கமல்ஹாசன் சாப்பிடும் பருக்கையில் உதயநிதி ஸ்டாலின் பெயர்..

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்று வரும் “என் மண் என் மக்கள்” பாதயாத்திரை கோயம்புத்தூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்றது. இந்த பாதயாத்திரையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உடன், கோயம்புத்தூர் தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பங்கேற்றார். ஏராளமான பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் இதில் கலந்து கொண்டனர்.

அப்போது மக்கள் மத்தியில் உரையாற்றிய அண்ணாமலை, “பாஜக ஒரு நாள் ஆட்சிக் கட்டிலில் அமரும். கோயம்புத்தூர் தேசியம், ஆன்மிகம், உண்மையின் பக்கம் இருக்கும் என்பதற்கு, கடந்த முறை கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் பாஜக பெற்ற வெற்றியே சாட்சியாக உள்ளது. கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி பாஜகவின் கோட்டை என்பதை நிரூபித்துக் காட்டுவோம். விக்ரம் படத்திற்கு கூட்டம் வருவதைப் போல நாடாளுமன்றத் தேர்தலில் நமக்கு கூட்டம் சேரும் என கமல்ஹாசன் பேசியதை போல நான் பேசவில்லை.

1996-ம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கோயம்புத்தூர் கோரமான தீவிரவாத தாக்குதலுக்குள்ளாகி 25 ஆண்டுகள் பின்னால் போனது. 2006 திமுக ஆட்சியில் வரலாறு காணாத மின்வெட்டால் தொழில்கள் பாதிக்கப்பட்டன. மீண்டும் நடக்க வேண்டியிருந்த மாபெரும் விபத்தில் இருந்து கோட்டை ஈஸ்வரன் நம்மைக் காப்பாற்றினார். அதை முதலமைச்சர் ஸ்டாலின் சிலிண்டர் விபத்து என்றார். தீவிரவாத செயலில் ஈடுபட்ட 13 பேரை என்.ஐ.ஏ கைது செய்துள்ளது. வானதி சீனிவாசன் குரல் கொடுக்கவில்லை என்றால், இதில் உயிரிழந்த நபருக்கு 10 இலட்ச ரூபாய் கொடுத்து சுதந்திர போராட்ட தியாகி என்று சொல்லியிருப்பார்கள்.

திமுக வரும் போது கோயம்புத்தூருக்கு தீய சக்தி வந்தது போலாகி விடும். செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றதால் மற்றொரு ஆபத்தில் இருந்தும் கோயம்புத்தூர் மக்கள் தப்பியுள்ளார்கள். நாடாளுமன்ற தேர்தலில் திமுக என்ற தீய சக்தியை அப்புறப்படுத்த வேண்டும். மத்திய அரசு மற்றும் வானதி சீனிவாசன் என்ற டபுள் இன்ஜின் கோயம்புத்தூரை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இழுத்துக் கொண்டுள்ளது.

பாஜக ஆட்சிக்கு வரும்போது சட்டமன்ற உறுப்பினர்கள் எப்படி இருப்பார்கள் என்பதற்கு வானதி சீனிவாசன் உதாரணம். சில அரசியல் தலைவர்களுக்கு வானதி சீனிவாசன் மீது தான் கண். 6 மாதத்திற்கு ஒருமுறை மக்கள் நீதி மய்யம் இங்கு ஆர்ப்பாட்டம் செய்ய வந்து விடுவார்கள். ஆடல் பாடல் நடத்தியும் மக்கள் ஏமாறவில்லை என்பதால், கோயம்புத்தூர் மீது கமல்ஹாசனுக்கு கண் உள்ளது. கமல்ஹாசனுக்கு காங்கிரசில் சேர்வதா? திமுக சேர்வதா? என்ற குழப்பத்திற்கு 6 மாதமாக விடை தேடிக் கொண்டிருக்கிறார்.

கமல்ஹாசன் சாப்பிடும் பருக்கையில் கூட உதயநிதி ஸ்டாலின் என்ற பெயர் ஒட்டிக் கொண்டிருக்கிறது. இது தான் கமல்ஹாசனின் வீரமா? தன்மானமா? நடிப்பிற்கு இலக்கணமாக உள்ள கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலினை பார்த்து பம்முகிறார். கமல்ஹாசனின் தோலை கோயம்புத்தூர் மக்கள் முழுமையாக உரித்து வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்கள் என தெரிவித்தார்.

தாமரை மலர வாய்ப்பில்லை…. வீண் கர்வம் பிடித்தவர்களால் தாமரை வாடி கருகி போகும்..!

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இன்னமும் ஒரு சில ஆண்டுகள் இருக்கும் நிலையில் பாஜக தமிழகத்தில் கணிசமான வாக்குகளை பெறுவது மட்டுமல்லாது எப்படியாவது திமுகவுடன் கூட்டணி வைத்து கணிசமான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தினமும் மக்களின் மனதில் இருக்க நல்லதோ, கொட்டதோ ஏதாவது செய்து தினம் தினம் பத்திரிகையில் செய்திகள் வெளிவர செய்து கொண்டுள்ளது.

அதனால் தமிழகத்தில் திமுக- பாஜக இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வரும் நிலையில் திமுக அரசு மீது தொடர் குற்றச்சாட்டுக்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து வருகிறார். மேலும் திமுக நிர்வாகிகளை பாஜகவிற்கு இழுக்கும் நடவடிக்கையில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பாஜகவிற்கு திமுகவும் தக்க பதிலடி கொடுத்து மட்டுமல்லாமல் பாஜக நிர்வாகிகளை திமுக இழுத்து வருகிறது. கடந்த வாரம் மதுரை மாநகர மாவட்ட தலைவராக இருந்த டாக்டர் சரவணன் பாஜகவில் இருந்து விலகி, திமுகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக பாஜக பொறுப்பிலிருந்த மாநில மகளிர் அணி செயலாளர் மைதிலி வினோ திமுகவில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளளார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொள்ளாச்சியில் நடைபெறவுள்ள திமுக கூட்டத்தில் மாற்று கட்சியை சேர்ந்த 50 ஆயிரம் பேர் அமைச்சர் செந்தில் பாலாஜி மேற்பார்வையில் இணைய இருப்பதாக அரசால் புரசலாக பேசப்படுகிறது.

இந்நிலையில் பாஜக மாநில மகளிர் அணி செயலாளர் மைதிலி வினோ திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாக, இதனையடுத்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் மைதிலி வினோவை கட்சியில் இருந்து நீக்குவதாக கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தமராமசாமி அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பிற்கு பதில் அளித்து தனது முகநூல் பக்கத்தில் அறிக்கை வெளியிட்ட மைதிலி வினோ, பாரதீய ஜனதா கட்சியில் 22 ஆண்டுகளுக்கு முன்பு உறுப்பினராக இணைந்து கடின உழைப்பால் மாவட்ட மகளிரணி, மாநில மகளிரணி என பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றி வந்த நான் அண்மை காலமாக பாஜகவின் மாவட்ட தலைமையின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் கட்சியிலிருந்து விலகும் முடிவுக்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.

பாஜக என்றால் மக்களுக்கு என்னவென்றே தெரியாத காலகட்டத்தில் கட்சிக்காக பல போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றை நடத்தி கட்சியில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோரை இணைத்து கோவையில் பாஜக வளர்ச்சிக்கு எப்படியெல்லாம் பாடுபட்டுள்ளேன் என்பது உண்மையான பாஜகவினருக்கு நன்றாக தெரியும் என கூறியுள்ளார். மேலும் பாஜகவில் பெண்கள் யாருமே இல்லாத காலகட்டத்தில் மகளிரணியை கட்டமைத்தவர்களில் எனது பங்கு அலாதி என்பது தாங்கள் அறியாததே என கூறியுள்ளார்.

பாஜகவிற்கு வந்த உடன் மாவட்ட தலைவர் பதவியை பிடித்ததால் அடிப்படை என்ன என்பது தெரியாமல் இருப்பது நியாயம் தான். பாஜகவில் உழைப்பவருக்கு பதவி என்ற நிலை மாறி இன்று பணம் படைத்தவருக்கே பதவி என்ற நிலையல்லவா நிலவுகிறது. ரியல் எஸ்டேட் மூலம் சம்பாதித்த 310 கோடி ரூபாய் சொத்து இருப்பதால் நீங்கள் இன்று மாவட்ட தலைவர் என்றால், நாளை ஒருவர் 320 கோடி சொத்து வைத்திருந்தால் அவர் தான் அடுத்த மாவட்ட தலைவரா? இப்படி இருந்தால் கட்சிக்காக அடிப்படையிலிருந்து உழைத்தவர்கள் கதி என்னாவது? என்னை போன்ற உண்மை விசுவாசிகள் பலரும் தங்களது தவறான ஏதேச்சதிகார போக்கால் சுயமான முடிவெடுக்க துவங்கியுள்ளனர் என்பது தெரியுமா தங்களுக்கு? கட்சியின் மூத்த நிர்வாகிகளை அவமதித்து புறந்தள்ளி பணம் படைத்தவர்களுக்கு பதவி வழங்கும் தங்களை போன்றவர்கள் மாவட்ட தலைமை பொறுப்பில் உள்ள வரை இங்கு தாமரை மலர வாய்ப்பில்லை.

தாமரை மலர தண்ணீர் ஊற்றியவர்கள் பலரும் இன்று தங்களின் செயல்பாட்டால், தொண்டர்களுக்கும் உண்மை விசுவாசிகளுக்கும் மதிப்பளிக்கும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு செல்ல தயாராகி விட்டனர். எனவே மொட்டு வந்து மலர இருந்த தாமரை தங்களை போன்ற வீண் கர்வம் பிடித்தவர்களால் வாடி கருகி போகும் என்பது தான் நிதர்சனம்” எனத் தெரிவித்துள்ளார்.

மைதிலி வினோவின் குற்றச்சாட்டு பாஜகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கோவையில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சுற்றுபயணம் செய்து வரும் நிலையில், மைதிலி வினோ பொள்ளாச்சியில் நடைபெறும் விழாவில் திமுகவில் இணைவதுடன் கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.