தவெக தலைவர் விஜய் ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கு விஜய பிரபாகரன் ஆதரவு..!

ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு தருவோம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசியிருப்பதற்கு தேமுதிகவின் விஜய பிரபாகரன் வரவேற்றுள்ளார். மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பதிலளித்தார்.

அப்போது, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் நான் முதல் முறையாக கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் விஜயகாந்துடன் வந்துள்ளேன். தற்போது பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆணைக்கு இணங்க நான் வந்துள்ளேன்.விருதுநகர் லோக்சபா தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்ட போது ஒவ்வொரு ஊரிலும் முத்துராமலிங்க தேவரை வணங்கிவிட்டுதான் பிரசாரம் செய்தேன். இன்று அவரது பிறந்த நாள், இறந்த நாளில் தரிசிக்க வந்தது நிறைவாக இருக்கிறது.

தொடர்ந்து பேசிய விஜய பிரபாகரன், நீண்டநாள் போராட்டத்துக்கு பின் விஜய் மாநாடு நடத்தி உள்ளார். அதற்கு என் வாழ்த்துகள். அதிகாரத்தில் உள்ள கட்சியானது அனைவருக்கும் சரி சமமாக பகிர்ந்து தர வேண்டும். அதிகாரப் பகிர்வை அனைத்து கட்சிகளும் வலியுறுத்துகின்றன. நாங்களும் அதைப் பற்றி பேசுகிறோம். தமிழ்நாட்டில் ஒரு மாநாடு நடைபெறும் போது எங்களுடைய நினைவுகளை சுட்டிக்காட்டுவதும் வழக்கம்.

அதுபோலதான் விஜய் மாநாட்டின் போது தேமுதிகவின் முதல் மாநாடு தொடர்பான வீடியோ பகிர்ந்து கொள்ளப்பட்டது. நான் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைச் சேர்ந்தவன். அண்ணன் விஜய் ஒரு கட்சியை ஆரம்பித்து ஒரு கருத்தைச் சொல்கிறார். அவர் ஒரு மாநாட்டைத்தான் நடத்தி முடித்துள்ளார் என விஜய பிரபாகரன் தெரிவித்தார்.

தொல் திருமாவளவன் கேள்வி: இந்தியா கூட்டணி கட்சிகள் அனைவரையும் பாசிஸ்டுகள் என விஜய் சொல்கிறாரா..!?

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் பேசிய விஜய் பாசிஸ்டுகள் என்று திமுகவை மட்டும் சொல்கிறாரா? அல்லது இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள 28 கட்சிகளையும் சொல்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருக்கிற 28 கட்சிகளும் பாசிஸ்டுகளை எதிர்க்கிறோம். என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் இன்று நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு தொல்.திருமாவளவன் பதிலளித்தார். அப்போது,இன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் “விஜய் அவர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்து இருக்கிறார். அவரது தொண்டர்கள் அவரிடம் ஆக்கபூர்வமான அறிவிப்புகளை எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் பல்வேறு யூகங்களுக்கு விடை சொல்வதிலேயே குறியாக இருந்தார். தனக்கு எதிரான விமர்சனங்களை பற்றி விளக்கம் சொல்வதிலேயே அதிக நேரத்தை எடுத்துக் கொண்டார்.

நண்பர்கள் யார் யார் என அடையாளம் காட்டுவதை விட தன்னுடைய எதிரிகள் யார் என அடையாளம் காட்டுவதிலேயே ஆர்வம் காட்டினார். யார் யார் நமது நட்பு சக்திகள் யார் யாரோடு நாம் இணைந்து செயல்பட முடியும் என தமது தொண்டர்களுக்கு அடையாளம் காட்டுவதற்கு பதிலாக தம்முடைய எதிரிகள் யார் என்று வரிசைப்படுத்துகிற போது பிளவுவாத சக்திகள் முதலாவது எதிரி என்றும் ஊழல் சக்திகள் இரண்டாவது எதிரி என்றும் கூறினார். பிளவுவாத சக்திகள் என்று அவர் சொல்கிற போது வெளிப்படையாக சொல்லவில்லை. குறிப்பிட்டு இந்த கட்சிதான் இந்த அமைப்புதான் என்று அடையாளப்படுத்தவில்லை.

பெரும்பான்மை சிறுபான்மை என்கிற அரசியலில் அந்தப் பிளவுவாத அரசியலில் தமக்கு உடன்பாடு இல்லை இத்தகைய பிளவுவாத கட்சிகளை எதிர்ப்போம் என்று மேம்போக்காக சொல்கிறார். அதிலே ஒரு முரண்பாடும் தெரிகிறது. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சொல்கிற போது ஒரு சமத்துவ அரசியலை முன்மொழிகிறார் என்று நாம் மகிழ்ச்சி அடைகிற வேளையில், பெரும்பான்மை சிறுபான்மை என்கிற அரசியலில் உடன்பாடு இல்லை என்கிறபோது பெரும்பான்மைவாதத்தை பேசுகிறார்கள் யார் என்று அடையாளப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

அவர்கள்தான் நம்முடைய அரசியல் எதிரிகள் என்று அடையாளப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. பெரும்பான்மை வாதத்திலும் உடன்பாடு இல்லை சிறுபான்மை அரசியலிலும் உடன்பாடு இல்லை என்றால் பெரும்பான்மைவாதத்திற்கு துணை போகிற ஒரு நிலைப்பாடாக அது அமைந்து விடும். இந்தியாவைப் பொறுத்தவரையில் பெரும்பான்மை வாதம் பேசுகிற ஒரே கட்சி பாஜக. அதற்கு துணை நிற்கிற சங்பரிவார்கள் அதனால் சிறுபான்மை சமூகத்தினர் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பது உலகறிந்த உண்மை. இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் இதர மத வழி சிறுபான்மையினர்களும் அச்சத்தோடு பீதியோடு இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது உலகறிந்த உண்மை.

ஆனால், எனக்கு பெரும்பான்மை சிறுபான்மை என்கிற அரசியலிலேயே நம்பிக்கை இல்லை அதை எதிர்க்கிறோம் என்று மேம்போக்காக சொல்லிவிட்டு கடந்து போகிறார். அப்படி என்றால் இஸ்லாமியர்களின் பாதுகாப்பு கிறிஸ்தவர்களின் பாதுகாப்பு பௌத்தர் சமணர் போன்ற சிறுபான்மை மதத்தினரின் பாதுகாப்பு குறித்து அவர் என்ன நிலைபாட்டை கொண்டிருக்கிறார் என்று நம்மால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. அது ஒரு குழப்பமான நிலையாக இருக்கிறது.

பாசிச எதிர்ப்பை பற்றி பேசுகிற போது மிக இலகுவாக கிண்டல் அடித்து விட்டு பாசிச எதிர்ப்பையே ஒன்றுமில்லை அது தேவையில்லை என்பது போல கடந்து போகிறார். ‘அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் பாயாசமா’ என்று கேட்கிறார். அதில் இரண்டு பொருள் இருக்கிறது. ஒன்று பாசிச எதிர்ப்பு ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என எடுத்துக் கொள்ளலாம். இன்னொன்று நீங்களும் பாசிஸ்டுகள் தான் நீங்கள் ஒன்றும் சனநாயக சக்திகள் இல்லை என்று சொல்வதாக புரிந்து கொள்ளலாம்.

நீங்களும் பாசிஸ்டுகள் தான் என்று அவர் திமுகவை மட்டும் சொல்கிறாரா? அல்லது இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள 28 கட்சிகளையும் சொல்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருக்கிற 28 கட்சிகளும் பாசிஸ்டுகளை எதிர்க்கிறோம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இந்தியாவை பொறுத்தவரையில் பாசிச எதிர்ப்பு என்றாலே பாஜக எதிர்ப்பு தான் சங்பரிவார் எதிர்ப்பு தான்.

ஆக ‘நீங்களும் பாசிஸ்டுகள் தான் என்று சொல்லக்கூடாது’ என நான் சொல்ல முடியாது அது அவருடைய கருத்து. அப்படி என்றால் காங்கிரஸ் கம்யூனிஸ்டுகள் என அனைவரையுமே பாசிஸ்டுகள் என கேலி செய்கிறாரா? என்ற கேள்வி எழுகிறது. அதிலே பாசிச எதிர்ப்பு தேவை இல்லை என்கிற கருத்து தொனிப்பின் மூலம் பாஜக எதிர்ப்பு தேவை இல்லை என்கிற பொருளும் வெளிப்படுகிறது. ஆக பாஜக எதிர்ப்பில் அவர் உறுதியாக இல்லை என்பது அவரது உரையில் வெளிப்படுகிறது.

அவரது உரையில் அதிகம் திமுக எதிர்ப்பு நெடி வீசுகிறது. அவரது ஒட்டுமொத்த உரையின் சாராம்சமும் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளின் அரசியலை எதிர்ப்பதாக இருக்கிறது. நண்பர் விஜய் அவர்களிடம் நாம் எதிர்பார்த்த ஆக்கப்பூர்வமான அறிவிப்புகள் இல்லை, செயல் திட்டங்கள் இல்லை.” எனக் குறிப்பிட்டேன் என தொல் திருமாவளவன் தெரிவித்தார்.

விஜய் அறிக்கை: விமர்சனங்களில் ஆக்கபூர்வ ஆலோசனைகளை கருத்தில் கொள்வோம்..!

நம்முடைய அரசியல் பயணத்தை, நாம் தொடங்கும் முன்னரே நம்மை விமர்சித்தவர்கள். இனி இன்னும் கடுமையாக விமர்சிப்பார்கள். அத்தகைய விமர்சனங்களில் ஏதேனும் ஆக்கபூர்வமான ஆலோசனைகள் தெரிந்தால், அவற்றை மட்டுமே கருத்தில் கொள்வோம் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வணக்கம். மாநாடு குறித்து உங்களுடன் பேச, இது நான்காவது கடிதம். வாஞ்சையில் நனைந்த வார்த்தைகளில் ஒரு நன்றிக் கடிதம். அரசியலில், கடித முறை என்பது ஆகப்பெரும் ஆயுதம். பேரறிஞர் அண்ணா தந்த ஆயுதம். தமிழக மக்கள், நம் அனைவருக்கும் சொந்தமானது. அந்த உணர்வின் அடிப்படையில்தான் நாமும் அதைக் கையில் எடுத்தோம். இந்தக் கடிதம் எழுதும்போது, என்னென்னவோ எண்ண அலைகள் இதயத்தில் அலைமோதுகின்றன. என் நெஞ்சம் நிறைந்ததில் எதைச் சொல்வது? எதை விடுப்பது? மாநாடு நடத்த, பல்வேறு காரணங்களால், நமக்குக் கிடைத்தது மிகக் குறைந்த கால இடைவெளிதான். அதிலும் அடைமழை வேறு குறுக்கிட்டது. இருந்தும், எல்லாவற்றையும் சமாளித்து, சூறாவளியாகச் சுழன்று நம் கட்சியின் முதல் மாநில மாநாட்டை வெற்றிபெறச் செய்த உங்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றி.

குறிப்பாக, மாநாட்டுப் பணிகளுக்காக, இடம் தேர்வில் இருந்து திடல் பணிகள் வரை மட்டுமல்லாது, மாநாடு வெற்றிகரமாக நிறைவுறும் வரையிலும், கழகத்தின் நிர்வாகிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து, அதி சிரத்தையுடன் பணியாற்றிய பொதுச் செயலாளர் என்.ஆனந்த் திடல் வடிவமைப்புப் பணிகளை மேற்பார்வையிட்டு, பொதுச் செயலாளருடன் பணிகளைப் பகிர்ந்துகொண்ட பொருளாளர் பி.வெங்கட்டராமன் கட்சியின் மீதான உறுதியான பற்றை இதயத்தில் தாங்கி மாநாட்டிற்காகக் கடுமையாக உழைத்த ஆர்.பரணிபாலாஜி, (கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் மற்றும் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர்), என்.மோகன்ராஜ் (விழுப்புரம் மாவட்ட நிர்வாகி), ஜி.பி.சுரேஷ் (விழுப்புரம் மாவட்ட நிர்வாகி), ஏ.வடிவேல் (விழுப்புரம் மாவட்ட நிர்வாகி), ஈ.ரமேஷ் (விழுப்புரம் மாவட்ட நிர்வாகி), கே.அரவிந்தன் (விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர்) மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், தற்காலிகத் தொகுதிப் பொறுப்பாளர்கள், மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், கிளை, பகுதிக் கழக நிர்வாகிகள், மாநாட்டுக் குழுக்களின் தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அனைத்துக் குழுக்களின் உறுப்பினர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைமை நிலையச் செயலகத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, திடல் வடிவமைப்புப் பணிகளால், வெற்றிக் கொள்கைத் திருவிழாவிற்கான இடமாகத் திடலை மாற்றிக் காட்டிய பந்தல் வடிவமைப்பாளர் ஜே.பி.விஸ்வநாதனுக்கும் நன்றி. மாநாட்டில். நாம் அனைவரும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆற்றிய பணியை மறக்கவே இயலாது. அவசர கால உதவியில் அசத்திய இவர்கள் அனைவருக்கும் அளப்பரிய நன்றி. கட்டுப்பாட்டு அறை சார்ந்த கண்காணிப்புப் பணிகளைச் செய்தவர்கள் அனைவருக்கும் சிறப்பு நன்றி. எப்போதும் விவசாயப் பெருமக்களை வணங்கிப் போற்றும் இயக்கமாக இருக்கும் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடத்த இடம் வழங்கிய விவசாயிகளை நேரில் சந்தித்து, அவர்கள் கரம் பற்றி நன்றி சொல்லவே எனக்கு விருப்பம். இருந்தும், இப்போது நெஞ்சம் நெகிழ அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், வி.சாலை. விக்கிரவாண்டி, விழுப்புரம் மாவட்ட மக்களுக்கும் நன்றி சொல்லத் தோன்றுகிறது. அவர்கள் அனைவருக்கும் நன்றி.

மாநாட்டிற்கான நெறிமுறைகளை செவ்வனே செயல்படுத்திட அனுமதி மற்றும் ஒத்துழைப்பு நல்கிய, சம்பந்தப்பட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி. கடிதங்கள் வாயிலாக வெளியிட்ட என் வேண்டுகோள்களை ஏற்று, தங்கள் வீடுகளில் இருந்தே வெற்றிக் கொள்கைத் திருவிழாவைக் கண்டு களித்த அனைத்துத் தாய்மார்களுக்கும், முதியோர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றி. இதனிடையே, மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, நீங்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு தூரம் பயணம் மேற்கொண்டீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். இரவெல்லாம் கண்விழித்து, தூக்கமின்றி, அயற்சியைப் பொருட்படுத்தாமல், மதியம் வரை சுட்டெரித்த வெயிலையும் தாங்கிக்கொண்டீர்கள். சிலர் உடல் உபாதைகளைக்கூட பொறுத்துக்கொண்டு கலந்துகொண்டீர்கள். இதயங்கள் இடையேயான அன்பின் முன், இன்னல்கள் பெரிதில்லை என்பதை உணரச் செய்தீர்கள். உங்களை எப்படி ஏற்றிப் போற்றுவதென்றே எனக்குத் தெரியவில்லை.

இப்படித் தன்னெழுச்சியாக, பொங்குமாங்கடலென மாநாட்டிற்குத் திரண்டு வந்த கட்சி தோழர்கள் என் மீது கொண்டுள்ள பாசத்திற்கு ஈடாக, இந்த உலகத்தில் வேறு எதுவும் இருப்பதாகவே தெரியவில்லை. அதேபோல, தமிழக அரசியல் களத்தில் நமக்காக நம் தோளோடு தோள் சேர்ந்து நிற்பதை உறுதி செய்வதுபோல, தங்களின் பேரன்பையும் பேராதரவையும் தெரிவிக்கும் வகையில், நமது மாநாட்டிற்குப் பேரலைகளாக எழுந்து வந்த பொதுமக்களுக்கு நன்றி சொல்ல, வார்த்தைகளைத் தேடித் தேடி, கண்டுபிடிக்க இயலாமல் மவுனமொழி பேசி. கண்கள் கலங்க நிற்கிறேன். எதைப் பற்றியும் யோசிக்காமல், இந்த மண்ணைச் சேர்ந்த ஒற்றை மகனுக்காக, இத்தனை லட்சம் மனங்கள் திரண்டு நின்றது என் மனதை நெகிழச் செய்துவிட்டது.

உங்களை உறவுகளாகப் பெற்றது என் பாக்கியமன்றி வேறென்ன? நாடே வியக்கும் வகையில் நம் மாநாட்டை மாபெரும் வெற்றிபெறச் செய்த உங்கள் ஒவ்வொருவரின் மனதையும் கோடிப்பூக்களைத் தூவி, போற்றி மனம் நிறைகிறேன். உங்கள் ஒவ்வொருவரின் அன்பிலும் மனம் நெகிழ்ந்து, கண்களில் ஆனந்தக் கண்ணீர் தேங்க, அரசியல் வெற்றிப் பயணத்தைத் தொடங்கி இருக்கிறோம். இப்பயணத்தின் இலக்கை, நம் தமிழ்நாட்டு மண் இனிவரும் நாள்களில் பார்க்கும். அது உறுதி. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் கண்ட காட்சிகள் எல்லாம், கண்களிலும் மனதிலும் கல்வெட்டுகளாகவே பதிந்துவிட்டன.

தமிழக அரசியல் வரலாற்றில், காலாகாலத்திற்கும் அழிக்கவே இயலாத பதிவுகள் அவை. ஆம். நமது மாநாட்டில், அலைகள் கை தட்டும் ஆர்ப்பரிக்கும் கடலைக் கண்டேன். கதிர்கள் வெடித்துவிழும் ஒளிப்பிழம்புகளைக் கண்டேன். தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியோடு. தமிழகத்தின் வெற்றிக்கான வெள்ளோட்டத்தையும் கண்டேன். தீர்க்கமான அரசியல் வெற்றிக்கான திசைகள் திறக்கக் கண்டேன். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனாலும், மனம் திளைத்ததை. மகிழ்ச்சியில் தித்தித்ததை இதற்குமேல் எப்படிச் சொல்ல? இவை எல்லாவற்றையும். அப்படியே வார்த்தைகளில் வடித்தெடுக்க நானொன்றும் கவிஞன் இல்லை. உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்த மட்டுமே தெரிந்த சாதாரண மனிதன்.

இருந்தும் நினைவுகளைப் பகிர்வதும்கூட ஓர் அழகிய கவிதைதானே. அதனால்தான், மனதிலும் நினைவிலும் சேகரமானதில் சிலவற்றை மட்டுமே பகிர்ந்தேன். இந்த வேளையில், உங்கள் ஒவ்வொருவரையும் எண்ணி மனம் நெகிழ்கிறேன். உங்களை என் தோழர்களாக, தூய குடும்ப உறவுகளாகப் பெற்றது என் வாழ்நாள் வரம். வழியெங்கும் வசந்தத்தை விதைக்கிற வைரநெஞ்சங்கள் நீங்கள். நம் மக்களோடு சேர்த்து, உங்களையும் உயரத்தில் வைத்து அழகு பார்க்கவே இந்த அரசியல் பயணம்.

என் எல்லா வார்த்தைகளுக்கும் நீங்கள் உயிர் கொடுத்தீர்கள். அதனால்தான், நமது மாநாட்டின் வாயிலாக, பொறுப்புணர்வுடன் கூடிய கடமையுடன், கட்டுப்பாடான. கண்ணியமான, ஆரோக்கியமான உத்வேகமான, உரிமைகளை மீட்டெடுக்கும் அரசியலை இந்த மண்ணிலே விதைத்திருக்கிறோம். மாநாட்டில் நம்மைக் கண்ட நம் தமிழக மக்களும் அதை உணர்ந்திருப்பர். நம்முடைய அரசியல் பயணத்தை, நாம் தொடங்கும் முன்னரே நம்மை விமர்சித்தவர்கள். இனி இன்னும் கடுமையாக விமர்சிப்பார்கள். அத்தகைய விமர்சனங்களில் ஏதேனும் ஆக்கபூர்வமான ஆலோசனைகள் தெரிந்தால், அவற்றை மட்டுமே கருத்தில் கொள்வோம். மற்றவற்றை மறந்தும்கூட மனதில் ஏற்றிவிடாமல் கடந்து செல்லப் பழகிக் கொள்வோம்.

அனைத்து மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நோக்கிய உழைப்பு மட்டுமே இனி நம் அரசியல். அதைச் சாத்தியப்படுத்துதல் மட்டுமே நம் ‘தீவிர அரசியல் செய்தலாக இருக்கும். நம்மைத் தாயுள்ளத்தோடு வரவேற்கும் நம் தமிழ்நாட்டு மக்களுக்காக, இன்னும் அதி தீவிரமாக, தீர்க்கமாக, தீர்மானமாக உழைப்போம். தங்கள் மண்ணைச் சேர்ந்த மகன்களான, மகள்களான நம்மைத் தக்க இடம் நோக்கி, தகுதியான அங்கீகாரம் நோக்கி மக்களே அழைத்துச் செல்வர். ஆகவே, அவர்களின் மனதில் நிறையும் அளவிற்கு, அதிக நம்பிக்கையுடனும் நன்றியுடனும் ரெட்டைப் போர்யானைகளின் பலத்துடன் உழைப்போம்.

வாகைப் பூக்கள் நமக்காகவே நாடெங்கும் பூத்துக் குலுங்கப் போகின்றன. நமது மாநாட்டின் மூலம், வி.சாலை நமது வியூகச் சாலையாகவும், விவேக சாலையாகவும் மற்றும் வெற்றிச் சாலையாகவும் ஆனது. போலவே, நம்மை யாராலும் வெல்ல இயலாத வித்தியாசமான, யதார்த்த அரசியல் சாலைக்கும் நம்மை அழைத்துச் செல்லும். எப்போதும் ஆக்கபூர்வமான அரசியலையே கையிலெடுப்போம். 2026-ல் நம் இலக்கை அடைவோம். வெற்றி நிச்சயம்” என அந்த அறிக்கையில் விஜய் தெரிவித்துள்ளார்.

தொல் திருமாவளவன் விமர்சனம்: “பாஜக எதிர்ப்பில் விஜய் உறுதியாக இல்லை..!”

“பாஜக எதிர்ப்பில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உறுதியாக இல்லை” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் இன்று நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு தொல்.திருமாவளவன் பதிலளித்தார்.

அப்போது,“தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை, அக்கட்சியின் தலைவர் விஜய் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். அவரிடம் ஆக்கபூர்வமான அறிவிப்புகளை தமிழக மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர், பல்வேறு ஊகங்களுக்கு விடை சொல்வதிலேயே குறியாக இருந்துள்ளார். தனக்கு எதிரான விமர்சனங்கள் மற்றும் இனிமேல் எழக்கூடிய விமர்சனங்களுக்கு பதில் சொல்வதில், அதிக நேரம் எடுத்துக் கொண்டார்.

நண்பர்கள் யார் என்று அடையாளம் காட்டுவதைவிட, தன்னுடைய எதிரிகள் யார் என்று அடையாளம் காட்டுவதிலேயே ஆர்வம் காட்டினார். யார், நம்முடைய நட்பு சக்திகள், யாருடன் நம்மால் இணைந்து செயல்பட முடியும் எனவும் தொண்டர்களுக்கு அடையாளம் காட்டுவதற்கு பதிலாக, தம்முடைய எதிரிகள் யாரென்று வரிசைபடுத்துகிறபோது, பிளவுவாத சக்திகள் முதலாவது எதிரி என்றும், ஊழல் சக்திகள் இரண்டாவது எதிரி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பிளவுவாத சக்திகளை குறிப்பிடும்போது, வெளிப்படையாக சொல்லவில்லை. குறிப்பிட்ட கட்சி, அமைப்பு என அடையாளப்படுத்தவில்லை. பெரும்பான்மை, சிறுபான்மை என பிளவுவாதம் பேசுவதில் உடன்பாடில்லை. இத்தகையை பிளவுவாத சக்திகளை எதிர்ப்போம் என மேம்போக்காக சொல்கிறார். இதில் முரண்பாடு தெரிகிறது. ‘பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்’ என்று சொல்கிறபோது, ஒரு சமத்துவ அரசியலை முன்மொழிகிறார் என மகிழ்ச்சி அடையும் நிலையில், பெரும்பான்மை – சிறுபான்மை என்று பேசுகிற அரசியலில் உடன்பாடு இல்லை என்கிறபோது, பெரும்பான்மை வாதத்தை பேசுகிறவர்கள் யார் என்று அடையாளப்படுத்துகின்ற தேவை இருக்கிறது. அவர்கள்தான், நம்முடைய எதிரிகள் என்று வெளிப்படையாக சொல்ல வேண்டியிருக்கிறது. பெரும்பான்மை வாதத்திலும் உடன்பாடு இல்லை, சிறுபான்மை அரசியலிலும் உடன்பாடு இல்லை என்றால், பெரும்பான்மை வாதத்துக்கு துணை போகிற நிலைபாடாக அமைந்து விடுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, பெரும்பான்மை பேசுகிற ஓரே கட்சி பாஜக. இதற்கு சங்பரிவார் துணை நிற்கிறது. இதனால் சிறுபான்மை சமூகத்தினர், எந்த அளவு பாதிக்கப்படுகின்றனர் என்பது உலகம் அறிந்த உண்மை. இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும், இந்த மண்ணில் அச்சத்துடனும், பீதியுடனும் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் பெரும்பான்மை, சிறுபான்மை என்ற அரசியலில் நம்பிக்கை இல்லை, இதனை எதிர்க்கிறோம் என மேம்போக்காக சொல்லிவிட்டு கடந்து போகிறார்.

இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், பவுத்த, சமண மத சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து என்ன நிலைபாட்டை கொண்டுள்ளார் என்று நம்மால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. குழப்பமான நிலையாகவே இருக்கிறது. பாசிச எதிர்ப்பை பற்றி பேசும்போது, கிண்டலடித்துவிட்டு, பாசிச எதிர்ப்பு ஒன்றுமில்லை என கடந்து போகிறார்.

பாசிஸ்ட் என யாரை குறிப்பிடுகிறார் அவர்கள் பாசிசம் என்றால், நீங்கள் பாயாசமா என்று கேட்கிறார். இதில் இரண்டு பொருள் இருக்கிறது. ஒன்று, பாசிச எதிர்ப்பு பெரிய விஷயமில்லை என்று எடுத்துக்கொள்ளலாம். மற்றொன்று, நீங்களும் பாசிஸ்ட்டுகள்தான், நீங்கள் ஒன்றும் ஜனநாயக சக்திகள் இல்லை என்று சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம். நீங்களும் பாசிஸ்ட்டுகள்தான் என்று திமுகவை மட்டும் சொல்கிறாரா அல்லது அகில இந்தியளவில் இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள 28 கட்சிகளை சொல்கிறாரா என்ற கேள்வி எழுகிறது.

இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள 28 கட்சிகளும் பாசிச அரசியலை எதிர்க்கிறோம். இதனால் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளையும் பாசிஸ்ட் என்று கேலி செய்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. பாசிச எதிர்ப்பு தேவையில்லை என்பதால், பாஜக எதிர்ப்பும் தேவையற்றது என்ற பொருளும் வெளிப்படுகிறது. ஆகவே, பாஜக எதிர்ப்பில் அவர் உறுதியாக இல்லை என்பது, அவரது உரை மூலம் உணரமுடிகிறது.

விஜய் உரையில், திமுக எதிர்ப்பு நெடி அதிகம் வீசுகிறது. திராவிட மாடல் ஆட்சியை எதிர்க்கிறார், குடும்ப அரசியல் என்று மு.கருணாநிதியின் குடும்பத்தை எதிர்க்கிறார். திமுக கூட்டணியையும், விமர்சனத்துக்குள் உட்படுத்துகிறார். திமுக மற்றும் திமுக அரசு எதிர்ப்பாகவே, அவரது உரையின் சாரம்சமாக இருக்கிறது. திமுக, திமுக அரசு, கருணாநிதியின் குடும்ப எதிர்ப்பு என்பது புதிய நிலைபாடு அல்ல. முதன்முதல் ஒலிக்கும் குரலும் அல்ல.

தமிழகத்தில் நீண்ட காலமாக ஒலித்துக் கொண்டிருக்கும் அரசியல்தான். ஆனால், மக்களிடம் எடுபடவில்லை என்பதுதான், வரலாறு நமக்கும் உணர்த்தும் உண்மையாக இருக்கிறது. விஜய்யிடம் நாம் எதிர்பார்த்த ஆக்கபூர்வமான அறிவிப்பு இல்லை, கொள்கை பிரகடனம் இல்லை, செயல்திட்டம் இல்லை என்பது ஏமாற்றமாக இருக்கிறது. கூட்டணி ஆட்சி என்ற விஜய் அறிவித்துள்ளது, திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தும் முயற்சியாகதான் பார்க்கின்றேன்.

உண்மையில், அதிகார பகிர்வு அளிப்பதாக இருந்தால், அவர் மறைமுக செயல்திட்டமாகதான் கையாண்டிருக்க வேண்டும். தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில், இந்த அறிவிப்பை ஏற்று, எந்தெந்த கட்சிகள் வருவார்கள் என்பது கேள்விகுறியாக இருக்கிறது. எந்தெந்த கட்சிக்கு எத்தனை இடங்கள், அமைச்சர் பதவியா, துணை முதலமைச்சர் பதவியா என தீர்மானிக்கப்பட்ட பிறகு அறிவிக்கப்பட வேண்டிய அரசியல் உக்தி.

திரைமறைவில் பேசப்பட வேண்டியது. வெளிப்படையாக பேசுகிறார் என்றால், திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த பார்க்கிறார் என்று பொருள். ஆகவே, அவர் எதிர்பார்த்த விளைவை ஏற்படுத்தாது. சரியான நேரத்தில் கையாளப்பட்ட விஷயம் அல்ல. யுத்த களத்தில் வீசுவதற்காக பதிலாக, வெறும் இடத்தில் கத்தியை வீசியுள்ளார். அவரது பார்வையில், இது அணுகுண்டு. இந்த அணுகுண்டு, அவருக்கு எதிராக வெடிக்க கூடியது என, நான் கருதுகிறேன்.

மத்தியில் கடந்த 1977-ல், இந்திரா காந்தியை வீழ்த்த, அனைத்து எதிர்கட்சி தலைவர்களும் ஒன்றுகூடி, சிதறி கிடந்த கட்சிகள் ஒன்றிணைந்து ஜனதா என்ற ஒரு அணி உருவானது. இதனால் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதில் கட்டாயமானது. காலத்தின் கட்டாயத்தால் கூட்டணி ஆட்சி உருவானதே தவிர, ஜனநாயக அடிப்படையில் தேசிய கட்சி, தனது கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளித்ததன் மூலம் உருவானது இல்லை. இதுபோல், காலத்தின் கட்டாயத்தில்தான் கூட்டணி ஆட்சியை உருவாக்க முடியும்.

ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள், கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளித்துக்கொண்டு, தங்களது கட்சியை மெல்ல மெல்ல நீர்த்துபோக செய்ய, விரும்பமாட்டார்கள். இதற்கு வாய்ப்பில்லை. ஆனால், கட்டாயத்தை உருவாக்க வேண்டும். போட்டியிடும் இடங்களை கூடுதலாக பகிர்ந்து கொள்கின்ற முயற்சி வேண்டும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்க விரும்பினால், அதிமுகவுக்கு குரல் கொடுக்க வேண்டும். 25 சதவீதம் வாக்குகளை கொண்ட கட்சி. இன்னும், கூடுதலாக கட்சிகள் சேர்ந்தால், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிவிட முடியும் என்ற நிர்பந்தத்தை தருகின்றபோது, இடங்களை பகிர்ந்து கொள்வதிலும், அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதிலும் ஒரு கட்டாயம் உருவாகும்.

முதல் அடியே எடுத்து வைக்காத தமிழக வெற்றிக் கழகம், அதிகாரத்தில் பகிர்வு என்பது நம்பிக்கைக்கு உரியதாக இல்லை, ஏற்புடையதாகவும் இல்லை. அதிமுக, பாஜகவை அவர் கண்டுகொள்ளவில்லை. நண்பர்களா, எதிரிகளா என்று தொண்டர்களுக்கு அடையாளப்படுத்தவில்லை. அவர், திமுகவை எதிரி என்று அடையாளப்படுத்தி உள்ளார். திமுக அரசை ஊழல் அரசு என்று விமர்சித்துள்ளார். திமுக எதிர்ப்பு நெடி, திமுக அரசுக்கு எதிரான அரசியல் என்பதுதான் மேலோங்கி இருக்கிறது. ஆனால், இது பழைய அரசியல்தான். ஏற்கெனவே பல அரசியல் கட்சிகள் பேசியதுதான். அவருக்கு எந்தளவுக்கு பயன் தரும் என்று தெரியவில்லை.

ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது விசிகவின் முதன்மையான கோரிக்கையாகும். இந்த கோரிக்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதற்கான சூழல் அகத்திலும், புறத்திலும் தணியவில்லை. மக்களும் அதற்கு தயாராகவில்லை. மக்களை தயார்படுத்தாமல், எந்த கோரிக்கையும் வெல்லாது. கூட்டணி ஆட்சிக்கான தேவை குறித்த, ஒரு விழிப்புணர்வை மக்களிடத்தில் உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது. திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்தை நான் வழிமொழிகிறேன்” என தொல் திருமாவளவன் தெரிவித்தார்.

ஆளூர் ஷாநவாஸ் சரமாரியான விமர்சனம்: விஜய் பாஜக எதிர்ப்பில் எலி..! திமுக எதிர்ப்பில் புலி..!!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய விஜய் பாஜக பாசிசம் என்றால் திமுக என்ன பாயாசமா? என்று பேசி இருந்த நிலையில், பாசிசம் என்றால் என்ன என்றே விஜய் புரியாமல் பேசுகிறார் என்று விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் தெரித்துள்ளார்.

“நான் முன்பே விஜய் திமுக எதிர்ப்பு என்ற ஒன்றை கையில் எடுத்துவிட்டால், அது அதிமுகவுக்குப் பிரச்சினையாகவே போய் நிற்கும் என்று சொல்லி இருந்தேன். இப்போது அதேநிலைப்பாட்டிற்குத்தான் விஜய் வந்து நிற்கிறார். பலரும் அப்போது என்னை விமர்சித்தார்கள். விஜய் கட்சி தொடங்கினால் அதிமுகவுக்கு எப்படி பாதிப்பு வரும் என்றார்கள். ஞாயிற்றுக் கிழமை மாநாட்டில் விஜய் பேசிய பேச்சு தெளிவாக திமுக எதிர்ப்பைப் படம்பிடித்துக் காட்டி இருக்கிறது.

இனிமேல் விஜய் திமுகவை விமர்சித்தே போராட்டங்களை நடத்துவார். இதை யார் செய்ய வேண்டும்? அதிமுக செய்யவேண்டும். அதை இப்போது விஜய் கையில் எடுத்திருக்கிறார். திமுகவின் ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதுதான் அதிமுக, பாஜக, நாதக ஆகிய கட்சிகளின் அரசியல். எனவே, விஜய் வருகை இந்தக் கட்சிகளுக்குத்தான் பின்னடைவைத் தரும். கடந்த 3 ஆண்டுகளில் அதிமுக சரியான எதிர்க்கட்சியாகச் செயல்படவில்லை. அதிமுக அலுவலகத்தில் தினம் எடப்பாடி பிரஸ் மீட் நடத்தி இருந்தால், கமலாலயம் பக்கம் ஊடகங்கள் போய் இருக்காது.

எடப்பாடி தவறவிட்ட இடத்தைத்தான் அண்ணாமலை பிடித்துக் கொண்டார். இதைப் புரிந்துகொண்டுதான் விஜய் தெளிவான முடிவுடன் வந்துள்ளார். திமுக சாடிய அவர், அதிமுகவை மறைமுகமாகக் கூட விமர்சிக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசி, அந்தத் தொண்டர்களை ஈர்க்கப்பார்க்கிறார். ஜெயலலிதா பற்றி விஜய் ஒரு வார்த்தை பேசவில்லை. ஊழலைப் பற்றிப் பேசுகிறார். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர் ஜெயலலிதா. ஊழலால் தண்டனைப் பெற்றவர்கள் உள்ள கட்சி அதிமுக. அதை ஏன் விமர்சிக்கவில்லை? திமுக குடும்பத்திலிருந்து யாரும் ஊழல் வழக்கில் தண்டிக்கப்படவில்லை. யாரும் ஜெயில்லுக்குப் போகவில்லை.

2ஜி வழக்கில் கூட வாதாடி வெளியே வந்துள்ளனர். குற்றம் நிரூபிக்கப்படவில்லை. அப்படி இருக்கும் போது ஊழல் என்று சொல் நேரடியாக திமுக பக்கம் போகிறார். திமுகவை விமர்சிக்கக்கூடாது என்று நான் சொல்லவில்லை. அது விமர்சிக்கக் கூடாத கட்சியும் அல்ல. ஆனால், திமுகவைப் பாசிச சித்தாந்தம் உள்ள பாஜகவுடன் ஒப்பிட்டுப் பேசுவதே தவறான புரிதல். பாஜகவைக் காட்டி பூச்சாண்டி காட்டுவதாகச் சொல்கிறார்.

இங்கே சிறுபான்மையினரை வைத்து அரசியல் செய்வது யார்? குடியுரிமை திருத்தச் சட்டம் யாருக்கு எதிரானது? காஷ்மீர் 370 சட்டப்பிரிவு நீக்கத்தின் பின்னணி என்ன? முத்தலாக் தடைச் சட்டம் யாருக்காகக் கொண்டுவரப்பட்டது? ராமர் கோயில் கட்டப்பட்ட இடத்தில் முன்பு என்ன இருந்தது? ஹிஜாப் எதிர்த்து சட்டம் போடுவது எதற்காக? வக்ஃபு திருத்தச் சட்டம் யாரைப் பாதிக்கும் ? இடஒதுக்கீடு முஸ்லிம் மக்களுக்கு மாநில அரசு கொண்டு வந்தால் மத்திய அரசு அதைத் தடுக்கிறது? தேர்தலில் சீட்டே கிடையாது பாஜக என்கிறது.

அமைச்சரவையில் முஸ்லிம்களையே சேர்க்க மறுக்கிறார்கள்? முஸ்லிம்களிடம் ஓட்டே கேட்க மாட்டேன் என பாஜகவினர் பரப்புரை செய்தார்கள்? இதைத்தான் பாசிசம் என சொல்கிறோம். இப்படி எங்கேயாவது ஒரு தரப்புக்கு எதிராக, மக்களுக்கு எதிராக திமுக செயல்படுகிறதா? திமுகவை எதிர்க்கிறார்? ஆனால், திமுக கொள்கைகளை விஜய் ஏற்றுக் கொள்கிறார். இது ஏன்? பாஜகவை எதிர்த்தால் தமிழ்நாட்டில் விஜய்யின் வண்டி ஓடும். அதே மாதிரி திமுக கொள்கையை ஏற்றால்தான் வண்டி ஓடும். அதைத்தான் விஜய் செய்கிறார். ஆகவே, மதவாத அரசியல் செய்பவர்கள் கொள்கை எதிரி என்கிறார். திமுக அரசியல் எதிரி என்கிறார். பாஜகவை எலி போல் எதிர்க்கிறார், திமுகவுக்குப் புலியாக எதிர்க்கிறார் விஜய் என ஆளூர் ஷாநவாஸ் விமர்சனம்.

தவெக நிர்வாகிகள் மறைவு.. இவ்வளவு நாள் உழைத்து என்ன பயன்.. ஒரு போன், மெசேஜ் கூட வரவில்லை..!

இவ்வளவு நாள் உழைத்து என்ன பயன். தலைமையில் இருந்து ஒரு போன், மெசேஜ் கூட வரவில்லை என இளைஞரணி நிர்வாகிகள் உயிரிழந்த உறவினர்கள் வருத்தம். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில்,  விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக திருச்சியைச் சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகள் காரில் செல்லும்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தவெக மற்றும் நிர்வாகிகளின் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்துக்கு விஜய் இரங்கல் தெரிவிக்கவில்லை. இதனால் கோபமடைந்த சீனிவாசனின் உறவினர்கள், உயிரே பறிபோகியும் கட்சியில் இருந்து ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. நாங்கள் இழப்பீடு எல்லாம் கேட்கவில்லை. ஒரு ஆறுதல் தான் எதிர்பார்க்கிறோம். இவ்வளவு நாள் உழைத்து என்ன பயன். தலைமையில் இருந்து ஒரு போன், மெசேஜ் கூட வரவில்லை. சீனிவாசன் உயிருடன் இருந்தபோது விஜய்காக அவ்வளவு செலவு செய்துள்ளார் அவரின் மறைவுக்கு கூட கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தமளிக்கிறது என உறவினர்கள் பேசியிருந்தார்.

இதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திருச்சிக்கு நேரில் சென்று, நிர்வாகிகளின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். அப்போது நிர்வாகிகளின் உறவினர்கள், ஆனந்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தவெக மாநாட்டில் டன் கணக்கில் தேங்கிய குப்பையால் துர்நாற்றம்..!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு நேற்று பிரம்மாண்டமாக நடந்து முடிந்த நிலையில் மாநாட்டுக்கு வந்த வாகனங்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் இன்று அதிகாலை 3 மணியளவில் தான் சரியானது. அதேபோல், மாநாட்டு திடலில் சுமார் 3 டன் அளவுக்கான குப்பைகள் சேர்ந்ததாலும், மீதமான உணவுகளை பொதுமக்கள் வீசிச் சென்றதாலும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது.

மா.சுப்பிரமணியன் தரமான பதில்: “எங்களின் நோக்கமெல்லாம் வளர்ச்சி குறித்து.. எங்களின் கவனம் சிதறாது..!”

எங்களின் கவனம் சிதறாது, சிதையாது” என திமுக மீதான தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய்யின் விமர்சனம் குறித்து மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. தவெக மாநாட்டில் விஜய் பேசும்போது, “மக்கள் விரோத ஆட்சியை ‘திராவிட மாடல் ஆட்சி’ என்று கூறி ஏமாற்றுகின்றனர். எங்கள் கட்சி வண்ணம் தவிர வேறு வண்ணத்தை எங்கள் மீது பூச முடியாது. மதசார்பற்ற சமூக நீதி கொள்கையை முன்னிறுத்தி செயல்பட உள்ளோம்” என விஜய் பேசினார்.

விஜய் விமர்சனம் செய்துள்ளது பற்றி சென்னை சைதாபேட்டையில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “திமுகவின் தேவை ஒரு முக்கால் நூற்றாண்டாய் கடந்து தமிழகத்துக்கு எத்தகைய வகையில் பணியாற்றிக் கொண்டுள்ளது என்பதை நன்றாக உணர்ந்துள்ளனர்.

திமுகவை தவிர வேறு எந்த அரசியல் இயக்கமும் சைதாப்பேட்டையில் வளர்ச்சி பணிக்கு ஒரு சிறு துரும்பைகூட எடுத்து போட்டு இருக்க முடியாது. தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளும் திமுகவால் வளர்ச்சி பெற்று உள்ளது. அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. எங்களின் நோக்கமெல்லாம் வளர்ச்சி குறித்தும், மக்களின் அவசிய தேவைகளை நிறைவேற்றுவது பற்றியும் தான். மற்றவற்றில் எங்களின் கவனம் சிதறாது, சிதையாது” என மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

 

ஆர்.பி.உதயகுமார்: விஜய்யின் தவெக மாநாடு அதிமுக போராட்டத்தின் மறுவடிவம்..!

விஜய் கட்சி தொடங்கியதால் அதிமுகவுக்கு எள் முனையளவும் பாதிப்பில்லை. அதிமுக போராட்டத்தின் மறு வடிவம்தான் விஜய்யின் தவெக மாநாடு என எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் 30-ம் தேதி தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பசும்பொன் வருகிறார். அவருக்கு அதிமுக ஜெ., பேரவை சார்பில் வரவேற்பு அளிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டமும், பயிற்சி வகுப்பும் மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கட்டிடத்தில் இன்று நடைபெற்றது.

இதில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார். அதன்பின் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது பிறந்தநாள் மற்றும் 62-வது குருபூஜையை முன்னிட்டு, பொதுச்செயலாளர் கே.பழனிசாமி வருகின்ற 30-ஆம் தேதி காலை 10:30 மணி அளவில் பசும்பொன் கிராமத்துக்கு வந்து தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். அவருக்கு ஜெ. பேரவை சார்பில் 2,000-க்கும் மேற்பட்ட தொண்டர் படையினர், சீருடை அணிந்து வரவேற்பு அளிக்கின்றனர். தொடர்ந்து பசும்பொன் வரை இந்த தொண்டர் படையினர் செல்கின்றனர்.

விஜய்யின் மாநாடு சிறந்த தொடக்கம். கொடி ஏற்றி பிறந்த குழந்தைக்கு பெயர் வைத்துள்ளார். இளைஞர்களின் தன்னெழுச்சியாக மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். ஒட்டுமொத்த தமிழகமும் திமுகவுக்கு எதிர்ப்பாக இருக்கிறது என்பதற்கு, அதிமுக முன்னெடுத்த போராட்டம் எப்படி ஒரு சான்றாக இருக்கிறதோ, அதேபோல் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடும் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

மேலும் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், உதயநிதியை துணை முதலமைச்சராக்கி, குடும்பத்தை முன்னிலைப்படுத்திய திமுக ஆட்சியை இன்றைய இளைஞர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. கருணாநிதி தனது மகனை முன்னிறுத்தியதால், ஒரு குடும்பத்தின் பிடியில் தமிழகம் சிக்கக் கூடாது என்று எம்ஜிஆர் இந்த இயக்கத்தை ஆரம்பித்தார். அப்படிப்பட்ட எம்ஜிஆரை சுட்டிக்காட்டி வழிகாட்டியாக விஜய் ஏற்றுக் கொண்டார். தமிழகத்தில் திமுக அரசுக்கு எதிராக அலை உருவாகி உள்ளது. தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் கே.பழனிசாமியை முதலமைச்சராக்க மக்கள் தயாராகி விட்டனர்.

கலைத் துறை கருணாநிதி குடும்பத்தில் சிக்கி சின்னபின்னமாகி உள்ளது. தொழில் துறையும் சபரீசன் பிடியில் சிக்கி உள்ளது. முதலமைச்சராக கே.பழனிசாமி இருந்தபோது திரைப்படம் வெளியிட அரசிடம் விஜய் ஒத்துழைப்பை நாடியபோது அவருக்கு உதவினார். இது விஜய்க்கு நன்றாகவே தெரியும். விஜய் கட்சி தொடங்கியதால் அதிமுகவுக்கு எள்முனை அளவும் பாதிப்பு இல்லை. எங்களுடைய போராட்டத்தின் மறு வடிவமாக விஜய்யினுடைய தவெக மாநாட்டை பார்க்கிறோம்,” என்று அவர் கூறினார்.

விஜய்: கொள்கை ரீதியாக பாஜக, அரசியல் ரீதியாக திமுக எங்கள் எதிரிகள்…!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் கலந்து கொண்டனர். அதில் தவெக கட்சியின் கொள்கை, கோட்பாடு, திட்டம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டன. மேலும் தவெகவின் கொள்கை வெளியிடப்பட்டது.

மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது தான் எங்களின் கொள்கை. கொள்கை ரீதியாக பாஜகவும், அரசியல் ரீதியாக திமுகவும் எங்கள் எதிரிகள். ஒரு முடிவோடு தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். இனி திரும்பி பார்க்க மாட்டேன். என் கேரியரின் உச்சத்தையும், ஊதியத்தையும் விட்டு, உங்களை மட்டுமே நம்பி வந்துள்ளேன் என விஜய் பேசினார்.