திருமண விழாவில் அண்ணாமலைக்கு சால்வை அணிவிக்க காத்திருந்த நிர்வாகி… பிடுங்கிய கே.பி. ராமலிங்கம்!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு சால்வை அணிவிக்க காத்திருந்த நிர்வாகியை அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான கேபி ராமலிங்கம் மோசமாக நடத்திய வீடியோ வெளியாகி இருக்கிறது. சேலம் மாவட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்ற திருமண நிகழ்ச்சியில் சால்வை அணிவிக்க வந்த நிர்வாகிகளை அக்கட்சியின் துணைத் தலைவர் கேபி ராமலிங்கம் அடாவடியாக தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக முன்னாள் எம்பி-யான கேபி ராமலிங்கம் திமுக முன்னாள் எம்பி-யான அழகிரியின் ஆதரவாளராக இருந்து வந்தார். இவர் 2020-ஆம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், பாஜகவில் இணைந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு பாஜகவின் மாநில துணைத் தலைவர் பதவி அளிக்கப்பட்டது. தற்போது மாநிலத் தலைவர் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராக கே.பி. ராமலிங்கம் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் பாஜக மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில் குமார் இல்ல திருமண விழா நடைபெற்றது.

இந்த திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக அண்ணாமலை வந்திருந்தார். அந்த நேரத்தில் கே.பி. ராமலிங்கமும் அங்கிருந்தார். மணமக்களை வாழ்த்துவதற்காக அண்ணாமலை மேடைக்கு சென்ற போது, கட்சியினர் யாரும் மேடையில் நிற்க கூடாது என மிரட்டுவது போல் குரல் கொடுத்துள்ளார். அந்த நேரத்தில் மணமக்கள் அருகில் நின்றிருந்த பாஜக முன்னாள் மாவட்ட பார்வையாளர் முருகேசன், அண்ணாமலைக்கு சால்வை அணிவிக்க காத்திருந்தார்.

அப்போது விரைவாக முருகேசனிடம் சென்ற கேபி ராமலிங்கம், சால்வையை பிடுங்கியதோடு கையை பிடித்து இழுத்து சென்றார். இதனால் பாஜக நிர்வாகி முருகேசன் நிலை தடுமாறி கீழே விழ சென்றார். இந்நிலையில் கேபி ராமலிங்கம் மாநில தலைவர் அண்ணாமலை முன்பாக அடாவடியாக நிர்வாகியை நடத்தியது தொடர்பான வீடியோவும் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது.

சீமான்-நாதக நிர்வாகிகள் நேருக்கு நேர் மோதல்..! நிர்வாகிகளை அடிக்க பாய்ந்த சாட்டை துரைமுருகன்..!

திருநெல்வேலியில் நாம் தமிழர் கட்சி மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டத்தில் இளைஞர் அணி பாசறை நிர்வாகி, தொகுதி செயலாளர்களை சீமான் ஒருமையில் பேசியதால் தள்ளு முள்ளு, சலசலப்பு ஏற்பட்டதால், மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகிறார். இதையொட்டி பாளையங்கோட்டை நீதிமன்றம் எதிரே உள்ள திருமண மண்டபத்தில் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டம் துவங்குவதற்கு முன்பாக பங்கேற்க வந்த நிர்வாகிகள், தொண்டர்களின் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து வாங்கி வைக்கப்பட்டது. இது அவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

இத்தனை தொடர்ந்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சீமான், வரும் சட்டமன்ற தேர்தலை சந்திப்பது குறித்து பேசினார். கட்சியின் நிர்வாகிகள் யாரும் பேச அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட இளைஞரணி தலைவர் பார்வீன் எழுந்து பேச முயற்சித்தார். அப்போது, ‘இது என் கட்சி, இங்கு நான் மட்டும்தான் பேசுவேன்’ எனக்கூறிய சீமான் அவரை நோக்கி, ‘நீ யார், சாதிய அடிப்படையில் செயல்படுகிறாய், வெளியே போ’ என அவரை ஒருமையில் திட்டினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்குநேரி சட்டமன்ற தொகுதி செயலாளர் அந்தோணி விஜய், ‘பார்வீன் கடந்த சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் நல்லமுறையில் கட்சி பணியாற்றிவர். யாரோ ஒருவர் கூறியதை வைத்து அவரை திட்டுவது சரியல்ல. சாட்டை துரைமுருகன் கூட சாதிய ரீதியில் பேசி வருகிறார். அவரை நீங்கள் கண்டிக்கவில்லையே’ எனக் கூறியதை தொடர்ந்து, அந்தோணி விஜயையும் நீயும், வெளியோ போ என சீமான் ஒருமையில் திட்டியுள்ளார்.

இதைத் தொடர்ந்து சாட்டை துரைமுருகன் கெட்டவார்த்தையால் திட்டி அவரை அடிக்க பாய்ந்ததால் கூட்டத்தில் சலசலப்பு மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைதொடர்ந்து கூட்டத்தை விட்டு மாவட்ட இளைஞரணி தலைவர் பார்வீன், நாங்குநேரி தொகுதி செயலாளர் அந்தோணி விஜய், அம்பை தொகுதி பொறுப்பாளர் சார்லஸ், ராதாபுரம் தொகுதி துணைத் தலைவர் சந்திரமோகன், பாளையங்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் அரசகுமார் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் பாதியில் வெளியேறினர்.

இந்நிலையில், திருநெல்வேலி விகேபுரம் தனியார் திருமண மண்டபத்தில் சீமானை மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதன்பின்னர் சீமான் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, ‘மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்றவிடாமல் தடுப்பதற்காக எனது தலைமையில் வரும் டிசம்பர் மாதம் மாஞ்சோலைக்கு வெளியே போராட்டம் நடத்தப்படும்’ என்றார். தொடர்ந்து, நெல்லை ஆலோசனை கூட்டத்தில் நடந்த மோதல் பற்றி கேட்டபோது, கட்சியின் தலைவர் என்பவர் அன்பான சர்வாதிகாரியாக இருந்தால் மட்டுமே கட்சியை வழி நடத்த முடியும்’ என சீமான் தெரிவித்தார்.

நிர்வாண வீடியோ வெளியிடுவதாக கூறி மிரட்டும் நாதக நிர்வாகி மீது சைபர் கிரைமில் புகார்..!

நிர்வாண புகைப்படம், வீடியோவை இணையத்தில் வெளியிடுவதாக பெண்ணை மிரட்டிய நாதக நிர்வாகி மீது திருச்சி மாவட்ட சைபர் கிரைமில் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்த பெண் திருச்சி மாவட்ட சைபர் கிரைமில் அளித்துள்ள புகாரில் நான் பி.எஸ்சி பட்டதாரி. விவாகரத்துக்குபின் திருச்சி, வயலுார் பகுதியில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் வரவேற்பாளராக 2017 முதல் 2019 வரை வேலை செய்தேன்.

அப்போது மேலாளராக இருந்தவரின் உறவினரான நாதக நிர்வாகி இலங்கை தமிழர் இளங்கோ அங்கு வந்து என்னுடன் அறிமுகமானார். லண்டனில் சூப்பர் மார்க்கெட் துவங்கவுள்ளதாகவும், அதற்கு திருச்சியில் இருந்து மளிகை பொருட்களை கொள்முதல் செய்து அனுப்பி வைக்குமாறும் கூறி மாதம் ரூ.20 ஆயிரம் கொடுத்தார். பின்னர் துபாயில் என் பெயரில் ஒரு நிறுவனம் தொடங்குவதாகவும், அதற்கு உரிமம் பெற என்னை துபாய் அழைத்தார்.

அதற்காக 2 நாட்கள் நான் துபாய் சென்றபோது நான் ஆடை மாற்றுவதையும், குளிப்பதையும் எனக்கு தெரியாமல் இளங்கோ புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார். இந்நிலையில் எனக்கும் ஈரோட்டை சேர்ந்த வாலிபருக்கும் மறுமணம் நடந்தது. கணவரை விட்டு லண்டனுக்கு வந்து விடு, இல்லாவிட்டால் ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டினார்.

இதனால் நான் கடந்த 21.7.2024 ல் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றேன். ஆனால், இரண்டாவது கணவர் காப்பாற்றி விட்டார். இளங்கோ தொடர்ந்து என் அந்தரங்க புகைப்படத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டி வருகிறார் என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின்பேரில், திருச்சி மாவட்ட சைபர் கிரைம் நாதக நிர்வாகி இளங்கோ மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி அறிவுரை: எதுவேண்டுமானாலும் நடக்கலாம்..! “திமுக கூட்டணி கட்சித் தலைவர்களை விமர்சிக்காதீர்!”

திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் குறித்து அதிமுக நிர்வாகிகள் யாரும் விமர்சிக்க வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிற மாநிலச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் உற்சாக வரவேற்பளித்தனர். பின்னர் வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று, மாவட்டம் தோறும் நடைபெறும் உறுப்பினர் சேர்க்கை மற்றும் அதிக அளவில் இளைஞர்களை கட்சிக்குள் சேர்ப்பது, அவர்களுக்கு பொறுப்புகள் வழங்குவது, தற்போது அதிமுக மீது மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பன உள்ளிட்டவை குறித்து மாவட்டச் செயலாளர்களிடம் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, “ஒவ்வொரு மாவட்டத்திலும் உறுப்பினர் சேர்க்கை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதில் மந்தநிலை தென்பட்டால் மாவட்டச் செயலாளர் மீது நடவடிக்கை பாயும். அதை மனதில் வைத்து மாவட்டச் செயலாளர்கள் செயல்பட வேண்டும். விரைவில் உட்கட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக கட்சி நிர்வாகிகள் தயாராக வேண்டும். அதனைத் தொடர்ந்து பொதுக்குழு நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்.

தற்போது அரசியல் சூழல் மாறி வருகிறது. தேர்தல் நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் குறித்து அதிமுக நிர்வாகிகள் யாரும் விமர்சிக்க வேண்டாம். திமுக ஆட்சியில் நடந்து வரும் கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்கள் உள்ளிட்ட மக்கள் விரோத நடவடிக்கைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பணிகளை மாவட்ட செயலாளர்கள் தீவிரப்படுத்த வேண்டும்” என கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.