சென்னை விமான சாகச நிகழ்ச்சியில் 240 பேர் மயக்கம்..! சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழப்பு..!

சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, நேற்று நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்காக 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. வெயில், நெரிசலால் 240 பேர் மயக்கம் அடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர்.

சென்னை மெரினா கடற்கரையில் தற்காலிக முகாமில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு 93 பேர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி, ஓமந்தூரார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 10-க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் கார்த்திகேயன், தினேஷ்குமார், ஜான் பாபு, சீனிவாசன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் மெரினா காமராஜர் சாலை அருகே மயங்கி கிடந்த 55 வயது நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படாமல் இருக்க போக்குவரத்து காவல்துறை போக்குவரத்தில் மாற்றங்கள் செய்திருந்தனர். குறிப்பாக மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அதற்கு பதிலாக வேறு சாலைகளை பயன்படுத்த காவல்துறை அறிவுறுத்தியிருந்தனர். ஆனாலும், சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விமான சாகச நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே போக்குவரத்து நெரிசல் படிப்படியாக உயர்ந்தது. 11 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி 1 மணிக்கு முடிந்தது. அதன்பின், ஒரே நேரத்தில் பொதுமக்கள் கிளம்பியதால் மெரினா காமராஜர் சாலை, சாந்தோம், பட்டினப்பாக்கம், அடையார் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, ரத்னா கபே, ஐஸ்அவுஸ் சந்திப்பு, டாக்டர் நடேசன் சாலை, ஆர்.கே.சாலை, வி.எம்.தெரு, மந்தைவெளி, மயிலாப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் நெரிசலால் வாகன ஓட்டிகள் திக்குமுக்காடினர். உட்புற சாலைகளை பயன்படுத்தலாம் என சென்ற வாகனங்கள் நெரிசலில் சிக்கின. தொடர் வாகன நெரிசலால் அண்ணா சாலை, சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், வேப்பேரி, சென்ட்ரல், பாரிமுனை என மொத்தத்தில் சென்னையே வாகன நெரிசலால் ஸ்தம்பித்தது.

ரயில்கள், பேருந்துகளில் கூட்ட நெரிசலில் படிகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்த மக்களின் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் ‘மோசமான ஏற்பாடு’ என்று தலைப்பிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை ‘டேக்’ செய்து பலர் பதிவிட்டு வருகின்றனர். அந்த போட்டோக்களும், வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.

Formula 4: சென்னையில் மாலை நடைபெற இருந்த கார் பந்தயம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தாமதம்..!

தெற்காசியாவிலேயே முதல் முறையாக 6 அணிகள் பங்கேற்கின்றன. 3.5 கிமீ தூரம் கொண்ட கார் பந்தயம் சென்னையில் இன்றிரவு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில் 19 சாலை திருப்பங்கள் உள்ளன. இந்தியாவில் பார்முலா-4 இரவு நேர தெரு கார் பந்தயம் நடப்பது இதுவே முதல் முறையாகும். உலகளவில் இந்த பந்தயத்தை நடத்தும் 15-வது நகரம் என்ற பெருமை சென்னைக்கு கிடைத்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் மாலை நடைபெற இருந்த கார் பந்தயம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பந்தய நேரம் தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்த தகவல்,“தொழில்நுட்பக் கோளாறுகளால் சென்னையில் நடைபெறும் இந்திய பந்தய விழாவில் இன்றைய நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படும் என்பதை எங்கள் ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். சுற்றியுள்ள எதிர்பார்ப்பு மற்றும் உற்சாகத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம், இதைத் தீர்க்க நாங்கள் விடாமுயற்சியுடன் செயல்படுகிறோம்.

அனைவருக்கும் சிறந்த அனுபவத்தை நாங்கள் உறுதி செய்வதால் உங்கள் பொறுமை மற்றும் ஆதரவை நாங்கள் பாராட்டுகிறோம். புதுப்பிக்கப்பட்ட அட்டவணையை மாலை 5 மணிக்குள் பகிர்வோம், காத்திருங்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு தயக்கத்துடன் சென்றேன்..! இறுதியில் தமிழ்நாட்டின் மீது காதல் கொண்டேன்..!!

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற சஞ்சய் கிஷன் கவுல் வருகிற டிசம்பர் 25-ம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில் வருகிற திங்கட்கிழமை முதல் உச்ச நீதிமன்றத்திற்கு குளிர்கால விடுமுறை என்பதால் நேற்று அவரது கடைசி பணி நாளாக அமைந்தது. இதை முன்னிட்டு உச்ச நீதிமன்ற பார் சங்கம் சார்பில் நேற்று பாராட்டு விழா நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பேசுகையில், நீதிமன்றங்கள் நீதியின் கோவில்கள் என்று நான் எப்போதும் நம்புகிறேன். மேலும் அவை எப்போது வேண்டுமானாலும் கதவைத் தட்டுவதற்கு வழக்குதாரர்களுக்கு திறந்திருக்க வேண்டும். வழக்காடுபவர்கள் சோர்வாகவும் களைப்பாகவும் இருக்கிறார்கள். கடைசி முயற்சியாக இருக்கும் இந்த உச்ச நீதிமன்றத்தை அவர்கள் அடையும் நேரத்தில் அது திறந்து இருக்க வேண்டும்.

நீதி கிடைப்பது எல்லா நேரங்களிலும் தடையின்றி இருப்பது உச்ச நீதிமன்றத்தின் பெருமையாகும். தங்கள் தகராறுகளைத் தீர்ப்பதற்காக இந்த நீதிமன்றத்தை அணுகிய வழக்குரைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் நீதி வழங்கும்போது நம் மனதில் முதன்மையாக இருக்க வேண்டும்.

ஒரு வழக்குரைஞர் தனது வழக்கின் முடிவை அறிய காலவரையின்றி காத்திருக்க வைக்கக்கூடாது என நான் நம்புகிறேன். நீதிபதியாக பெரும்பாலும் சரியான முடிவு கண்டுபிடிக்கப்படுவது இல்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் சிறந்த முடிவு மட்டுமே உள்ளது. ஒரு முடிவெடுப்பதற்கு உங்களுக்குள் தைரியத்தையும் நம்பிக்கையையும் கண்டுபிடிக்க வேண்டும். ஒருமுறை நீங்கள் முடிவு செய்தால், திரும்பிப் பார்க்காதீர்கள். சென்னை உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக மாற்றப்பட்ட செய்தியை கேட்டதும் எனக்கு மகிழ்ச்சி இல்லை.

ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நான் பணியாற்றிய காலம் எனது நீதித்துறை வாழ்க்கையின் மிகவும் நிறைவான காலமாக அமைந்தது,. தமிழ்நாட்டு மக்களின் பொதுவான மனப்பான்மை மிகுந்த பணிவு மற்றும் ஏற்றுக்கொள்ளும் தன்மை கொண்டது. நான் தயக்கத்துடன் சென்னைக்குச் சென்றேன். ஆனால் இறுதியில் தமிழ்நாட்டின் மீது காதல் கொண்டேன். அங்கு நான் மிகவும் நீடித்த நட்பைக் கண்டேன். அதை இன்றும் நான் தொடர்ந்து போற்றி வருகிறேன். இவ்வாறு சஞ்சய் கிஷன் கவுல் உருக்கமாக பேசினார்.

36 மணி நேரம் தொடர்ந்து கனமழை பொழிகின்ற போது… சென்னை மட்டுமல்ல உலக நகரங்கள் எல்லாமே பாதிக்கப்படுகிறது…!

சென்னையில் ஒவ்வொரு முறை பெருமழை மற்றும் வெள்ளம் வரும்போது பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் நீர் வழித்தடங்கள் முற்றிலும் மாயமானதே இதற்கு முக்கிய காரணம் ஆகும். ஒரு நீர் நிலையில் இருந்து இன்னொரு நீர் நிலைக்கு இடையே இருந்த இணைப்புகள் மாயமான நிலையில் அவற்றை உருவாக்க அரசு முன்னுரிமை அளித்து பணிகளை செய்தது. இதேபோல் கால்வாய்களில் இருந்த அடைப்புகளை அகற்றுவது, ஆகாயத்தாமரைகளை அகற்றுவது, கால்வாய்களை செப்பனிட்டு தடுப்பு சுவர்கள் அமைப்பது, பாலங்கள் தேவைப்படும் இடங்களில் அமைப்பது போன்ற பணிகளை சென்னை மாநகராட்சி செய்து வந்தது.

இந்நிலையில் பணிகள் பாதி நடந்து கொண்டிருந்த நிலையில் 36 மணி நேரம் மிகப்பெரிய அளவில் மழை பெய்த காரணத்தால், மிக மோசமான வெள்ள பாதிப்பு சென்னையில் ஏற்பட்டிருக்கிறது. இந்த பாதிப்பில் இருந்து சென்னை படிப்படியாக மீண்டு வருகிறது. பல இடங்களில் தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. மின்சாரம் 4 நாட்களுக்கு பிறகு வந்துள்ளது. சில இடங்களில் ஐந்து நாட்களுக்கு பிறகு இன்று தான் மின்சாரம் வந்துள்ளது. இந்நிலையில் இன்னும் சில இடங்களில் வெள்ளத்தை வடிய வைக்கும் பணிகளும், மின்சாரம் கொடுக்கும் பணிகளும் நடந்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் வெள்ளத்தடுப்புக்கு என்ன செய்யலாம் என்பது குறித்து நீர் மேலாண்மை நிபுணர் பேராசிரியர் ஜனகராஜன் பிரபல தமிழ் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், புயல் மற்றும் கனமழை பொழிகின்ற போது, சென்னை மட்டுமல்ல உலக நகரங்கள் எல்லாமே பாதிக்கப்படுகிறது. காலநிலை மாற்றம் காரணமாக குறுகிய நாட்களில் அதிக மழை பெய்கிறது. இனி இதை தடுக்க முடியாது. இது காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டது.

சென்னை நகரம் சமதளமான நகரம். சென்னையில் பள்ளிக்கரணை போன்ற பகுதிகள் கடல் மட்டத்திற்கு கீழ் உள்ளது. எனக்கு தெரிந்து தெற்கு ஆசியாவில் இதுபோல் வடிகால் கட்டமைப்பு நகரம் இல்லை. சென்னையில் வடிகால் அமைப்பு மிகவும் சிறப்பாக உள்ளது. சென்னையில் 3 ஆறுகள் உள்ளன 12 பெரிய கால்வாய்கள் உள்ளன.. 18 சிறிய கால்வாய்கள் உள்ளன. இன்றைய வெள்ளப்பாதிப்புக்கு இன்றைக்கு இது காரணம் என குறிப்பிட்டு சொல்ல முடியாது. சென்னைக்குள் இருந்த ஏரிகள் பலவற்றை இன்றைக்கு காண முடியவில்லை.

சென்னையின் கட்டமைப்பு நகர விரிவாக்கத்திற்காக பாழ்படுத்தப்பட்டு விட்டது. வளர்ச்சிக்காக ஏரிகள், வாய்க்கால்கள், காடுகள் எல்லாவற்றையும் சென்னையில் இழந்துவிட்டோம்… இனி அதை சரி செய்யவே முடியாது. முழுவதுமாக தண்ணீர் இனி வடிகால் வழியாகவே செல்லும் என ஒரு போதும் சொல்ல முடியாது.. எல்லா பகுதியிலும் சிமெண்ட் போடுவதால் 95 சதவீதம் நீர் வெள்ளமாகத்தான் செல்லும்.புதிய நகரம் உருவாக்கினாலும் சென்னையில் வெள்ளம் இருக்காது என சொல்ல முடியாது.. வெள்ளம் ஏற்பட்ட போது எல்லாம் என்ன கற்றோம் என்ற படிப்பினை நம்மிடம் இல்லை.

சென்னையில் 4,000 கோடி அல்ல 40,000 கோடி செலவு செய்தாலும் இதுபோன்ற மழைக்கு ஒன்றும் செய்ய முடியாது . அதேநேரம் சென்னையில் 4,000 கோடி செலவு செய்து வடிகால் அமைப்புகள் ஏற்படுத்தியது பயன் அளித்துள்ளது. இரு வடிகால் கட்டமைப்புக்கு இடையே இணைப்பை ஏற்படுத்தினார்கள். வடிகால்கள் மிஸ்ஸான இடங்களில் முன்னுரிமை அளித்து வடிகால்களை உருவாக்கினார்கள். 100 சதவீதம் பிரமாதமாக செய்து விட்டார்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் முடிந்த முயற்சியை செய்திருக்கிறார்கள்.

ஆனால் என்ன தவறு நடந்ததது என்றால், புயலின் தாக்கத்தை குறைத்து மதிப்பிட்டு விட்டோம். குறுகிய கால நடவடிக்கையாக இனி ஆறுகளை இருந்தபடி விரிவாக்கம் செய்ய வேண்டும். வடிகால் கால்வாய்களை எல்லாவற்றையும் சரியாக பராமரித்து வைக்க வேண்டும். ஆறுகள் கடலில் சேரும் இடங்கள் எப்போதும் தடையில்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும்.

காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஏரிகளில் நீரை சேமிக்க வேண்டும். பல்லாவரம் ஏரியை இரண்டாக்கி விட்டார்கள். சாலை அமைக்க அனுமதி கொடுத்தது யார்? இனி அதுபோல் ஒரே ஒரு ஏரியை உருவாக்க முடியுமா? உருவாக்கவே முடியாது. இனி அதுபோல் ஏரியை உருவாக்க இடமே இல்லை.. சென்னையின் 3-வது மாஸ்டர் பிளானில் சுற்றுச்சூழலை காக்க என்ன செய்திருக்கிறார்கள்… பரந்தூர் விமான நிலைய திட்டத்தை பொறுத்தவரை 11 ஏரிகள் அந்த பகுதியில் உள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளும் உள்ளது. பரந்தூர் டூ சென்னை வளர்ச்சியால் இன்னும் வெள்ள பாதிப்பு அதிகமாகவே செய்யும்.

பொதுமக்கள் மழை நீரை சேமிக்க உறுதியேற்க வேண்டும். அரசின் எல்லா துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். எப்போதும் செயல்பட வேண்டும். வருடம் முழுவதும் வெள்ள பாதிப்பை தடுப்பதை பற்றி சிந்திக்க வேண்டும். அரசு பேசிக்கொண்டே இருக்க வேண்டும். அதை செயல்படுத்தவும் வேண்டும். பேரிடர் வரும் போது மட்டுமல்லாமல் எல்லா காலமும் இதை செய்ய வேண்டும். அப்படி இருந்தால் பாதிப்பை ஓரளவு குறைக்கலாம்” என தெரிவித்தார்.

அண்ணாமலையிடம் சீரிய இளைஞர்… வெறும் 50 பேருக்கு சாப்பாடு கொண்டு வருகிறார்.. எப்படி பத்தும்..

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் ஆந்திராவில் நேற்று கரையை கடந்தாலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் , திருவள்ளூர் மாவட்டங்களை சூறையாடிவிட்டு சென்று விட்டது. சென்னையில் பேயாக பெருமழை கொட்டித்தீர்த்துள்ளது. இதனால் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மிக்ஜாம் புயலால் பெருமழை வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு சில நாட்கள் ஆகும்.

நகர் பகுதிகளில் வெள்ளம் வடிந்தாலும் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. பள்ளிகள், கல்லூரிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளன. இந்நிலையில் சென்னையில் மழை ஓய்ந்து 3 நாட்களாகியும் மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடியயும் இல்லை நிலைமை இன்னும் மாறவில்லை.

ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த திராவிட கட்சிகள் ஊழலும் லஞ்சமும் கரைபுரண்டு ஓடியாதல் சென்னையின் இந்த அவல நிலைக்கு காரணம் என நடுநிலையானவர்களும் அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி திமுகவையும் வறுத்தெடுத்து கொண்டுள்ளனர். மேலும் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் பொதுமக்கள் அத்திவாசிய பொருட்கள் இன்றி தவித்து வருகின்றனர்.

அவர்களுக்கு சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள் உதவிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வேளச்சேரி பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார். வேளச்சேரி ஏஜிஎஸ் காலனி பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது பெண் ஒருவர் அண்ணாமலையிடம்.. நாங்க சொல்றதை எங்கயாவது கேட்குறீங்களா ? யாரவது நின்று எங்கள் பேச்சை கேட்குறீங்களா? நீங்க பாருங்க நான் கொடுத்த கோரிக்கையை கூட படிக்கவில்லை. ஆனால் கிளம்பி செல்கிறீர்கள்.

மாறி மாறி நீங்கள் போட்டோதான் எடுக்கிறீர்கள். என்னுடைய பிரச்னையை உங்களிடம் சொல்ல வருகிறேன் ஆனால் கேட்காமல் உள்ளீர்கள் என்று அந்த பெண் கூறியுள்ளார். இதை கேட்ட அந்த பெண்மணி நாங்கள் வைக்கும் கோரிக்கையை நீங்கள் ஏற்க மாட்டீர்கள். ஆனால் இப்போது சாப்பாடு மட்டும் போடுவீர்களா.. உங்கள் சாப்பாடும் வேண்டாம்.. ஒன்றும் வேண்டாம்.. நீங்கள் செல்லுங்கள்., என்று கடுமையாக பேசி உள்ளார்.

மேலும் இளைஞர் ஒருவர்.. வெறும் 50 பேருக்கு சாப்பாடு கொண்டு வருகிறார்.. எப்படி பத்தும். இங்கே 1500 வீடுகள் இருக்கு. 50 பேருக்கு சாப்பாடு கொண்டு வந்துட்டு நான் உதவி செஞ்சிட்டேன் அப்படின்னு சொல்லிக்கிறாங்க? இது எல்லாம் எப்படிங்க போதுமாக இருக்கும்? நீங்களே சொல்லுங்கள். இங்கே அத்தனை பேர் சாப்பிடம்ல் இருக்கோம். ஆனால் இவங்க பாருங்க போட்டோ எடுக்குறாங்க, என்று கோபமாக பேசி உள்ளார்.

போலி ஆவணம் தயாரித்து ரூ.1 கோடி நிலம் மோசடி..!

சென்னை, ஆவடி காமராஜர் நகர் சேக்காடு மெயின் ரோட்டை சேர்ந்த ராஜசேகரன் (வயது 55). இவருக்கு சொந்தமான இடம் சேக்காடு பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனியார் வங்கியில் அடமானம் வைத்துள்ளார். இதையடுத்து ராஜசேகரன் அவரது இடத்திற்கான வில்லங்க சான்று பெற்று பார்த்தபோது, அவரது இடம் வேறு இரண்டு பேருக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜசேகரன் இதுகுறித்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் விசாரித்துள்ளார்.

இந்நிலையில் இவருக்கு சொந்தமான அந்த இடத்தை ஆவடி அடுத்த சேக்காடு கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த யுவராஜ் மற்றும் அவரது நண்பர்களான பூஞ்சோலை, இன்பகுமார், சரத்குமார் ஆகிய 4 பேரும் சேர்ந்து ராஜசேகரன் பெயரில் உள்ள நிலத்தை ஆள் மாறாட்டம் செய்து போலி ஆவணங்கள் தயார் செய்து 2 நபர்களுக்கு இடத்தை பிரித்து ரூ.15 லட்சத்திற்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து ராஜசேகரன் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில், ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில், துணை ஆணையர் பெருமாள் ஆலோசனைப்படி, கூடுதல் துணை ஆணையர் முத்துவேல் பாண்டி மேற்பார்வையில், ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலி ஆவண தடுப்பு பிரிவு ஆய்வாளர் வள்ளி இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

அதன்பேரில் இந்த வழக்கில் தொடர்புடைய ஆவடி அடுத்த சேக்காடு மெயின் ரோடு காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த பூஞ்சோலை என்பவரை கைது செய்து விசாரித்ததில் ராஜசேகரன் இடத்தை 4 பேரும் சேர்ந்து போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறை பூஞ்சோலை மீது வழக்குப்பதிவு செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் 3 பேரை காவல்துறை வலைவீசி தேடி வருகின்றனர்.

அரசு மருத்துவமனையில் கூட்டு மருத்துவ சிகிச்சை மையம்

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏ.ஆர்.டி. கூட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கும் மையத்தை திறந்து வைத்து, ரூ.32.5 லட்சம் செலவில் 5 ரத்த சுத்திகரிப்பு அலகுகளுடன் புதிய ரத்த சுத்திகரிப்பு மையத்தையும் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பின்னர் நகர்புறங்களில் சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவத் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத் திட்ட இயக்குனர் ஹரிஹரன், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், ஓமந்தூரார் அரசு மருத்துவமனை டீன் டாக்டர் அரசி ஸ்ரீவத்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ரோந்து பணியின் போது உதவி ஆய்வாளரை சுற்றிவளைத்து தாக்கிய மாணவர்கள்

சென்னை ரோந்து பணி கொடுங்கையூர் மூலக்கடை அடுத்த அண்ணா நகர் 5-வது அவென்யூவைச் சேர்ந்த பாலமுருகன். இவர் ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் தண்டையார்பேட்டை சுந்தரம்பிள்ளை நகர் வைத்தியநாதன் மேம்பாலம் அருகே சாதாரண உடையில் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது மேம்பாலம் கீழே சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த 4 பேரை உதவி ஆய்வாளர் பாலமுருகன் அழைத்து விசாரணை நடத்தியபோது, போதையில் இருந்த அந்த கும்பல் பாலமுருகனிடம் ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அந்த 4 பேரும் சேர்ந்து சுற்றிவளைத்து உதவி ஆய்வாளர் பாலமுருகனை திடீரென கற்களாலும், கைகளாலும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் பாலமுருகனுக்கு முகத்தில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டதில், மூக்கு தண்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவல் அறிந்த காவல்துறை சம்பவ இடத்துக்கு சென்று அவரை மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் சக்திவேல் நேரில் சந்தித்து உதவி ஆய்வாளர் பாலமுருகனுக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் ஆர்.கே.நகர் காவல்துறை தனிப்படை அமைத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, விசாரணை நடத்தி தாக்குதலில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த 4 சிறுவர்களை கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் 4 பேரும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்பதும், 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் என்பதும் தெரியவந்தது.

ரூ.3,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய கண்காணிப்பாளர் கைது

சென்னை செங்குன்றத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார். மின்வாரிய ஒப்பந்ததாரரான இவர் தனது செம்புகுட்டி அசோசியேசன் என்ற மின் நிறுவனத்தின் ஏ கிரேட் லைசன்ஸை புதுப்பிப்பதற்காக கிண்டியில் உள்ள மின்வாரிய ஒப்பந்தத்தாரர்களுக்கான லைசென்ஸ் வழங்கும் பிரிவு அலுவலகத்தில் கடந்த மே 5 -ம் தேதி விண்ணப்பத்திருந்தார்.

மூன்று மாதங்களுக்கு பிறகு கிருஷ்ணகுமார் கடந்த 10 -ம் தேதி கிண்டி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று தனது லைசன்ஸ் புதுப்பிப்பது தொடர்பாக ஊழியர்களிடம் கேட்டப்போது லைசன்ஸ் தயாராகி விட்டதாகவும், கண்காணிப்பாளர் ஸ்ரீதரிடம் சென்று வாங்கிக் கொள்ளுமாறும் கூறினார்.

கண்காணிப்பாளர் ஸ்ரீதரிடம் சென்று கேட்டதற்கு, 10,000 ரூபாய் லஞ்சம் கொடுத்து விட்டு வாங்கிச் செல்லுமாறு தெரிவித்துள்ளார். அதற்கு கிருஷ்ணகுமார் தன்னால் 10,000 ரூபாய் லஞ்சம் தர இயலாது என கூறியிருக்கிறார். அதற்கு ஸ்ரீதர், இரண்டு நாட்கள் கழித்து வந்து 3,000 ரூபாய் கொடுத்து விட்டு லைசென்ஸை பெற்றுச் செல்லுங்கள் என கறாராக கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கிருஷ்ணகுமார் இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையில் புகார் அளித்தார்.

லஞ்ச ஒழிப்புத்துறை ஆலோசனையின்படி ரசாயன பவுடர் தடவிய 3,000 ரூபாயை எடுத்துக் கொண்டு நேற்று மாலை கிண்டி அலுவலத்திற்கு சென்ற கிருஷ்ணகுமார், அங்கிருந்த கண்காணிப்பாளர் ஸ்ரீதரிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீதரை பாய்ந்து சென்று ஸ்ரகையும் களவுமாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீட்டில் தோல்வியை விடுங்க.. நீட் தேர்வே தோற்றுவிட்டது.. !

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்ற மாணவன் தனியார் நீட் கோச்சிங் சென்டருக்கும் அவர் சென்று படித்துள்ளார். இந்நிலையில், நடப்பாண்டு நீட் தேர்வு எழுதியும் ஜெகதீஸ்வரன் தோல்வி அடைந்தார். தொடர்ந்து இரண்டு முறை நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தன்னால் இனி மருத்துவரே ஆக முடியாது என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.  இதனால் விரக்தியில் இருந்த மாணவன் ஜெகதீஸ்வரன், சனிக்கிழமையன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தொடர் தோல்வி அடைந்ததில் இருந்து யாரிடமும் பேசாமல் இருந்ததாக மாணவனின் பெற்றோர்களும் உறவினர்களும் தெரிவித்தனர். இந்நிலையில் மூன்றாவது முறை முயற்சி செய்யலாம் என அண்ணா நகரில் இருக்கக்கூடிய தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்திற்கு அழைத்துச் சென்ற தந்தை செல்வ சேகர், விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்துவிட்டு முன்பணமும் செலுத்தி இருக்கிறார். அவரை பயிற்சி மையத்திற்கு மீண்டும் அழைத்துச் செல்ல இருந்த நிலையில் மாணவன் ஜெகதீஸ்வரன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், ஜெகதீஸ்வரனின் தந்தை, ” என் பிள்ளை போன்ற மாணவர்கள் தொடர் தற்கொலையில் ஈடுபட்டு வருகிறார்கள் அது நிறுத்தப்பட வேண்டும் என்றால் இந்த நீட் தேர்வை உடனடியாக தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். நேற்றைய தினம் ஊடகங்களுக்கு பேட்டியளித்த நிலையில் நள்ளிரவில் செல்வ சேகர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீட் தேர்வால் மாணவன் தற்கொலைதந்தையும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது. நீட்டிலிருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு தமிழ்நாட்டில் தாங்கிக் கொள்ள முடியாத பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் நீட் தேர்வை இருமுறை எழுதியும் மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலையில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். மகனை இழந்த சோகத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரது தந்தை செல்வசேகரும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். நீட் தேர்வால் தந்தையும், மகனும் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

அவர்களின் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்தே மாணவர்களின் உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கிறது. இப்போது மாணவனின் தந்தையையும் பலி வாங்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்த நிலை என்று கூற முடியாது. இந்தியா முழுவதும் இதே நிலை தான் காணப்படுகிறது.

நீட் பயிற்சி அளிப்பதற்கான சிறந்த பயிற்சி மையங்களைக் கொண்ட இராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நடப்பாண்டில் மட்டும் 19 மாணவர்கள் நீட் தேர்வு குறித்த அச்சம் மற்றும் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். வெளிமாநிலம் சென்று பணம் செலுத்தி பயிற்சி பெறும் வசதி படைத்தவர்களுக்கே இது தான் நிலை என்றால், சாதாரணமான கிராமப்புற ஏழை மாணவர்களின் நிலை எவ்வளவு மோசமானதாக இருக்கும்.

மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய, தற்கொலை உணர்வை ஏற்படுத்தக்கூடிய ஒரு தேர்வு, எந்த வகையில் சமூகத்திற்கு பயன்படக் கூடிய தேர்வாக இருக்க முடியும்? நீட் தேர்வு அனைத்து வழிகளிலும் தோல்வியடைந்து விட்ட தேர்வு. அதை தொடருவதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை. நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், அதனால் ஏற்பட்ட சாதக, பாதகங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

அதனடிப்படையில் நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து முடிவெடுக்க வேண்டும். நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெறுவதற்கான சட்டம் தமிழக சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டு, ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகி விட்ட நிலையில், அதற்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதற்கு தமிழக அரசும் அழுத்தம் கொடுக்கவில்லை. மாணவர்களின் உயிர்களைக் காப்பதற்காக நீட் விலக்கு சட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும்.

அதே நேரத்தில் மாணவச் செல்வங்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்….. நீட் சிக்கலுக்கு தற்கொலை தீர்வல்ல என்பதையும், மருத்துவம் மட்டுமே படிப்பல்ல என்பதையும் மாணவர்களும், பெற்றோரும் உணர வேண்டும். நீட்டுக்கு அஞ்சி மாணவச் செல்வங்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.