Siddaramaiah: இந்தியர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதில் தோல்வி அடைந்து விட்டார்கள்..!

காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்தில் ஒரு ராணுவ வீரர் இல்லை, ஒரு காவல்துறையினர் இல்லை. இந்தியர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதில் தோல்வி அடைந்துள்ள மத்திய அரசு குறித்து கேள்வி எழுப்பக்கூடாதா? என சித்தராமையா: கேள்வி எழுப்பினார்.

கர்நாடக காங்கிரஸ் சார்பில் மத்திய அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் பெலகாவியில் நேற்று நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் சித்தராமையா கலந்து கொண்டு பொதுக்கூட்டத்தை தொடங்கி வைத்து பேசுகையில், நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக விலைவாசி உயர்ந்து வருகிறது. சமுதாயத்தை உடைக்கும் வேலையை இந்த பாஜக செய்கிறது. மக்களுக்கு துரோகம் இழைக்கும் பணியை தவிர மத்திய பாஜக அரசு வேறு என்ன செய்கிறது?.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது சங்பரிவார் அமைப்பினர் என்ன செய்தனர்?. காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதில் கர்நாடகத்தை சேர்ந்த 3 பேர் பலியாயினர். இது மத்திய அரசின் பாதுகாப்பு குறைபாடு இல்லையா? சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஒரு ராணுவ வீரர் இல்லை, ஒரு காவல்துறையினர் இல்லை. இந்தியர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதில் தோல்வி அடைந்துள்ள மத்திய அரசு குறித்து கேள்வி எழுப்பக்கூடாதா?.நாடு சுதந்திரம் அடைந்து 51 ஆண்டுகள் வரை RSS அலுவலகம் மீது தேசிய கொடி ஏற்றப்படவில்லை.

இதனால் பாஜக-வினருக்கு வெட்கம் ஏற்படவில்லையா?. சுதந்திர போராட்டம் முதல் நவீன இந்தியா வரை இதன் வளர்ச்சியில் பாஜக-வின் பங்கு என்ன?. வெட்கம் இல்லாமல் தேசபக்தி குறித்து அவர்கள் பேசுகிறார்கள். இந்தியர்களிடையே பிரிவினை ஏற்படுத்தியதை தவிர பாஜக வேறு என்ன செய்தது?. மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது பணக்காரர்களுக்கு 32 சதவீத வரி விதிக்கப்பட்டது. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அந்த வரி 25 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.

ஏழை, நடுத்தர மக்களுக்கு எதிரான மத்திய ஆட்சி நிர்வாகத்தை நாங்கள் எதிர்க்கக்கூடாதா?. இந்தியர்களை நிரந்தர பொய்களில் இன்னும் எத்தனை ஆண்டுகள் மூழ்கடிப்பீர்கள். மக்களுக்கு உண்மையை சொல்ல பாஜக-வினர் முன்வர வேண்டும். நாட்டிற்காக காங்கிரஸ் தலைவர்கள் உயிா்த்தியாகம் செய்தனர். அதனால் போராட்டம் என்பது காங்கிரசுக்கு புதிது அல்ல.

ஆங்கிலேயர்களை விரட்டியடித்த எங்களுக்கு உங்களை எதிர்க்கும் சக்தி உள்ளது. நாங்கள் பால் விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தி அதை அப்படியே விவசாயிகளுக்கு வழங்குகிறோம். பஸ் கட்டணம், குடிநீர் கட்டணம், மின்சார கட்டணம் உள்ளிட்டவை மற்ற மாநிலங்களை விட கர்நாடகத்தில் குறைவாகத்தான் உள்ளது. பாஜகவின் பொய் பிரசாரத்தை கண்டு நான் பயப்பட மாட்டேன்.

மத்திய அரசு அரிசி, சமையல் எண்ணெய், தங்கம், வெள்ளி, உரம், பருப்புகள், டீசல், பெட்ரோல் விலையை உயர்த்தி மக்களுக்கு கஷ்டத்தை கொடுத்துள்ளது. இந்த மத்திய அரசு எதை விட்டுவைத்து இருக்கிறது?. கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தாலும், பெட்ரோலிய பொருட்களின் விலையை தொடர்ந்து உயர்த்துவது என்பது நாட்டு மக்களுக்கு மத்திய அரசு செய்யும் துரோகம் ஆகும் என சித்தராமையா பேசினார்.