பாஜக நடத்துவது பாத யாத்திரை அல்ல; பாவ யாத்திரை.!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணி மாவட்ட – மாநில, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசுகையில், நான் இப்போது மிகவும் இளமையாக உணர்கிறேன். வயது 70. ஆனால் 20 மாதிரி நான் இங்கே நிற்கிறேன். இளமைக்கே உரிய அந்த வேகம் திரும்புகிறது. எல்லாப் புகழும் இந்த இளைஞரணிக்குத்தான்.

2019 ஜூலை 4-ம் தேதி திமுகவின் இளைஞரணிச் செயலாளராக பொறுப்பேற்றது முதல், உதயநிதி ஸ்டாலின் பல்வேறு மகத்தான சாதனைகளைச் செய்து வருகிறார். 30 லட்சம் உறுப்பினர்களை இளைஞரணிக்கு சேர்த்து, கழகத்தின் வலிமையை இன்னும் கூட்டியிருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் சுற்றிச் சுழன்று பிரசாரம் செய்திருக்கிறார். அவர் காட்டிய ஒற்றை செங்கல் உங்களுக்கு ஞாபகமிருக்கும் என்று நினைக்கிறேன். எப்படி மறக்க முடியும்? நம்முடைய எதிரிகளாலேயே அதை மறக்க முடியவில்லை.

இன்னும் அதை நினைத்து புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். கட்சிப் பணி – ஆட்சிப் பணி ஆகிய இரண்டிலும், ஒரே நேரத்தில் மிகமிகச் சிறப்பாக செயல்பட்டு, கட்சிக்கும் ஆட்சிக்கும் நல்ல பெயரை வாங்கித் தருகிறார் உதயநிதி. கடந்த சில ஆண்டுகளாக திமுகவை நோக்கி வருகிற இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகியிருக்கிறது. நீங்கள் ஒவ்வொருவரும் திமுக கொள்கைகளை பட்டி தொட்டி எங்கும் எடுத்து செல்கிற பேச்சாளர்களாக மாற வேண்டும். அடுத்தவர்களையும் மாற்ற வேண்டும். பேஸ்புக், யுடியூப், வாட்ஸ்அப் டிவிட்டர், இன்ஸ்டாகிராம், ஷேர்சாட், டெலிகிராம் என்று எல்லா சமூக ஊடகங்களையும் நம்முடைய கொள்கைகளை பரப்பவும், திமுக வளர்ச்சிக்காகவும் நம்முடைய சாதனைகளை எடுத்துச் சொல்லவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த இயக்கம் எந்த நோக்கத்துக்காக 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை செயல்படுத்துவதற்கான ஆட்சி இது. இதை இந்தியா முழுமைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்றுதான் இப்போது ‘இந்தியா’ கூட்டணியை உருவாகி இருக்கிறது. இந்தியா-என்ற பெயரை கேட்டாலே சிலர் மிரள்கிறார்கள், அலறுகிறார்கள். நாடாளுமன்ற தேர்தல் வருகிறது அல்லவா? இனிமேல் இதுபோல் ஒன்றிய அமைச்சர்கள் அடிக்கடி வருவார்கள். அமித்ஷா, தமிழ்நாட்டிற்காக ஒன்றிய அரசின் புது திட்டத்தை தொடங்கி வைக்க வந்தாரா? இல்லை ஏற்கனவே அறிவித்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்க வந்தாரா, இல்லை.

ஏதோ பாதயாத்திரையை தொடங்கி வைக்க வந்திருக்கிறார். அது பாதயாத்திரையா? இல்லை, குஜராத்தில் 2002-ம் ஆண்டும், இப்போது மணிப்பூரிலும் நடந்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கிற பாவ யாத்திரை. இந்த நாட்டின் உள்துறை அமைச்சர் அவர். நான் கேட்கிறேன், இந்த இரண்டு மாதமாக பற்றி எரிகிற மணிப்பூருக்கு சென்று அமைதி யாத்திரை நடத்த முடிந்ததா? முடியவில்லை. அமைதியாக இருக்கிற தமிழ்நாட்டில் கலவரம் ஏற்படாதா என்ற எண்ணத்தோடு பாதயாத்திரையை தொடங்கி வைக்க வந்திருக்கிறார்.

தி.மு.க. குடும்பக் கட்சி என்று சொல்லியிருக்கிறார். கேட்டுக் கேட்டு புளித்துப் போன ஒன்று. நானும் எவ்வளவோ சொல்லிவிட்டேன். வேறு ஏதாவது மாற்றி சொல்லுங்கள் என்று. பாஜகவில் எந்தத் தலைவரின் வாரிசும் அரசியல் பதவியில் இல்லையா? எல்லோரும் நாளைக்கு காலையில் விலகி விடுவார்களா? பாஜகவில் மாநில வாரியாக பதவியில் இருக்கிற வாரிசுகளின் பட்டியலை நான் சொல்ல ஆரம்பித்தால் ஒரு மணி நேரம் ஆகும்.

அதனால் வேறு ஏதாவது புதிதாக சொல்லுங்கள் அமித்ஷாவே. இலங்கை பிரச்னையை பற்றியும் பேசியிருக்கிறார். தமிழ் மக்களின் ரத்தக்கறை படிந்த ராஜபக்‌சேவை தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் அனைவரின் எதிர்ப்பையும் மீறி 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்தவர்களுக்கு இலங்கை பிரச்னையைப் பற்றி பேச உரிமை இருக்கிறதா? அமைச்சர் செந்தில்பாலாஜியின் கைது பற்றியும் பேசியிருக்கிறார். நான் ஒரு கேள்வி கேட்கிறேன் அமித்ஷாவே குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒன்றிய அமைச்சர்கள் எல்லாம் பிரதமர் மோடியின் அமைச்சரவையில் தானே இருக்கிறார்கள்.

செந்தில் பாலாஜியை அமைச்சராக வைத்திருப்பது பற்றி கேள்வி கேட்கிற நீங்கள், பிரதமர் மோடியிடம் இந்த கேள்வியை கேட்கும் தைரியம் உங்களுக்கு உண்டா? புலனாய்வு அமைப்புகளை வைத்து, தங்களுக்கு எதிரானவர்களை மிரட்டுவதும், அவர்கள் பாஜக பக்கம் மாறினால் அவர்கள் எல்லோரும் பரிசுத்தமானவர்களாக மாறிவிடுவார்கள் என்பதும் பா.ஜக.வின் அசிங்கமான அரசியல் பாணி.

அதனால்தான், உச்ச நீதிமன்றமே அமலாக்கத்துறை இயக்குநரின் பதவி நீட்டிப்பை ரத்து செய்து, ஜூலை 31க்கு பிறகு நீட்டிக்கக் கூடாது என்று கூறிய பிறகு, திரும்ப அதே உச்ச நீதிமன்றத்திற்கு ஓடிச்சென்று அவருக்கு மேலும் இரு மாதங்களுக்கு பணி நீட்டிப்பு வாங்கியிருக்கிறது என்றால், என்ன காரணம்? ஏன் நாட்டில் அமலாக்கத்துறை இயக்குநர் பதவிக்கு தகுதியான ஐஆர்எஸ் அதிகாரிகளே இல்லையா? இதே கேள்வியை உச்ச நீதிமன்றம் எழுப்பியிருக்கிறது. தமிழை தமிழினத்தை தமிழ்நாட்டு மக்களைக் காக்க வேண்டும் என்றால், இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பை காப்பாற்றியாக வேண்டும். இந்தியாவைக் காப்பாற்ற இந்தியாவிற்கு வாக்களியுங்கள் என்பதுதான் நம்முடைய தேர்தல் முழக்கமாக அமையப் போகிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தல் களம், உங்களுக்கு மிகப்பெரிய பயிற்சிக் களமாக அமையப் போகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

அண்ணாமலை: 1000 வருஷத்தை விடுங்க.. 9 ஆண்டுகளை பாருங்க! எல்லாம் தமிழர்களுக்காகதான்..

ஜூலை 29-ம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ எனும் யாத்திரையை தமிழ்நாட்டில் மேற்கொள்கிறார். இன்று இதற்கான தொடக்க விழா ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய அவர், “ஆயிரம் ஆண்டுகளில் தமிழர்களுக்கு கிடைக்காத பெருமையை இந்த 9 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி கொடுத்திருக்கிறார்” என பேசியுள்ளார்.

சமீப காலங்களாக பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி தமிழ் திருக்குறள் அல்லது பொன்மொழிகளை மேற்கோள்காட்டி பேசி வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு அவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழின் பெருமை குறித்து தொடர்ந்து பேசி வந்திருக்கிறார். அதேபோல தமிழ் மொழியில் சில வாக்கியங்களை பேசியுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பேசியது விவேகானந்தரின் உரையுடன் ஒப்பிடப்பட்டது.

அதாவது, “அன்புமிக்க, சகோதர, சகோதரிகளே வணக்கம். தமிழ்மொழி, அதன் பாரம்பரியத்துக்கு தலை வணங்குகிறேன். பாரதி மண்ணின் மக்கள் மத்தியில் நிற்பதில் பெருமை கொள்கிறேன். சமஸ்கிருதத்தை விட, தமிழுக்கு தொன்மை உள்ளது. அதை அனைவரும் கற்க வேண்டும்” என்று கூறியிருந்தார். மத்திய அரசு சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக திமுக உள்ளிட்ட தென்னிந்திய கட்சிகள் தொடர் குற்றச்சாட்டை வைத்து வந்த நிலையில் பிரதமரின் தமிழ் உரை இந்த விமர்சனங்களை எதிர்கொள்ளும் வகையில் அமைந்தது.

இதே ஆண்டின் சுதந்திர தினமான ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி, குறிஞ்சி மலர் குறித்து தமிழில் பேசியிருந்தார். இதற்கெல்லாம் டாப்பாக கடந்த 2019ம் ஆண்டு ஐ.நா சபையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என தமிழில் பேசியிருந்தார். இது உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களிடையே பேசுபொருளானது.

இதைத்தொடர்ந்து 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி சுதந்திர தின உரை, அக்டோபர் மாதம் 10-ம் தேதி சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழா தொடங்கி சமீபத்தில் பப்புவா நியூ கினி நாட்டின் தோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை வெளியிட்டது வரை தமிழ் குறித்த அவரது பேச்சுக்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்தான் இன்று ராமேஸ்வரத்தில் நடைபெற்ற ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை தொடக்க விழாவில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “ஆயிரம் ஆண்டுகளில் தமிழர்களுக்கு கிடைக்காத பெருமையை இந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி கொடுத்திருக்கிறார்” என பேசியுள்ளார்.

ஆனால் இதற்கு திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்பை தெரிவித்து வருகின்றன. அதேபோல கடந்த காலத்தில் தமிழ் வளர்ச்சிக்கு மத்திய அரசு ஒதுக்கி நிதியையும் சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகின்றனர். அதாவது கடந்த 2021-22 ஆம் ஆண்டில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு பிரதமர் மோடி நரேந்திர தலைமையிலான மத்திய அரசாங்கம் ரூ.11.86 கோடியை ஒதுக்கீடு செய்திருந்தது. ஆனால் சமஸ்கிருத வளர்ச்சிக்கு ரூ.198.8 கோடி ஒதுக்கீடு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடியை நேரில் மணிப்பூர், நாகாலாந்து, மிசோரம் பற்றி எரியுதே போய் பாருங்க

மேற்கு வங்க சட்டசபையில் மணிப்பூர் நிலைமை தொடர்பாக மமதா பானர்ஜி பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடியை மணிப்பூருக்கு செல்லுங்கள் என பாஜக எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்த வேண்டும்.  மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மாநிலங்கள் எரிகின்றன. ஆனால் நீங்கள் அங்கும் இங்குமாக சென்று கொண்டிருக்கிறீர்கள். மிசோரம், மணிப்பூர், நாகாலாந்தில் யாருடைய அரசு இருக்கிறது? இந்த மாநிலங்களில் உங்கள் அரசுதான் ஆட்சியில் உள்ளது.

ஆகையால் நீங்கள் இந்த மாநிலங்களுக்கு செல்லத்தான் வேண்டும். ஜம்மு காஷ்மீர் ஏற்கனவே நிர்மூலமாக்கப்பட்டுவிட்டது. “இந்தியா” கூட்டணியின் குழு மணிப்பூர் செல்ல இருக்கிறது. 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக மேற்கு வங்கத்தை எதிர்கொள்வது பற்றி பாஜக தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி இருக்கின்றனர். அந்த கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. ஜாதி, மத அடிப்படையில் மேற்கு வங்கத்தை பிளவுபடுத்துவதற்கு பாஜக சதி செய்திருக்கிறது.

அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தலைவர்கள் இந்த சட்டசபையில் அமர்ந்துள்ளனர். இவ்வாறு மமதா பானர்ஜி கூறினார். மேலும் தாம் மணிப்பூர் மாநிலம் செல்வதற்கு அனுமதி கேட்டதாகவும் ஆனால் மணிப்பூர் மாநில நிலைமைகளை நேரில் ஆய்வு செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் மமதா பானர்ஜி குற்றம்சாட்டி இருக்கிறார். மணிப்பூருக்கு நாளை செல்லும் “இந்தியா” கூட்டணி எம்.பி.க்கள் குழுவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சுஷ்மிதா தேவ் உட்பட 2 பேர் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லோக்சபாவில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்

மணிப்பூர் மாநிலத்தில் 3 மாதங்களாக வன்முறை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மைத்தேயி- குக்கி இன மக்களிடையேயான மோதலை மத்திய அரசு தடுக்கவில்லை என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. இந்த மோதல் மிசோரம், மேகாலயா, அஸ்ஸாம் மற்றும் நாகாலாந்து மாநிலங்களிலும் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி வருகிறது. குக்கி இனமக்களுடன் மிசோரம் மாநிலத்தின் மிசோ மக்கள் தொப்புள் கொடி உறவு கொண்டவர்கள்.

அதனால் குக்கி இனத்தவரை தாக்குகிற மைத்தேயி மக்கள், மிசோரம் மாநிலத்தை விட்டு வெளியேற ஆயுத குழுவினர் கெடு விதித்தனர். இதனையடுத்து மிசோரம் மாநிலத்தில் இருந்து மைத்தேயி மக்கள் அஸ்ஸாமுக்கு இடம் பெயர்ந்தனர். இதற்கு பதிலடியாக அஸ்ஸாம் மாநிலத்தைவிட்டு மிசோ மக்கள் வெளியேற மாணவர் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். மணிப்பூர் பிரச்சனையில் பிரதமர் மோடி விளக்கம் தரக் கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டம் நடத்துகின்றன.

இதனால் நாடாளுமன்றம் கடந்த 4 நாட்களாக முடக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூர் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயார் என்கிறார். இதனிடயே பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் பேச வைப்பதற்காக, லோக்சபாவில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. 26 எதிர்க்கட்சிகள் கூட்டணியான இந்தியா கூட்டணி சார்பாக இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. இது தொடர்பாக நேற்று 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆலோசனை நடத்தினர்.

இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலமாக பிரதமர் மோடியை மணிப்பூர் குறித்து பேசவைக்க முடியும் என்பது எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை. இதனையடுத்து இன்று லோக்சபா செயலகத்தில் காங்கிரஸ் குழு துணைத் தலைவர் கவுரவ் கோகோய், நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பான நோட்டீஸ் வழங்கினார். நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாத தேதியை லோக்சபா அலுவல் ஆய்வு குழு கூட்டம் முடிவு செய்யும் என தெரிய வருகிறது.

மாமூல் கேட்ட பாஜக நிர்வாகிகள் மீது 4 பிரிவுகளில் வழக்கு

செங்கல்பட்டு மாவட்டம், ஓட்டேரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட சச்சிதானந்தம் தெருவில் ஜான்பாய் என்பவருக்குச் சொந்தமான பழைய வீட்டை இடித்து, அதில் உள்ள கட்டிடக் கழிவுகளை அகற்றும் வேலையை அப்துல் காதர் மற்றும் அவரது மகன் முகம்மது பாசில் ஆகியோர் ரவிக்குமார் என்பவர் மூலம் மேற்கொண்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பாஜகவை சேர்ந்த 76-வது வார்டு வட்டத் தலைவர் ஜனார்த்தன குமார், திருவிக நகர் தொகுதி பொதுச் செயலாளர் தேவராஜ் மற்றும் திருவிக நகர் தொகுதி கிழக்கு மண்டலத் தலைவர் முரளி ஆகியோர் அப்பகுதிக்கு வந்து, கட்டிடக் கழிவுகளை எடுக்கும் முகமது பாசிலிடம், எங்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுங்கள் என கேட்டுள்ளனர்.

உடனே முகம்மது பாசில் செல்போன் மூலம் அவரது தந்தை அப்துல் காதரை தொடர்பு கொண்டு ஜனார்த்தன குமாரிடம் செல்போனை கொடுத்து தனது தந்தையிடம் அவர் பேச வைத்துள்ளார். அவர் நாளை காலை 8 மணிக்கு வாருங்கள் நேரில் பேசலாம் எனத் தெரிவித்துள்ளார். இருப்பினும் கட்டிடக் கழிவுகளை எடுக்க விடாமல் தொடர்ந்து ஜனார்த்தனகுமார் மற்றும் அவருடன் வந்த தேவராஜ், முரளி ஆகிய மூவரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் ஜனார்த்தனகுமாரே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஓட்டேரி உதவி ஆய்வாளர் உமாபதி தலைமையிலான காவல்துறை விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இவர்கள் மாமூல் கேட்டது காவல்துறையினருக்குத் தெரிய வந்தது. இந்நிலையில் திடீரென ஜனார்த்தன குமார் தான் வைத்திருந்த ஹெல்மெட்டால் பொக்லைன் இயந்திரத்தின் ஹெட்லைட்டை அடித்து நொறுக்கி விட்டு சம்பவ இடத்திலிருந்து கிளம்பிச் சென்றனர். இதுகுறித்து பொக்லைன் உரிமையாளர் சந்தோஷ், ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த ஓட்டேரி ஆய்வாளர் ஜானி செல்லப்பா தலைமையிலான காவல்துறை, மாமூல் கேட்டு நள்ளிரவில் தகராறில் ஈடுபட்ட ஜனார்த்தனகுமார், தேவராஜ், முரளி ஆகிய 3 பேர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர்.

மணிப்பூரில் மற்றொரு பயங்கரம்: “மகள் உயிரோட வேண்டுமா! பிணமா வேண்டுமா..”

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் நடக்கும் இனக் கலவரத்தில் மட்டும் அங்கே 125 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், 40 ஆயிரம் பேர் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறியுள்ளனர். அங்குப் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை குறித்த தகவல்கள் உறைய வைக்கிறது.

மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக இழுத்துவரப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட அதே நாளில் (மே 5) தான் இந்த கொடூரமும் நடந்துள்ளது. அந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 90 கிமீ தொலைவில் தான் இது அரங்கேறியிருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை இதுவரை எந்த ஒரு நபரையும் கைது செய்யவில்லை..

மணிப்பூரில் இன வன்முறை வெடித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, கடந்த மே 5-ம் தேதி மாலை கார் வாஷிங் கடையில் வைத்து கொடூரமாகக் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இரண்டு இளம் பெண்களில் ஒருவரது குடும்பத்தினர் தான் இவர்கள். அன்றைய தினம் கார் வாஷிங் கடையைச் சூறையாடிய வன்முறை கும்பல், அங்கிருந்த இந்த இரு பெண்களையும் ரூமில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்துள்ளனர்..

அந்த வன்முறை கும்பலில் இருந்த பெண்களே.. அந்த பெண்களைப் பலாத்காரம் செய்யச் சொன்னது தான் அதிர்ச்சி, அவர்கள் கத்தி, விட்டுவிடும்படி கெஞ்சிய போதிலும் அந்த கும்பல் அதற்குச் செவி கொடுக்கவில்லை. அவர்களின் உடல் இம்பாலில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது மணிப்பூரில் உள்ள ஒரு பழங்குடிப் பெண் தன் மகளின் இருப்பிடத்தைக் கண்டறியும் ஃபோன் செய்துள்ளார். அப்போது அவருக்குக் கிடைத்த தகவல்கள் தான் அவரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதாவது மறுமுனையில் போனை எடுத்துப் பேசிய அப்போது மறுமுனையில், வேறு ஒரு பெண் தான் எடுத்தார். ‘உன் மகள் உனக்கு உயிருடன் உயிருடன் வேண்டுமா… இல்லை பிணமாக வேண்டுமா… எனக் கேட்டு அதிர்ச்சி அளித்துள்ளார்.

அதன் பிறகு கொஞ்ச நேரத்திலேயே அவரது மகள் உயிரிழந்துவிட்டதாகத் தகவல் வந்துள்ளது. இம்பாலில் உள்ள ஒரு கட்டிடத்தின் சுவர்களில் இவரது மகளின் ரத்தம் இன்னுமே இருக்கிறது. இனக் கலவரம் ஏற்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக அரங்கேறிய குற்றங்கள் குறித்த தகவல்கள் இப்போது பகீர் கிளப்பி வருகிறது.

மணிப்பூரில் பெண்கள் நிர்வாண ஊர்வலம்: போலீஸ் கஸ்டடியை மீறி அட்டூழியம்!

மணிப்பூர் மாநிலத்தில் பாஜக முதலமைச்சர் பீரன் சிங் ஆட்சி செய்து வருகிறார். இந்த மாநிலத்தில் குக்கி எனும் பழங்குடி மக்களும், மைத்தேயி பிரிவு மக்களும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மைத்தேயி மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்கு குக்கி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் இருதரப்புக்கும் பிரச்சனை இருந்து கடந்த மே மாதம் 3-ம் தேதி கடும் மோதல் ஏற்பட்டு, வன்முறையாக உருமாறியது. அன்று முதல் கடந்த இரண்டரை மாதமாக மணிப்பூரில் தொடர்ந்து வன்முறை நடந்து வருகிறது. இந்த வன்முறையில் துப்பாக்கிச்சூடு, தீவைப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்தன. இதனால் ஏராளமானவர்கள் பலியான நிலையில் நிறையபேர் வீடுகளை இழந்து தவிக்க தொடங்கினர். தொடர் பதற்றத்தால் அங்கிருந்து சுமார் 50 ஆயிரம் மக்கள் அண்டை மாநிலங்களுக்கு குடிபெயர்ந்த நிலையில் சுமார் 140-க்கும் அதிகமானவர்கள் வன்முறையில் இறந்துள்ளனர்.

இந்த வன்முறையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் அளிக்காத நிலையில் இன்டர்நெட் சேவைகள் துண்டிக்கப்பட்டதோடு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் மத்திய பாதுகாப்பு படையினர், மாநில காவல்துறை உள்ளிட்டவர்கள் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். இருப்பினும் இன்னும் வன்முறை முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. இந்நிலையில் தான் தற்போது வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மணிப்பூர் மாநிலம் பைனோம் கிராமத்தில் உள்ள வீடுகளை எரித்த கும்பல் அதிலிருந்து தப்பியோடிய 2 ஆண்கள், 3 பெண்கள் என ஐந்து பேரை தாக்கி உள்ளனர். இதில் ஒரு ஆண் இறந்த நிலையில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி அவர்களை ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர். மேலும் ஒரு பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த கும்பல், இன்னொரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளது. மேலும் 2 பெண்களை நிர்வாணமாக அழைத்து சென்ற வீடியோ தற்போது வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

வீட்டை வாடகைக்கு எடுத்து குத்தகைக்கு விட்டு மோசடி பாஜக முன்னாள் பிரமுகர் கைது..!

சென்னை விருகம்பாக்கத்தில் பவானி என்பவருக்கு சொந்தமான 1,200 சதுர அடி கொண்ட தனி வீடு உள்ளது. நிறுவனம் நடத்துவதாக கூறி முதியவர் பவானி வீட்டை பாஜக முன்னாள் பிரமுகர் சிவா அரவிந்தன் வாடகைக்கு எடுத்துள்ளார். 6 மாதத்துக்கு பின் வாடகையை சரியாக தராததால் முதியவர் பவானி நேரில் சென்று வீட்டை பார்த்துள்ளார். நேரில் சென்று பார்த்ததில் சிவா அரவிந்தன், 2 பேருக்கு தலா ரூ.8 லட்சத்துக்கு பவானி வீட்டை குத்தகைக்கு விட்டிருந்தது தெரியவந்தது.

மோசடி குறித்து முதியவர் பவானி அளித்த புகாரை அடுத்து வழக்கு பதிந்து காவல்துறை விசாரித்தனர். மோசடியில் ஈடுபட்ட பாஜக முன்னாள் பிரமுகர் சிவா அரவிந்தன், பலமுறை கைதாகி சிறைக்கு சென்றுள்ளார். முதியவர் பவானி அளித்த புகாரின் பேரில் பாஜக முன்னாள் பிரமுகர் சிவா அரவிந்தனை காவல்துறை மீண்டும் கைது செய்தது. முதியவர்களை குறிவைத்து அவர்களின் வீட்டை வாடகைக்கு எடுத்து தொடர்ந்து மோசடி செய்த பாஜக முன்னாள் பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வா.. எப்ப வேண்டாலும் வா.. ! அமலாக்கத்துறைக்கு சவால் விடுத்த உதயநிதி ஸ்டாலின்..!

உதயநிதி ஸ்டாலின் கடந்த 2 நாட்களாக வேலூர், திருவண்ண்ணாமலை என சுற்றுப்பயணம் செய்து வந்த அவர் இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போது ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர் மத்திய அரசையும், அமலாக்கத் துறையையும் கடுமையாக சாடினார்.

தனது வீட்டுக்கு அமலாக்கத்துறை எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றும் தாம் தொடர்ச்சியாக வெளியூர் டூரில் இருப்பதால் சொல்லிவிட்டு வாருங்கள் எனவும் அமலாக்கத்துறை அதிகாரிகளை கலாய்த்தார் உதயநிதி ஸ்டாலின். திமுகவின் கிளைச் செயலாளரை கூட அமலாக்கத்துறையால் எதுவும் செய்ய முடியாது என சவால் விடுத்தார். ”வா.. எப்ப வேண்டாலும் வா.. வீட்டு அட்ரஸ் தருகிறேன்” எனக் கூறி அமலாக்கத்துறைக்கு ஒபன் சவால் விடுத்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

மடியில் கணமில்லாததால் தனக்கு வழியில் பயமில்லை என்றும் மோடிக்கும் பயப்படமாட்டேன், EDக்கும் பயப்பட மாட்டேன் என்றும் தாம் கலைஞரின் பேரன் எனவும் குரல் உயர்த்தினார். அதிமுகவை வேண்டுமென்றால் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை என விசாரணை அமைப்புகளை காட்டி பயமுறுத்தலாம் என்றும் திமுகவிடம் உங்கள் பம்மாத்து வேலை நடக்காது எனவும் எதிர்த்து பேசியிருக்கிறார்.

பொதுவாக மேடைகளில் பேசும் போதும் சிரித்தவாறு மிகவும் கூலாக பேசக்கூடிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். ஆனால் இன்று அனல் கக்கியிருக்கிறார். வா.. எப்ப வேண்டாலும் வா.. ஓபன் சேலஞ்ச் விடுத்திருக்கிறார். இதன் மூலம் சமரசமின்றி பாஜக எதிர்ப்பில் உறுதியாக இருப்பதை உதயநிதி ஸ்டாலின் உணர்த்தியுள்ளார்.

அண்ணாமலையோட நீண்ட கால ஆசை இதுதான்..

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ராஜ்யசபா எம்.பியாக தேர்வு செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது குறித்து கருத்து தெரிவித்துள்ள காயத்ரி ரகுராம், அண்ணாமலையை கடுமையாக சாடி விமர்சித்துள்ளார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ள நிலையில் குறிப்பிட்ட இடங்களை கைப்பற்றும் முனைப்பில் பாஜக வியூகம் வகுத்து முழு வீச்சில் அண்ணாமலை பாஜகவை தயார் படுத்தி வருகிறார். நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து தமிழகத்தில் நடைப்பயணம் மேற்கொள்ளவும் அண்ணாமலை முடிவு செய்துள்ளார்.

அதன்படி வரும் 28-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் பாதயாத்திரையை அண்ணாமலை தொடங்க உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட உள்ளதாக கூறப்படும் ராமநாதபுரத்தில் இருந்து அண்ணாமலை இந்த பாதயாத்திரையை தொடங்க இருக்கிறார். இதனிடையே அண்ணாமலை ராஜ்யசபா எம்.பியாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் இன்று செய்தி பரவியது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காயத்ரி ரகுராம் ‘அண்ணாமலைக்கு ஆசை ஒரு பக்கம், பீதி ஒரு பக்கம், விளம்பரம் ஒரு பக்கம்’ என்று கடுமையாக சாடியுள்ளார். காயதிரி ரகுராம் தனது ட்விட் பதிவில், அவர் ராஜ்யசபா எம்.பி., மத்திய அமைச்சர் வரப் போகிறார் என்று அவரது வார்ரூம் ஒரு பொய்யான செய்தியை பரப்பியது (அவரது நீண்ட கால ஆசை), அவர் பாஜகவில் சேர்ந்ததற்கு முழு காரணம் இது மட்டுமே, எந்த வேலையும் செய்யாமல், சேவையும் செய்யாமல் (அவர் எப்படி தனது போலீஸ் வேலை: தேச பக்தி சேவையை முடிக்காமல் பாதி வழியில் விட்டுவிட்டார் என்பது போல) மக்கள் சேவை பிம்பம் மட்டுமே. வாயில் வடை.

அதன் பிறகு அதே வார்ரூம் அது பொய்யான செய்தி என்று ஒரு செய்தியை பரப்பியது. ஏனென்றால் அண்ணாமலைக்கு டெல்லி அரசியல் மத்தியில் அவர் தொல்லை இருக்கும் என்று பாஜகவுக்கு தெரியும், அவரால் தமிழக எம்பி சீட் வெல்ல முடியாது என்பது தெரியும் (இது பீதி) .

இப்போது அவர் இல்லாமல் தமிழக பாஜக மூழ்கிவிடும். தமிழக பாஜகவுக்கு அவர் தேவை என்கிறார்கள் (வெட்டி விளம்பரம்). பின்னர் அவர் பாவ யாத்திரை செய்வார் (அது விளம்பரத்திற்கான அவரது சேவை)” என்று சாடியுள்ளார்.