சேகர்பாபு விளக்கம்: மன்னிப்பா… மன்னிப்பு கேட்கின்ற பழக்கம் எங்களுக்கு இல்லை..!

மன்னிப்பு கேட்கின்ற பழக்கம் எங்களுக்கு இல்லை. தவறு என்று இருந்தால், முதலமைச்சர் அதற்கு உண்டான பிராயசித்தத்தை தேடுவார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை எழில் நகரில் ‘நமக்கு நாமே’ திட்டத்தில் 5 வகுப்பறைகளுடன் சீரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டிடத்தில் அமைந்துள்ள மாண்டிசேரி மழலையர் வகுப்புகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

அப்போது, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அதானி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாடு மின் வாரியத்தின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும். அதானி சந்திப்பு பற்றி முதலமைச்சர் விளக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “பாமக நிறுவனர் ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.” என மு.க.ஸ்டாலின் பதிலளித்து இருந்தார்.

முதலமைச்சரின் இந்த பதில், பாமகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது. இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது வருத்தம் தெரிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில், மன்னிப்பு கேட்கும் பழக்கம் எங்களுக்கு இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு சேகர்பாபு பதிலளித்தார். அப்போது, எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்?. தேவையில்லாமல் தினந்தோறும் ஒரு அறிக்கை விடுகிறார். இதில் என்ன தவறு இருக்கிறது? தமிழில் உபயோகப்படுத்துகிற வார்த்தை தானே அது?. அதை எப்படி தவறு என்று சொல்ல முடியும்?. கடந்த காலங்களில் அவர் விட்ட அறிக்கை எல்லாம் எடுத்து பார்த்தால், கொச்சையாக யாரையும் தரம் தாழ்ந்து பேசும் சூழலில் இருப்பவர். எங்கள் முதலமைச்சர் கன்னியத்துக்கு பாதுகாவலராக இருப்பவர்.

கன்னியக்குறைவாக அவர் எதுவும் பேசவில்லை. அப்படி பேசுகின்ற சூழலும் எங்களுடைய முதலமைச்சருக்கு எப்போதும் ஏற்படாது. மன்னிப்பு கேட்கின்ற பழக்கம் எங்களுக்கு இல்லை. தவறு என்று இருந்தால், முதலமைச்சர் அதற்கு உண்டான பிராயசித்தத்தை தேடுவார். அவர் கூறிய வார்த்தையில் தவறு எதுவும் இல்லை என சேகர்பாபு தெரிவித்தார்.

தமிழிசை கேள்வி: அப்போ நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்பொழுது வேலையில்லாமல் தான் கருத்து சொன்னீர்களா..!?

நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்பொழுது சொன்ன கருத்துக்கள் எல்லாம் மக்களுக்காக இல்லாமல் வேலையில்லாமல் இருந்து கொண்டு சொன்ன கருத்துக்கள் தானா..!? என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக சென்னை எழில் நகரில் ‘நமக்கு நாமே’ திட்டத்தில் 5 வகுப்பறைகளுடன் சீரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டிடத்தில் அமைந்துள்ள மாண்டிசேரி மழலையர் வகுப்புகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

அப்போது, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அதானி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாடு மின் வாரியத்தின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும். அதானி சந்திப்பு பற்றி முதலமைச்சர் விளக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “பாமக நிறுவனர் ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.” என மு.க.ஸ்டாலின் பதிலளித்து இருந்தார்.

இந்நிலையில், தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, மக்கள் நலனில் அக்கறை கொண்டு எந்தக் கட்சித் தலைவர் கருத்து சொன்னாலும் அதை மதிக்க வேண்டும் என்பது ஜனநாயகம் மக்களுக்காக கருத்து சொன்னால் அவர்கள் வேலை இல்லாமல் தான் கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்பொழுது சொன்ன கருத்துக்கள் எல்லாம் மக்களுக்காக இல்லாமல் வேலையில்லாமல் இருந்து கொண்டு சொன்ன கருத்துக்கள் தானா… ஆட்சியில் இருக்கிறோம் என்று ஆணவம் வேண்டாம்…என பதிவிட்டுள்ளார்.

அண்ணாமலை: திமுக ஆட்சியில் இல்லாதபோது அங்கும், இங்கும், ஓடியதை ஸ்டாலின் மறந்துட்டாரு ..!

திமுக ஆட்சியில் இல்லாத கடந்த 2011 – 2021 பத்து ஆண்டுகள், அங்கும், இங்கும், ஆளுநர் மாளிகைக்கும் எனத் தான் ஓடி ஓடிச் சென்றதை முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் மறந்து விட்டார் என அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், தங்கள் ஆட்சியின் ஊழல்களையும், நிர்வாகச் சீர்கேடுகளையும் மக்களிடம் இருந்து மறைக்க, அம்பானி, அதானி என்று திசைதிருப்பும் வேலைகளில் ஈடுபட்டு வந்த திமுக, தற்போது, அதானி நிறுவனத்துடன் திமுக அரசுக்கும், குடும்பத்தினருக்கும் தொடர்பு என்ற செய்திகள் வெளிவந்ததும், அதனை மறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இது குறித்து, தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனருமான, ஐயா திரு ராமதாஸ் அவர்கள் கேள்வி எழுப்பியதற்கு, தரக்குறைவான முறையில் முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் பதிலளித்திருப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.

திமுக ஆட்சியில் இல்லாத கடந்த 2011 – 2021 பத்து ஆண்டுகள், அங்கும், இங்கும், ஆளுநர் மாளிகைக்கும் எனத் தான் ஓடி ஓடிச் சென்றதை முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் மறந்து விட்டார் போலும். ஐயா திரு. ராமதாஸ் அவர்கள் மீதான அவரது இன்றைய விமர்சனத்தை, அன்று அவர் மீது வைத்திருந்தால், அதனை அவர் எப்படி எதிர்கொண்டிருப்பார்?

அரசியலில் திமுகவின் இரட்டை வேடத்தைக் கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு. குறிப்பாக, தமிழக அரசியல் வரலாற்றில், முக்கியமான பங்கினை வகிக்கும் ஐயா திரு. ராமதாஸ் அவர்கள் கேட்டிருக்கும் கேள்வியின் உண்மையை எதிர்கொள்ள இயலாமல், இது போன்ற தரக்குறைவான, முற்றிலும் ஏற்கத் தகாத முறையில் பதிலளித்திருப்பது, முதலமைச்சரின் இயலாமையைத்தான் காட்டுகிறது. அவர் வகிக்கும் தமிழக முதலமைச்சர் பதவிக்கு அது அழகல்ல என்பதை நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன் என அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின்: ராமதாஸுக்கு வேறு வேலையில்லை..! கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை..!

ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை” தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை எழில் நகரில் ‘நமக்கு நாமே’ திட்டத்தில் 5 வகுப்பறைகளுடன் சீரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டிடத்தில் அமைந்துள்ள மாண்டிசேரி மழலையர் வகுப்புகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

அப்போது, செய்தியாளர் ஒருவர், குளிர்கால கூட்டத்தொடரில் திமுக எம்.பி.க்கள் எதை வலியுறுத்தி பேச இருக்கின்றனர்? என்ற கேள்விக்கு “ஏற்கனவே நாங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து குளிர்கால கூட்டத்தொடரில் என்னென்ன பேச வேண்டும் என்பது குறித்து விவாதித்து, தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அதை வலியுறுத்திப் பேச வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். அந்த அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசுவார்கள். அதானி விவகாரம் குறித்த செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு, “அதானி விவகாரம் குறித்து துறையின் அமைச்சரே கூறியிருக்கிறார். அதை ட்விஸ்ட் செய்ய வேண்டாம்.

தொடர்ந்து அதானி- முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு குறித்த ராமதாஸின் அறிக்கை தொடர்பான செய்தியாளரின் கேள்விக்கு, “பாமக நிறுவனர் ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.” என மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

பாமக, விசிக கொடிக்கம்ப பீடங்களை உடைத்த பெண்..! எங்களுக்கு எந்த கட்சியும் தேவையில்லை..!

எங்களுக்கு எந்தக் கட்சியும் தேவையில்லை’ என விசிக, பாமக கொடிக்கம்ப பீடங்களை ஆவேசமாக உடைத்த பெண்மணி. கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள மஞ்சக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த செல்லதுரை என்பவர் சில தினங்களுக்கு முன்பு புவனகிரியில் இருந்து மஞ்சக்கொல்லை நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது உடையூர் கிராமத்தில் இளைஞர்கள் சிலர் சாலையில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர்.

அதைப்பார்த்த அவர், ஓரமாக சென்று மது அருந்துமாறு அந்த இளைஞர்களிடம் கூறியுள்ளார். இதில் இளைஞர்களுக்கும் செல்லதுரைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த இளைஞர்கள் அவரை தாக்கியுள்ளனர். காயமடைந்த செல்லதுரை, சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரில் உடையூர் கிராமத்தைச் சேர்ந்த 6 பேரை புவனகிரி காவல்துறை கைது செய்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாமகவினர் மற்றும் கிராம மக்கள் விருத்தாசலம் – புவனகிரி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை, போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீதமுள்ள நபர்களையும் கைது செய்வதாக உறுதி அளித்தது இத்தனை தொடர்ந்து, சாலை மறியல் கைவிடப்பட்டது.

இதற்கிடையே, மஞ்சக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமரன் மனைவி அருட்செல்வி என்பவர் நேற்று முன்தினம் ஆத்திரத்துடன் கடப்பாறையால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்ப பீடத்தை சேதப்படுத்தினார். அப்பொழுது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை கடப்பாரையை பிடுங்கி அருகே இருந்த வாய்க்காலில் வீசினர்.

ஆனால், அருட்செல்வி அதே பகுதியில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சி கொடிக்கம்ப பீடத்தை மற்றொரு இரும்பு கம்பியால் சேதப்படுத்தியதோடு, ‘‘மதுவால் ஊருக்குள் பிரச்சினை வருகிறது, எங்கள் ஊருக்கு எந்த கட்சியின் கொடிக்கம்பமும் தேவையில்லை, நாங்கள் இந்த ஊரில் அமைதியாக வாழ வேண்டும்’’ என தெரிவித்தார். அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

பேசுப் பொருளாக மாறியுள்ள ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ ராமதாஸ் திடீர் பதிவு..!

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவலை கால வகையினானே என பாமக நிறுவனர் ராமதாஸின் திடீர் பதிவு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மக்களவை தேர்தல் வரை அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, திடீரென்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பாமக அணிக்கு தாவியது. இதற்கு பாமகவில் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அன்புமணியின் நிர்பந்தத்தால் இந்த கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானதாக அப்போதே கூறப்பட்டது.

தொடர்ந்து பல எதிர்ப்புகளை மீறி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக போட்டியிட்ட 10 இடங்களிலும் சவுமியா அன்புமணி போட்டியிட்ட தர்மபுரி தொகுதியை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழந்தனர். இந்த படுதோல்வி இன்னும் பாமகவினர் மனதில் நீங்காத நிலையில் மத்தியில் ஆட்சி அமைத்த பாஜக அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தலுக்கு பின் பாமகவை பாஜக கண்டு கொள்ளவில்லை என தெரிகின்றது.

இதனிடையே இரு தினங்களுக்கு முன் பாமக தலைவர் அன்புமணி எம்பிக்கு ரயில்வே வாரிய ஆலோசனை குழு உறுப்பினர் பதவியை மத்திய அரசு அளித்தது. மத்தியில் கேபினட் அமைச்சராக பதவி வகித்த அன்புமணிக்கு சாதாரண ஆலோசனை குழு உறுப்பினர் பதவி வழங்கி அவரை சிறுமைப்படுத்தி விட்டதாக பாமகவினர் மத்தியில் பெரும் அதிருப்தி எழுந்துள்ளன.

மேலும் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் ஏதாவது பெரிய பொறுப்பு வரும் என்ற கனவில் இருந்த நிலையில் சாதாரண ஆலோசனை குழு உறுப்பினர் பதவி வழங்கியிருப்பது பெரும் ஏமாற்றத்தை ராமதாஸ்ஸூக்கு ஏற்படுத்தி இயிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவலை கால வகையினானே’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸின் இந்த திடீர் பதிவு பாஜக தலைவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேசமயம் வட மாவட்டத்தில் மட்டும் வாக்கு வங்கி வைத்துள்ள பாமகவுக்கு சவாலாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அண்மையில் தவெக மாநாடு அமைந்துள்ளது. மேலும் பாமகவின் கொள்கைகள் சிலவற்றை தவெக பின்பற்றுவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று விஜய் பனையூரில் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய நிலையில், ராமதாஸின் இந்த பதிவு பேசுப் பொருளாக மாறியுள்ளது.

தீட்சிதர்களால் VCK நிர்வாகி தாக்கப்பட்டதற்கு ராமதாஸ் கண்டனம்..!

நடராஜர் கோவிலில் கிரிக்கெட் விளையாடுவதை அனுமதிக்க முடியாது. அதை வீடியோ எடுத்த விசிக நிர்வாகியை தாக்கியது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதை செல்போனில் படம் பிடித்ததால் தாக்கப்பட்டதாக விசிக நிர்வாகி காவல் நிலையில் போலீஸில் புகார் அளித்ததை தொடர்ந்து தீட்சிதர்கள் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா. இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வல்லம்படுகை முகாம் செயலாளராக உள்ளார். இவர், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு திங்கள்கிழமை இரவு சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது, தீட்சிதர்கள் சிலர் கோயிலுக்குள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த இளையராஜா அவரது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

இதையடுத்து, இளையராஜாவிடம் இருந்து தீட்சிதர்கள் செல்போனைப் பறித்து, அவரை திட்டியதுடன் தாக்கியதாவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் காயமடைந்த இளையராஜா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பின்னர், இச்சம்பவம் குறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து, கோயில் தீட்சிதர்களை கைது செய்யக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, நடராஜர் கோவிலில் கிரிக்கெட் விளையாடுவதை அனுமதிக்க முடியாது. அதை வீடியோ எடுத்த விசிக நிர்வாகியை தாக்கியது கண்டிக்கத்தக்கது அதற்கு காரணமானவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்காக தனி மைதானத்தை அரசு ஏற்பாடு செய்யலாம். தீட்சிதர்கள் மட்டுமே இங்கு விளையாட முடியும் என்று விளம்பர பலகையை வைக்கலாம். ஆக பல கோவில்களில் இந்த விளையாட்டு நடைபெற வாய்ப்பு உள்ளது. கோவில் கிரிக்கெட் விளையாட்டு மைதானமாக மாறக்கூடிய பேராபத்தும் ஏற்படலாம் என ராமதாஸ் எச்சரிக்கை விடுத்தார்.

ராமதாஸ் கண்டனம்: மக்களுக்கு நீதிபதியாக இருக்க வேண்டிய முதலமைச்சர் பாலாஜிக்கு வழக்கறிஞராகக் கூடாது..!

செந்தில் பாலாஜி தியாகி என்றால் பணத்தைக் கொடுத்து ஏமாந்தவர்கள் துரோகிகளா? மக்களுக்கு நீதிபதியாக இருக்க வேண்டிய முதலமைச்சர் பாலாஜிக்கு வழக்கறிஞராகக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “செந்தில் பாலாஜியின் தியாகம் பெரிது என்று புகழ்ந்துரைத்தது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில், இப்போது அதற்கு பொழிப்புரை எழுதியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் 15 மாத சிறை தண்டனை அனுபவித்தது தான் செந்தில் பாலாஜி செய்த தியாகம் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் முதலமைச்சர் விளக்கமளித்திருக்கிறார்.

பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழித்த ஒருவரை ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் இந்த அளவுக்கு இறங்கிச் சென்று பாதுகாக்க முயல்வதும், போற்றுவதும் ஏற்றுக் கொள்ளவே முடியாதது. செந்தில் பாலாஜி பிணையில் விடுதலை செய்யப்பட்டதில் யாருக்கும் வருத்தம் இல்லை. எந்த வழக்கிலும் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் வழக்கு விசாரணைக் காலம் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்று நினைப்பதே கொடூர மனநிலை.

செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கும், அதனடிப்படையிலான சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கும் முடிவடைய நீண்ட காலம் ஆகும் என்பதால், அதுவரை அவரை சிறையில் வைத்திருக்க முடியாது என்பதால் தான் அவருக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. அதன் பொருள் விடுதலை இல்லை. அதனால் செந்தில் பாலாஜியின் சிறை வாசம் தியாகமும் இல்லை.

செந்தில் பாலாஜியின் வேலைவாய்ப்பு மோசடிகள் குறித்து ஒட்டுமொத்த தமிழகமும் அறிந்ததை விட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் நன்றாக அறிவார். 2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 5 கோட்டங்களில் 1630 பணிகளுக்கான ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்ட நிலையில், நடத்துநர் பணிக்கு ரூ.1.75 லட்சம் தொடங்கி உதவிப் பொறியாளர் பணிக்கு ரூ.12 லட்சம் வரை செந்தில் பாலாஜி கையூட்டு வாங்கிக் குவித்ததாகத் தான் தமிழகக் காவல்துறை வழக்குத் தொடர்ந்திருக்கிறது.

இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் 2016 தேர்தலில் குளித்தலைத் தொகுதியில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் தெரிவித்த மு.க.ஸ்டாலின், மேலும் சில குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து, செந்தில் பாலாஜி செய்த ஊழல்கள் ‘’ஒன்றா, இரண்டா எடுத்துச் சொல்ல” என்று பாடல் பாடியதெல்லாம் வரலாறு.

அந்தக் குற்றச்சாட்டுகளில் அடிப்படையில் தான் தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்து நடத்தி வருகிறது. அந்த வழக்கில் கையூட்டாக வாங்கப்பட்ட பணம் ரொக்கமாக செந்தில் பாலாஜி கணக்கில் செலுத்தப்பட்டதன் அடிப்படையில் தான் அவர் மீது சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டு, 471 நாட்களுக்குப் பிறகு பிணையில் வெளிவந்திருக்கிறார். இதில் என்ன தியாகம் இருக்கிறது.

உண்மையாகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டத்தின் பக்கமும், நியாயத்தின் பக்கமும் நிற்பவராக இருந்தால் மோசடி வழக்கில் தம்மிடம் உள்ள ஆதாரங்களையெல்லாம் கொடுத்து வழக்கை வலுப்படுத்தியிருக்க வேண்டும். மோசடி வழக்கு விசாரணையை விரைவுபடுத்தி செந்தில் பாலாஜிக்கு தண்டனை பெற்றுத் தந்திருக்க வேண்டும்.

ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மாநகரக் காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவு மோசடி வழக்கில் செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூட முன்வரவில்லை. அதுமட்டுமின்றி, அவரை திமுகவில் சேர்த்து அமைச்சராக்கி அழகு பார்க்கிறார். அவருக்கு தியாகி பட்டம் சூட்டி உருகுகிறார்.

திராவிட மாடல் வாஷிங் மெஷின் அந்த அளவுக்கு ஊழல் கரையே தெரியாத அளவுக்கு வெளுத்து எடுத்திருக்கிறது. அரசு வேலை தருவதாக பல்லாயிரக்கணக்கானோரிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள செந்தில் பாலாஜி தியாகி என்றால், அவரிடம் பணத்தைக் கொடுத்து தங்களின் சொத்துகளையும், வாழ்க்கையையும் இழந்து தவிக்கும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் என்ன துரோகிகளா? என்பதை முதலமைச்சர் தான் விளக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்பவர் ஏழரை கோடி தமிழ்நாட்டு மக்களுக்கும் பொதுவானவர். நடுநிலை தவறாத நீதிபதியாக இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டியது தான் அவரது கடமை. ஆனால், அவரோ கடமையை மறந்து விட்டு மோசடி செய்தவருக்கு வழக்கறிஞராக மாறி அவருக்காக வாதாடிக் கொண்டிருக்கிறார். இது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.

செந்தில் பாலாஜியை முதலமைச்சர் வலிந்து வலிந்து ஆதரிப்பதையும், புகழ்வதையும் பார்க்கும் போது செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணை தமிழ்நாட்டில் நியாயமாக நடக்கும் என்றோ, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்றோ தோன்றவில்லை. எனவே, செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கின் விசாரணையை வேறு மாநில நீதிமன்றத்திற்கும் மாற்றும்படி உச்ச நீதிமன்றத்திற்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும்.” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு..! அதிமுக, பாமக எம்எல்ஏ.க்களுடன் மனு..!

புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், அதிமுக, பாமக எம்எல்ஏ.க்களுடன் தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தருமபுரி ஒன்றியம் நாயக்கனஅள்ளி மற்றும் குப்பூர் ஊராட்சி களைச் சேர்ந்த மக்கள், தருமபுரி பாமக எம்எல்ஏ வெங்கடேஷ்வரன், பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனர். அந்த மனுவில், ஏழை, எளிய தொழிலாளர்கள், சிறு, குறு விவசாயிகள் உள்ளிட் டோர் எங்கள் பகுதி ஊராட்சிகளில் அதிகம் வசிக்கின்றனர்.

தினமும் கிடைக்கும் வருமானத்தின் மூலமே இந்த குடும்பங்கள் வாழ்கின்றன. இந்தச்சூழலில், குப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட சித்தன் கொட்டாய் கிராமத்தில் ஓராண்டுக்கு முன்பு டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண் டனர். அதற்கு கிராம மக்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், கடத்தூர் பகுதியில் இயங்கும் கடைக்கு அப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து அந்தக் கடையை சித்தன் கொட்டாய் பகுதிக்கு இடம் மாற்ற தற்போது அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் பல குடும்பங்களின் வாழ்வு சீரழியும். எனவே, குப்பூர் பகுதியில் டாஸ்மாக்கடை திறக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Anbumani Ramadoss: கருணாநிதி இருந்திருந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இருப்பார்..!

‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியாரின் 146-வது பிறந்த நாள் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பெரியாரின் சிலைக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பெரியாரின் 146-வது பிறந்தநாளையொட்டி அவரின் கனவை நனவாக்க உறுதியேற்றுள்ளோம். அவரின் கொள்கையை முழுமையாக ஏற்ற கட்சி பாமக அவரின் வழியில் வந்த கட்சிகள் கொள்கைகளை பேசிக் கொண்டுள்ளனர்.

பெரியார் சமூகநீதிக்கான இந்திய அளவிலான அடையாள சின்னம். சமூகநீதிக்கான அநீதிகளை ஆளும் திமுக செய்து வருகிறது. தமிழகத்தில் சாதியை வைத்தே அடக்குமுறைகள் ஏற்பட்டது. இதை தெரிந்து கொள்ள கூட முதலமைச்சருக்கு ஆர்வமில்லை. சாதிவாரி கணக்கெடுப்புக்காக 45 ஆண்டுகளாக பாமக போராடி வருகிறது.

பீகாரில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இக்கணக்கெடுப்பு நடத்த ஊராட்சி மன்ற தலைவருக்குகூட அதிகாரம் உள்ளது. 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இது தொடர்பாக கணக்கு கேட்டால் அரசிடம் தரவுகள் இல்லை. 1987-ஆம் ஆண்டு இட ஒதுக்கீடு போராட்டத்திற்கு பின் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை பெற்றோம். 114 சமூகம் 6.7 விழுக்காடு, வன்னியர் சமூகம் 14.1 விழுக்காடு ஆகும். இது தொடர்பாக சமீபத்தில் அரசு வெளியிட்டது பொய்கணக்குதான்.

கருணாநிதி இருந்திருந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்து இருப்பார். இன்று நாங்கள் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துங்கள் என்று முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறோம்.

அரசில் உள்ள 53 துறைகளில் ஒரு செயலாளர் கூட வன்னியர் கிடையாது. எதிலும் பிரதிநிதித்துவம் இல்லை. 23 வன்னியர்கள், 21 பட்டியல் இன எம்எல்ஏக்கள் இருந்தாலும் இரு சமூகத்திலும் தலா 3 அமைச்சர்கள் உள்ளனர். மற்ற சமூக எம்எல்ஏக்களில் ஒவ்வொரு சமூகத்திலும் எத்தனை அமைச்சர்கள் உள்ளனர் என்பதை எண்ணி பார்க்கவேண்டும். அடையாள அரசியல் செய்ய வேண்டும். இன்று பெரியார் பிறந்தநாளில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதலமைச்சர் அறிவிக்கவேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.