தெரியுமில்லையா? தெரிந்தால் கூட எல்லோரும் அமைதியாக இருக்கிறார்கள். 2011-ல் எனது வழக்கை வைத்து அஇஅதிமுக சீமானை பாக்கெட்டில் போட்டுக் கொண்டது.

வரக்கூடிய லோக்சபா தேர்தல் நேரத்தில் எனது வழக்கை எடுத்து சீமானை பாக்கெட்டில் போட்டுக் கொள்ளலாம் என யாராவது, எந்த அரசியல் கட்சியாவது பிளான் வைத்திருந்தால், நான் இப்போதே சொல்லி விடுகிறேன், நான் யாருக்கும் ஒத்துழைப்பு கொடுக்க மாட்டேன். இதே தமிழ்நாட்டில் சீமானுக்கு பயந்து, நான் வாழ்வதற்கு கூட வீடு கொடுக்காமல் செய்தார்கள். தூக்கி கர்நாடகாவில் போட்டார்கள். கர்நாடகா என்னைக் காப்பாற்றியது. எனது அம்மாவுக்கு இறுதிச் சடங்கு கூட செய்யவிடாமல் செய்தார்கள். கர்நாடகாவில் பிறந்த ஒரே காரணத்திற்காக, 12 வருடங்களாக எனக்கு நியாயம் தேடித் தராமல் அலைக்கழிக்கிறார்கள்.

இதற்கு நான் முடிவு கட்டுவேன். பல மேட்டர் வெளியே வரும்.. உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்.. 12 வருடங்களாக என்னிடம் தமிழ்நாடு காவல்துறை ஆதாரங்களை வாங்கிக்கொண்டு நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள், என் போனையும் கொடுக்கமாட்டேன் என்கிறார்கள் எனக் கூறி கர்நாடகா நீதிமன்றத்தில் வழக்கை போடுவேன். அன்றைக்குத்தான் சீமான் – விஜயலட்சுமி இடையேயான போரில் ஒரு நியாயம் கிடைக்கும். யாரிடமும் இனி தமிழ்நாட்டில் கெஞ்ச மாட்டேன். யாரிடமும் பிச்சை எடுக்க மாட்டேன். ஒருநாள் உங்களுக்கு ஒரு அதிர்ச்சியை கொடுப்பேன். நான் இதை விடவே மாட்டேன்” என ஆவேசமாகப் பேசியுள்ளார்.