அக்ஷா பவன் முதியோர் இல்லத்தில் கனிமொழி அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம்

ஜனவரி 5 -ம் தேதி திமுக துணை பொது செயலாளருமான, கழக நாடாளுமன்ற குழு துணை தலைவருமான கனிமொழி MP அவர்களின் 56 வது பிறந்த நாளை திமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நீலகிரி மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் ஆலோசனைப்படி, நீலகிரி மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் நீலகிரி கூடலூர் ஆஷா பவன் முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி, மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கூடலூர் ஒன்றிய செயலாளர் அ.லியாகத் அலி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கோமதி தலைமையில் இன் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது இதில் மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் ஜெயந்தி முன்னிலை வகித்தார், மாவட்ட மகளிர் துணை அமைப்பாளர்கள் ச.பரிமளா (கூடலூர் நகர மன்ற தலைவர்) சிவகாமி (நெல்லியாளம் நகராட்சி தலைவர்) செல்வி. வள்ளி (தேவர் சோலை பேரூராட்சி தலைவர்), கௌரி (சோலூர் பேரூராட்சி தலைவர்) வெண்ணிலா (நகர மன்ற உறுப்பினர்), மாவட்ட மகளிர் தொண்டர் அணி தலைவர் சித்ராதேவி (ஓவேலி பேரூராட்சி தலைவர்) மாவட்ட மகளிர் தொண்டரணி துணைத் தலைவர் அன்ன புவனேஸ்வரி, மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர்கள் கீர்த்தனா (ஊராட்சி ஒன்றிய தலைவர்), தனபாக்கியம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு எம்பி கனிமொழி பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி இனிப்புகள் பரிமாறி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

சொன்னதை செய்த கனிமொழி..! 7ஆம் வகுப்பு மாணவியின் பெற்றோர் நெகிழ்ச்சி..!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே தாமிரபரணி ஆற்றையொட்டி அமைந்திருக்கும் மேலாத்தூர் – சொக்கப்பழங்கரை ஊராட்சியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, கடந்த 27-ம் தேதி அன்று ஆய்வு செய்தார்.

அப்போது , கண் பார்வை குறைபாடுள்ள சிறுமியைக் கண்ட கனிமொழி எம்.பி, அந்த சிறுமியின் அருகே சென்று கண் பார்வை கோளாறு குறித்து அக்கறையோடு விசாரித்தார். அதற்கு அந்த சிறுமி, தனது பெயர் ரேவதி என்றும் ஏழாம் வகுப்பு படித்து வருவதாகவும் கூறியவர், தனக்கு கண் பார்வை பிரச்சனை இருப்பதாகவும்ம் அதற்கு மருத்துவச் சிகிச்சை வேண்டும் என்று கனிமொழி எம்.பியிடம் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து சற்றும் யோசிக்காத கனிமொழி, அவ்வளவு தானே சரி செய்துவிடலாம் என நம்பிக்கை பொங்க அந்தச் சிறுமியிடம் பேசி ஊக்கமும் உற்சாகமும் அளித்தார். அதைத் தொடர்ந்து திருநெல்வேலியில் உள்ள தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனையில் சிறுமி ரேவதி அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு நேற்று அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சிறுமி ரேவதி இன்று வீடு திரும்பிய நிலையில், ஏரல் வட்டாட்சியர் கோபாலகிருஷணன் சொக்கப்பழங்கரை கிராமத்திற்கு சென்று ரேவதியிடம் நலம் விசாரித்தார்.

மேலும், கனிமொழி எம்.பியும் சிறுமி ரேவதியிடம் தொலைப்பேசியில் நலம் விசாரித்தார். இதற்குப் பதில் அளித்த அந்த சிறுமி கண் அறுவை சிகிச்சைக்கு உதவியதற்கு நன்றி கூறியதுடன், தான் வளர்ந்த பிறகு மருத்துவராக பணியாற்றுவேன் எனக் கூறினார். இதனிடையே தங்கள் மகளின் எதிர்காலம் குறித்த கவலையில் இருந்த ரேவதியின் பெற்றோர், சொன்னதை செய்த கனிமொழியால் நெகிழ்ந்துவிட்டனர்.

மத்திய மற்றும் கர்நாடகா அரசை கண்டித்து முழு அடைப்பு போராட்டம்

தமிழகத்துக்கு காவிரியில் உரிய தண்ணீரை விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், இதில் உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் காவிரி டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டமும், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டமும் நடைபெற்றன.

காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு திமுக, விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,  மதிமுக,  மனிதநேய மக்கள் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள், வணிகர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து, முழு அளவில் பங்கேற்றன. இதனால் டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு, ஆட்கள் நடமாட்டமின்றி கடைவீதிகள், முக்கிய சாலைகள் வெறிச்சோடி இருந்தன.

பாஜக கூட்டணியில் இருந்து விலகியது ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களின் முடிவு..!

சேலம் சூரமங்கலம் பகுதி அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பழனிசாமி அதிமுகவின் 2 கோடி தொண்டர்களின் உணர்வுகள் குறித்து, நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏ-க்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது கட்சியின் பொதுச் செயலாளர் எடுத்த முடிவு அல்ல. ஒட்டுமொத்த தொண்டர்கள் எடுத்த முடிவு. கூட்டணி முடிவு குறித்து பொதுச் செயலாளர் கருத்து சொல்லவில்லை என்று ஊடகங்கள் பேசுகின்றன. நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான், இறுதி முடிவு. அனைவரின் சம்மதத்துடன் மட்டுமே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தேசிய அளவில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதால், நமக்கு உடன்பாடில்லாத பிரச்சினைகளிலும், அதை நிறைவேற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். மக்களவைத் தேர்தலில் பிரதமர் யார் என்று கேட்கிறார்கள். ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பிரதமரை முன்னிறுத்தியா தேர்தலை சந்தித்தனர்? தமிழக நலன்தான் நமக்கு முக்கியம். மாநில நலனை முன்னிறுத்தியே தேர்தலை சந்திப்போம்.

தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமென்பதே எங்கள் பிரதான நோக்கம். அதிமுக எப்போதும் சிறுபான்மையினரைப் பாதுகாக்கும். அதிமுக தேசியக் கட்சி அல்ல, மாநிலக் கட்சி. எனவே, தமிழகத்தைப் பாதிக்கக் கூடிய திட்டங்களை நிச்சயம் எதிர்ப்போம். வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் பிரம்மாண்டமான கூட்டணி அமைத்து, 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம் என பழனிசாமி பேசினார்.

முதலில் ஆலோசனை கூட்டம்.. அடுத்து பாதயாத்திரை..! அண்ணாமலைக்கு ஆப்பா..!?

தமிழ்நாட்டில் பாஜக- அதிமுக இடையேயான மோதல் உக்கிரமடைந்தது. இதனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிமுக அறிவித்தது. ஆனால் டெல்லி மேலிடம் அதிமுகவை சமாதானப்படுத்த முயற்சித்ததாக கூறப்பட்டது. இதனை அதிமுக திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது. பாஜகவுடனான கூட்டணி முறிந்தது முறிந்ததுதான். இஸ்லாமியர்கள் அதிமுகவை நம்பலாம்.

இஸ்லாமியர்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என அக்கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி லோக்சபா தேர்தல் பிரசாரத்தை கூட தொடங்கிவிட்டார். இதனால் தமிழ்நாடு பாஜக பெரும் நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. வலிமையான வாக்கு வங்கி கொண்ட அதிமுகவின் இடத்தை எந்த கட்சியை வைத்து நிரப்புவது என்பது குறித்து தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒருபகுதியாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றார். டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை மட்டும் அண்ணாமலை சந்தித்தார்.  இதனிடையே அதிமுக கூட்டணி முறிவைத் தொடர்ந்து விவாதிக்க இன்று சென்னையில் தமிழ்நாடு பாஜக மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை அண்ணாமலை அறிவித்திருந்தார். தற்போது இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மேலும் அண்ணாமலையின் 3-ம் கட்ட பாதயாத்திரை நாளை முதல் தொடங்க இருந்தது. இதுவும் திட்டமிட்டபடி நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், மேட்டுப்பாளையத்தில் இருந்து அக்டோபர் 6-ந் தேதி அண்ணாமலையின் 3-வது கட்ட பாதயாத்திரை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி அடுத்தடுத்து பாஜகவின் நிகழ்ச்சிகள் ரத்து, ஒத்திவைப்பு என அறிவிக்கப்பட்டு வருவது தமிழ்நாடு பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

1962- ல் திமுக ஆட்சி.. அண்ணாமலைக்கு என்ன ஆச்சி …

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்று வரும் “என் மண் என் மக்கள்” பாதயாத்திரை கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்றது. இந்த பாதயாத்திரையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உடன், கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பங்கேற்றார். ஏராளமான பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் இதில் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கோயம்புத்தூரில் கவுண்டம்பாளையம் தொகுதியில் இருந்து கொண்டு மருதமலை முருகனை பற்றி பேசாமல் போனால் தப்பாகிவிடும். 1962 வரை மருதமலை முருகனை பார்க்க வேண்டும் என்றால் கரெண்ட் கிடையாது.. சாதாரண படிக்கெட்டில் ஏற வேண்டும்.

திமுக மருதமலை முருகன் கோயிலுக்கு மின்சாரம் கொடுக்கக்கூடாது என்பதை கொள்கையாக வைத்திருந்தார்கள். அதை உடைத்து மருதமலை முருகன் கோயிலுக்கு மின்சாரத்தை கொடுத்தவர் யார் என்றால் சின்னப்ப தேவர் ஐயாதான்.. உங்களுக்கு சின்னப்ப தேவர் ஐயாவை தெரியும். தமிழகத்திலேயே முக்கியமான சினிமா படைப்புகளை தயாரித்தவர்.

அவரே போய் மருதமலைக்கு மின்சாரம் தர வேண்டும் என்று ரிஜிஸ்டர் பணத்தை கட்டி புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் ஆட்சி காலத்தில் மருத மலை முருகன் கோயிலுக்கு கரெண்ட் வந்தது. மருதமலை முருகன் கோவிலுக்கு திமுக ஆட்சியில் மின்சாரம் வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார். ஆகவே திமுக என்பது எப்போதுமே சனாதன தர்மத்திற்கும், இந்து தர்மத்திற்கும் எதிராகவே இருக்கும் என்பதற்கு இதுஒரு உதாரணம்” என்று கூறியிருந்தார். இந்த அண்ணாமலை பேசிய பேச்சு சர்ச்சையாக மாறி இருக்கிறது.

1962-ல் திமுக ஆட்சிக்கே வராத நிலையில் திமுகதான் மருதமலை முருகன் கோயிலுக்கு மின்சாரம் தரவில்லை என்று பேசியதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பதிலடி கொடுத்து வரும் திமுக ஆதரவாளர்கள் பலர், திமுக ஆட்சிக்கு வந்ததே 1967ல் தான் என்றும், எப்படி 1962-ல் மின்சாரம் தராமல் திமுக இருந்திருக்க முடியும் என்றும் கூறி வருகிறார்கள்.

கனிம வளங்களை கொண்டு செல்லும் வாகனங்களை தடுக்கும் நடவடிக்கை மாநில அரசுக்கு இல்லை…! மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது..!

தமிழக மாணவர்களின் மருத்துவராகும் கனவைச் சிதைத்து, அவர்களின் உயிரைப் பறிக்கின்ற உயிர்க்கொல்லியாக உருவெடுத்துள்ள நீட் தேர்வைத் திணிக்கும் மத்திய பாஜக அரசு நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா தற்போது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகின்றார்.

இந்நிலையில் மத்திய பாஜக அரசு, ஆளுநரை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் மதுரை தவிர மாநிலம் முழுவதும் இன்று உண்ணாவிரதம் நடைபெறுகிறது.மதுரையில் திமுகவினரின் உண்ணாவிரதப் போராட்டம், வரும் 23-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில், மாணவ – மாணவிகள், அவா்களின் பெற்றோா்கள், கல்வியாளா்கள், சமூகச் செயற்பாட்டாளா்கள் உட்பட பலா் கலந்து கொள்ளவுள்ளனா். இதையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டத்தை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், எந்த ஒரு மேற்படிப்பாக இருந்தாலும் அதற்கு ஒரே தகுதி தேர்வு போதும் என கருணாநிதி அறிவித்தார். இதைத்தான் தி.மு.க. அரசு இன்றளவும் கடைப்பிடித்து வருகிறது. அதே சமயம் கல்வியை மத்திய பட்டியலில் சேர்த்து விடக்கூடாது. மாநில அரசின் பட்டியலிலேயே இருக்க வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வு தேவையற்றது.

இது மாணவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் உயிரையும் பறித்து வருகிறது. மேலும் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு கனிம வளங்கள் கொண்டு செல்வது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. கனிம வளங்களை கொண்டு செல்லும் வாகனங்களை தடுக்கும் நடவடிக்கை மாநில அரசுக்கு இல்லை. இதனை தடுக்க மத்திய அரசு தான் முன்வர வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

அண்ணாமலை: ‘வாக்குறுதி கொடுத்துவிட்டு ஏமாற்ற பிரதமர் திமுககாரர் அல்ல’

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவின் குடும்ப ஆட்சி பயிற்சி பாசறையில் வழக்கம்போல யாரோ எழுதிக் கொடுத்ததை பார்த்து, அதில் என்ன எழுதியிருக்கிறது என்றே தெரியாமல் முதலமைச்சர் மு.க.  ஸ்டாலின் ஒப்பித்துவிட்டு போயிருக்கிறார்.

கடந்த 1964-ம் ஆண்டு புயலில் சீர்குலைந்த தனுஷ்கோடி நகரை சீரமைக்க, பிரதமர் நரேந்திர மோடிதான் முதன்முதலாக முயற்சி எடுக்கிறார் என்பதை மு.க. ஸ்டாலின் தெளிவாக ஒப்புக்கொள்கிறார். 1964-க்கு பிறகு பலமுறை மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக, மருமகன், பேரன், மகளுக்கு மத்திய அமைச்சர் பதவியும், எம்.பி. பதவியும் வாங்கிக் கொடுப்பதில் மட்டுமே குறியாக இருந்ததால், தமிழக மக்களின் பிரச்சினை குறித்து பேசவோ, செயல்படவோ நேரம் இல்லை என்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்புபுயலால் பாதிக்கப்பட்ட தனுஷ்கோடிக்கு, பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில்தான் சூரிய ஒளி சக்தி மூலம் மின்சார வசதி வந்தது என்பதை மறந்துவிட கூடாது. ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு சாலை வசதி ஏற்படுத்தியதும் பிரதமர் நரேந்திர மோடிதான். மத்திய அரசில், தொழில் துறை, கப்பல் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் பதவியை கேட்டுப் பெறத் தெரிந்த திமுகவுக்கு, 1964-ல்புயலால் பாதிக்கப்பட்ட தனுஷ்கோடி ஞாபகம் வராதது அதிசயமே.

மத்திய அரசில் மீனவர்களுக்காக தனித்துறை அமைத்து, பல்வேறு நலத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தி வருகிறார். காசிபோல ராமேசுவரமும் விரை வில் உலகப் புகழை பெறும். வாக்குறுதி கொடுத்துவிட்டு மக்களை ஏமாற்ற, பிரதமர் நரேந்திர மோடி ஒன்றும் திமுககாரர் அல்ல என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கலைஞர் கருணாநிதி 5-ம் ஆண்டு நினைவு நாள்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பின்னர் அங்கிருந்து பேரணியை தொடங்கினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான இந்த பேரணியில் தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, பொன்முடி, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், மஸ்தான், தங்கம் தென்னரசு, சேகர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி உட்பட திமுக அமைச்சர்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக மூத்த நிர்வாகிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த பேரணியில் பங்கேற்றனர். சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் சென்ற இந்த பேரணி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் நிறைவடைந்தது. அங்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உட்பட அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

கருணாநிதியின் புகழஞ்சலியில் மு.க. ஸ்டாலின்…. “இந்தியா”க்கு பாதை அமைத்ததே தமிழகம்..

2024 தேர்தல் இந்தியாவில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா..? இருக்கக்கூடாதா..? என்பதற்கான தேர்தல் என கருணாநிதிக்கு எழுதிய புகழஞ்சலியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

அவர் எழுதியுதில்,
“வங்கக் கடலோரம் வாஞ்சை மிகு தென்றலின் தாலாட்டில்
தமிழ்த்தாயின் தலைமகன்
பேரறிஞர் அண்ணாவுக்கு பக்கத்தில்
கனிந்த இதயத்தோடு ஓய்வெடுக்கும் தலைவர் கலைஞரே!
நூற்றாண்டு விழா நாயகரே!
தந்தையே!
உங்களைக் காண ஆகஸ்டு 7
அதிகாலையில் அணி வகுத்து வருகிறோம்!

உங்களுக்கு சொல்ல ஒரு நல்ல செய்தி கொண்டு
வருகிறேன்…
“உங்கள் கனவுகளை எல்லாம்
நிறைவேற்றி வருகிறோம் தலைவரே!” –
என்பதுதான் அந்த நல்ல செய்தி!

நீங்கள் இருந்து செய்யவேண்டியத் தான்
நான் அமர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்.

“பாதிச் சரித்திரத்தை நான் எழுதிவிட்டேன்;
மீதியை என் தம்பி கருணாநிதி எழுதுவான்’ என்றார்
காலம் வழங்கிய
இரண்டாவது வள்ளுவன் எம் அண்ணா.
95 வயது வரை நாளெல்லாம் உழைத்தீர்கள்.
இனம் – மொழி – நாடு காக்க
ஓய்வெடுக்காமல் உழைத்தீர்கள்.
உங்கள் உழைப்பின் உருவக வடிவம் தான்
இந்த நவீன தமிழ்நாடு.

நீங்கள் உருவாக்கிய நவீன தமிழ்நாட்டை
இடையில் புகுந்த
கொத்தடிமைக் கூட்டம் சிதைத்தன் விளைவாக –
தாழ்வுற்றது தமிழ்நாடு.
தாழ்வுள்ள தமிழ்நாட்டை மீட்டெடுத்து
மீண்டும் உங்கள் ஆட்சி காலத் தமிழ்நாடாக
உருவாக்கி வளர்த்தெடுக்க
எந்நாளும் உழைத்து வருகிறேன்.

“ஸ்டாலின் என்றால் உழைப்பு.. உழைப்பு.. உழைப்பு”
என்றீர்கள்.
அந்த கரகரக் குரல் தான்,
கண்டிப்புக் குரலாக என்னை உழைக்க வைத்துக்
கொண்டிருக்கிறது.

“எனக்குப் பின்னால்,
இனமானப் பேராசிரியருக்குப் பின்னால்
யாரென்று கேட்டால்
இங்கே அமர்ந்திருக்கும் ஸ்டாலின்” என்று
எந்த நம்பிக்கை வைத்து சொன்னீர்களோ
அந்த நம்பிக்கையைக் காக்கவே உழைத்துக்
கொண்டிருக்கிறேன்.

எட்டுக் கோடித் தமிழ் மக்களும் ஏதாவது
ஒருவகையில் பயனடையும் திட்டத்தத் தீட்டி
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை
தித்திக்கும் மக்களாட்சி மாண்போடு நடத்தி வருகிறோம்.

ஒற்றைக் கையெழுத்து போட்டால்
அது கோடிக்கணக்கானவர்களை
மகிழ்விக்கிறது.
ஒரே ஒரு உத்தரவு
இலட்சக்கணக்கானவர்களை இரட்சிக்கிறது.
தமிழ்நாடு தலை நிமிர்கிறது.
இந்தியாவின் தலைசிறந்த மாநிலமான உயர்கிறது.
உங்கள் கனவுகள் நிறைவேறும் காலமாக ஆகிவிட்டது,
தலைவரே!

நீங்கள் இருந்து செய்ய வேண்டியதைத் தான்
நாம் அமர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்.
இதற்கு இடையில் –
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்
எங்களை எதிர்நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
வழக்கமாய்
ஐந்தாண்டுக்கு ஒரு முறை வரும் தேர்தல் அல்ல இது.
இந்தக் கட்சி ஆட்சியா?
அந்தக் கட்சி ஆட்சியா? – என்பதற்கான விடையல்ல
இந்த தேர்தல்.
இந்தியாவின் ஜனநாயகம் இருக்க வேண்டுமா?
இருக்க முடியாதா? – என்பதற்கான தேர்தக் இது.

நீங்கள் சொல்வீர்களே –
“தமிழ்நாட்டில் கால் பதித்து நின்று
இந்தியாவுக்காகக் குரல் எழுப்ப வேண்டும்’ – என்று!
அப்படித் தான் INDIA-வுக்கான குரலை எழுப்பத்
தொடங்கி இருக்கிறோம்!

அனைத்துக்கும் தொடக்கம் தமிழ்நாடு.
INDIA-வுக்கான பாதை அமைத்ததும் தமிழ்நாடு.
இந்து இந்தியா முழுமைக்கும் பரவி விட்டது.

சுயமரியாதை –
சமூக நீதி –
சமதர்மம் –
மொழி, இன உரிமை –
மாநில சுயாட்சி –
கூட்டாட்சி இந்தியா – என்ற எங்களாது விரிந்த
கனவுகளை
இந்தியா முழுமைக்கும் அகலமாக விரித்துள்ளோம்.

திமுக மாநிலக் கட்சி தான்!
அனைத்து மாநிலங்களுக்கும்
உரிமையைப் பெற்றுத் தரும் கட்சியாக
இருக்க வேண்டும் என்ற
உங்களது அந்தக் கனவும் நிறைவேறப் போகும்
காலம்..
வரும் காலம்!

உங்கள் நூற்றாண்டு –
உங்களாது கனவுகளை நிறைவேற்றி தரும் ஆண்டு.

நீங்கள் உருவாக்கி
நவீன தமிழ்நாட்டை
நீங்களே ஆள்கிறீர்கள்!
நீங்களே வாழ்கிறீர்கள்!
நீங்களே வழிநடத்துகிறீர்கள்!
உங்கள் வழி நடக்கும்
எங்கள் வெற்றிக்கு வாழ்த்துங்கள்!
வென்று வந்து காலடியில் அதனை வைக்கின்றோம்
தலைவரே!” என்று குறிப்பிட்டு உள்ளார்.