வரும் சட்டசபை தேர்தலில் தவெகவிற்கும், திமுகவிற்கும் நேரடி போட்டி என்பது அவரது சொந்த கருத்து. கட்சி தலைவர் என்ற முறையில் கட்சியின் வளர்ச்சிக்காக தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக விஜய் ஏதேனும் பேசியிருப்பார் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சேலம் மாவட்டம், ஓமலூர் பேருந்து நிலையம் முன்பு அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து, பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் நீர்மோர் மற்றும் பழங்களை வழங்கினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அப்போது, தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து சந்திசிரிக்கிறது. இதுசம்பந்தமாக சட்டமன்றத்தில் பேச எதிர்கட்சிகளுக்கு அனுமதிக்காமல் வெளியேற்றுகின்றனர். ஊசிலம்பட்டியில் காவலர் அடித்து கொலை செய்த சம்பவம், சிவகங்கையில் பயிற்சி மருத்துவர் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு வர சட்டமன்றத்தில் பேச முயன்றேன். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டு, வேண்டுமென்றே திட்டமிட்டு எங்களை வெளியேற்றிவிட்டனர்.
வரும் 2026 சட்டசபை தேர்தலில் தவெகவிற்கும், திமுகவிற்கும் நேரடி போட்டி என்பது அவரது சொந்த கருத்து. கட்சி தலைவர் என்ற முறையில் கட்சியின் வளர்ச்சிக்காக தொண்டர்களை உற்சாப்படுத்த அவ்வாறு பேசுவர். தமிழகத்தில் பிரதான எதிர்கட்சி அதிமுக என்பதை மக்களே ஏற்றுக் கொண்டுள்னர். செங்கோட்டையன் டில்லி பயணம் சென்றது குறித்து எனக்கு தெரியாது. தவெக தலைவர் அதிமுகவை விமர்சித்து பேசாததற்கு காரணம், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் ஆட்சி பொறுப்பில் இருந்த போது, புதிய கட்சிகள் கூட பாராட்டும் விதமாக ஆட்சி செய்தனர். அதனால் தான் அதிமுகவை யாராலும் விமர்சிக்க முடியவில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.