சுவிஸ் ஈழப் போராளிகள் கூட்டமைப்பு எச்சரிக்கை..! பெரியாருக்கு எதிராக பிரபாகரன் முன்னிறுத்தி விவாதிப்பதை சீமான் நிறுத்த வேண்டும்..!

பொதுவெளியில் பெரியாருக்கு எதிராக தலைவரை வைத்து விவாதத்திற்கு அழைக்கும் சீமான் உடனடியாக இதை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். தவறும் பட்சத்தில் எமது கடுமையான எதிர்வினையாற்றலை எதிர்கொள்ள நேரிடும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணப்பாளர் சீமான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஈழத் தமிழ் போராளிகள் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் இருந்து ஈழத் தமிழ் போராளிகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் தமிழ்நாட்டில் நிகழும் அரசியல் சதுரங்கத்தில் எமது தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களையும் எமது போராட்டத்தையும் விவாதப்பொருளாக்குவதை பார்த்து மனவேதனைப்படுகிறோம். இது தொடர்பாக எமது வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறோம்.

இதன் தொடர்ச்சியாக தலைவரின் பெறாமகனான கார்த்திக் மனோகரனை பொதுவெளியில் மரியாதைக் குறைவாக பேசியது எமது இனத்தை அவமானப்படுத்தியது போலாகும். இதை வன்மையாக கண்டிக்கிறோம். வேலுப்பிள்ளை மனோகரன் குடும்பம், மாவீரர் குடும்பங்களில் ஒன்று. தேசியத் தலைவர் அவர்கள் உறவுகளை முதன்மைப்படுத்துபவரல்ல இருந்தாலும் சாள்ஸ் அன்ரனி துவாரகா என்ற இரண்டு மாவீரர்களை இந்த தேசவிடுதலைக்காக கொடுத்தவர்கள். தமிழீழ நடைமுறை அரசில் மாவீரர்கள் குடும்பத்தினரை எவ்வாறு தலைவர் அவர்கள் மதிப்பளிப்பார்,என்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம்.

எனவே மாவீரர் குடும்பம் ஒன்றின் உறுப்பினர்களை அவமரியாதை செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். பொதுவெளியில் பெரியாருக்கு எதிராக தலைவரை வைத்து விவாதத்திற்கு அழைக்கும் சீமான் உடனடியாக இதை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். தவறும் பட்சத்தில் எமது கடுமையான எதிர்வினையாற்றலை எதிர்கொள்ள நேரிடும் என ஈழப் போராளிகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.

பழ.நெடுமாறன்: பெரியாரின் கொள்கையான சாதி ஒழிப்பினை செயல்படுத்தியவர் பிரபாகரன்..!

பெரியாரின் முக்கிய கொள்கைகளில் ஒன்றான சாதி ஒழிப்பினை செயல்படுத்திய பெருமை பிரபாகரனுக்கு உண்டு, விடுதலைப்புலிகள் திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால், சாதி மறுப்பு திருமணம் அல்லது விதவைத் திருமணம் ஆகிய இரண்டில் ஒன்றைப் பின்பற்றவேண்டும் என ஆணையிட்டார் என பழ.நெடுமாறன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக பழ.நெடுமாறன் வெளியிட்ட அறிக்கையில், உலக தமிழர்களின் இருபெரும் ஆளுமைகளான பெரியாரையும், பிரபாகரனையும் ஒருவருக்கெதிராக மற்றொருவரை நிறுத்த செய்யப்படும் முயற்சி குறுகிய அரசியல் ஆதாய நோக்கத்தோடு செய்யப்படுவதாகும். இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். பெரியார் பெண்ணுரிமைக்காக தொடர்ந்து போராடியவர்.

அவரது இக்கொள்கையை நிறைவேற்றும் வகையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பெண்களையும் சேர்த்து, ஆயுத பயிற்சி அளித்து களத்தில் போராட வைத்த பெருமை பிரபாகரனுக்கு மட்டுமே உண்டு. வேறு எந்த நாட்டின் விடுதலை இயக்கத்திலும் பெண் போராளிகள் சேர்க்கப்பட்டதில்லை.

2009-ஆம் ஆண்டு இறுதிப் போருக்கு முன்பாக தமிழீழத்தின் பெரும் பகுதி விடுதலைப்புலிகளின் ஆட்சிக் கட்டுப்பாட்டின்கீழ் இருந்தது. அப்போது பெரியாரின் முக்கிய கொள்கைகளில் ஒன்றான சாதி ஒழிப்பினை செயல்படுத்திய பெருமை பிரபாகரனுக்கு உண்டு. விடுதலைப்புலிகள் திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால், சாதி மறுப்பு திருமணம் அல்லது விதவைத் திருமணம் ஆகிய இரண்டில் ஒன்றைப் பின்பற்றவேண்டும் என ஆணையிட்டார். அவரது திருமணம் முதல் விடுதலைப்புலிகள் பலரின் திருமணங்கள் இத்தகைய புரட்சிகர திருமணங்களாகவே அமைந்தன.

பெரியார் உயிரோடு இருந்திருந்தால், தனது கோட்பாடுகளை செயல்படுத்திய பேரன் பிரபாகரனை சந்தித்து பாராட்ட நேரில் தமிழீழம் சென்றிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில், பெரியாரைப் பற்றியோ, பிரபாகரனைப் பற்றியோ எத்தகைய புரிந்துணர்வும் இல்லாமல், அவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுபவர்கள் தங்களின் தகாத போக்கினை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

சாதி, சமய வேறுபாடுகளால் பிளவுபட்டுக் கிடக்கும் தமிழர்களை ஒன்றுபடுத்தவும், பகுத்தறிவு சமதர்ம பாதையில் தொடர்ந்து நடக்கவும் அரும்பாடுபட்ட இரு தலைவர்களையும் கொச்சைப்படுத்தும் போக்கில் நடந்துகொள்பவர்களை தமிழ்கூறும் நல்லுலகம் ஒருபோதும் மன்னிக்காது என பழ.நெடுமாறன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்: “என்னை செயல்பட வைப்பது என்னுடைய எதிரிகள்” என தந்தை பெரியார் சொல்வார்..!

தந்தை பெரியார் அடிக்கடி ஒன்றைச் சொல்வார், “என்னை செயல்பட வைப்பது, என்னுடைய தோழர்கள் அல்ல; என்னுடைய எதிரிகள்” என்று சொல்வார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னையில் திமுக சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று நடைபெற்றது.

இந்த மாநாட்டில் கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “இந்த மாநாட்டின் முக்கியமான நிகழ்ச்சியாக, மாநிலங்களவை உறுப்பினரும், மத்திய முன்னாள் அமைச்சருமான கபில் சிபல், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி – மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் ஆகியோரைக் கொண்ட, “ஒரே நாடு ஒரு தேர்தல்” என்ற கலந்துரையாடல் ஏற்பாடு செய்து, அவர்களும் தங்களுடைய வாதங்களை அழுத்தமாக வைத்திருக்கிறார்கள். இன்றைய காலக்கட்டத்தில் மிகத் தேவையான உரையாடல் இது.

இந்த மாநாடு வாயிலாக, நான் அனைவருக்கும் சொல்லிக்கொள்ள விரும்புவது, மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பாஜகவை பொறுத்த வரைக்கும், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே உடை, ஒரே உணவு என்று ஒற்றைப் பண்பாட்டை நோக்கி நாட்டை நகர்த்த பார்க்கிறது. அதற்காகத்தான் ஒரே தேர்தல் என்று கிளம்பி இருக்கிறார்கள். ஒரே அரசு என்ற நிலையை உருவாக்க மாநிலங்களை அழிக்கப் பார்க்கிறார்கள்.

பாஜகவைப் பொறுத்தவரைக்கும் பெரும்பாலும் குறுகிய கால செயல் திட்டமாக இருக்காது. நீண்டகால செயல்திட்டமாகத்தான் இருக்கும். இப்போது நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்று சொல்பவர்கள், காலப்போக்கில் நாட்டுக்கே ஒரே தேர்தல்தான் என்று சொல்லும் நிலைமையை உருவாக்க நினைக்கிறார்கள். இது ஒற்றையாட்சிக்குதான் வழிவகுக்கும். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இது, தனிமனிதர் ஒருவரிடம்தான் அதிகாரத்தைக் கொண்டு சென்று சேர்க்கும்.

இது, பாஜக என்ற கட்சிக்கே கூட நல்லதல்ல. இன்றைக்கு பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியைச் சர்வாதிகாரியாக ஆக்கத்தான் இந்தச் சட்டம் பயன்படும். பாஜகவும், பாஜகவுக்கு மூளையாக இருந்து செயல்படும் அமைப்புகளும் விரிக்கும் வலையில், இன்று அரசியல் காரணங்களுக்காக பாஜகவை ஆதரிக்கும் கூட்டணிக் கட்சிகள் விழுந்துவிடக் கூடாது. இந்தச் சட்டத்தை ஆதரிக்கக் கூடாது என்று இந்தக் கூட்டத்தின் வாயிலாகக் கோரிக்கை வைக்கிறேன். பாஜக ஆட்சியை ஆதரிப்பது, உங்கள் தனிப்பட்ட விருப்பம். ஆனால், இந்தியாவின் கூட்டாட்சிக் கருத்தியலுக்கே முரணான சட்டங்களை, மக்களாட்சி மேல் நம்பிக்கை வைத்திருக்கும் எந்த அரசியல் அமைப்புகளும் ஆதரிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஒரு திட்டத்தை அறிவித்தபோது, நம்மைப் போன்ற அரசியல் இயக்கங்களைக் கடந்து, வெளியில் இருந்து எதிர்த்தவர், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் மரியாதைக்குரிய எஸ்.ஒய்.குரேஷி. “பல முறை தேர்தல்கள் நடத்துவதால், தேர்தல் செலவு அதிகமாகிறது” என்று பாஜக தரப்பு சொன்னபோது, “ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால்தான் அதிகமான செலவாகும். தேர்தலுக்கான கருவிகளும், ஆட்களும், பாதுகாப்பும் ஒரே நேரத்தில் தேவைப்படுவதால் செலவு அதிகமாகத்தான் ஆகும்” என்று குரேஷி சரியாகச் சொன்னார்.

இந்தச் சூழலில், இந்திய அரசியலமைப்பை கூட்டாட்சிக் கருத்தியலைக் காக்க ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை நாம் இறுதி வரை எதிர்த்தாக வேண்டும். ஏன் என்றால், நான் முன்பே சொன்னது போன்று, பாஜகவின் செயல் திட்டங்கள் நீண்ட காலத்துக்கானது. தங்களின் செயல் திட்டங்களுக்கு இடையூறாக இருப்பவர்களுக்கு எதிரான கருத்துருவாக்கங்களை மெதுவாகச் சமூகத்தில் விதைப்பார்கள்.

அதற்கு துணையாகப் பல எடுபுடிகளை பேச வைப்பார்கள். தங்களின் கையில் இருக்கும் ஊடகங்களை வைத்தே பொய்ச் செய்திகளை பரப்புவார்கள். விவாதங்களைக் கட்டமைப்பார்கள். அளவில்லாத அவதூறுகளை அள்ளி இறைப்பார்கள். பச்சையான பொய்களால் கொச்சைப்படுத்துவார்கள். பாஜகவின் வாட்ஸ்அப் யூனிவர்சிட்டி தீயாக வேலை செய்யும். இதையெல்லாம் கடந்துதான் நாம் போராட வேண்டும்,வெற்றி பெற வேண்டும்.

இப்போது கூட, இந்திய நாட்டையும், அரசியலமைப்புச் சட்டத்தையும், மக்களாட்சியையும் காக்கத்தான் நாம் போராடிக் கொண்டு இருக்கிறோம். ஆனால், நம்மை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானவர்களாகச் சித்தரிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி . எந்த ஆளுநர்? மரபுப்படி, நிறைவாக பாடப்படும் நாட்டுப்பண் பாடலுக்குக்கூட நிற்காமல் வெளியேறிய ஆளுநர். இருந்தாலும், மத்திய அரசுக்கு நான் வைக்கும் கோரிக்கை என்பது, நான் ஆளுநரை விமர்சிக்கிறேன் என்று அவரை மாற்றிவிடாதீர்கள். அவர் பேசப் பேசத்தான் பாஜக அம்பலப்படுகிறது. திராவிடக் கொள்கைகள் மேலும் மேலும் மக்களிடம் சென்று சேருகிறது.

மக்களுக்கும் மாநில சுயாட்சி முழக்கத்தின் நியாயங்கள் புரிகிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இன்று முழுவதும் இந்த மாநாட்டில், நம்முடைய கட்சியினர் திராவிடவியல் குறித்து அழுத்தமாக உணர்வோடு பேசுவதற்கான தூண்டுகோலாக இருப்பவரும் நம்முடைய ஆளுநர்தான். தந்தை பெரியார் அடிக்கடி ஒன்றைச் சொல்வார், “என்னை செயல்பட வைப்பது, என்னுடைய தோழர்கள் அல்ல; என்னுடைய எதிரிகள்” என்று சொல்வார். அப்படிப்பட்ட கொள்கை எதிரிகளை பண்பாட்டு எதிரிகளைத்தான் நாம் இன்றைக்குப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

இன்றைய எதிரிகள் கருத்தியல் மோதலுக்கு தயாராக இல்லை. ஏன் என்றால், கருத்தியல் ரீதியாக பேசினால் அவர்களால் ஒருபோதும் வெற்றிபெற முடியாது. அதனால்தான், அவதூறுகளை ஆயுதங்களாக எடுக்கிறார்கள். அந்த துரோகக் கூட்டத்தைத் துடைத்தெறிய வேண்டிய கடமை – சட்டப் போராளிகளான உங்களுக்கு இருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை காக்கும் கடமை நமக்கு இருக்கிறது. இந்தியா முழுமைக்கும் சமூகநீதியை உருவாக்கித் தந்து பாதுகாக்கும் கடமையும் நமக்கு இருக்கிறது.

எனவே, இங்கிருக்கும் சட்டப் போராளிகளுக்கு நான் சொல்லிக் கொள்வது, நீங்கள் கொள்கைப் போராட்டத்திலும் உதவ வேண்டும்; தேர்தல் களத்திலும் உதவ வேண்டும். தேர்தல் நேரத்தில் உங்களுடைய ‘வார் ரூம்’ பணிகள் மகத்தானது, பாராட்டுக்குரியது. இந்த நேரத்திலும் அதை நினைத்து நான் மகிழ்கிறேன்.2019 முதல் நடந்த அனைத்து தேர்தல்களிலும் நாம் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கு உங்களுடைய பணிகளும் முக்கியக் காரணம். இந்த வெற்றிப் பயணம் 2026-லும் தொடர வேண்டும்.

2026 தேர்தல் வெற்றி என்பது, நம்முடைய திராவிட மாடல் ஆட்சிக்கு, மக்கள் அளிக்கப் போகும் மகத்தான அங்கீகாரமாக அமையப் போகிறது. திமுக ஆட்சி மீண்டும் அமைய இந்தியா முழுமைக்கும் திராவிடக் கோட்பாடுகளை வென்றெடுக்க திமுக சட்டத்துறை சளைக்காமல் சமரசம் இல்லாமல் உழைக்க வேண்டும். சட்டத்துறை சார்பில், வழக்கறிஞர்கள் நலனுக்காக இன்றைக்கு ஐந்து கோடி ரூபாய் கொடுத்திருக்கிறீர்கள். அதை ஆக்கபூர்வமான திட்டங்களில் பயன்படுத்திக் கொள்ள என்.ஆர்.இளங்கோவை ஒரு செயல் திட்டம் வகுக்கச் சொல்லி இருக்கிறேன். அதனடிப்படையில், அதற்கான அறிவிப்புகள் வரும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தமிழிசை சவுந்தரராஜன்: பெரியார் சமூக சீர்த்திருத்தவாதி இல்லை..!

பெரியார் சமூக சீர்த்திருத்தவாதி இல்லை என பாஜக தலைவர்கள் ஏற்கனவே பலமுறை பதிவு செய்திருக்கிறார்கள். என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை சாலிகிராமத்திலுள்ள தனது இல்லத்தில், பொங்கல் விழாவைக் கொண்டாடினார். அதன்பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது, பொங்கல் பரிசோடு சாமானிய மக்களுக்கு பொங்கல் விழா ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால், தமிழக மக்களுக்கு ஏமாற்றத்துடன் ஆரம்பித்து இருக்கிறது. கடந்த ஆட்சியில், பொங்கல் பரிசை அதிகமாக கொடுக்க வேண்டும் என்று கூறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இப்போது ஒரு ரூபாய் கூட கொடுக்க முன்வராதது மிகவும் கண்டிக்கத்தக்கது.

தமிழக மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பாஜக புறக்கணித்திருக்கிறது. அந்தவகையில், திமுகவை அனைத்து கட்சிகளும் புறக்கணிக்கிறது.மேலும் தொடர்ந்து பேசிய தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையே கருத்து மோதல் தொடர்கிறது. இதுபோன்ற கருத்து வேற்றுமைகள் மாநில மக்களுக்கு பலன் தராது என்பதால், இருவரும், தங்களது வேற்றுமைகளை மறந்து அமர்ந்து பேசி மாநில பிரச்சினைகளை பற்றி விவாதித்து முடிவெடுக்க வேண்டும்.

தெலங்கானாவில், சந்திர சேகரராவ் முதலமைச்சராக இருந்த போது, பிரதமர் வந்தால் வரவேற்க வரமாட்டார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை போல, மத்திய அரசின் திட்டங்களையும் சந்திர சேகரராவ் எதிர்த்து வந்தார். அதனால் தான், இன்று அவர் வீட்டில் இருக்கிறார். பல்வேறு ஆலோசனை, ஆய்வுக்கு பிறகு தான் மத்திய அரசு ஒரு திட்டத்தை கொண்டு வருகிறது. எனவே, மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு மறுப்பது நல்லதல்ல. துணை வேந்தரை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஒரு வரைவை கொடுத்து திருக்கிறார்.

இந்த வரைவு வருவதற்கு முன்பே, அதை சட்டமாக்கிவிட்டதை போல தமிழக அரசு நாடகமாடுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக டெபாசிட் வாங்காது என அமைச்சர்கள் கூறுவதை பற்றி நாங்கள் கவலைப்பட போவதில்லை. தேர்தலில் பாஜகவின் போட்டியை ஏற்றுக்கொள்ளும் தகுதி திமுகவுக்கு இல்லை.

திமுகவில் நேர்மையான போர் வீரர்களே இல்லை. திமுகவினர் முதுகில் குத்துபவர்கள். பெரியார் சமூக சீர்த்திருத்தவாதி இல்லை என பாஜக தலைவர்கள் ஏற்கனவே பலமுறை பதிவு செய்திருக்கிறார்கள். தற்போது சீமானும் பதிவு செய்வது வரவேற்கத்தக்கது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

வி.கே.சசிகலா: பெரியாரும், அண்ணாவும் சாதி, மதமெல்லாம் பார்த்ததே இல்லை..!

சமூக நீதிக் கொள்கையை பட்டிதொட்டியிலுள்ள குழந்தைகள் கூட படிக்கும் அளவிற்கு திராவிடத் தலைவர்கள் வளர்ந்துள்ளனர். பெரியாரும் அண்ணாவும் சாதி, மதமெல்லாம் பார்த்ததே இல்லை என வி.கே.சசிகலா தெரிவித்தார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்க சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று சசிகலா மதுரை வந்தார். விமான நிலையத்தில் வி.கே.சசிகலா செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது, ”மதுரையில் சில நாட்களாக பெய்த கனமழையால் பல இடங்களில் தண்ணீர் போக வழியின்றி, முல்லைநகர், குறிஞ்சி நகர், பி.பி.குளம் போன்ற பகுதியில் தண்ணீர் வீடுகளைச் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மா காலத்தில் ஒரு அமைச்சரே ஒரு துறையை பார்க்கும்போது, பிரச்சினை இல்லை. தற்போது 3 அமைச்சர்கள் ஒரு துறையைப் பார்க்கின்றனர்.

திமுக ஆட்சியில் கட்சி சார்பிலான நிகழ்ச்சிகளை ஒழுங்காக நடத்துகின்றனர். தமிழக மக்கள் திமுக அரசாங்கத்தின் பிடியில் மாட்டிக்கொண்டனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. 2026 -ல் நிச்சயமாக அம்மாவின் ஆட்சி வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும். அதிகாரிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தொண்டர்கள் ஒட்டிய போஸ்டரை கிழிக்கிறார்கள் என்பதை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. தலைவருக்கும், அவருக்குப் பின்பு அம்மாவிற்கும் இது போன்று நடந்துள்ளது. மக்கள் மனதில் யார் இருக்கின்றனர் என்பதைத் தான் பார்க்க வேண்டும்.

யார் வேண்டுமென்றாலும் கட்சி தொடங்கலாம். அதை யாரும் தடுக்க முடியாது. எம்ஜிஆர் திமுகவில் இருந்தபோது 60 கூட்டங்கள் நடத்தியுள்ளார். அம்மா முதலமைச்சராவதற்கு முன்பே 10 ஆண்டுகள் கட்சிப் பணி செய்துள்ளார். யார் சொன்ன கருத்தாக இருந்தாலும், சில கருத்துக்கள் ஏற்புடையதாக இருக்காது. சில கருத்துக்கள் ஏற்புடையதாக இருக்கும்.

சமூக நீதிக் கொள்கையை பட்டிதொட்டியிலுள்ள குழந்தைகள் கூட படிக்கும் அளவிற்கு திராவிடத் தலைவர்கள் வளர்ந்துள்ளனர். பெரியாரும் அண்ணாவும் சாதி, மதமெல்லாம் பார்த்ததே இல்லை. எம்ஜிஆரும், அம்மாவும் 68 சதவீதம் இடஒதுக்கீடு கொண்டு வந்தனர். அதை ஒன்பதாவது அட்டவணையிலேயே சேர்த்துவிட்டோம். எந்த மாநிலத்திலும் இது நடைமுறையில் இல்லை.

2026-ல் பாருங்கள். அதிமுக ஒன்றிணைவது குறித்து பொறுத்திருந்து பாருங்கள். அப்படி ஒன்றிணையும்போது, யாரை மக்கள் விரும்புகிறோர்களோ அவர் தான் முதலமைச்சராக இருப்பார். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் இருக்கிறது. உங்களுக்கு தெரியாமல் ஒன்றும் நடக்கப்போவதில்லை. எதுவாக இருந்தாலும் உங்களுக்குத் தெரியவரும்.” என வி.கே.சசிகலா தெரிவித்தார்.

பெரியார், அம்பேத்கருக்கு நடுவே விஜய்..! வைரலாகும் தவெக மாநாட்டு திடல் புகைப்படம்..!

தமிழக வெற்றிக் கழக மாநாட்டு திடலில் இடம் பெற்றுள்ள காமராஜர், பெரியார், அம்பேத்கர் ஆகியோருக்கு நடுவே விஜய் கட்-அவுட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வரும் 27-ஆம் தேதி மாலை தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறவுள்ளது.

‘வெற்றிக் கொள்கை திருவிழா’ என்கிற வாசகத்துடன் மாநாடு நுழைவாயிலில் கோட்டையின் மதில் சுவர் போல செட் அமைக்கப்பட்டு அதில் 2 யானைகள் முன்னங் கால்களை உயர்த்தி பிளிரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநாட்டுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் மாநாட்டு ஏற்பாடுகளை ஒப்பந்ததாரர்கள் இரவு பகலாக செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மாநாட்டு திடலில் காமராஜர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் பிரம்மாண்ட கட்-அவுட்களுக்கு நடுவே விஜய்யின் கட்-அவுட்டும் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

“பெரியார், அம்பேத்கர் கருத்துகளை வளப்படுத்துபவர்” திருமாவளவன்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் தனது ட்விட்டர் பதிவில், “இம்மண்ணில் ஆழ விதைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் – புரட்சியாளர் அம்பேத்கர் கருத்துகளைத் தனது பேச்சாலும் செயல்களாலும் வளப்படுத்திடும் அன்புச் சகோதரர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தி.மு.க முப்பெரும் விழாவை முன்னிட்டு மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி, நல உதவிகள் வழங்கல்

திராவிட கழகத்தை நிறுவிய பெரியாருடன் தொடக்கக் காலத்தில் பெரியாருடன் இணைந்து அண்ணாவும் திராவிடர் கழகத்திலேயே பயணித்து வந்தார். 1940-களின் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அண்ணா 1949-ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி சென்னை ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினர்.

அண்ணா தனிக்கட்சி தொடங்கினாலும் கூட பெரியார் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். இதனால் திமுகவில் தலைவர் பதவி பெரியாருக்காக காலியாக விடப்படும் என்று அறிவித்துவிட்டு, கடைசி வரை பொதுச் செயலாளராகவே அண்ணா இருந்தார்.

இந்நிலையில் தி.மு.க.வின் தாய் கழகமான திராவிட இயக்கங்களின் தந்தையாகக் கருதப்படும் பெரியாரின் பிறந்த நாள் செப்டம்பர் 17 கொண்டாடப்படுகிறது.  அதேபோல அண்ணாவின் பிறந்த நாள் செப்டம்பர் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. எனவே, திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் 15, 16, 17 ஆகிய தேதிகளில் அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாட்களை முன்னிட்டு முப்பெரும் விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

தி.மு.க முப்பெரும் விழாவை முன்னிட்டு இன்று கொளத்தூர் – ஜி.கே.எம் காலனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழக மூத்த முன்னோடிகளான 260 கழக உடன் பிறப்புகளின் உழைப்பை பாராட்டி பொற்கிழி, நல உதவிகள் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  சிறப்பித்தார்.

தந்தை பெரியாரின் 143-வது பிறந்த நாளை முன்னிட்டு தந்தை பெரியார் திரு உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

தந்தை பெரியாரின் 143-வது பிறந்த நாளை இனி வரும் காலங்களில் சமூகநீதி நாளாக கொண்டாட வேண்டுமென்கிற மாண்புமிகு முதல்வரின் ஆணைக்கினங்க இன்று காலை அண்ணா அறிவாலய வளாகத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்களின் தலைமையில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அண்ணன் DR.M.SUBRAMANIYAN.BA.LLB.அவர்களின் வழிகாட்டுதலின்படி ஏனைய மாண்புமிகு அமைச்சர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள்,கழக நிர்வாகிகள்,கழக மகளிரணி சகோதரிகள்,கழக உடன்பிறப்புகள் கலந்துகொண்ட வரலாற்று சிறப்புமிகு உறுதிமொழியேற்ப்பு நிகழ்வில் வேளச்சேரி மேற்கு 178-வது வட்டக்கழக செயலாளர் சேவைமாமணி K.N.தாமோதரன் அவர்கள் கழக உடன்பிறப்புகளுடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 

கடலூர் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் நெய்வேலி தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

கடலூர் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நெய்வேலி வட்டம் 2 ஸ்டோர் ரோடு அருகே அமைந்துள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது, இந்நிகழ்வில் பகுஜன் சமாஜ் கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் தணிகைச்செல்வன் தலைமை வகித்தார், தெற்கு மாவட்ட தலைவர் குமரவேல் மேற்கு மாவட்ட தலைவர் ஐயா சாமி மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஜெயப்பிரகாஷ், சண்முகராஜன், அன்ன பிரகாஷ் துணைத் தலைவர் சந்திரபாபு மற்றும் மாவட்ட பொருளாளர் விஜயகாந்த் பாக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக வழக்கறிஞர் இரா. வைத்தீஸ்வரன் அவர்களும் ஒருங்கிணைந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் முருகன், மற்றும் ஊடகப் பிரிவை சேர்ந்த T. பழனிவேல் ஆகியோர் கலந்துகொண்டு பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் மேலும் மாவட்ட சட்டமன்ற தொகுதி ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர் நிகழ்ச்சியின் இறுதியில் நெய்வேலி சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் ஜோதி முருகன் அவர்கள் நன்றி தெரிவித்தார்