அன்புமணி ராமதாஸ் உறுதி: “பாமகவை ஆதரித்தால் பட்டியலின சமூகத்தவரை முதல்வர் ஆக்குவோம்..!”

நாட்டின் 78-வது சுதந்திர தினம் இன்று 15-ஆம் தேதி நாட்டு மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் காலை 9 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றியேற்றினார். இந்நிலையில், திண்டிவனம் அருகே கீழ்சிவிரி கிராமத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஊராட்சி மன்றத் தலைவர் காசிநாதன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் பிரம்மதேசத்தில் செயல்படும் மதுக்கடையை மூடுவதற்கும், மரக்காணம் தாலுக்காவுடன் இணைக்கப்பட்டுள்ளதை திண்டிவனம் தாலுக்காவுடன் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

இதனைத் தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “தமிழகத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை மதுவுக்கு அடிமையாகி சீரழிந்து வருகின்றனர். படிப்படியாக மதுக்கடைகளை குறைத்து மதுவில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும். இந்தியாவிலேயே அதிக சாலை விபத்துகள், கல்லீரல் பிரச்சினை, தற்கொலை நடக்கிற மாநிலமாக தமிழகம் உள்ளது. ஆட்சிக்கு வரும் முன் ஆட்சியாளர்கள் நிறைய வாக்குறுதிகள் கொடுக்கிறார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு எதனையும் கண்டு கொள்வதில்லை.

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 78 வருடம் ஆகிறது. ஆனால் மக்களுக்கு சுதந்திரம் இல்லை. தரமான கல்வி, சுகாதாரம், வீடு, குடிநீர், மின்சாரம், வேலைவாய்ப்பு கிடைத்தால் தான் உண்மையான சுதந்திரமாகும். சொந்த கிராமத்துக்கு வந்து கிராம சபையில் பங்கேற்று தீர்மானம் நிறைவேற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் இன்றைய சூழலில் மூன்று தலைமுறைகள் மதுவினால் அடிமையாகியுள்ளது. கஞ்சா – போதைப் பொருட்களை கட்டுபடுத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றபோதே தெரிவித்தேன். மூன்று ஆண்டுகள் கடந்தும் கட்டுபடுத்த நடவடிக்கை இல்லை.

தயவுசெய்து 69 விழுக்காடு இடஒதுக்கீட்டினை காப்பாற்ற சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து முதல்வருக்கும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இருக்கும் போது, இவருக்கு இல்லை என பொய் கூறி கொண்டுள்ளார். மதுக்கடைகளை மூடுவதற்கு ஒரு திட்டம் கொண்டு வரவேண்டும். தேர்தல் அரசியலை மட்டும் பார்க்க கூடாது.

ஏற்கெனவே பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் 1998-ம் ஆண்டிலேயே மத்திய அமைச்சராக்கியது பாமகதான். திமுக 1999-ம் ஆண்டுதான் பட்டியலின சமுதாயத்தினருக்கு அமைச்சர் பதவி வழங்கியது. ஆகையால் தமிழகத்தில் பட்டியலின சமூதாயம் பாமகவுக்கு ஆதரவு கொடுத்தால் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவரை முதல்வராக ஆக்குவோம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

பாமக வேட்பாளர் திலகபாமா போராட்டம்..! காவல்துறையா..! இல்லை ஏவல் துறையா..!

தமிழ்நாட்டில் “நாளை மறுநாள் ஏப்.19-ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் சூடுபிடிக்க தொடங்கிய பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது. இந்நிலையில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு அரசு மதுபான கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் பாமக வேட்பாளர் திலகபாமா இன்று இறுதிக்கட்ட பரப்புரை மேற்கொண்ட போது திண்டுக்கல் புறவழி சாலையில் கொட்டப்பட்டி சாலையில் கள்ளத்தனமாக ஒரு குடோனில் மது விற்பனை செய்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக பிரசார வாகனத்தில் இருந்து கீழே இறங்கி குடோனுக்கு உள்ளே நுழைந்து கள்ளத்தனமாக மது விற்பனை செய்த விற்பனையாளர்களை சிறை பிடித்து தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். மேலும் இது தொடர்பாக தொலைபேசி வாயிலாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கும் புகார் தெரிவித்தார். திண்டுக்கல்லில் அரசு மதுபான கடை விடுமுறை என்றாலும் கள்ளத்தனமாக மது விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் செய்தியாளர்களிடம் பாமக வேட்பாளர் திலகபாமா பேசுகையில், “இன்று மது விற்பனை செய்யக் கூடாது என்று தெரிந்தும் இங்கு பாருடன் கூடிய விற்பனை நடைபெறுவது காவல்துறைக்கு தெரியுமா.? ஐ.பெரியசாமியின் வீட்டிற்குப் பின்புறம் பணப்பட்டுவாடா நடைபெறுகிறது என்று வீடியோ ஆதாரத்துடன் எஸ்.பி.,க்கு போன் செய்தேன். ஸ்குவார்ட் அனுப்புகிறேன். இப்போது வரை ஒரு நடவடிக்கையும் இல்லை” எனக் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய பாமக வேட்பாளர் திலகபாமா, “காவல்துறையை தனக்கு சாதகமாக ஸ்டாலின் அரசு பயன்படுத்திக் கொள்கிறது. இது காவல்துறையா? இல்லை ஏவல் துறையா? என்று கேள்வி எழுப்பினார். இதுபோல எங்கெல்லாம் விற்பனை நடைபெறுகிறதோ அங்கெல்லாம் கடையை மூட வேண்டும் என்று குறிப்பிட்ட திலகபாமா பணம் கொடுக்கும் வேட்பாளர்களை தகுதி இழப்பு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

தேர்தல் பணிகளில் இருந்து விலகிக் கொள்வதாக பாமக மாவட்ட செயலாளர் அறிவிப்பு

தமிழ்நாடு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பாக கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை குப்புசாமி களம் கண்ணகிறார். இந்நிலையில், வேட்புமனு தாக்கல், தேர்தல் அலுவலகம் திறப்பு என எதற்குமே பாமகவை அழைக்கவில்லை. கூட்டணி தர்மம் முக்கியம்தான், ஆனால், அதைவிட சுயமரியாதை முக்கியம். கோவை பாஜக தேர்தல் பொறுப்பாளர் கூட்டணி தலைவர்களை மதிப்பதில்லை.

ஆகையால் தேர்தல் பணிகளில் இருந்து விலகிக் கொள்வதாக பாமக மாவட்ட செயலாளர் கோவை ராஜ் அறிவித்துள்ளது. தேர்தல் நெருங்கிவரும் சூழலில் அவரது இந்த விலகல் பாஜக – பாமக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அன்புமணி ராமதாஸ் பதிலடி “பாமக இல்லையெனில் அதிமுக 36 தொகுதிகளில் வென்றிருக்காது..!”

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. சமீபத்தில் பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், ராமதாஸ் வேடந்தாங்கல் பறவை போல அடிக்கடி கூட்டணியை மாற்றி வருகிறார். வேடந்தாங்கல் பறவை தான் ஏரியில் தண்ணீர் இருக்கும் போது வரும். பின்னர் குளத்தில் தண்ணீர் வற்றியதும் சென்றுவிடும். மறுபடி தண்ணீர் வந்ததும் வரும். இது போல தான் பாமக. இவர்களுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என தெரிவித்திருந்தார்.

பழனிசாமியின் விமர்சனத்துக்கு இன்று பதில் அளித்து பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “நாங்கள் வேடந்தாங்கல் பறவை கிடையாது. வேடந்தாங்கல் சரணாலயம். எங்களிடம் யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். எங்களின் உயிரை, உழைப்பை கொடுப்போம். அவர்களுக்கு வாழ்க்கை கொடுப்போம். ‘10.5 இடஒதுக்கீடு கொடுத்தோம், ஆனால் அவர்கள் எங்களுடன் கூட்டணி வரவில்லை’ என்று சொல்கிறார் பழனிசாமி. அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. 2019-ல் அதிமுகவுக்கு நாங்கள் ஆட்சியை கொடுத்தோம். நாங்கள் இல்லையென்றால் தொடர்ந்து ஆட்சி நடத்த முடியாத சூழல் இருந்தது. எங்களால் தான் இரண்டு ஆண்டுகள் அதிமுக ஆட்சியும் இருந்தது. எடப்பாடியும் முதலமைச்சராக இருந்தார்.

அந்த இரண்டு ஆண்டுகளில் பல முறை 10.5 இடஒதுக்கீடு குறித்தும், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்தும் வலியுறுத்தினோம். நேரடியாக சென்று கூறினோம், போராட்டம் நடத்தினோம். ஆனால் தேர்தலுக்கு முன்புவரை இழுத்து, தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு கடைசி நாள் இடஒதுக்கீடு கொடுத்தார்கள். தேர்தல் ஆணையம் 4 மணிக்கு தேர்தல் தேதி அறிவிக்கிறது என்றால் 1 மணிக்கு தான் இடஒதுக்கீடு உத்தரவு வெளிவருகிறது. அதற்கு இடையில் நடந்ததை எல்லாம் என்னால் வெளியில் சொல்ல முடியவில்லை. உண்மையாகவே அவர்கள் மனதில் பின்தங்கிய சமுதாயத்துக்கு இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என நினைத்திருந்தால், கொஞ்சம் முன்னதாகவே இடஒதுக்கீடு கொடுத்திருக்கலாம். ஆனால், தேர்தல் கூட்டணி வந்தால் தான் இடஒதுக்கீடு தருவோம் என்று பேசினார்கள். அதுவும் அவசர அவசரமாக இடஒதுக்கீடு கொடுத்தது அதிமுக. அதில் அவ்வளவு பிழைகள். நாங்கள் கேட்டது 16 சதவிகித இடஒதுக்கீடு. ஆனால் கொடுத்தது 10.5 சதவிகித இடஒதுக்கீடுதான்.

நீதிமன்றம் அதை ரத்து செய்துவிட்டது. நீதிமன்றம் ரத்து செய்த பிறகு மீண்டும் அந்த சட்டம் கொண்டுவர வேண்டும் என்று பழனிசாமி எங்காவது ஒரு இடத்தில் பேசியிருப்பாரா… இல்லை. இன்று வரை அவர் அதை பேசவில்லை. மீண்டும் அந்த சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று பேச அவருக்கு தைரியம் இருக்கிறதா?. 10.5 சதவிகித இடஒதுக்கீடு காரணமாக தான் தோற்றதாக அதிமுக தலைவர்கள் பலமுறை சொல்கிறார்கள். 10.5 சதவிகித இடஒதுக்கீடு காரணமாக அதிமுக 66 தொகுதிகளை வென்றது. அதிலும் 36 தொகுதிகள் பாமக பங்களிப்பு இல்லை என்றால் வெற்றிபெற்று இருக்காது. அதிமுக ஆதரவாலும் நாங்கள் 4 தொகுதிகளை வென்றோம். ஆனால் 15 தொகுதிகளை வென்றிருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை. கடந்த ஆறு மாதமாக விசிகவையும், சீமானையும் கூட்டணிக்கு அழைத்து கொண்டிருந்தார் பழனிசாமி. அவர்கள் யாரும் வரவில்லை. அதன்பிறகு தான் எங்களை கூட்டணிக்கு அழைத்தார்.

இப்படி அவர்களை பற்றியும் சொல்ல நிறைய இருக்கிறது. ஆனால், கூட்டணியை விட்டு வெளியேற முடிவு எடுத்துவிட்டோம். எந்த கூட்டணியில் சேர்ந்தாலும் பாமக தனது கொள்கைகளை, சித்தாந்தத்தை விட்டுக்கொடுக்க போவது கிடையாது. ஒரு துளி கூட விட்டுக்கொடுக்காது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி, அவரது நிலத்தை அதிக பணம் கொடுத்து கேட்டால் கொடுப்பாரா…

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம், வளையமாதேவி பகுதியில் விவசாய நிலங்களை அழித்து நிலம் கையகப்படுத்தும் பணிகளைத் தொடங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. என்.எல்.சி நிறுவனத்தின் பிரதான நுழைவாயில் முன்பு பாமக கட்சியினர் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், என்.எல்.சி நிறுவனத்திற்கு எதிராக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை காவல்துறை கைது செய்தனர்.

மேலும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் உள்ளிட்டோரை கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றினர். அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து பாமகவினர் காவல்துறை வாகனத்தை அடித்து நொறுக்கினர். காவல்துறை வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த காவல்துறை வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும் தண்ணீர் பீய்ச்சியும் காவல்துறையினர் கலவரத்தை கலைத்தனர். இந்தச் சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, இந்த முற்றுகை போராட்டத்தின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், “டெல்லியில் போய் போராடிய தமிழ்நாட்டு விவசாய சங்கங்கள் கடலூர் மக்களுக்காக களத்திற்கு இன்னும் வராதது ஏன்? கதிர் பிடித்திருக்கும் வயலை அழிப்பது வயிற்றில் உள்ள கருவை அழிப்பதற்கு சமம். கடலூர் மாவட்ட மக்களுக்கும், மண்ணுக்கும் ஆபத்தை விளைவிக்கிறது என்.எல்.சி.

என்.எல்.சி இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்காக நிலத்தை கையகப்படுத்த கூடாது. எவ்வளவு விலை கொடுத்தாலும் இடங்களை விட்டுக்கொடுக்க முடியாது. என்எல்சி பிரச்சனை கடலூர் மாவட்ட பிரச்சனை இல்லை. இது தமிழ்நாட்டின் பிரச்சனை. இது நமது உரிமைக்கான பிரச்சனை. 5 கோடி கொடுத்தாலும் எங்களுக்கு தேவையில்லை.

ஒரு பக்கம் விவசாயத்திற்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்துவிட்டு, மறுபக்கம் விவசாய நிலம் பிடுங்கப்படுகிறது. நிச்சயம் இதை விடமாட்டேன். திருச்சியில் வேளாண் சங்கமத்தை தொடங்கி வைத்து விட்டால் விவசாயிகளை, விவசாய நிலங்களை காப்பாற்றி விட முடியுமா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும்.

என்.எல்.சி விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளின் கோரிக்கையான மறுசீரமைப்பு மற்றும் மறுகுடியமர்வு; சட்டப்படி போதிய சம அளவு இழப்பீடு; வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத் தொகை ஆகியவற்றிற்கு நிரந்தரமான முடிவை எடுத்துவிட்டு நில எடுப்பில் இறங்க வேண்டும் எனக் கூறி இருந்தார். அதைச் சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமிக்கு, விவசாய நிலங்களை கையகப்படுத்தும் போது விலையை கொஞ்சம் ஏற்றி என்.எல்.சி கொடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். நான் அவரைக் கேட்கிறேன்.. அவர் ஊரில் வைத்துள்ள 200 ஏக்கரை அரசு அதிக விலை கொடுத்து கேட்டால் கொடுத்து விடுவாரா?” என சரமாரியாக அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.