வைகோ காட்டம்: தமிழ்நாட்டை கலவர பூமியாக்கி, சட்டம் ஒழுங்கு சீர்குலைக்க சீமான் முயற்சி..!

தமிழ்நாட்டை கலவர பூமியாக்கி, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்ற குற்றம் சுமத்துவதற்கான முதல்கட்ட முயற்சியே இது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிடர் இயக்கம் குறித்தும், திராவிட இயக்கத் தலைவர்கள் குறித்தும், அவதூறுகளையும், இழிவுகளையும் தொடர்ந்து அள்ளி வீசி வருகிற நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், எல்லை மீறி, வெறி உணர்ச்சியோடு, மனம் போன போக்கில் தந்தை பெரியார் எனும் மாமனிதரை கொச்சைப்படுத்தி பத்திரிகையாளர்களிடம் பேசி உள்ளார்.

தந்தை பெரியாரைப் பற்றி பேசிய கருத்துகளுக்கு ஆதாரம் என்ன? என்று கேட்டால், சிறிதும் பொறுப்பின்றி கோமாளித்தனமாகவும், ஆணவமாகவும், அநாகரிகமாக மேலும் மேலும் நடந்து கொள்கிறார். இதற்கு எதிர்வினையாக கட்சி வேறுபாடு இல்லாமல் தமிழகத்தில் போராட்டங்களும், நீதிமன்றங்களில் முறையீடு செய்வதும் நடந்து வருகின்றன.

சீமானின் பேச்சு சமூகத்தில் பதற்றம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்தப் பிரச்சினையில் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து அது தொடர்பான அறிக்கையை ஜனவரி 20 -ஆம் தேதி நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றக்கிளை, மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

பொது இடத்தில் அமைதியை குலைத்தல், கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசுதல் முதலான பிரிவுகளில் சீமான் மீது 60-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை எதனைப் பற்றியும் சிறிதும் பொருட்படுத்தாமல், அகம்பாவத்துடன் மேலும் மேலும் சீமான் உளறி வருவது வன்மையான கண்டனத்திற்கு உரியதாகும்.

தமிழ்நாட்டை கலவர பூமியாக்கி, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்ற குற்றம் சுமத்துவதற்கான முதல்கட்ட முயற்சியே இது. தமிழ்நாடு அரசு, இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இவரை நீதிமன்றத்தின் கூண்டிலேற்றி, விசாரித்து, உரிய தண்டனையை உடனடியாக அளிக்க வேண்டும். நாகரிக அரசியலை விரும்புகிற அனைவரும் இத்தகைய ‘தீய சக்திகளுக்கு’ தக்க பாடம் புகட்டிட தொடர்ந்து அணிதிரள வேண்டும்” என வைகோ தெரிவித்துள்ளார்.

வைகோ ஆவேசம்: பாஜக அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலை முறியடிக்க வேண்டும்..!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, தனியார் நிறுவன உயர் அலுவலர்களை, அரசின் செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளாக நியமனம் செய்யும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. புதிதாக மேலும் 45 பேரை நியமிக்க மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அண்மையில் விளம்பரம் வெளியிட்டுள்ளது.

இந்த திட்டம் அப்பட்டமான சட்ட மீறல் மட்டும் அல்ல, அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீது நடத்தப்படும் கொடும் தாக்குதல். இதன் மூலம் அரசு நிர்வாகம் முழுமையாக ஆர்.எஸ்.எஸ் பிடியின் கீழ் செல்லும் வகையில் பாதை அமைக்கும் சதித்திட்டம் அரங்கேற்றப்பட்டு வருவது கடும் கண்டனத்திற்கு உரியது. இந்த செயல் யு.பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராகும் திறமையான இளைஞர்களின் உரிமைகளைப் பறிக்கும் செயலாகும்.

இந்தியா கூட்டணி கட்சிகள் மற்றும் ஜனநாயக சக்திகள் இணைந்து போராடி அரசு நிர்வாகத்தை ஆர்.எஸ்.எஸ் மயமாக்கும் மத்திய பாஜக அரசின் சதித்திட்டத்தை முறியடிக்க வேண்டும் என வைகோ அந்த செய்தி அறிக்கையில் குறிப்பிடுள்ளார்.

மதிமுக தேர்தல் அறிக்கை: விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்படும்..!

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு ம.தி.மு.க. தேர்தல் அறிக்கையை பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் உள்ள தேர்தல் பணிமனை அலுவலகத்தில் வெளியிட்டார்.
மதிமுக தேர்தல் அறிக்கையில்,
1. மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி முறை நிலவ வேண்டும்.
2. தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
3. திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தப்படும்.
4. புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்யவும், சுங்கச்சாவடிகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
5. மத்திய பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வலியுறுத்தப்படும்.
6. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்ட 200 நாட்களாக உயர்த்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
7.நாட்டின் பன்முகத் தன்மையை சீர்குலைக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்.
8. ஒரேநாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம்.
9. கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.
10. விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்படும்.
போன்ற சிறப்பு 74 அம்சங்களுடன் மதிமுக தேர்தல் அறிக்கையில் அடங்கியுள்ளது.