பாரிஜாதா உணவகத்தில் பன்னீர் பட்டர் மசாலாவில் கரப்பான் பூச்சி..!

சென்னை பாரிஜாதா சைவ உணவகத்தில் இருந்து வாடிக்கையாளர் ஒருவர் பார்சல் வாங்கிச் சென்ற பன்னீர் பட்டர் மசாலாவில் கரப்பான்பூச்சி கிடந்தது. இந்த சம்பவம் குறித்து வாடிக்கையாளர், உணவக நிர்வாகதிடம் முறையிட்டபோது, சரியான பதில் கூறாமல் மிகுந்த அலட்சியமாக பதில் கூறியதையடுத்து புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஓட்டல்களில் தரமற்ற உணவு விற்பனை செய்யப்படுவது, சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்கள் தயார் செய்வது, கெட்டுப்போன இறைச்சி பயன்படுத்துவது என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.

இன்றைய நவீன காலகட்டத்தில் நாடெங்கும் அசைவ உணவகங்கள் மற்றும் சைவ உணவகங்கள் அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக, இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற பிரியாணி கடைகள், ஷவர்மா, கிரில் சிக்கன், தந்தூரி சிக்கன் தெருவுக்குத் தெரு அதிகம் முளைத்துள்ளன.

இவர்கள் தொழில் போட்டி காரணமாக சுகாதாரமான இறைச்சிகளை வாங்காமல் குறைந்த விலையில் சிக்கன், மட்டன் ஆகியவற்றை வாங்கி ப்ரீஸரில் வைத்து வாடிக்கையாளர்களுக்கு சமைத்துக் கொடுக்கிறார்கள். ஷவர்மா என்ற உணவு சிக்கனால் செய்யப்படுகிறது. இதனை வாங்குவதற்கும், சாப்பிடுவதற்கும் இளைஞர்கள், இளம்பெண்கள் கூட்டம் கூட்டமாக கடைக்கு வருகிறார்கள். இது தரம் குறைந்து விற்பனை செய்யப்படும் காரணத்தால் சாப்பிடுபவர்களுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்படுகிறது.

இந்நிலையில், வடசென்னையில் பிரபல அசைவ உணவகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாங்கிய ஷவர்மா கெட்டுப் போயிருந்ததால் அதை சாப்பிட்ட திருவொற்றியூரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினருக்கு பல்வேறு உபாதைகள் ஏற்பட்டு ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதே ஓட்டலில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கெட்டுப்போன மீன், சிக்கன் விற்பனை செய்யப்பட்டதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டு அந்த ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, கொடுங்கையூரில் பிரபல பிரியாணி கடையில் விற்பனை செய்யப்பட்ட பிரியாணி தரமற்ற நிலையில் விற்பனை செய்யப்பட்ட காரணத்தால் அதை சாப்பிட்ட 50 க்கும் மேற்பட்டோருக்கு பல்வேறு உபாதைகள் ஏற்பட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். இதன் காரணமாக அந்த கடை மூடப்பட்டது. இப்படி தொடர்ந்து வடசென்னை பகுதியில் தரமற்ற உணவு விற்பனை செய்யப்படுவதை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் புகார் வந்தால் மட்டுமே ஒவ்வொரு உணவகங்களுக்கு சென்று சோதனை மேற்கொள்கிறார்கள். பொதுவாக, சோதனை மேற்கொள்ளவில்லை என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மீது பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்நிலையில், நேற்று முன்தினம் புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள பாரிஜாதா சைவ உணவகத்தில் திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்பவர் பன்னீர் பட்டர் மசாலாவை பார்சல் கட்டி வாங்கிச் சென்றுள்ளார்.

பின்னர் வீட்டிற்குச் சென்று பிரித்து பார்த்தபோது, அதில் கரப்பான் பூச்சி இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மகேஷ், இதுகுறித்து பாரிஜாதா உணவக நிர்வாகத்திடம் கூறியபோது அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை. எனவே, அவர் புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்ந்து, வடசென்னை பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. இதற்கு சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tirupati Devasthanam: லட்டு மூலம் திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஆண்டுக்கு ரூ.500 கோடி லாபம்..!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கவரும் பக்தர்களுக்கு, அரசர்கள் காலத்தில் புளியோதரை, சர்க்கரை பொங்கல், எலுமிச்சை சாதம், வடை,தோசை, அப்பம் போன்றவை ஒவ்வொரு கால கட்டத்திலும் பிரசாதமாக வழங்கப்பட்டது.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கவரும் பக்தர்கள் மாட்டு வண்டி, குதிரை வண்டிகளிலும், கால்நடையாகவும் பக்தர்கள் குடும்பம், குடும்பமாக திருமலைக்கு வந்தனர். அவர்கள் சுமார் 3 அல்லது 4 நாட்கள் வரை அங்குள்ள தர்ம சத்திரங்களில் தங்கியிருந்து தினமும் சுவாமியை தரிசித்தனர்.

இவர்களுக்கு திருப்பதி கோயில் சார்பில் இலவசமாக உணவு வழங்கப்பட்டது. பின்னர், இவர்கள் வீடு திரும்பும்போது, வழியில் சாப்பிடுவதற்காக தயிர் சாதம், புளிசாதம், எலுமிச்சை, வடை, அப்பம் போன்றவற்றை பிரசாதமாக வழங்கினர். ஆனால், சாதம் உள்ளிட்டவற்றை கொண்டு சென்றால் அவை வழியிலேயே கெட்டு விடுவதாக பக்தர்கள் குறை கூறி உள்ளனர். ஆதனால், பூந்தியை பிரசாதமாக கொடுக்கும் முறை கொண்டு வரப்பட்டது. இது நாளடைவில் பூந்தி பிரசாதம் லட்டு பிரசாதமாக மாறி விட்டது.

கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கடந்த 1715-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு வரை தினமும் 1 லட்சம் லட்டு பிரசாதங்கள் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை அதிகரித்ததால், இந்த பிரசாதம் 3.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. திருப்பதி லட்டு பிரசாதத்துக்கு 2014-ஆம் ஆண்டு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.

திருப்பதி கோயிலில் உள்ள மடப்பள்ளியில் லட்டு தயாரிக்கப்படுகிறது. ஒரு ‘திட்டம்’ என்பது சுமார் 5100 லட்டு பிரசாதங்களை கொண்டதாகும். இதுவே அளவு என்பது. இது மாறாது. ஒரு திட்டத்துக்கு,803 கிலோ மளிகை பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. 180 கிலோ கடலை மாவு, 165 கிலோ பசு நெய், 400 கிலோ சர்க்கரை, 300 கிலோ முந்திரி, 16 கிலோ உலர் திராட்சை, 8 கிலோ கற்கண்டு, 4 கிலோ ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது.

இந்த லட்டு தயாரிப்பில் வைஷ்ணவ பிராமணர்களே பங்கேற்பார்கள். ஆகம விதிகளின்படி, இந்த லட்டு தயாரிக்கப்படும். முன் காலத்தில் கட்டை அடுப்பில் லட்டு பிரசாதம் தயாரிக்கப்பட்டது. தற்போது அதிநவீனமான முறையில் லட்டு பிரசாதங்கள் தயாரிக்கப்படுகிறது. மிக சிறிய அளவிலான லட்டு, பக்தர்களுக்கு சுவாமியை தரிசனம் செய்த பிறகு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

சாதாரண 175 கிராம் எடை கொண்ட லட்டு, ரூ.50 வீதம் லட்டு விநியோக மையத்தில் வழங்கப்படுகிறது. கல்யாண உற்சவ லட்டு என்பது சிறிய பந்து வடிவில் இருக்கும் லட்டு ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சுவாமியை தரிசிக்க குடியரசுத் தலைவரோ அல்லது பிரதமரோ வந்தால், அவர்களுக்கு பிரத்யேகமாக 750 கிராம் எடையில் சிறப்புலட்டு பிரசாதம் தயாரித்து வழங்கப்படுகிறது. லட்டு பிரசாதம் விற்பனை செய்வதன் மூலம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஆண்டுக்கு ரூ.500 கோடி வரை லாபம் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MRO: விமானம் பழுதுபார்க்கும் மையம் அமைக்கும் திட்டம் ரத்தா..!?

இந்தியாவில் விமான சேவைகள் அதிக அளவில் இருந்தபோதிலும் விமானங்களில் ஏற்படும் பழுதுகளை சீர் செய்வது, விமானங்களை பழுது பார்ப்பது போன்ற மையங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. ஆகையால், இந்தியா முழுவதும் விமான சேவைகளை விரிவுப்படுத்தி, மேம்படுத்துவதற்கு இந்திய விமான நிலைய ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒருபகுதியாக சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், லக்னோ, அகமதாபாத் ஆகிய 8 சர்வதேச விமான நிலையங்களிலும் விமானங்களை பழுது பார்த்தல், பராமரித்தல், விமானத்தில் பழுதடைந்த உபகரணங்கள் நீக்கிவிட்டு, புதிய உபகரணங்கள் பொருத்துதல், விமானங்களுக்கு வர்ணம் பூசி புதுப்பித்தல் போன்றவைகளுக்காக, ‘மெயின்டனன்ஸ், ரிப்பேரிங் அண்டு ஆபரேஷன்’ எனப்படும் எம்ஆர்ஓ மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி சென்னை விமான நிலைய வளாகத்துக்குள்,‘ஏப்ரான்’ எனப்படும் விமானங்கள் நிற்கும் இடத்திற்கு, பின் பகுதியில் இந்த எம்ஆர்ஓ மையத்தை அமைக்க இந்திய விமான நிலைய ஆணையம் திட்டமிட்டது. ஆனால் அதற்கான இட வசதி அந்த பகுதியில் இல்லை. இதையடுத்து இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் சென்னை விமான நிலைய இயக்குனர், தமிழ்நாடு அரசிடம் அதற்கான இடத்தை ஒதுக்கீடு செய்து தரும்படி கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு, விமான நிலைய ஓடுபாதை பகுதிக்கு கிழக்கு பகுதியில், கவுல் பஜார் பகுதியை ஒட்டி, 32,300 சதுர அடி நிலத்தை, செங்கல்பட்டு மாவட்ட வருவாய் துறை மூலமாக கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம், சென்னை விமான நிலைய அபிவிருத்தி பணிக்காக இந்திய விமான நிலைய ஆணையத்திடம் முறைப்படி ஒப்படைத்துள்ளது. இதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு சென்னை விமான நிலையத்திற்கு அளித்துள்ள நிலத்தில், விமானங்கள் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புக்காக எம்ஆர்ஓ மையத்தை அமைக்க ஏற்பாடுகள் செய்தனர்.

இந்நிலையில் இந்திய விமான நிலைய ஆணையம், டெல்லியை தலைமை இடமாகக் கொண்டுள்ள சவுரியா ஏரோ நாட்டிக்ஸ் என்ற தனியார் நிறுவனத்திடம், இதற்கான ஒப்பந்தம் செய்தது. அதன்படி அந்த நிறுவனம், சென்னை விமான நிலையத்தில் எம்ஆர்ஓ மையத்தை அமைத்து, அடுத்த 15 ஆண்டுகள் சென்னை விமான நிலையத்தில் இந்த எம்ஆர்ஓ மையத்தை நிர்வகிப்பார்கள்.

அதன் மூலம் சென்னை விமான நிலையத்தில் பழுதடையும் விமானங்கள் உடனடியாக பழுது பார்க்கப்படும். குறிப்பாக வெளிநாட்டு விமானங்களுக்கு முன்னுரிமைகள் வழங்கப்படும். பழுதடைந்த விமானங்கள் சில மணி நேரங்களில் சீர் செய்து மீண்டும் வானில் பறக்க தொடங்கும்.

இதனால் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் சென்னைக்கு கூடுதல் விமான சேவைகளை இயக்குவார்கள். மேலும் இந்த MRO மையம் சென்னை விமான நிலையத்தில் அமைவதால் பொறியாளர்கள், தொழிலாளர்கள் போன்றோருக்கு கூடுதல் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆனால், தமிழ்நாடு அரசு நிலம் வழங்கி, 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டாலும், இதுவரையில் எம்.ஆர்.ஓ. மையம் அமைக்கப்படவில்லை. சென்னை ஒருங்கிணைந்த புதிய சர்வதேச முனையம் திறப்பு பணியில் அதிகாரிகள் தீவிரமாக இருந்ததால் இந்த பணி உடனடியாக தொடங்கவில்லை என்று கூறப்பட்டது.

ஆனால் ஒருங்கிணைந்த சர்வதேச புதிய முனையம் திறக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரையில் எம்ஆர்ஓ மையம் அமைப்பதற்கான பணியை இந்திய விமான நிலைய ஆணையம் சென்னை விமான நிலையத்தில் தொடங்கவில்லை. இந்த மையம் சென்னை விமான நிலையத்தில் இல்லாத காரணத்தால் வெளிநாட்டு விமானங்கள் சென்னையில் பழுதடைந்து விட்டால் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது.

பழுதடைந்த ஸ்பேர் பார்ட்ஸ்கள், அந்த நாடுகளில் இருந்து வந்த பின்பே, பழுதடைந்த விமானம் பழுதுபார்க்கப்பட்டு, மீண்டும் இயக்கப்படுகிறது. இந்நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக தான், சென்னை விமான நிலையத்தில் அனைத்து விமானங்களையும் உடனடியாக பழுது பார்ப்பதற்கான, MRO மையம் அமைப்பதற்காக 32,300 சதுர அடி நிலத்தை, தமிழ்நாடு அரசு இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு இலவசமாக வழங்கியது.

ஆனாலும் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் சென்னை விமான நிலையத்தில் MRO மையம் தொடங்கப்படாமல், இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்திய விமான நிலைய ஆணையம் சென்னை விமான நிலையத்தில் MRO மையம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு விட்டதாகவும், தமிழ்நாடு அரசு வழங்கிய நிலத்தை, விமான நிலைய மற்ற பயன்பாட்டுக்கு பயன்படுத்த இருப்பதாகவும் தகவல்கள் வேகமாக பரவி வருகின்றது.

ஜிஎஸ்டியால் “பன் மட்டுமல்ல பனியன்” தொழிலும் பாதிப்பு..!

சிறு குறு நடுத்தர பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் ஜிஎஸ்டியின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட 7 ஆண்டுகளாகியும் இந்த பாதிப்பில் இருந்து இன்னும் மீள முடியாமல் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

1925-ஆம் ஆண்டு விவசாயத்திற்கு அடுத்தபடியாக திருப்பூரில் தொடங்கிய பனியன் உற்பத்தி தொழிலானது திருப்பூர் மக்களின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக வளர்ந்து இன்று வானோக்கி நின்றது. 1980-ஆம் ஆண்டு ரூ.50 கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்த திருப்பூர் கடந்த ஆண்டு ரூ.36 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதியும், ரூ.30 ஆயிரம் கோடிக்கு உள்நாட்டு வர்த்தகமும் செய்துள்ளது. பாஜக ஆட்சிக்கு முன்பு வருடந்தோறும் வளர்ச்சியை கண்டு வந்த திருப்பூர் பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பாஜக அரசின் பல்வேறு நடவடிக்கையின் காரணமாக சரிவை சந்தித்தது.

தற்போது, சரிவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தாலும்கூட பாஜக அரசால் மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகள் இன்னும் பின்னலாடை துறையினருக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துக்கொண்டே இருக்கின்றது. அதில் ஒன்றுதான் ஜிஎஸ்டி. பாஜக அரசு முதல் முறையாக பொறுப்பேற்றபோது 2017 ஜூன் 1-ஆம் தேதி ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது.

மத்திய அரசு ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தப்படும்போது குட் அண்ட் சிம்பிள் டேக்ஸ் நல்ல எளிமையான வரி என விளம்பரப்படுத்தியது. ஆனால், அறிமுகப்படுத்தப்படும்போது இதனை புரிந்து கொள்வதற்கும், இதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கும் கால அவகாசம் வேண்டும் என தொழில் துறையினர் வலியுறுத்தி இருந்தனர். இருப்பினும் அதற்கு செவி சாய்க்காமல் அதிரடியாக ஜிஎஸ்டியை மத்திய அரசு அமல்படுத்தியது.

இதன் காரணமாக 7 ஆண்டுகளாகியும் ஜிஎஸ்டியின் தாக்கம் இன்னும் தொழில் துறையை பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது. இதற்கு சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் முன்னிலையில் கோவையில் நடந்த தனியார் உணவக உரிமையாளர் பேசிய கிரீம் பன் விவகாரம் ஒரு உதாரணம். ஜிஎஸ்டியின் பாதிப்புகள் பனியன் தொழிலையும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

திருப்பூரை சேர்ந்த பனியன் உற்பத்தியாளர்கள். திருப்பூருக்கு பின்னலாடை துறை என்பது கடந்த காலங்களில் தொழிலாளர்களாக இருந்தவர்களை முதலாளிகளாக்கி அழகு பார்த்தது. ஆனால், ஜிஎஸ்டி நடைமுறைக்கு பின்பு முதலாளிகளை கூட தொழிலாளிகளாக மாற்றி இருப்பதாக உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வெளிநாட்டு கார்ப்பரேட் ஆர்டர்களை பெற்று நடத்தும் சில நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரியை ஓரளவு சமாளித்து வெற்றி கண்டு இருந்தாலும்கூட, உள்நாட்டு வர்த்தகத்தில் ஈடுபடக்கூடிய ஏராளமான சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் பெரும் சரிவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கின்றனர். ஜிஎஸ்டி அமலாக்கப்பட்ட சிறிது நாட்களிலேயே ஏராளமான சிறு குறு பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. செயல்பட்ட நிறுவனங்களும் ஷிப்ட்களின் எண்ணிக்கையை குறைத்துவிட்டன.

நாடு முழுவதும் ஜிஎஸ்டி முறையினை எளிமைப்படுத்த வேண்டும் என அமல்படுத்துவதற்கு முன்பு அறிவிக்கப்பட்டதிலிருந்து தொழில் துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. கோவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்ட கூட்டத்தில் திருப்பூரை சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சந்திப்பில் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு ஆறுதலான எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை.

இது குறித்து பவர் டேபிள் உரிமையாளர் சங்கத் தலைவர் நந்தகோபால் பேசுகையில், ‘‘ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்படும்போது அதில் உள்ள சிக்கல்கள் குறித்து தெரியப்படுத்தினோம். ஆனால், அதனை யாரும் கண்டு கொள்ளவில்லை. இதன் பாதிப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது. இன்னும்கூட நீடிக்கிறது. திருப்பூரில் உள்நாட்டு வர்த்தகத்தில் ஈடுபடக்கூடிய சிறு குறு நடுத்தர உற்பத்தியாளர்கள் பருத்தியிலிருந்து பின்னலாடை உற்பத்திக்கு தேவையான ஒவ்வொரு பொருளையும் தனித்தனியாக வாங்கி பயன்படுத்தி வருகிறோம். அதற்கான ஜிஎஸ்டி என்பது ஒவ்வொரு பொருளுக்கும் மாறுபடும். இதற்கு செலுத்தப்படும் ஜிஎஸ்டி திரும்ப வழங்கப்படும் என அறிவிக்கப்படுகிறதே தவிர அதற்குண்டான செலவினங்களுக்கு எந்தவித இழப்பீடும் வழங்கப்படுவதில்லை.

இது சிறு குறு நடுத்தர உற்பத்தியாளர்களை மிகவும் பாதிப்புக்குள்ளாக்குகிறது. எளிமைப்படுத்தப்பட்ட வரி எனப்படும் நிலையில் பட்டன், ஜிப், நூல் உள்ளிட்ட மூலப் பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டியும் பாலி பேக், எலாஸ்டிக் போன்ற மூலப்பொருட்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டியும் மேலும் சில பொருட்களுக்கு 18 சதவீதம் வரை ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இது மட்டுமல்லாது இயந்திரங்கள், இயந்திரங்களுக்கான ஸ்பேர் பொருட்கள் என அதிக ஜிஎஸ்டி செலுத்த வேண்டியுள்ளது.

இது போக சரக்குகளை அனுப்புவதற்கு, கொரியர் செய்வதற்கு, இயந்திரங்கள் சர்வீஸ் உள்ளிட்ட அனைத்துக்கும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டியுள்ளது. இதில், ஏதேனும் சிறு குறைபாடு நேர்ந்தாலும்கூட அபராதத்துடன் செலுத்த வேண்டிய நிலை நீடிக்கிறது’’ என நந்தகோபால் தெரிவித்தார்.

திருப்பூரின் பின்னலாடை உற்பத்தி என்பது பருத்தியிலிருந்து நூல் உருவாக்கப்பட்டு, நூலில் இருந்து துணியாக்கப்பட்டு, அதற்குப் பின் டையிங், கட்டிங், டெய்லரிங், செக்கிங், பேக்கிங் என பல நிலைகளை கடந்து வருகிறது. ஒவ்வொரு நிலைக்குமான ஜிஎஸ்டி என்பது சிறு குறு நடுத்தர உற்பத்தியாளர்களுக்கு கட்டுப்படியாகாத ஒன்றாக உள்ளது.

எனவே, இதன் மீது சிறப்பு கவனம் செலுத்தி ஜிஎஸ்டி சலுகை வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். மேலும், ஜிஎஸ்டி வரி செலுத்தும்போது சிறு தவறுக்கும் கூட அதிக அபராதம் விதிக்கப்படுவதை கைவிட வேண்டும் என தெரிவிக்கின்றனர்.

Happy Vinayaka chathurthi 2024: விநாயகர் சதுர்த்தி வரலாறு..!

ஆவணி மாதம் செப்டம்பர் 7-ஆம் தேதி சனிக்கிழமை வளர்பிறையில் வருகின்ற நான்காவது திதியான சதுர்த்தி திதி ‘விநாயகர் சதுர்த்தி‘ தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் வீடுகளில் மாவிலை தோரணங்களால் அலங்கரித்து விநாயகருக்கும் அலங்காரம் செய்து அவருக்கு அவல் பொரி, பழங்கள், மோதகம், கொழுக்கட்டை படையலிட்டு பலரது வீடுகளில் வணங்கப்படுகின்றது.

மராட்டிய மன்னர் சிவாஜி முகலாயர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த தனது குடிமக்களிடையே தேசியவாத உணர்வை ஊக்குவிப்பதற்கு விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினர். அதன்பின்னர், 1893 -ஆம் ஆண்டில், ஆங்கிலேயர்கள் அரசியல் கூட்டங்களைத் தடைசெய்தபோது, ​​பாலகங்காதர திலகர் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு புத்துயிர் கொடுத்தார். மகாராஷ்டிராவில் மிக பிரபலமாக கொண்டப்படும் விநாயகர் சதுர்த்தி இன்று உலகெங்கிலும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி வரலாறு

முதன்மை கடவுளாக விளங்கும் விநாயகர் சதூர்த்தி கொண்டாடப்படுவது தொடர்பாக பல புராண கதைகள் உள்ளன. கஜமுகாசுரனை கொன்றதால் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது என்பது ஒரு ஐதீகம்.

உலகமெல்லாம் தோன்றுவதற்கு முன் தோன்றி, உலகில் எல்லா உயிர்களையும் தோற்றுவித்த ஆதியான சிவபெருமானின் அருள் பெற்ற கஜமுகாசுரன் அதாவது தன்னை மனிதர்களாலோ, விலங்குகளாலோ, ஆயுதங்களாலோ யாரும் கொல்ல முடியாதபடி கஜமுகாசுரன் வரம் பெற்று இருந்ததால், தான் பெற்ற வரத்தின் வல்லமைகளால் தலைகணம் கொண்டு தேவர்களை பல வழிகளில் துன்புறுத்தி வந்துள்ளான்.

கஜமுகாசுரன் கொடுமையில் இருந்து விடுபட செய்வதறியாமல் தேவர்கள் திணறி வந்த அனைத்து தேவர்களும் ஒன்றாக திரண்டு சிவ பெருமானிடம் சரணடைந்தனர். இதனால் அவர் ஆவணி மாத சதுர்த்தி அன்று விநாயகரை யானை முகத்தோடும், மனித உடலோடும் படைத்து கஜமுகாசுரனை அழிக்க அனுப்பி வைத்தார்.

விநாயகருக்கும், கஜமுகாசரனுக்கும் இடையே மிகப்பெரிய போர் நடைபெற்றது. போரின் முடிவில் எந்த ஆயுதங்களாலும் தனக்கு அழிவு வரக்கூடாது என்று கஜமுகாசுரன் வரம் பெற்றதால் தன்னுடைய கொம்புகளில் ஒன்றை ஒடித்து அவனை சம்ஹாரம் செய்வார். பின்னர் கஜமுகாசுரனை மூஞ்சுறாக மாற்றி தனது வாகனமாக்கிக் கொண்டார் என்பது புராணங்களில் கூறப்படுகிறது. எனவே ஆவணி மாத சதுர்த்தியன்று விநாயகரை வழிபட்டால் தீராத வினை தீரும் என்பதும், அனைத்து விதமான பாக்கியங்கள் நம்மை வந்து சேரும் என்பதும் ஐதீகம்.

2 ஆண்டுகளாக பிரதமர் மோடி செய்யாததை..! 4 மாதங்களில் மு.க. ஸ்டாலின் செய்தார்..! மகிழ்ச்சி மழையில் சின்னப்பிள்ளை..!

மதுரை மாவட்டம், அழகர் கோயில் செல்லும் சாலையில் அப்பன் திருப்பதி என்ற ஊரை அடுத்து உள்ள பில்லுசேரி கிராமத்தைச் சேர்ந்த பெருமாளின் மனைவி சின்னப்பிள்ளை. தனது கிராமத்தில் உள்ள பெண்களை ஒருங்கிணைத்து விவசாய வேலைகளுக்காக அழைத்துச் சென்று வந்த இவர், வேலை முடிந்ததும் அவர்களுக்கான கூலியை நில உரிமையாளர்களிடம் இருந்து மொத்தமாகப் பெற்று தனித்தனியாகப் பிரித்துக் கொடுத்து வந்தார்.

எழுதப் படிக்கத் தெரியாத மக்களுக்கு இவரது உதவி மிகப்பெரியதாக இருந்தது. விவசாய கூலித் தொழிலாளியான சின்னப்பிள்ளையின் சேமித்து வைத்த பணத்தை சில நிதி நிறுவனங்கள் ஏமாற்றிவிட்டன. ஆகவே விரக்தியிலிருந்த இந்தப் பாட்டிக்கு ‘களஞ்சியம்’ என்ற சுய உதவிக் குழுதான் மறுவாழ்வு கொடுத்தது. கடந்த 2001-ஆம் ஆண்டு ஸ்ரீசக்தி விருது வழங்கப்பட்டது. அதன் பிறகுதான் பில்லுசேரி கிராமத்திற்குச் சாலை வசதியும் பேருந்து வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாகக் கட்டித் தருவதற்கு சின்னப்பிள்ளையே முயற்சி மேற்கொண்டார். இப்படி ஊருக்கெல்லாம் பைசா பணம் இல்லாமல் உழைத்த இந்தச் சின்னப்பிள்ளை அவரது மகன் சின்னதம்பியின் வீட்டில் ஒண்டிக் குடித்தனம் செய்து வருவதாகக் கடந்த மார்ச் மாதம் செய்தி வெளியானது. வரதட்சணைக் கொடுமை, கந்துவட்டியால் பாதித்த பெண்கள், மது போதையால் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் எனப் பலரது வாழ்க்கையைக் கரை சேர்த்த இவர் கரைசேர முடியாமல் வறுமையில் தத்தளித்து வந்தார்.

மக்கள் சேவைக்காகக் கடந்த 2010 – ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது இவருக்கே இந்த நிலை. அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதி, இந்தப் பாட்டிக்குப் பொற்கிழி வழங்கி பாராட்டி இருந்தார். இப்போது இந்தத் தள்ளாத 72 வயதிலும் அவர் சமூகசேவை செய்து வருகிறார் இந்த மூதாட்டி. திருப்பம் தந்த திருத்தணி. இத்தனை சேவைகளைச் செய்த இவருக்கு வசிப்பதற்கு ஒரு வீடு இல்லை. அந்தக் கொடுமையான செய்தி பத்திரிகைகளில் வெளியானது. இந்தப் பாட்டிக்குப் பிரதமர் மோடி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தரப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆண்டுகள் 2 ஆண்டுகள் கடந்து அவருக்கு உரிய வீடு வழங்கப்படவில்லை.

அதனால் வருத்தமடைந்த சின்னப்பிள்ளை ஊடகங்கள் மூலமாகத் தனது வறுமை நிலையை எடுத்துக் கூறி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்குக் கோரிக்கை வைத்திருந்தார். அதனையொட்டி ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தரப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி அவருக்கு மாத்தூர் ஊராட்சிக்கு விடப்படப் பகுதியில் அரசு நிலமும் உடனடியாக ஒதுக்கித் தரப்பட்டது. அந்த நிலத்தில் இப்போது 3.50 லட்ச ரூபாய் செலவில் மாடி வீடு கட்டித் தரப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களாக நடைபெற்று வந்த இந்த வீடு கட்டும் பணி தற்போது நிறைவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதான் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பதோ …!

யூடியூபில் மக்களிடம் செல்வாக்கு செலுத்தக்கூடிய நபரை இன்ப்ளூயன்சர் என்று அழைக்கப்படும் சீனு மாலிக் ஏழைகளுக்கு உதவுவதை ஆண்டு முழுவதும் குறிக்கோளாக கொண்டு ஒவ்வொரு நாளும் கடைக்கோடியில் உள்ள ஏதோவொரு மனிதருக்கு உதவுவதை தனது வாழ்நாள் லட்சியமாக கடைப்பிடித்து வருகிறார். நாள் 221/365-ல் அவர் எடுத்து வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

அந்த வீடியோவில், ஆடம்பரமான மஞ்சள் நிற போர்ஷ் காரை பார்த்த மாற்றுத்திறனாளி ஒருவர் அதன்முன் நின்று ஒரு புகைப்படம் எடுக்க ஆசைப்படுகிறார். ஆனால், அதற்குள் அந்த காரின் உரிமையாளர் வந்து ‘என்ன செய்கிறீர்கள்’ என்று கேள்வியெழுப்பு கிறார். இதனைப் பார்த்து பயந்த மாற்றுத்திறனாளி புகைப்படம் எடுத்ததற்காக காரின் உரிமையாளர் தன்னை தாக்கிவிடுவாரோ என்ற பயத்தில் ஓடுகிறார்.

அவரை துரத்திச் சென்ற காரின் உரிமையாளர் மாற்றுத்திறனாளியின் மொபைல் போனை பறித்து அதில் உள்ள படங்களை பார்க்கிறார். எடுத்த படங்களை அழித்துவிட்டு தன்னையும் தாக்குவார் என்ற பயம் அவரின் முகத்தில் நிறைந்திருந்தது. ஆனால், அவர் நினைத்தற்கு மாறாக மாற்றுத்திறனாளியை கூட்டிச் சென்று காரின் அருகே, உள்ளே என பல கோணங்களில் உட்கார வைத்து உரிமையாளரே புகைப்படம் எடுத்து அவரிடம் கொடுக்கிறார்.

அதன் பின்னர் அந்த ஏழை மாற்றுத்திறனாளியின் வாழ்நாள் ஆசையை நிறைவேற்றும் விதமாக காரில் உட்காரவைத்து ஜாலி ரவுண்ட் செல்கிறார் அந்த உரிமையாளர். அப்போது, எல்லையில்லா ஆனந்தத்தை அந்த மாற்றுத்திறனாளி சின்ன குழந்தைப் போல கைதட்டல் மூலம் வெளிப்படுத்துவதை பார்த்த உரிமையாளரின் கண்கள் அவரையும் அறியாமல் பனித்து விடுகிறது. இதுதான் ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்டுள்ளார். இந்த சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ பார்த்த இணையவாசிகள் அவரை இதயப்பூர்வமாக பாராட்டி வருகின்றனர்.

கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ… நினைவு தினம் அனுசரிப்பு…

உங்களுக்கு நம்பிக்கையும் செயல்திட்டமும் இருந்தால், நீங்கள் எவ்வளவு சிறியவர் என்பது முக்கியமல்ல” என்று எதிர்கால தலைமுறையின் விடியலுக்கான சொற்களில் வைரங்களை வைத்துவிட்டுச் சென்ற கியூபப் புரட்சியின் விதைநெல் ஃபிடல் காஸ்ட்ரோவின் நினைவு நாள் இன்று.

உலகில் கம்யூனிச ஆட்சிகள் வீழ்ந்துகொண்டிருந்த நிலையில் கியூப மண்ணை முதல் பொதுவுடைமை அரசாக மாற்றிய புரட்சிப் போராளி ஃபிடல் காஸ்ட்ரோ. கியூபாவின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள பிரான் என்ற கிராமத்தில் வாழ்ந்த லினாரஸ் கொன்சாலஸ், ஏஞ்சல் காஸ்ட்ரோ ஒய் அர்கிஸ் தம்பதிக்குப் பிறந்த ஏழு குழந்தைகளில் ஒருவர் ஃபிடல் காஸ்ட்ரோ 1926 ஆகஸ்ட் 13-ம் தேதி பிறந்தார். ஃபிடல் காஸ்ட்ரோ சாண்டியாகோ டி கியூபாவில் இருந்த ரோமன் கத்தோலிக்கப் பள்ளியில் பயின்ற அவர், அடுத்து பெலன் நகரத்துப் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார்.

1945 -ம் ஆண்டு ஹவானா பல்கலைக்கழகச் சட்டப்பள்ளியில் சேர்ந்தார். இங்குதான் ஃபிடலுக்கு எதிர்கால வாழ்வின் அடித்தளங்கள் அத்தனையும் தொடங்கப்பட்டன. கல்லூரிப் பருவத்திலேயே அரசியலில் ஆர்வம்கொண்டிருந்த ஃபிடல் காஸ்ட்ரோ, ஊழலில் திளைத்திருந்த அதிபர் ராமோன் கராவ் தலைமையிலான கியூப அரசை சீரமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார்.

அன்று முதலே போராட்டங்கள் அவருடைய வாழ்க்கையில் ஒரு பகுதியாகவே மாறிவிட்டன. காவல்துறையால் தேடப்படும் பட்டியலில் ஃபிடலின் பெயரும் சேர்ந்துகொண்டது. மேலும் 1947 ஆம் ஆண்டு டொமினிக் குடியரசில் அந்நாட்டு மாணவர்களுடன் சேர்ந்து ரஃபேல் டிராஜிலோ ஆட்சியைக் கலைக்கும் ஃபிடலின் முயற்சி, அமெரிக்க ஆதரவுடன் தடுத்துநிறுத்தப்பட்டது.

1952 -ம் ஆண்டு கியூபாவில் கார்லஸ் ப்ரியோவின அரசை ராணுவப் புரட்சியின் மூலம் கைப்பற்றினார் இதுமட்டுமின்றி மோன்கடா நகரத்தில் இருந்த ஆயுதக்கிடங்குகளைத் தகர்க்கும் முயற்சியில் நண்பர்களுடன் சேர்ந்து ஈடுபட்டார். அந்த மிகப்பெரும் அதிரடி தாக்குதலுக்குப் பிறகு அக்டோபர் 16, 1953 அன்று பிடல் காஸ்ட்ரோ ஆற்றிய நான்கு மணி நேர உரையின் தலைப்புதான் ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’. அந்தப் பேச்சு பிறகு அவரது ஜூலை 26 இயக்கத்தின் அறிக்கையாக மாறியது.

ஆயுதக்கிடங்கு தாக்குதல் முயற்சிக்கு பதினைந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை. பின்னர் பொது மன்னிப்பு வழங்கப்பட 19 மாதங்களுக்குப் பிறகு ஃபிடல் காஸ்ட்ரோ, 1955-ல் விடுதலை செய்யப்பட்டார். 1956, நவம்பர். மெக்சிகோவில் இருந்து மிகச்சிறிய கிரான்மா படகில் சேகுவேரா, ஃபிடல் காஸ்ட்ரோ, ரவுல் காஸ்ட்ரோ உள்ளிட்ட 81 போராளிகள் கியூபாவுக்குப் பயணமாயினர். கியூபப் புரட்சி வெற்றிபெறும் 1959 ஜனவரி வரையில் மலைப்பகுதிகளில் பதுங்கியிருந்து கொரில்லா போர்முறையில் தீவிரமாக ஈடுபட்டது,

புரட்சிக்குப் பிறகு கியூபாவில் அமைக்கப்பட்ட கம்யூனிச அரசில் 1959 பிப்ரவரியில் ஃபிடல் காஸ்ட்ரோ பிரதமராகப் பொறுப்பேற்றார். 1976 முதல் 2008 பிப்ரவரி வரை கிட்டத்தட்ட 32 ஆண்டுகள் கியூபாவின் பெருமைக்குரிய அதிபராக ஃபிடல் காஸ்ட்ரோ நீடித்தார். ஃபிடல் காஸ்ட்ரோ தன் 90 வயதில் 2016 நவம்பர் 25 ஆம் தேதியன்று விண்ணுலகிற்கு செல்ல ஃபிடல் காஸ்ட்ரோவின் நம்பிக்கையும் போர்க்குணமும், இன்று உலகமெங்கும் சமூக அரசியல் போராட்டங்களில் முன்வரிசையில் நிற்கும் இளைஞர்களின் மனங்களில் வெளிச்சங்களாக பரவி இருக்கின்றன.

அவரின் நினைவு நாளான இன்று நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய அலுவலகத்தில் உலக கம்யூனிஸ்ட் தலைவர்கள் மிக முக்கியமான ஒருவராகவும் சோசலிசத்தை உருவாக்கியவர் கம்யூனிச கொள்கைகளில் மிகச் சிறப்பாக செயலாற்றி மறைந்த கியூபா முன்னாள் அதிபர் உலகம் போற்றும் புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ அவர்களின் நினைவு நாளான இன்று அவரது படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் அக் கட்சியின் மேற்கு ஒன்றிய செயலாளர். கே.எஸ்.வெங்கடாசலம் தலைமை வகித்தார். மேலும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.சுரேஷ் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ரமேஷ்,ஈஸ்வரன், பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எப்படி வேண்டுமானாலும் குழந்தை பிறக்கட்டும்…. அந்த குழந்தைகளுக்கு சொத்தில் உரிமை உண்டு..!

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது, மனைவி அல்லது கணவன் இருக்கும் போதே வேறு பெண் அல்லது ஆண் உடன் சேர்ந்து வாழ்வது போன்ற உறவுகள் சட்டப்படி செல்லாத திருமணங்களாக கருதப்படுகின்றன. இது போன்ற உறவுகளில் பிறந்த குழந்தைகள், பெற்றோர் சொத்துக்களில் உரிமை கோருவது தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது.

அதில், சட்டப்படி செல்லாத திருமணங்கள் வாயிலாக பிறந்த குழந்தைகள், பெற்றோரின் பரம்பரை சொத்துக்களில் பங்கு கோர உரிமை உள்ளது என உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது, உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு 2011-ல் உத்தரவிட்டது. இதில், சட்டப்படி செல்லாத திருமணங்கள் வாயிலாக பிறந்த குழந்தைகள், பெற்றோர் சொந்தமாக உழைத்து சம்பாதித்த சொத்துக்களில் பங்கு கோர உரிமை உள்ளது. அதே நேரம், பரம்பரை சொத்துக்களில் அவர்கள் உரிமை கோர முடியாது என உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், சட்டப்படி செல்லாத திருமணங்கள் மற்றும் சட்டப்படி பிரியாத தம்பதியரின் குழந்தைகளுக்கு சட்டப்பூர்வமாக சொத்துக்களில் பங்கு கோரும் உரிமை உள்ளது.

இந்து வாரிசு சட்டத்தின்படி, சட்டப்பூர்வ ஆங்கீகாரம் உள்ளது என்று தெளிவுபடுத்தி உள்ளது. எனவே, பெற்றோரின் உழைப்பில் சம்பாதித்த சொத்து மற்றும் பரம்பரை சொத்துக்களின் பங்கு கோர அவர்களுக்கு உரிமை உள்ளது என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Kavin: காதலி மோனிகாவை திருமணம் செய்து கொண்ட கவின்..

விஜய் டிவி சீரியல்கள் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் கவின் சினிமாவில் யங் சார்மிங் ஹீரோவாக வலம் வருகிறார். லிப்ட் படத்தைத் தொடர்ந்து இந்த ஆண்டு கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் இளைஞர்களை அதிகளவில் கவர்ந்து ஹிட் அடித்தது. நடிகர் கவின் லாஸ்லியாவை பிக் பாஸ் வீட்டில் காதலித்த நிலையில், அந்த நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் பிரேக்கப் செய்து பிரிந்து விட்டனர்.

சினிமாவிலாவது இருவரும் இணைந்து நடிப்பார்களா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த நிலையில், சட்டென தனது திருமணத்தையே நடத்தி முடித்து விட்டார் கவின். பள்ளியில் பணியாற்றி வந்த தனது தோழி மோனிகாவை திருமணம் செய்துக் கொண்ட கவின் அதன் வீடியோவை தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.

நடிகர் கவின் மற்றும் மோனிகா திருமணத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். கவினின் நெருங்கிய நண்பரும் ஜெயிலர் பட இயக்குநருமான நெல்சன் தனது மனைவி மற்றும் மகனுடன் கவின் திருமணத்தில் கலந்துக் கொண்டார். மேலும், வெற்றிமாறன், மாரி செல்வராஜ், விக்னேஷ் சிவன் உள்ளிட்ட இயக்குநர்கள் கவின் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.