பிரேமலதா விஜயகாந்த்: 2026 தேர்தல் தேமுதிகவின் கூட்டணி குறித்து கடலூரில் அறிவிக்கப்படும்..!படும்..!

கடலூர் தேமுதிக மாநாட்டில் யாருடன் கூட்டணி ?, எத்தனை தொகுதி ?, கட்சியின் வேட்பாளர்கள் யார் ? என்பது குறித்து அறிவிக்கப்படும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். நாமக்கல்லில் தேமுதிக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்தார்.

அப்போது, 2026 சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு குறித்து ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டோம். கட்சியின் வளர்ச்சிக்கு மட்டுமே நாங்கள் முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறோம். வரும் ஜனவரி மாதம் 9-ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் தேமுதிக மாநாடு நடத்தப்பட உள்ளது. அந்த மாநாட்டில் யாருடன் கூட்டணி ?, எத்தனை தொகுதி ?, கட்சியின் வேட்பாளர்கள் யார் ? என்பது குறித்து அறிவிக்க உள்ளோம். அதற்கு முன்பாக 234 தொகுதிகளிலும் தொகுதி பொறுப்பாளர்களை அறிவித்து, அதற்கான பணிகளை தொடங்க உள்ளோம்.

அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நான் மற்றும் விஜய பிரபாகர் ஆகியோர் சுற்றுப்பயணம் செய்து நேரடியாக தேமுதிக தொண்டர்களையும் மக்களையும் சந்திக்க உள்ளோம். அரக்கோணம் பகுதியில் கல்லூரி மாணவி ஒருவரை திமுக பிரமுகர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து விட்டன. அதனை திமுக அரசு தடுக்க தவறிவிட்டது. சமீபத்தில் பொள்ளாச்சி பாலியல் வழக்கின் மீதான தீர்ப்புக்கு நான் தலை வணங்குகிறேன்.

இன்றைய காலகட்டத்தில் பெண்களை தவறாக பயன்படுத்துகின்ற நிலை நிச்சயம் மாற வேண்டும். பெண்கள் மீதான குற்றச் சம்பவங்கள் அதிகரிக்க மது, கஞ்சா, வேலையின்மை போன்றவை காரணங்களாக உள்ளன. இளைஞர்கள் தவறான பாதையில் செல்கின்றனர். அரக்கோணம் பாலியல் புகார் சம்பவத்தில் திமுக நிர்வாகியை அந்த கட்சி பதவியில் இருந்து நீக்கினால் மட்டும் போதாது, கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்களுக்கு நிரந்தரமான தீர்வு காண முடியும். எனவே ஒட்டுமொத்த பெண்களின் சார்பாக இதுபோன்ற செயல்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த சம்பவத்தில் ஆளுங்கட்சியின் ஆதரவோடு தவறு செய்தவர், இப்போது இல்லை என்றாலும், இன்னும் சில மாதங்களில் கட்டாயம் தண்டனை பெறுவார். ஏற்கனவே, மத்திய அரசு நடத்திய நிதி ஆயோக் கூட்டங்களில் திமுக அரசின் அமைச்சர்கள் கலந்து கொண்டார்கள். சில கூட்டத்தில் அனுமதி அவர்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் இப்போது, மத்திய அரசின் ரூ.2,261 கோடி கல்வி உதவி தொகையை பெறுவதற்காக முதல்வர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதாக கூறுகிறார்.

மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய நிதியை பெற்று வருகிறாரா?, இல்லை தன்னுடைய சுய லாபத்திற்காக, கட்சியின் லாபத்திற்காக செல்கிறாரா ? என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம். அமலாக்கத் துறை, தமிழக டாஸ்மாக் ஊழல் குறித்து சோதனைகளை நடத்தி வருகின்ற நேரத்தில், அதில் சம்பந்தப்பட்டவர்கள் வெளியூர் சென்று விட்டதாக கூறுகின்றனர். ஆகாஷ் பாஸ்கர் என்பவருக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. அவர் 4 திரைப்படங்களை எடுப்பதாக அட்வான்ஸ் கொடுத்தவர்களிடமும் விசாரணை நடைபெறும். மக்கள் பணத்தை ஊழல் செய்த யாரும் இனி தப்பி விட முடியாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை பெறுவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை” என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

நாமக்கல் செல்லியாயிபாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா

நாமக்கல் மாவட்டம், காரைக்குறிச்சி ஊராட்சி, செல்லியாயிபாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. கடந்த திங்கட்கிழமையன்று வடிசோறு நிகழ்ச்சியும், செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக புதன்கிழமை காலை சுமார் 9 மணியளவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்த குடங்களுடன் மாரியம்மன் கோவிலுக்கு சென்று அங்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாரியம்மன் அம்மன், மதுரைவீரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பக்தர்கள் தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக மாரியம்மன் கோவிலை கோவிலை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் குடங்களில் கொண்டு வந்த புனித தீர்த்தங்களால் மாரியம்மனுக்கு அபிஷகம் செய்தனர்.

நான்காம் நாள் நிகழ்ச்சியான நேற்று மதியம் மாரியம்மன் கோவிலில், பக்தர்கள் அலகு குத்தி, அக்னி சட்டி எடுத்தும் மேலும் மாலை பக்தர்கள் பூக்குழியில் இறங்கி தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் மாரியம்மனுக்கு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

மேலும் ஐந்தாம் நாள் நிகழ்ச்சியான இன்று சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து படையல் போட்டு பொங்கல் பூஜையும், அதனைத் தொடர்ந்து இரவு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மாரியம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியில் பெண்கள் மாவிளக்குகளுடன் ஊர்வலமாக கொண்டு வந்து கோவில் வளாகத்தில் வரிசையாக வைத்து மாவிளக்கு பூஜை மற்றும் வாண வேடிக்கையுடன் நடைபெற உள்ளது.  அதனைத் தொடர்ந்து நாளை மாலை அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு கும்பம் கிணற்றில் விடுதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

தள்ளுவண்டி கடைக்கும் பாஸ்ட் புட் கடைக்கும் சண்டை… கடைசியில் உடைந்தது தள்ளுவண்டி காரரின் மண்டை..!

நாமக்கல் பரமத்தி சாலை போதுப்பட்டியில் கொங்குநகர் காலனியை சேர்ந்த ஜோதிமலர், அவரது மகள் நிஷாஸ்ரீ ஆகியோர் பாஸ்ட் புட் கடை நடத்தி வருகின்றனர். அதே பகுதியில் காவேட்டிப்பட்டியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் தள்ளுவண்டி கடை வைத்து இட்லி வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த மே 12-ஆம் தேதி அன்று இரவு ஸ்ரீதர் ‘பாஸ்ட் புட்’ கடைக்கு சென்று சிக்கன் ரைஸ் ஆர்டர் கொடுத்து இருக்கிறார்.

அது தயார் செய்து வருவதற்குள் கடையில் இருந்த ஜோதிமலர் மற்றும் நிஷாஸ்ரீ ஆகியோருக்கும், ஸ்ரீதருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு இருவரும் சேர்ந்து ஸ்ரீதரை தாக்க தொடங்கியுள்ளனர். இதற்கிடையில் இது குறித்து நிஷாஸ்ரீ தனது கணவர் மவுலீஸ்குமாருக்கு செல்போனில் தகவல் கொடுத்தாராம். மேலும் அப்போது சம்பவ இடத்துக்கு மவுலீஸ்குமார் தனது நண்பர் பிலிக்ஸ் என்பவரை அழைத்து வந்தாராம். அப்போது கடை முன்பு நின்று கொண்டு இருந்த ஸ்ரீதரை உருட்டு கட்டை மற்றும் சிக்கன் ரைஸ் செய்ய பயன்படுத்தப்படும் கரண்டி ஆகியவற்றை கொண்டு கடுமையாக தாக்கி உள்ளார்களாம்.

இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த ஸ்ரீதரை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.

இந்த கொலை சம்பவம் குறித்து ஸ்ரீதரின் மனைவி பூமதி நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தார்கள். அதில், இந்த கொலை சம்பவத்தில் 6 பேருக்கு தொடர்பு இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் தொழில் போட்டியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஸ்ரீதரை அவர்கள் காலி செய்தது காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.

இதையடுத்து ஜோதிமலர், நிஷாஸ்ரீ, மவுலீஸ்குமார், பிலிக்ஸ் ஆகியோரை காவல்துறை கைது செய்தனர். இதற்கிடையே இந்த வழக்கில் குற்றச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தப்பிக்க உதவிய நாமக்கல் மதுரைவீரன் புதூரை சேர்ந்த கோபிநாத் மற்றும் அடைக்கலம் கொடுத்த கொல்லிமலை தின்னனூர் நாட்டை சேர்ந்த அரவிந்த் என்பவறரையும் கைதானார். இந்த சம்பவம் நாமக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாநகரம் முழுவதும் கடையடைப்பு போராட்டம்..!

பழைய பேருந்து நிலையத்துக்குள் புறநகர் பேருந்துகள் வந்து செல்ல வலியுறுத்தி நாமக்கல்லில் கடையடைப்பு போராட்டம் நடைபெறுவதால், நாமக்கல் மாநகர பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்படுவதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.

நாமக்கல் அருகே முதலைப்பட்டியில் கடந்த 10-ஆம் தேதி புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இதனால் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த பழைய பேருந்து நிலையத்தினுள் நகர பேருந்துகள் மற்றும் மினி பேருந்துகள் மட்டுமே வந்து செல்லும் நிலையில் புறநகர் பேருந்துகள் முழுவதும் வருவதில்லை. இதன் காரணத்தால், எப்போதும் பரபரப்பாக காணப்பட்டு வந்த பழைய பேருந்து நிலையம் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால், பழைய பேருந்து நிலையத்தில் நகராட்சி கடைகளை வாடகைக்கு எடுத்த நபர்கள் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளதாக வணிகர் சங்கத்தினர் புகார் எழுப்பியுள்ளனர்.

இதற்கு தீர்வு காண வலியுறுத்தி இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்திற்கும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அழைப்பு விடுத்தது. இப்போராட்டத்திற்கு நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம், நாமக்கல் நகர ஹோட்டல்கள், பாத்திரக்கடை உரிமையாளர்கள் சங்கம், பேக்கரிகள் சங்கம், ஜவுளி வியாபாரிகள் சங்கம்,மளிகைக்கடை உரிமையாளர்கள் சங்கம், ஆட்டோமொபைல் சங்கம், மருந்து வணிகர் சங்கம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

இதன்படி இன்று காலை 6 மணி முதல் நாமக்கல் மாநகரில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. குறிப்பாக பழைய பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள், மருந்து கடைகள், பூ மார்க்கெட் உள்ளிட்டவை முற்றிலுமாக அடைக்கப்பட்டிருந்தன.

இதனால் பரபரப்பாக காணப்படும் பழைய பேருந்து நிலைய வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. இக்கடையடைப்பு போராட்டம் மாலை 6 வரை நடைபெற உள்ளது. பழைய பேருந்து நிலையத்திற்குள் புறநகர் பேருந்துகள வந்து செல்ல வேண்டும். பழைய பேருந்து நிலையத்திற்குள் கடை நடத்துபவர்களின் வாழ்வாதரம் பாதுக்காக்கப்பட என்பதை வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

நாமக்கலில் ரத்த கலரில் வந்த குடிநீர்..!!

நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில் சாய பட்டறைகள் அதிக அளவில் இயங்கி வருகின்றன. இந்நிலையில் இதன் கழிவுகள் நிலத்தடி நீரில் கலந்ததால், குடிநீர் ரத்த நிறத்தில் மாறியுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் போர்வேல் நீரை அப்பகுதிகள் மக்கள் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சமீப நாட்களாக இந்த நீரின் நிறம் மாறிக் கொண்டே வந்தது. இதன் தொடர்ச்சியாக இன்று இந்நீர் ரத்த நிறத்தில் வந்ததை கண்ட மக்கள் அச்சம் அடைந்தனர்.

ரூ.50 கோடி நில மோசடி: அதிமுக முன்னாள் எம்எல்ஏ கணவர் கைது..!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ராஜீவ் நகரை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வான பொன்.சரஸ்வதி. இவரது கணவர் பேருந்து அதிபரான பொன்னுசாமி ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலங்களை வாங்கி என்பிஎஸ் நகர் என்ற பெயரில் நகர்களை அமைத்து விற்பனை செய்து வருகிறார். இவர் நாமக்கல் அடுத்த சிலுவம் பட்டியைச் சேர்ந்த எட்டிக்கண் என்பவருக்கு சொந்தமான 5.62 ஏக்கர் நிலத்தை கடந்த 2006-ஆம் ஆண்டு போலி ஆவணங்கள் தயார் செய்து வாங்கியதாக புகார் எழுந்தது. இந்நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.50 கோடி என கூறப்படுகிறது.

அதாவது, இந்த நிலத்தில் 7,200 சதுர அடியை தனது கார் ஓட்டுநருக்கு பொன்னுசாமி விற்பனை செய்ததாகவும் புகார் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, எட்டிக்கண் தனது நிலத்தை போலி ஆவணம் தயார் செய்து கிரையம் செய்த பொன்னுசாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் செய்தார். அதன் பெயரில் காவல்துறை பொன்னுசாமி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் அவரை மாவட்ட பொருளாதார பிரிவு காவல்துறை கைது செய்ய அவரது வீட்டிற்கு சென்ற காவல்துறையை கண்ட பொன்னுசாமி கைலி அணிந்து இருப்பதால் வேறு உடை மாற்றி கொண்டு வருவதாக கூறிவிட்டு வீட்டிற்குள் சென்று பின்புறம் வழியாக தப்பி சென்றுள்ளார். நீண்ட நேரமாக காத்திருந்த காவல் துறை ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பினர். இந்நிலையில், திருப்பூரில் தலைமறைவாக இருந்த பொன்னுசாமி குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்தனர்.

நாமக்கல் அதிமுக பிரமுகர் வீட்டில் ரூ .80 லட்சம் பறிமுதல்..!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் ஆவணமின்றி 50 ஆயிரத்திற்கும் மேல் பணம் மற்றும் அதிக எண்ணிக்கையில் பரிசு பொருட்கள் எடுத்து செல்ல கூடாது என தேசிய நெடுஞ்சாலை, மாநகரின் முக்கிய பகுதிகள், மாவட்ட எல்லையில் தேர்தல் பறக்கும் படை இரவு பகலாக சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி சாலையில் உள்ள லாரி உரிமையாளர் செல்லப்பன் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர், வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். அப்போது இவரது வீட்டிலிருந்து ரூ.80 லட்சம் கண்டறிந்தனர். இதுகுறித்து விசாரணையில், அதற்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை என்பது தெரியவந்தது.

நாமக்கல் வருமான வரி சோதனையில் கட்டுக்கட்டாய் பணம்..!

தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும் வரும் 19 ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முறைகேடு இன்றி அமைதியான முறையில் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. இந்த சூழ்நிலையில் தேர்தலில் பொதுமக்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தேர்தல் ஆணையத்திற்கு தகவல் கிடைத்தது. நாமக்கல் மோகனூர் ரோடு காந்தி நகரை சேர்ந்த பேருந்து மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வரும் சந்திரசேகரன்.

மேலும், சந்திரசேகரன் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் செயலராகவும் உள்ளார். தகவலின்பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் 6 பேர் நேற்று மதியம் இவரது வீட்டுக்கு சோதனை நடத்தினர். இரவு 10 மணி வரை நடந்த சோதனையில் வீட்டில் பல இடங்களில் கட்டுக்கட்டாக பதுக்கி வைத்திருந்த ரூ. 4.8 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர்.

நாமக்கல்லில் இருந்து சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு பெங்களூரு செல்லும் 42 ஆலய மணிகள்

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் வரும் ஜனவரி 2024ல் நடைபெறும் நிலையில் பெங்களூருவை சேர்ந்த ராஜேந்திர பிரசாத் பக்தர் நாமக்கல் மாவட்டம் மோகனூர் சாலையில் உள்ள ஆண்டாள் மோல்டிங் ஒர்க்ஸ் என்ற யூனிட்டில் 48 மணிகள் தயாரிக்க கடந்த மாதம் ஆர்டர் கொடுத்துள்ளார்.

அதன்படி 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சேர்ந்து 120 கிலோ, 70 கிலோ என பல்வேறு எடைகளில் 40-க்கும் மேற்பட்ட ஆலய மணிகளை தயார் செய்துள்ளனர். மொத்தம், 1,200 கிலோ எடையுள்ள, 42 மணிகள் கட்டி முடிக்கப்பட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜைக்கு பின், பெங்களூரு அனுப்பி வைக்கப்பட்டது. மீதமுள்ள 6 மணிகள் தயாரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அரசு மருத்துவக்கல்லூரியில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீடீர் சோதனை..!

நாமக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை, மாவட்ட நியமன அலுவலர் மரு.க.ச.அருண் மற்றும் நாமக்கல் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர் முருகன் தலைமையில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கேண்டீன் மற்றும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விடுதி ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது இந்த ஆய்வின் போது உணவு தயாரிக்கும் இடம் சுத்தமாக சுகாதாரமாக பராமரிக்கப்பட வேண்டும் , தரமான மூலப்பொருட்களை கொண்டு தரமான உணவு தயாரித்து வழங்க வேண்டும், பொருள்கள் வைக்கும் இருப்பு அறை முறையாக பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

மேலும் முதலில் வந்த உணவு பொருட்களை முதலில் பயன்படுத்த வேண்டும் எனவும், விடுதியில் பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும், உணவுப் பொருளை கையாளும் பணியாளர்கள் ஏப்ரான் தொப்பி கையுறை, ஆகியவை அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. உணவு பொருளை கையாளும் பணியாளர்கள் எந்தவிதமான தொற்று நோய்க்கும் ஆளாகவில்லை என்பதற்கான மருத்துவச் சான்று அவசியம் பெற்றிருக்க வேண்டும் என அங்குள்ள பணியாளர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள்.