நான் என் மாமனார் கொடுத்த காசில் வண்டி ஓட்டவில்லை, லாட்டரி விற்று வரவில்லை. எனக்கு கொஞ்சம் தன்மானம் அதிகம். சொந்தமாக நின்று சுயம்புவாக நிலைத்து பேசுபவன் நான் என ஆதவ் அர்ஜுனாவை அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்தார். சென்னை திருவான்மியூரிலுள்ள ஸ்ரீஇராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்கூட்டம் நேற்றைய முன்தினம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பொதுக்குழுவில் பேசிய தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசினார். அப்போது, “பல பொய் பிரச்சாரங்களை உருவாக்க வேண்டும் என்ற கோணத்தில் செட் செய்யப்பட்டவர் தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. டெல்லியில் பிரதமர் மோடி அமர்ந்து கொண்டு மற்ற மாநிலங்களில் செட் செய்து கொண்டு இருக்கிறார்.
தமிழகத்தில் திமுக அண்ணாமலையையே செட் செய்து விட்டது நன்றாக கவனித்தால் தெரியும், திமுகவின் பிரச்சினைகளை அவர் எப்படி திசை திருப்புவார் என்று. நமது தலைவர் விஜய் புலி மாதிரி அமைதியாக இருக்கும் போது திடீரென ஒரு ஆடு வந்து சம்பந்தமே இல்லாமல் வந்து, தொழிலை சம்பந்தப்படுத்தி பெண்ணை கேவலமாக பேசியிருக்கிறார். ஒரு பெண்ணை கேவலமாக பேசும் தலைவரை பாஜக வைத்திருக்கும் போதே தெரிந்துவிட்டது அந்த கட்சியின் நிலைமை.” என ஆதவ் அர்ஜுனா விமர்சித்து இருந்தார்.
இந்நிலையில், கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு அண்ணாமலை பதிலளித்தார். அப்போது, “அண்ணாமலை அரசியலுக்கு வந்திருப்பது அதிகாரத்திற்கு அல்ல. தமிழகத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பது தான். என்னால் யாருக்கும் பிரச்சினை வராது. மாற்றி, மாற்றி பேசுபவன் நான் அல்ல. எனக்கு தமிழகம் முதன்மையானது. பாஜக வளர்ச்சி முக்கியம். எனது தனிப்பட்ட வளர்ச்சியோ, மற்றவர் வளர்ச்சியோ முக்கியம் கிடையாது” என அண்ணாமலை தெரிவித்தார்.
மேலும் அண்ணாமலை பேசுகையில், “திமுகவுக்கு எதிராக அதிக போராட்டங்களை நடத்திய கட்சி பாஜக. திமுகவுக்கு எதிராக பேசியதாக அதிக அவதூறு வழக்குகள் என் மீது தான் இருக்கின்றன. கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டிலேயே ஒரு கட்சித் தலைவர் மீது அதிக FIR போட்டு இருக்கிறார்கள் என்றால் அது என் மீது தான். திமுகவை தீர்க்கமாக எதிர்த்து தினமும் பேசுவது யார்? வாய் வியாபாரிகளுக்கு மாமனார் பணம் இருக்கிறது. கொழுத்துப் போய் இருக்கிறார்கள். மைக் ஓசியில் வந்துவிடுகிறது, என்ன வேண்டுமானாலும் பேச வாய்ப்பு கிடைக்கிறது.
நேர்மையான அரசியல்வாதியாக வாழ்ந்து கொண்டிருப்பவன் நான். படித்து முடித்த முதல் நாளில் இருந்து எந்த தனியார் நிறுவனத்திலும் சம்பளம் பெறாதவன். என் முதல் சம்பளமே மக்களின் வரிப்பணம் தான். 10 ஆண்டுகளாக மக்கள் பணியாற்றியவன் நான். எனது சொந்த நிறுவனத்தில் கூட ஒரு ரூபாயைக் கூட நான் சம்பளமாகப் பெற்றதில்லை. இத்தனைக்கும் நான் இப்போது எந்த அரசுப் பதவியிலும் இல்லை, பஞ்சாயத்து தலைவராகக் கூட இல்லை என்றாலும், ஒரு ரூபாய் பணத்தை தனியாரிடம் இருந்து பெற்றதில்லை.
2011 IPS ரேங்க்கில் எனது ரேங்க் 2. நான் என் மாமனார் கொடுத்த காசில் வண்டி ஓட்டவில்லை, லாட்டரி விற்று வரவில்லை. எனக்கு கொஞ்சம் தன்மானம் அதிகம். சொந்தமாக நின்று சுயம்புவாக நிலைத்து பேசுபவன் நான். எனக்கு கொஞ்சம் வாய் பேச்சு, குறும்பு அதிகம். வைராக்கியம் அதிகம். நான் இங்கு பவருக்காக வரவில்லை. எதை இழந்தாலும் மீண்டும் வருவேன்” என ஆவேசமாக அண்ணாமலை பேசினார்.